Tuesday, October 23, 2018

04.57 - முதுகுன்றம் (விருத்தாசலம்) - சந்திரன் ஏறிய

04.57 - முதுகுன்றம் (விருத்தாசலம்) - சந்திரன் ஏறிய

2014-03-29

முதுகுன்றம் (திருமுதுகுன்றம் - விருத்தாசலம்)

----------------------------------

(12 பாடல்கள்)

(சந்தக் கலிவிருத்தம் - தானன தானன தானன தானா)

(லிங்காஷ்டகம் - "ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம்")


முற்குறிப்பு - படிப்போர் வசதி கருதிச் சில இடங்களில் புணர்ச்சி பிரித்துக் காட்டப்பட்டுள்ளது.

1)

சந்திர னேறிய தாழ்சடை அண்ணல்

வந்தனை செய்தடை வானவ ருக்கா

முந்தடை யார்புர மூன்றையு மெய்த

மைந்தன வன்பதி மாமுது குன்றே.


சந்திரன் ஏறிய தாழ்சடை அண்ணல் - தாழும் சடையில் சந்திரனைச் சூடிய பெருமான்;

வந்தனை செய்து அடை வானவருக்கா - வணங்கிச் சரண்புகுந்த தேவர்களுக்காக; (வானவருக்கா - வானவர்களுக்காக; கடைக்குறை விகாரம்);

முந்து அடையார் புரம் மூன்றையும் எய்த - முன்பு பகைவர்களான அசுரர்களது முப்புரங்கள் எய்து அழித்த; (அடையார் - பகைவர்);

மைந்தன் அவன் பதி மா முதுகுன்றே - வீரன் அவன் உறையும் தலம் அழகிய திருமுதுகுன்றம்; (மைந்தன் - வீரன்); (பதி - தலம்);


2)

தேன்மல ரால்தொழு சீலர கத்தன்

கூன்மதி கூவிளம் ஆறணி கூத்தன்

ஆன்மிசை யான்அர வார்த்தவன் அங்கை

மான்மறி யன்பதி மாமுது குன்றே.


தேன்மலரால் தொழு சீலர் அகத்தன் - தேன்மலர்களால் வழிபாடு செய்யும் சீலர்கள் உள்ளத்தில் உறைபவன்;

கூன்-மதி, கூவிளம், று அணி கூத்தன் - வளைந்த திங்கள், வில்வம், கங்கை இவற்றை அணிந்த கூத்தன்;

ஆன்மிசையான் அரவு ஆர்த்தவன் - இடபவாகனன், பாம்பை அரைநாணாகக் கட்டியவன்; (சம்பந்தர் தேவாரம் - 2.80.5 - "வெள்ளையெருத்தின் மிசையார்"); (ஆர்த்தல் - கட்டுதல்; பிணித்தல்);

அங்கை மான்மறியன் பதி மா முதுகுன்றே - கையில் மான்கன்றை ஏந்தியவன் உறையும் தலம் அழகிய திருமுதுகுன்றம்;


3)

ஊன்படை வேடன தோர்கணு கந்தான்

மான்பர சார்கர னூலணி மார்பன்

கூன்பிறை கோளர வம்புனை கூத்தன்

வான்பணி கோன்பதி மாமுது குன்றே.


பதம் பிரித்து:

ஊன் படை வேடனது ஓர் கண் உகந்தான்;

மான் பரசு ஆர் கரன்; நூல் அணி மார்பன்;

கூன்-பிறை, கோள்-அரவம் புனை கூத்தன்;

வான் பணி கோன் பதி மா முதுகுன்றே.


ஊன் படை வேடனது ஓர் கண் உகந்தான் - கண்ணப்பருக்கு அருள்புரிந்ததைச் சுட்டியது;

மான் பரசு ஆர் கரன் - மானையும் மழுவையும் கையில் ஏந்தியவன்; ("மான் - பெரியோன்" என்று கொண்டும் பொருள் கொள்ளல் ஆம்); (பரசு - மழு); (ஆர்தல் - பொருந்துதல்); (சம்பந்தர் தேவாரம் - 1.127.1 - "பிரம புரத்துறை பெம்மா னெம்மான்"); (சுந்தரர் தேவாரம் - 7.25.8 - "பரசாருங் கரவா பதினெண் கணமுஞ்சூழ")

கூன் பிறை, கோள் அரவம் புனை கூத்தன் - வளைந்த பிறையையும் கொடிய பாம்பையும் அணிந்த கூத்தன்;

வான் பணி கோன் - தேவர்கள் போற்றும் தலைவன்;


4)

மும்மத வெங்கரி முன்னுரி செய்தான்

அம்மதி சூடிய செஞ்சடை அண்ணல்

விம்மிய வானவர் உய்ந்திட நஞ்சுண்

மைம்மிட றன்பதி மாமுது குன்றே.


