Saturday, October 26, 2019

P.248 - கலயநல்லூர் - சேர்வினை தீர்வழி

2014-08-29

P.248 - கலயநல்லூர்

(கும்பகோணம் அருகுள்ள சாக்கோட்டை)

------------------

(12 பாடல்கள்)

(அறுசீர் விருத்தம் - தானன தானன தானா x2)

(சம்பந்தர் தேவாரம் - 2.67.1 - "மண்ணுமோர் பாகம் உடையார்");

(அப்பர் தேவாரம் - 4.4.1 - "பாடிளம் பூதத்தி னானும்")

* யாப்புக் குறிப்பைப் பிற்குறிப்பில் காண்க.


1)
சேர்வினை தீர்வழி என்று தேடிவந் துன்னை அடைந்தேன்

ஆர்விடந் தன்னை மிடற்றில் அடைத்தவ னேஅருள் நல்காய்

ஊர்விடை யின்மிசை ஏறி ஊரிடும் உண்பலி கொள்வாய்

கார்வயல் சூழ்ந்தழ காரும் கலயநல் லூர்ப்பெரு மானே.


சேர்-வினை தீர்-வழி என்று தேடிவந்து உன்னை அடைந்தேன் - பல பிறவிகளில் சேர்த்த வினைகள் தீரும் வழி என்று நாடிவந்து உன்னைச் சரணடைந்தேன்; (சேர்த்தல் - திரட்டுதல்; ஈட்டுதல்); (வழி - உபாயம்);

ஆர்-விடந்தன்னை மிடற்றில் அடைத்தவனே, அருள் நல்காய் - உண்ட ஆலகாலத்தைக் கண்டத்தில் ஒளித்தவனே, அருள்வாயாக; (ஆர்தல் - உண்ணுதல்; பரவுதல்); (மிடறு - கண்டம்);

ஊர்-விடையின்மிசை ஏறி ஊர் இடும் உண்பலி கொள்வாய் - இடபவாகனத்தின்மேல் ஏறிச்சென்று ஊரர் இடும் பிச்சையை ஏற்பவனே; (ஊர்தல் - ஏறிச் செலுத்துதல்); (விடை - இடபம்); (உண்பலி - பிச்சை);

கார்வயல் சூழ்ந்ழகு ஆரும் கலயநல்லூர்ப் பெருமானே - நீர் மிகுந்த வயல் சூழ்ந்த அழகிய திருக்கலயநல்லூரில் உறைகின்ற பெருமானே; (கார் - நீர்; மேகம்; மழை); (சூழ்ந்தழகாரும் - சூழ்ந்த அழகு ஆரும்; தொகுத்தல்விகாரம்);


2)

பழவினை தீர்வழி என்று பாடிவந் துன்னை அடைந்தேன்

மழவிடை ஒன்றை நயந்த மன்னவ னேஅருள் நல்காய்

கழலினிற் கண்மலர் இட்ட கரியவற் காழியை ஈந்தாய்

கழனிகள் சூழ்ந்தழ காரும் கலயநல் லூர்ப்பெரு மானே.


பழவினை தீர்-வழி என்று பாடிவந்து உன்னை அடைந்தேன் - என் பழவினைகள் தீரும் வழி என்று உன் புகழைப் பாடிவந்து உன்னைச் சரணடைந்தேன்;

மழ-விடை ஒன்றை நயந்த மன்னவனே, அருள் நல்காய் - ஓர் இளைய எருதினை வாகனமாக விரும்பிய அரசனே, அருள்வாயாக;

கழலினில் கண்மலர் இட்ட கரியவற்கு ஆழியை ஈந்தாய் - உன் திருவடியில் தன் மலர்க்கண்ணை மலராக இட்டு வழிபாடு செய்த திருமாலுக்குச் சக்கராயுதத்தை அளித்தவனே;

கழனிகள் சூழ்ந்ழகு ஆரும் கலயநல்லூர்ப் பெருமானே - வயல் சூழ்ந்த அழகிய திருக்கலயநல்லூரில் உறைகின்ற பெருமானே; (கழனி - வயல்); (சூழ்ந்தழகாரும் - சூழ்ந்த அழகு ஆரும்; தொகுத்தல்விகாரம்);


3)

அரும்பிணி ஆயின தீர அன்பொடு நின்னை அடைந்தேன்

கரும்பினை ஏந்திய வேளைக் காய்ந்தவ னேஅருள் நல்காய்

சுரும்பமர் கொன்றை அரவம் தூமதி சேர்செஞ் சடையாய்

கரும்பொழில் சூழ்ந்தழ காரும் கலயநல் லூர்ப்பெரு மானே.


அரும்-பிணி ஆயின தீர அன்பொடு நின்னை அடைந்தேன் - நீக்குதற்கு அரிய பிறவிப்பிணி தீரவேண்டிப் பக்தியோடு உன்னைச் சரணடைந்தேன்;

கரும்பினை ஏந்திய வேளைக் காய்ந்தவனே, அருள் நல்காய் - கரும்பை வில்லாக ஏந்திய மன்மதனை எரித்தவனே, அருள்வாயாக; (வேள் - மன்மதன்);

சுரும்பு அமர் கொன்றை அரவம் தூ-மதி சேர் செஞ்சடையாய் - வண்டுகள் விரும்பும் கொன்றைமலர், பாம்பு, தூய திங்கள் இவற்றையெல்லாம் செஞ்சடையில் அணிந்தவனே; (சுரும்பு - வண்டு); (அமர்தல் - விரும்புதல்);

கரும்-பொழில் சூழ்ந்ழகு ஆரும் கலயநல்லூர்ப் பெருமானே - அடர்ந்த சோலை சூழ்ந்த அழகிய திருக்கலயநல்லூரில் உறைகின்ற பெருமானே; (கருமை - கறுப்பு; பெருமை; பசுமை); (சூழ்ந்தழகாரும் - சூழ்ந்த அழகு ஆரும்; தொகுத்தல்விகாரம்); (சம்பந்தர் தேவாரம் - 2.47.10 - "கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச்சரத்தான்");


4)

வந்தடை வல்வினை தீர வண்டமிழ் பாடி அடைந்தேன்

சந்திர னைச்சடை வைத்த சங்கர னேஅருள் நல்காய்

வந்தனை செய்யிமை யோர்கள் மகிழ்வுற மும்மதில் எய்தாய்

கந்த மலர்ப்பொழில் சூழ்ந்த கலயநல் லூர்ப்பெரு மானே.


வந்து அடை- வல்வினை தீர வண்தமிழ் பாடி அடைந்தேன் - வந்து பொருந்துகின்ற வலிய வினை தீரும் பொருட்டு வளப்பமான தமிழ்ப்பாமாலைகள் பாடி உன்னைச் சரணடைந்தேன்;

சந்திரனைச் சடை வைத்த சங்கரனே, அருள் நல்காய் - சந்திரனைச் சடையில் சூடிய சங்கரனே, அருள்வாயாக;

வந்தனை செய்- இமையோர்கள் மகிழ்வுற மும்மதில் எய்தாய் - போற்றி வணங்கிய தேவர்கள் மகிழும்படி முப்புரங்களை ஒரு கணை எய்து அழித்தவனே;

கந்த-மலர்ப்பொழில் சூழ்ந்த கலயநல்லூர்ப் பெருமானே - வாசமலர்கள் நிறைந்த சோலை சூழ்ந்த திருக்கலயநல்லூரில் உறைகின்ற பெருமானே;


5)

ஒளிவிடம் இன்றித் துரத்தும் உறுவினைக் கஞ்சி அடைந்தேன்

அளிவிடந் தன்னை அயின்ற அணிமிட றாஅருள் நல்காய்

தளியென அன்பர்கள் நெஞ்சில் தங்கிடு வாய்நறை உண்டு

களியளி ஆர்பொழில் சூழ்ந்த கலயநல் லூர்ப்பெரு மானே.