மும்மத வெங்கரி முன் உரி செய்தான் - மும்மதங்களையுடைய கொடிய யானையின் தோலை முன்பு உரித்தவன்;

அம்மதி - அம் மதி - அழகிய திங்கள்;

விம்முதல் - தேம்பி அழுதல்; வருந்துதல்;

நஞ்சு உண் மைம் மிடறன் - விடத்தை உண்ட நீலகண்டன்;


5)

பன்னிய வன்மறை பால்மதி பாம்பு

துன்னிய சென்னியன் நீறணி தூயன்

உன்னிய வர்க்கருள் உத்தமன் என்றும்

மன்னிய வன்பதி மாமுது குன்றே.


பன்னியவன் மறை - வேதங்களைப் பாடியவன்; (பன்னுதல் - பாடுதல்);

பால்மதி பாம்பு துன்னிய சென்னியன் - பால் போன்ற வெண்திங்களும் பாம்பும் நெருங்கித் திகழ்கின்ற முடி உடையவன்; (துன்னுதல் - பொருந்துதல்; செறிதல்);

நீறு அணி தூயன் - திருநீற்றைப் பூசிய பரிசுத்தன்;

உன்னியவர்க்கு அருள் உத்தமன் - தன்னை எண்ணிப் போற்றும் அன்பர்களுக்கு அருள்புரியும் உத்தமன்; (உன்னுதல் - நினைதல்; எண்ணுதல்;);

என்றும் மன்னியவன் - என்றும் நிலைத்து இருப்பவன்;


6)

செஞ்சுட ரார்திரு மேனியன் அஞ்சொல்

வஞ்சியை அன்பொடு வாம(ம்)ம கிழ்ந்தான்

அஞ்சல ளித்திடு(ம்) மஞ்சன கண்டன்

வஞ்சமி லான்பதி மாமுது குன்றே.


செஞ்சுடர் ஆர் திரு மேனியன் - இளஞாயிறுபோல் திகழும் திருமேனி உடையவன்;

அஞ்சொல் வஞ்சியை அன்பொடு வாமம் மகிழ்ந்தான் - அழகிய மொழி பேசும், கொடி போன்ற உமையை இடப்பாகமாக விரும்பியவன்;

அஞ்சல் அளித்திடும், மஞ்சு அன கண்டன் - அபயம் அளிக்கின்ற, மேகம் போல் திகழும் நீலகண்டன்;

வஞ்சம் இலான் - ஒளித்தல் இல்லாதவன்; - வரங்களை வாரி வழங்குபவன்;


7)

கோல்வளை யாள்கொழு நன்மணி மார்பின்

மேல்விட நாகமு(ம்) மேவிடும் ஈசன்

கால்வெளி மண்ணெரி நீரென ஆனான்

மால்விடை யான்பதி மாமுது குன்றே.


கோல்வளையாள் கொழுநன் - திரண்ட வளையல்களை அணிந்த உமைக்குக் கணவன்; (கோல் - திரட்சி); (கொழுநன் - கணவன்); (திருவாசகம் - திருத்தெள்ளேணம் - 8.11.20 - "கோல்வளையாள் நலம்பாடி");

மணி மார்பின்மேல் விட-நாகமும் மேவிடும் ஈசன் - பவளம் போன்ற அழகிய மார்பின்மேல் விஷப்பாம்பும் திகழும் இறைவன்; (மணி - பவளம்; அழகு); (மேவுதல் - பொருந்துதல்; விரும்புதல்); (உம் - எச்சவும்மை; அசை என்றும் கொள்ளல் ஆம்);

கால் வெளி மண் எரி நீர் என ஆனான் - காற்று, ஆகாயம், நிலம், நெருப்பு, நீர் என்று ஐம்பூதங்களாக ஆனவன்; (பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் என்ற பஞ்சபூதங்களின் முறை யாப்பு நோக்கி மாறிவந்தது);

மால் விடையான் - பெரிய இடபத்தை வாகனமாக உடையவன்;


8)

தேர்விட வெற்பையெ டுத்தவன் அஞ்ச

ஓர்விர லூன்றிநெ ரித்திசை கேட்டுப்

பேர்தரு பிஞ்ஞகன் உண்பலி தேரும்

வார்சடை யான்பதி மாமுது குன்றே.


தேர் விட வெற்பைடுத்தவன் அஞ்ச ஓர் விரல் ஊன்றி நெரித்து - (கீழே இறங்கிய தன்) தேரை மீண்டும் வானில் பறக்கச்செய்யும் பொருட்டுக் கயிலைமலையைப் பெயர்த்த தசமுகன் அஞ்சும்படி ஒரு விரலை ஊன்றி அவனை நசுக்கி;

இசை கேட்டுப் பேர் தரு பிஞ்ஞகன் - பின், அவன் இசைபாடிப் போற்றியதைக் கேட்டு இரங்கி, அவனுக்கு இராவணன் (அழுதவன்) என்ற பெயரைத் தந்து அருள்புரிந்தவன், தலைக்கோலம் உடையவன்; (சம்பந்தர் தேவாரம் - 1.11.8 - "பின்னைப் பணிந்தேத்தப் பெருவாள் பேரொடுங் கொடுத்த");

உண்பலி தேரும் வார் சடையான் - பிச்சை ஏற்கின்ற, நீள்சடை உடையவன்; (திருவாசகம் - திருக்கோத்தும்பி - 8.10.2 - "உண்பலிதேர் அம்பலவன்");


9)

ஆழ்கட லான்அல ரான்அறி யாத

கேழ்கிள ருந்தழல் ஆனவன் அன்பர்

ஊழ்வினை தீர்த்தருள் உத்தமன் இந்து

வாழ்சடை யான்பதி மாமுது குன்றே.