ஒளிவு-இடம் இன்றித் துரத்தும் உறுவினைக்கு அஞ்சி அடைந்தேன் - நான் தப்பி ஒளித்துக்கொள்ள எவ்விடமும் இல்லாதபடி என்னைத் துரத்தும் மிக்க தீவினைக்கு அஞ்சி உன்னைச் சரணடைந்தேன்;

அளி விடந்-தன்னை அயின்ற அணிமிடறா, அருள் நல்காய் - அள்ளி நஞ்சை உண்ட அழகிய நீலகண்டனே, அருள்வாயாக; (அளி விடம்தன்னை - 1. விடத்தை அள்ளி; "அள்ளி" என்பது எதுகைநோக்கி இடைக்குறையாக அளி என்று வந்தது; அள்ளுதல் - கையால் முகத்தல்; 2. "அளிவிடம்" என்பதை வினைத்தொகையாகக் கொண்டு, "கடல் அளித்த நஞ்சை" என்றும் பொருள்கொள்ளலாம்); (அயில்தல் - உண்ணுதல்); (மிடறு - கண்டம்); (சம்பந்தர் தேவாரம் - 2.23.1 - "மழையார் மிடறா மழுவா ளுடையாய்");

தளி என அன்பர்கள் நெஞ்சில் தங்கிடுவாய் - அன்பர்கள் நெஞ்சே கோயிலாகக் கொண்டவனே; (தளி - கோயில்);

நறை உண்டு களி- அளி ஆர் பொழில் சூழ்ந்த கலயநல்லூர்ப் பெருமானே - தேனை உண்டு களிக்கின்ற வண்டுகள் ஒலிக்கின்ற சோலை சூழ்ந்த திருக்கலயநல்லூரில் உறைகின்ற பெருமானே; (நறை - தேன்); (அளி - வண்டு); (ஆர்த்தல் - ஒலித்தல்);


6)

தீவினை ஆயின தீரச் செந்தமிழ் பாடி அடைந்தேன்

சேவினை ஊர்திந யந்த செஞ்சடை யாய்அருள் நல்காய்

பூவிடு மாணி தனக்குப் பொன்றலி லாநிலை ஈந்தாய்

காவிடை வண்டறை கின்ற கலயநல் லூர்ப்பெரு மானே.


தீவினை ஆயின தீரச் செந்தமிழ் பாடி அடைந்தேன் - தீவினையெல்லாம் தீரும் பொருட்டுச் சிறந்த தமிழ்ப்பாமாலைகள் பாடி உன்னைச் சரணடைந்தேன்;

சேவினை ஊர்தி நயந்த செஞ்சடையாய், அருள் நல்காய் - இடபத்தை வாகனமாக விரும்பிய, செஞ்சடையினனே, அருள்வாயாக; (சே - இடபம்);

பூடு மாணிதனக்குப் பொன்றல் இலா-நிலை ஈந்தாய் - பூக்கள் தூவி வணங்கிய மார்க்கண்டேயருக்கு இறவாமையை (=சிரஞ்சீவித்தனத்தை) அருளியவனே; (மாணி - மார்க்கண்டேயர்); (பொன்றல் - பொறுதல் - இறத்தல்);

காவிடை வண்டு அறைகின்ற கலயநல்லூர்ப் பெருமானே - சோலையில் வண்டுகள் ஒலிக்கின்ற திருக்கலயநல்லூரில் உறைகின்ற பெருமானே; (கா - சோலை); ( அறைதல் - ஒலித்தல்);


7)

மாமலை போலுள பாவம் மாய்வுற உன்னை அடைந்தேன்

கோமள வல்லியை வாமம் கொண்டவ னேஅருள் நல்காய்

தூமதி கூவிளம் நாகம் சூடிய செஞ்சடை யானே

காமரு சோலைகள் சூழ்ந்த கலயநல் லூர்ப்பெரு மானே.