ஆழ்கடலான் அலரான் அறியாத - ஆழமான கடல்மேல் இருக்கும் திருமாலும் மலர்மேல் இருக்கும் பிரமனும் அறியாத;

கேழ் கிளரும் தழல் ஆனவன் - ஒளி மிக்க ஜோதி ஆனவன்; (கேழ் - ஒளி); (கிளர்தல் - வளர்தல்; மிகுதல்);

அன்பர் ஊழ்வினை தீர்த்தருள் உத்தமன் - பக்தர்களது பழவினையைத் தீர்த்து அருள்கின்ற உத்தமன்;

இந்து வாழ் சடையான் - திங்கள் தங்குகின்ற சடையை உடையவன்; (இந்து - சந்திரன்);


10)

புந்தியி லார்பல பொய்யுரை சொல்லி

நிந்தனை செய்தலை நீசரை நீங்கும்

வந்தனை செய்தடை மாணிபி ழைக்க

வந்தப ரன்பதி மாமுது குன்றே.


புந்தி இலார், பல பொய்யுரை சொல்லி நிந்தனை செய்து அலை நீசரை நீங்கும் - அறிவற்றவர்களும் பல பொய்களைச் சொல்லி இகழ்ந்து திரிகின்றவர்களுமான கீழோர்களை விட்டு அகலுங்கள்; (புந்தி - அறிவு);

வந்தனை செய்து அடை மாணி பிழைக்க வந்த பரன் - வழிபாடு செய்து அடைக்கலம் புகுந்த மார்க்கண்டேயர் உயிர் பிழைக்கும்படி வந்து (காலனை உதைத்து) அருளிய பரமன்;


11)

கள்ளலர் ஏவிய காமன தாகம்

வெள்ளிய நீறது வாகவி ழித்தான்

உள்ளிடு பத்தரை உம்பரில் ஏற்றும்

வள்ளல வன்பதி மாமுது குன்றே.


கள்-லர் ஏவிய காமனது ஆகம் வெள்ளிய நீறுஅது ஆக விழித்தான் - தேன்மலர்களைக் கணையாக எய்த மன்மதனது உடலைச் சாம்பலாகும்படி நெற்றிக்கண்ணால் பார்த்தவன்;

உள்ளிடு பத்தரை உம்பரில் ஏற்றும் வள்ளல் அவன் - தன்னை மனத்தில் இருத்தித் தியானிக்கும் அன்பர்களை வானுலகில் ஏற்றுகின்ற வள்ளல்; (உள்ளுதல் - நினைத்தல்; உள் - மனம்; இடுதல் - வைத்தல்; ஒரு துணைவினை);


12)

மான்றிக ழுங்கர வாமழு வாளா

ஈன்றவ னேஉல கங்களை என்னை

ஏன்றுகொ ளாயென ஏத்திடு வார்க்கு

வான்றரு வான்பதி மாமுது குன்றே.


மான் திகழும் கரவா - மானைக் கையில் ஏந்தியவனே;

மழுவாளா - மாழுவாள் உடையவனே;

ஈன்றவனே உலகங்களை என்னை - எல்லா உலகங்களையும் படைத்தவனே; என் தந்தையே; (குறிப்பு: "ஈன்றவனே உலகங்களை, ஈன்றவனே என்னை" என்று இயைக்க);

"என்னை ஏன்றுகொளாய்" என ஏத்திடுவார்க்கு வான் தருவான் - "என்னை ஏற்றுக்கொள்வாயாக" என்று போற்றும் பக்தர்களுக்கு வானுலகம் தருபவன்; ("என்னை" என்ற சொல்லை இடைநிலைத்தீவகமாக இருபுறமும் இயைத்துப் பொருள்கொள்க);

பதி மாமுது குன்றே - அப்பெருமான் உறையும் தலம் திருமுதுகுன்றம்.


பிற்குறிப்பு : யாப்புக் குறிப்பு:

சந்தக் கலிவிருத்தம் - தானன தானன தானன தானா - என்ற சந்தம்.

வடமொழியில் இச்சந்தத்தை - தோதகம் - दोधकम् - என்ற பெயரால் சுட்டுகின்றனர்.

குரு - நெடில் / நெடில்+ஒற்று / குறில்+ஒற்று.

லகு - குறில் (ஒற்றுத் தொடராதபோது).

அடி ஈற்றில் வரும் லகுவும் குருவாகக் கருதப்படும்.

வடமொழியில் ஐகாரம் நெடில் (குரு) என்று கருதப்படினும், தமிழ்ப் பாடலில் அலகிடும்போது ஐகாரக் குறுக்கம் வரும் இடங்களில் அது குறில் (லகு) என்று கொள்ளப்படும்.)


உதாரணம்: - லிங்காஷ்டகம் - "ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம்"


வி. சுப்பிரமணியன்

----------- --------------

04.56 - மணஞ்சேரி - கொங்கலர் சூடும்

04.56 - மணஞ்சேரி - கொங்கலர் சூடும்

2014-03-22

மணஞ்சேரி (திருமணஞ்சேரி)

------------------

(சந்தக் கலித்துறை - தானன தான தானன தான தனதான)

(தானன என்ற இடத்தில் தனதன என்றும் வரலாம்)

(சம்பந்தர் தேவாரம் - 1.98.1 - "நன்றுடையானைத் தீயதிலானை")


1)

கொங்கலர் சூடும் குழலியொர் பங்கன் குளிராரும்

திங்களைச் சென்னித் திகழ்ந்திட வைத்த திருவாளன்

மங்கையர் மைந்தர் வந்தடி போற்றும் மணஞ்சேரிச்

சங்கரன் அன்பர் தங்களுக் கின்பம் தருவானே.


கொங்கு அலர் சூடும் குழலிர் பங்கன் - வாசமலர்களை அணிந்த கூந்தலை உடைய உமையை ஒரு பங்கில் உடையவன்; (கொங்கு - வாசனை);

குளிர் ஆரும் திங்களைச் சென்னித் திகழ்ந்திட வைத்த திருவாளன் - குளிர்ந்த சந்திரனைத் தன் தலைமேல் திகழவைத்த செல்வன்;

மங்கையர் மைந்தர் வந்து அடி போற்றும் மணஞ்சேரிச் சங்கரன் - இளம்பெண்களும் அவர்கள் கணவர்களும் வந்து வழிபாடு செய்கின்ற திருமணஞ்சேரியில் உறைகின்ற சங்கரன்; (மைந்தன் - இளைஞன்); (சங்கரன் - சிவன் திருநாமம் - சுகத்தைச் செய்பவன்);

அன்பர் தங்களுக்கு இன்பம் தருவானே - தன் பக்தர்களுக்கு இன்பம் அளிப்பவன் / அளிப்பான்;

(அப்பர் தேவாரம் - 4.32.3 - "ஓதுவார்கள் தங்களுக் கருளும் எங்கள் தத்துவன்");


2)

யாதொரு நேரும் அற்றவன் அங்கை அழலேந்தி

போதொடு வாசப் புகையொடு கண்ணிற் பொழிவோடு

மாதர்க ளோடு மைந்தர்கள் போற்றும் மணஞ்சேரிக்

காதொரு தோடன் கழல்தொழு வார்கள் கவலாரே.


யாதொரு நேரும் அற்றவன் - எவ்வித ஒப்பும் இல்லாதவன்; (நேர் - ஒப்பு);

அங்கை அழல் ஏந்தி - கையில் தீயை ஏந்துபவன்;

போதொடு வாசப்-புகையொடு கண்ணில் பொழிவோடு மாதர்களோடு மைந்தர்கள் போற்றும் - பெண்களும் ஆண்களும் கண்கள் கசியப், பூக்கள் தூபம் இவற்றால் வழிபாடு செய்கின்ற; (போது - பூ); (வாசப்-புகை - தூபம்);

மணஞ்சேரிக் காது ஒரு தோடன் கழல் தொழுவார்கள் கவலாரே - திருமணஞ்சேரியில் உறைகின்றவனும் ஒரு காதில் தோடு அணிந்தவனுமான சிவபெருமானது திருவடியைத் தொழும் பக்தர்களது கவலைகள் தீரும்; (கவலார் - வருத்தம் அடையமாட்டார்);


3)

தேரினில் ஏறித் திரிபுரம் செற்ற சிலைவில்லான்

ஆரியன் அன்பர் கோரிய வெல்லாம் அருளின்ப

வாரியன் நீல மணிதிகழ் கண்டன் மணஞ்சேரி

நாரியொர் பாலன் பேர்சொலக் காலன் நணுகானே.


சிலைவில்லான் - மேருமலையை வில்லாக ஏந்தியவன்; (சிலை - மலை);

ஆரியன் - பெரியோன்; ஆசிரியன்; (திருவாசகம் - சிவபுராணம் - அடி-64 - "பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே");

அன்பர் கோரிய எல்லாம் அருள் இன்ப வாரியன் - பக்தர்கள் வேண்டிய எல்லா வரங்களையும் அருள்கின்ற இன்பக்கடல் ஆனவன்; (கோருதல் - விரும்புதல்; வேண்டிக்கொள்ளுதல்); (வாரி - கடல்); (திருவாசகம் - 8.8.2 - "பேராசை வாரியனைப் பாடுதுங்காண் அம்மானாய்");

நாரி ஒர் பாலன் - பெண்ணை ஒரு பக்கத்தில் உடையவன்; (அப்பர் தேவாரம் - 5.98.5 - "உமைபாகம் ஓர் பாலராய்"); (அப்பர் தேவாரம் - 4.88.1 - "மலைமகள் தன்னுடைய பாலனை");

நணுகான் - நெருங்கமாட்டான்;


4)

பையர வோடு பான்மதி வைத்துப் பகைதீர்த்துத்

தையலொர் பாகம் தாங்கிய கோனைச் சடையானை

மையணி கண்ணர் மாலைகள் பாடு மணஞ்சேரிச்

செய்யனை நாடும் சிந்தையி னார்க்குத் தெளிவாமே.