மா-மலை போல் உள பாவம் மாய்வு-உற உன்னை அடைந்தேன் - பெரிய மலை போல உள்ள தீவினை அழியவேண்டி உன்னைச் சரணடைந்தேன்;

கோமளவல்லியை வாமம் கொண்டவனே, அருள் நல்காய் - மென்கொடி போன்ற உமாதேவியை இடப்பாகமாகக் கொண்டவனே, அருள்வாயாக; (கோமளம் - மென்மை; அழகு; இளமை); (வல்லி - கொடி);

தூ-மதி, கூவிளம், நாகம், சூடிய செஞ்சடையானே - தூய திங்கள், வில்வம், பாம்பு இவற்றைச் சிவந்த சடையில் சூடியவனே; (கூவிளம் - வில்வம்);

காமரு சோலைகள் சூழ்ந்த கலயநல்லூர்ப் பெருமானே - அழகிய சோலை சூழ்ந்த திருக்கலயநல்லூரில் உறைகின்ற பெருமானே; (காமரு - அழகிய);


8)

நெடிய வினைத்தொடர் நீங்க நின்னடி போற்றி அடைந்தேன்

முடியினில் ஆறது சூடும் முக்கண னேஅருள் நல்காய்

கொடிய அரக்கனை அன்று குரைகழ லால்நெரி செய்தாய்

கடிமலர் ஆர்பொழில் சூழ்ந்த கலயநல் லூர்ப்பெரு மானே.


நெடிய வினைத்தொடர் நீங்க நின்-அடி போற்றி அடைந்தேன் - எல்லையின்றி நீளும் வினையெல்லாம் அழிய உன் திருவடியைப் போற்றிச் சரணடைந்தேன்;

முடியினில் ஆறது சூடும் முக்கணனே, அருள் நல்காய் - திருமுடியில் கங்கையைச் சூடும் முக்கண்ணனே, அருள்வாயாக; (ஆறது - ஆறு - கங்கை; அது - பகுதிப்பொருள்விகுதி);

கொடிய அரக்கனை அன்று குரைகழலால் நெரிசெய்தாய் - கொடிய இராவணனை அவன் கயிலையைப் பெயர்த்த அன்று ஒலிக்கும் கழல் அணிந்த திருப்பாதத்தால் நசுக்கியவனே; (நெரித்தல் - நசுக்குதல்);

கடிமலர் ஆர்-பொழில் சூழ்ந்த கலயநல்லூர்ப் பெருமானே - வாசமலர்கள் நிறைந்த சோலை சூழ்ந்த திருக்கலயநல்லூரில் உறைகின்ற பெருமானே;


9)

பண்ணிய வல்வினை தீரப் பைந்தமிழ் பாடி அடைந்தேன்

எண்ணிட ஆயிரம் நாமம் ஏற்றவ னேஅருள் நல்காய்

மண்ணகழ் மாலொடு வேதன் வாழ்த்திடு மாறுயர் சோதீ

கண்ணிறை பூமலி சோலைக் கலயநல் லூர்ப்பெரு மானே.


பண்ணிய வல்வினை தீரப் பைந்தமிழ் பாடி அடைந்தேன் - செய்த வலிய வினையெல்லாம் தீரும் பொருட்டு அழகிய தமிழ்ப்பாமாலைகளைப் பாடி உன்னைச் சரணடைந்தேன்; (பை - பசுமை; அழகு);

எண்ணிட ஆயிரம் நாமம் ஏற்றவனே, அருள் நல்காய் - அடியார்கள் தியானிக்க ஆயிரம் திருநாமங்களை ஏற்றவனே, அருள்வாயாக;

மண்கழ்- மாலொடு வேதன் வாழ்த்திடுமாறுயர்- சோதீ - மண்ணை அகழ்ந்த திருமாலும் பிரமனும் போற்றும்படி எல்லையின்றி ஓங்கிய ஜோதியே; (வேதன் - பிரமன்); (சோதீ - சோதியே);

கள் நிறை பூ மலி சோலைக் கலயநல்லூர்ப் பெருமானே - தேன் நிறைந்த பூக்கள் மிக்க சோலை சூழ்ந்த திருக்கலயநல்லூரில் உறைகின்ற பெருமானே; (கண்ணிறை - கள் நிறை); (மலிதல் - மிகுதல்);


10)

தவிகுழி வீழ்த்திட எண்ணும் சலமுடை யார்மொழி நீங்கும்

குவிதரு நெஞ்சின ராகிக் குளிர்மலர் தூவி வணங்கிச்

செவிகொடு சீரது கேட்கில் செல்வமும் இன்பமும் ஈவான்

கவினுறு சோலைகள் சூழ்ந்த கலயநல் லூர்ப்பெரு மானே.


தவி-குழி வீழ்த்திட எண்ணும் சலம் உடையார் மொழி நீங்கும் - தவிக்கும் படுகுழியில் விழச்செய்ய எண்ணுகின்ற வஞ்சகம் உடையவர்கள் பேசும் பேச்சைப் பொருட்படுத்தாமல் நீங்குங்கள்; (தவித்தல் - வருந்துதல்); (சலம் - பொய்ம்மை; வஞ்சனை); (நீங்கும் - நீங்குங்கள்);

குவிதரு நெஞ்சினர் ஆகிக், குளிர்-மலர் தூவி வணங்கிச், செவிகொடு சீரது கேட்கில் செல்வமும் இன்பமும் ஈவான் - பக்தியால் மனம் ஒன்றியவர்கள் ஆகிக், குளிர்ந்த பூக்களைத் தூவி வணங்கிக், காதால் திருப்புகழைக் கேட்டால் செல்வத்தையும் இம்மை மறுமை இன்பங்களையும் தருபவன்; (குவிதல் - மனம் ஒருமுகப்படுதல்); (தருதல் - ஒரு துணைவினை); (கொடு - கொண்டு - மூன்றாம்வேற்றுமை உருபு); (சீர் - புகழ்; அது - பகுதிப்பொருள்விகுதி);

கவினுறு சோலைகள் சூழ்ந்த கலயநல்லூர்ப் பெருமானே - அழகிய சோலை சூழ்ந்த திருக்கலயநல்லூரில் உறைகின்ற பெருமானே; (கவின் - அழகு);


11)

சிலந்திதன் நற்பணி கண்டு செகமர சாள்நிலை தந்தான்

சலந்தரி செஞ்சடை ஈசன் தரைமிசை ஆழி வரைந்து

சலந்தரன் ஆகம் ஒழித்த சதுரினன் நாரியொர் பாகம்

கலந்தவன் நான்மறை நாவன் கலயநல் லூர்ப்பெரு மானே.


சிலந்திதன் நற்பணி கண்டு செகம் அரசாள் நிலை தந்தான் - திருவானைக்காவில் சிலந்தி செய்த திருத்தொண்டைக் கண்டு மகிழ்ந்து அச்சிலந்தியை உலகை ஆளும் கோச்செங்கட்சோழனாகப் பிறப்பித்தவன்; (செகம் - உலகம்); (* சிலந்தியைக் கோச்செங்கட்சோழனாகப் பிறப்பித்தது - திருவானைக்கா வரலாறு);

சலம் தரி- செஞ்சடை ஈசன் - கங்கையைச் சிவந்த சடையில் தரித்த ஈசன்; (சலம் - ஜலம் - கங்கை);