பையரவோடு பால்மதி வைத்துப் பகைதீர்த்துத் - படத்தை உடைய நாகப்பாம்போடு பால் போன்ற வெண்திங்களைப் பகையின்றி ஒன்றாக வாழவைத்து;

தையல் ஒர் பாகம் தாங்கிய கோனை - உமையை ஒரு பாகமாக உடைய தலைவனை;

மை அணி கண்ணர் மாலைகள் பாடு - மை தீட்டப்பெற்ற கண்களையுடைய பெண்கள் பாமாலைகள் பாடித் துதிக்கின்ற; (பாடுதல் - துதித்தல்); (மாலை - சொல்மாலை; பாமாலை);

மணஞ்சேரிச் செய்யனை - திருமணஞ்சேரியில் உறைகின்ற செம்மேனிப் பெருமானை;

நாடும் சிந்தையினார்க்குத் தெளிவாமே - விரும்பி வழிபடும் பக்தர்களுக்குத் தெளிவு உண்டாகும் (= அறியாமை தீரும்);


5)

இண்டைகள் கட்டி இணையடி போற்றும் இணையில்மார்க்

கண்டரைக் காத்துக் காலனைச் செற்ற கரிகாடன்

வண்டமிழ் வாயர் மகிழ்வொடு போற்றும் மணஞ்சேரிக்

கொண்டலங் கண்டன் குரைகழல் போற்றக் குறைபோமே.


இண்டை - ஒருவித மாலை;

இணை இல் மார்க்கண்டர் - ஒப்பற்ற மார்க்கண்டேயர்;

காலனைச் செற்ற - இயமனை உதைத்து அழித்த;

கரிகாடன் - சுடுகாட்டில் இருப்பவன்;

வண்டமிழ் வாயர் - வண்தமிழ் வாயர் - தேவாரம் திருவாசகம் முதலியன பாடுபவர்கள்;

கொண்டலங் கண்டன் - மேகம் போல் அழகிய கண்டத்தை உடையவன்; (அம் - அழகு);

குரைகழல் போற்றக் குறை போமே - அப்பெருமானுடைய (ஒலிக்கின்ற கழலை அணிந்த) திருவடியை வழிபட்டால் குறைகள் தீரும்;


6)

சிர(ம்)மலி மாலை திகழ்முடி மீது திரையாறு

விரவிடு கின்ற வேணியி னானை விடையானை

மர(ம்)மலி சோலை வயல்புடை சூழ்ந்த மணஞ்சேரி

வரதனை வாழ்த்த மங்கல(ம்) மல்கு(ம்) மகிழ்வாமே.


சிரம் மலி மாலை திகழ் முடிமீது திரை-ஆறு விரவிடுகின்ற வேணியினானை - தலைமாலை அணிந்த திருமுடியின்மேல் அலைமோதும் கங்கை பொருந்துகின்ற சடையானை;

விடையானை - இடப-வாகனனை;

மரம் மலி சோலை வயல் புடை சூழ்ந்த மணஞ்சேரி வரதனை - மரங்கள் நிறைந்த சோலையும் வயலும் சூழ்ந்த திருமணஞ்சேரியில் உறைகின்ற வரதனை; (வரதன் - வரம் அருள்பவன்)

வாழ்த்த மங்கலம் மல்கும் மகிழ்வு ஆமே - போற்றி வழிபட்டால், திரு மிகும், இன்புற்று வாழலாம்;


7)

தளைகளி லாத தன்மையன் எந்தை தனிநாதன்

வளையொரு கையன் வல்விடம் உண்ட மணிகண்டன்

வள(ம்)மலி கின்ற வயல்புடை சூழ்ந்த மணஞ்சேரி

இளமதி சூடி இணையடி ஏத்த இடர்போமே.


தளைகள் இலாத தன்மையன் - மும்மலக்கட்டு அற்றவன்; (சுதந்திரன்);

எந்தை தனி நாதன் - எம் தந்தை, ஒப்பற்ற தலைவன்; (தனி - ஒப்பில்லாத);

வளைரு கையன் - ஒரு கையில் வளையல் அணிந்தவன் - உமைபங்கன்;

வல்விடம் உண்ட மணிகண்டன் - கொடிய நஞ்சை உண்ட நீலகண்டன்;

வளம் மலிகின்ற வயல் புடை சூழ்ந்த மணஞ்சேரி - வளம் மிக்க வயல் சூழ்ந்த திருமணஞ்சேரியில் உறைகின்ற;

இளமதி சூடி இணையடி ஏத்த இடர் போமே - இளம்பிறையை அணிந்த பெருமானது இரு-திருவடிகளைத் துதித்தால் துன்பம் நீங்கும்;


8)

அருவரை பேர்த்தான் ஐயிரு வாய்கள் அழுதேத்தத்

திருவிரல் ஒன்றைச் சிறிதள வூன்று சிவனெம்மான்

வருமடி யார்கள் மனமகிழ் வெய்து மணஞ்சேரி

எருதமர் ஈசன் இணையடி ஏத்த இடர்போமே.


அரு-வரை பேர்த்தான் ஐயிரு-வாய்கள் அழுது ஏத்தத் - கயிலைமலையை பெயர்த்தவனான இராவணனது பத்துவாய்களும் அழுது துதிபாடும்படி; (வரை - மலை);

திருவிரல் ஒன்றைச் சிறிது அவு ஊன்று சிவன் எம்மான் - திருப்பாத விரல் ஒன்றைச் சிறிதளவே ஊன்றிய சிவன், எம் தலைவன்;

வரும் அடியார்கள் மனமகிழ்வு எய்து மணஞ்சேரி - வந்து வழிபடும் பக்தர்கள் மனத்தில் இன்பம் அடைகின்ற திருமணஞ்சேரியில் உறைகின்ற;

எருது அமர் ஈசன் இணையடி ஏத்த இடர் போமே - இடபத்தை ஊர்தியாக விரும்பும் ஈசனது இரு-திருவடிகளைப் போற்றினால் துன்பம் தீரும்;


9)

வேணுவை ஏந்தி மேய்த்தவன் வேதன் மிகநேடி

நாணுற ஓங்கு நம்பனை நட்டம் நவில்வானை

வாணுதல் மாதர் மலர்கொடு போற்று மணஞ்சேரித்

தாணுவை நெஞ்சில் தரித்தவர்க் கில்லை தடுமாற்றே.


வேணுவை ஏந்தி மேய்த்தவன் - வேணுகோபாலன் - திருமால்; (வேணு - புல்லாங்குழல்);

வேதன் - பிரமன்;

மிக நேடி நாணுற ஓங்கு நம்பனை - அவ்விருவரும் அடிமுடி மிகவும் தேடி நாணும்படி எல்லையின்றி ஓங்கிய சிவனை; (நேடுதல் - தேடுதல்); (நம்பன் - சிவன் திருநாமம் - விரும்பத்தக்கவன்);

நட்டம் நவில்வானை - திருநடம் செய்பவனை;

வாணுதல் மாதர் மலர்கொடு போற்று மணஞ்சேரித் தாணுவை - ஒளியுடைய நெற்றியுடைய பெண்கள் பூவால் வழிபாடு செய்யும் திருமணஞ்சேரித் தாணுவை; (வாணுதல் - வாள் நுதல் - ஒளிபொருந்திய நெற்றி); (தாணு - ஸ்தாணு - சிவன் திருநாமங்களுள் ஒன்று);

தடுமாற்று - தடுமாற்றம் - மனக்கலக்கம்;


10)

வீண்மொழி பேசும் மிண்டர்கள் என்றும் விரவாதான்

நாண்மலர்ப் பாதன் நங்கையொர் பங்கன் நலம்நாடி

வாண்முக மாதர் வந்தடி போற்று மணஞ்சேரி

நீண்மதி சூடி நினைபவர் நெஞ்சில் நிறைவானே.


மிண்டர் - கல்நெஞ்சர்;

விரவாதான் - விரவாதவன்; சேராதவன்; (விரவுதல் - அடைதல்; கலத்தல்); (அப்பர் தேவாரம் - 6.46.8 - "மெய்யானைப் பொய்யரொடு விரவாதானை");

நாண்மலர்ப் பாதன் - புதிதாகப் பூத்த மலர் போன்ற பாதத்தை உடையவன்;

நங்கைர் பங்கன் - உமைபங்கன்;

வாண்முக மாதர் - வாள்-முக-மாதர் - ஒளி பொருந்திய முகத்தை உடைய பெண்கள்;

நீண்மதி சூடி - நீள்மதி சூடி - திங்களை அணிந்தவன்;


11)

வெண்டிரை ஆரும் வேலையு மிழ்ந்த விடமுண்ட

கண்டனை நெற்றிக் கண்ணனை வீரக் கழலானை

வண்டறை கின்ற வண்பொழில் சூழ்ந்த மணஞ்சேரி

அண்டனை அண்டும் அன்பரை அல்லல் அடையாவே.