தரைமிசை ஆழி வரைந்து சலந்தரன் ஆகம் ஒழித்த சதுரினன் - நிலத்தில் ஒரு சக்கரத்தை வரைந்து அதுகொண்டு ஜலந்தராசுரனது உடலை வெட்டி அழித்த வல்லவன்; (ஆழி - சக்கரம்); (ஆகம் - உடல்); (சதுரினன் = சதுரன் = சமர்த்தன்); (பட்டினத்து அடிகள் - திருஏகம்பமுடையார் திருவந்தாதி - 11.29.8 - "கனல்திகிரி சலந்தரன் ஆகம் ஒழிக்கவைத்தாய்");

நாரி ஒர் பாகம் கலந்தவன் - உமையொருபங்கன்; (நாரி - பெண்); (ஒர் - ஓர் என்பதன் குறுக்கல் விகாரம்); (சம்பந்தர் தேவாரம் - 3.102.1 - "காம்பினை வென்றமென் தோளி பாகம் கலந்தான்");

நான்மறை நாவன் - நால்வேதத்தைப் பாடியருளியவன்;

கலயநல்லூர்ப் பெருமானே - திருக்கலயநல்லூரில் உறைகின்ற பெருமான்;


12)

நெய்தழு வுந்திரி சூலன் நீர்தழு வுஞ்சடை அண்ணல்

மைதழு வும்மணி கண்டன் மான்மறி ஏந்திய கையன்

பொய்தழு வாக்கயி லாயன் புதுமலர் கொண்டடி போற்றிக்

கைதொழு வார்துயர் தீர்க்கும் கலயநல் லூர்ப்பெரு மானே.


நெய் தழுவும் திரிசூலன் - நெய் பூசப்பெற்ற திரிசூலத்தை ஏந்தியவன்; (தழுவுதல் - சூழ்தல்; பூசுதல்; பொருந்துதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.106.4 - "நெய்யணி மூவிலை வேல்" - ஆயுதங்கள் துருப்பிடியாவாறு நெய் பூசிவைத்தல் மரபு);

நீர் தழுவும் சடை அண்ணல் - சடையில் கங்கையைத் தாங்கிய தலைவன்;

மை தழுவும் மணிகண்டன் - கரிய மணி திகழும் கண்டத்தை உடையவன்; (மை - கறுப்பு);

மான்மறி ஏந்திய கையன் - கையில் மான்கன்றை ஏந்தியவன்;

பொய் தழுவாக் கயிலாயன் - மெய்ப்பொருளானவன், கயிலைமலை நாதன்;

புதுமலர் கொண்டு அடி போற்றிக் கைதொழுவார் துயர் தீர்க்கும் - புதிய பூக்களால் திருவடியைப் போற்றிக் கைகூப்பி வணங்கும் பக்தர்களது துயரைத் தீர்ப்பவன்;

கலயநல்லூர்ப் பெருமானே - திருக்கலயநல்லூரில் உறைகின்ற பெருமான்;


பிற்குறிப்பு : யாப்புக்குறிப்பு :

அறுசீர் விருத்தம் - தானன தானன தான x2.

  • அரையடியில் சீர்களிடையே வெண்டளை பயிலும்.

  • அடிகளில் 3-ஆம் 4-ஆம் சீர்களிடையே வெண்டளைக் கட்டுப்பாடு இல்லை.

  • தானன என்ற விளச்சீர்கள் வெண்டளைக் கட்டுப்பாட்டை மீறாதபடி தனதன, தான, தனன, என்றெல்லாம் வரலாம். ஒரோவழி மாங்காய்ச்சீரும் வரலாம்.

  • தான என்ற மாச்சீர் தனன என்றும் வரலாம்.

  • அரையடிகள்தோறும் ஈற்றுச்சீர் மாச்சீராகவே அமையும். (அதாவது, 3, 6-ஆம் சீர்கள் மாச்சீர்).

  • அரையடி நேரசையில் தொடங்கினால் 8 எழுத்து; அரையடி நிரையசையில் தொடங்கினால் 9 எழுத்து.


வி. சுப்பிரமணியன்

----------- --------------

No comments:

Post a Comment