வெண் திரை ஆரும் வேலை உமிழ்ந்த விடம் உண்ட கண்டனை - வெண்ணிற அலைகள் பொருந்திய கடலான பாற்கடல் உமிழ்ந்த ஆலகால விடத்தை உண்ட நீலகண்டனை;

வீரக் கழலானை - வீரக்கழலை அணிந்த திருப்பாதனை;

வண்டு அறைகின்ற வண்-பொழில் சூழ்ந்த மணஞ்சேரி - வண்டுகள் ஒலிக்கின்ற வளம் மிக்க சோலைகளால் சூழப்பெற்ற திருமணஞ்சேரியில் உறைகின்ற;

அண்டனை அண்டும் அன்பரை அல்லல் அடையாவே - சிவபெருமானைச் சரண்புகுந்த பக்தர்களைத் துன்பங்கள் நெருங்கா; (அண்டன் - சிவன்); (அண்டுதல் - சரண்புகுதல்);


வி. சுப்பிரமணியன்

-------------- --------------

Thursday, October 11, 2018

04.55 - நெடுங்களம் - கழல்மகிழ்ந்து வாழ்த்துவார்

04.55 - நெடுங்களம் - கழல்மகிழ்ந்து வாழ்த்துவார்

2014-03-15

நெடுங்களம்

----------------------------------

(சந்தக் கலிவிருத்தம் - தனாதனா தனாதனா தனாதனா தனாதனா)

(தனாதனான தானனா தனாதனான தானனா - என்றும் நோக்கலாம்)

(கணேச பஞ்சரத்ன ஸ்தோத்திரம் - "முதாகராத்த மோதகம்")

(சம்பந்தர் தேவாரம் - 2.98.1 - "வரைத்தலைப் பசும்பொனோடு")


முற்குறிப்புகள் - சந்தம் கருதிச் சில இடங்களில் ஒற்று விரித்தல் விகாரம். படிப்போர் வசதி கருதிச் சந்தி பிரித்துக் காட்டப்பட்டுள்ளது.

*(ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;


1)

கழல்மகிழ்ந்து வாழ்த்துவார் களிக்குமாறு நல்குவான்

தழல்விளங்கு கையினான் தரைக்கிறங்கு வான்புனல்

சுழல்விளங்கு வேணியான் துதைந்திலங்கு நீற்றினான்

நிழல்மழுப் படைக்கரன் நெடுங்களத்து நாதனே.


* திருநெடுங்களத்து ஈசன் திருநாமம் - திருநெடுங்களநாதர், நித்திய சுந்தரேஸ்வரர்.

கழல் மகிழ்ந்து வாழ்த்துவார் களிக்குமாறு நல்குவான் - திருவடியை விரும்பித் துதிக்கும் அன்பர்கள் இன்புறும்படி அருள்புரிபவன்;

தழல் விளங்கு கையினான் - கையில் தீயை ஏந்தியவன்;

தரைக்கு இறங்கு வான்புனற்-சுழல் விளங்கு வேணியான் - வானத்திலிருந்து கீழ்நோக்கிப் பாய்ந்த கங்கையின் சுழல்கள் விளங்கும் சடையை உடையவன் - கங்காதரன்; (வேணி - சடை);

துதைந்து இலங்கு நீற்றினான் - மேனிமேல் திருநீற்றை அழுந்தப் பூசியவன்;

நிழல்-மழுப்படைக் கரன் - ஒளிவீசும் மழுவாயுதத்தைக் கையில் ஏந்தியவன்;

நெடுங்களத்து நாதனே - திருநெடுங்களத்தில் உறையும் பெருமான்; (கரன்னெடுங்களத்து - கரன் நெடுங்களத்து - னகர ஒற்று விரித்தல் விகாரம்);


2)

புனைந்ததிங்க ளோடராப் பொருந்துகின்ற சென்னியான்

நனைந்தசெஞ் சடைப்பரன் நடஞ்செயும் பதந்தனைச்

சினந்தவிர்ந்த நெஞ்சராய்த் தினம்பணிந்து போற்றிட

நினைந்தவர்க்கு நன்மையான் நெடுங்களத்து நாதனே.


புனைந்த திங்களோடு அராப் பொருந்துகின்ற சென்னியான் - திருமுடிமேல் சந்திரனையும் பாம்பையும் அணிந்தவன்; (அரா - பாம்பு);

நனைந்த செஞ்சடைப் பரன் - கங்கையைச் சடையில் உடைய பரமன்;

ம் செயும் பதந்தனைச் சினம் தவிர்ந்த நெஞ்சராய்த் தினம் பணிந்து போற்றிட நினைந்தவர்க்கு நன்மையான் - கூத்தாடும் திருவடியைச் சினம் முதலிய குற்றங்கள் நீங்கிய மனத்தோடு தினமும் மறவாமல் வழிபடும் பக்தர்களுக்கு நன்மை செய்பவன்; (பரன்னடஞ்செயும் - பரன் நடஞ்செயும் - னகர ஒற்று விரித்தல் விகாரம்);

நெடுங்களத்து நாதனே - திருநெடுங்களத்தில் உறையும் பெருமான்;


3)

உறங்குகின்ற போதிலும் உறங்கிடாத போதிலும்

மறந்திடாது வாழ்த்தினால் மறைப்பிலாது நல்குவான்

பிறங்குதிங்கள் ஏற்றவன் பிறப்பிறப்பி லாதவன்

நிறங்களைந்தும் ஆயினான் நெடுங்களத்து நாதனே.


உறங்குகின்ற போதிலும் றங்கிடாத போதிலும் மறந்திடாது வாழ்த்தினால் மறைப்பு இலாது நல்குவான் - இரவும் பகலும் நினைந்து வழிபடும் பக்தர்களுக்கு அருளை வாரி வழங்குபவன்; (மறைப்பு - ஒளித்தல்); (சம்பந்தர் தேவாரம் - 3.22.1 - "துஞ்சலும் துஞ்சலிலாத போழ்தினும் நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும்"); (போதிலும்முறங்கிடாத - போதிலும் உறங்கிடாத - மகர ஒற்று விரித்தல் விகாரம்);

பிறங்கு-திங்கள் ஏற்றவன் - ஒளிவீசும் சந்திரனைச் சூடியவன்; (பிறங்குதல் - விளங்குதல்);

பிறப்பு இறப்பு இலாதவன் - பிறத்தலும் சாதலும் இல்லாதவன்;

நிறங்கள் ஐந்தும் ஆயினான் - ஐந்து நிறங்கள் உடையவன்; (திருவாசகம் - சிவபுராணம் - அடி 49-50 "நிறங்களோர் ஐந்துடையாய்");


4)

விருப்பிலான் வெறுப்பிலான் விரும்புவார்க் கருத்தியான்

பருப்பதத்தில் உள்ளவன் பதங்கடந்து நிற்பவன்

பொருப்புவில்ல தேந்தினான் புரந்தகிக்க நக்கவன்

நெருப்பிருக்கு(ம்) நெற்றியான் நெடுங்களத்து நாதனே.


விருப்பிலான் வெறுப்பிலான் - விருப்பு வெறுப்பு இவை இல்லாதவன்;

விரும்புவார்க்கு அருத்தியான் - அன்பருக்கு அன்பன்; (அருத்தி - அன்பு);

பருப்பதத்தில் உள்ளவன் - கயிலைமலையான்; ஸ்ரீசைலத்தில் உள்ளவன்; (பருப்பதம் - மலை - இங்கே கயிலைமலை; திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்) என்றும் கொள்ளலாம்);

பதம் கடந்து நிற்பவன் - வாக்கிற்கு எட்டாதவன்; (பதம் - மொழி; சொல்; அளவை); (திருவாசகம் - திருவண்டப் பகுதி - அடி 111 - "சொற்பதங் கடந்த தொல்லோன்");

பொருப்பு வில்-து ஏந்தினான் - மேருமலையை வில்லாக ஏந்தியவன்;

புரம் தகிக்க நக்கவன் - முப்புரங்களை எரிக்கச் சிரித்தவன்; (தகித்தல் - எரித்தல்);

நெருப்பு இருக்கும் நெற்றியான் - நெற்றிக்கண்ணன்;


5)

பகைத்தெதிர்ந்த மும்மதப் பகட்டினைச் செகுத்தவன்

மிகைத்ததக்க னார்சிரம் தடிந்தவன் வியன்புரம்

நகைத்தழித்த பெற்றியான் நலங்கிளர்ந்த செஞ்சுடர்

நிகர்த்திலங்கு மேனியான் நெடுங்களத்து நாதனே.


பகைத்து எதிர்ந்த மும்மதப் பகட்டினைச் செகுத்தவன் - எதிர்த்துப் போர்செய்த ஆண்யானையைக் கொன்றவன்; (பகடு - ஆண் யானை); (செகுத்தல் - கொல்லுதல்);

மிகைத்த தக்கனார் சிரம் தடிந்தவன் - ஆணவத்தோடு அவவேள்விசெய்த தக்கனது தலையை வெட்டியவன்; (மிகைத்தல் - செருக்குறுதல்); (தக்கனார் - தக்கன்; ஆர் - இழித்தற்பொருளில் வந்தது); (தடிதல் - வெட்டுதல்);

வியன்-புரம் நகைத்து அழித்த பெற்றியான் - பெரிய முப்புரங்களைச் சிரித்து எரித்த பெருமை உடையவன்; (வியன் - பெரிய); (அப்பர் தேவாரம் - 6.5.1 - "வில்லால் வியனரணம் எய்தாய் போற்றி"); (நகைத்தல் - சிரித்தல்); (பெற்றி - பெருமை; இயல்பு);

நலம் கிளர்ந்த செஞ்சுடர் நிகர்த்து இலங்கு மேனியான் - அழகு மிக்க செந்தீப் போல் செம்மேனியன்; (நலம் - நன்மை; அழகு); (கிளர்தல் - மிகுதல்; சிறத்தல்; ஓங்குதல்);


6)

மருந்துவேண்டு வானவர் வழுத்தநஞ்சம் உண்டவன்

அருந்தவம் புரிந்தவர்க் கறங்களோதும் ஆரியன்

பொருந்திநின்று சந்ததம் புகழ்ந்திடும் தொழும்பரை

நெருங்கிநின்று காப்பவன் நெடுங்களத்து நாதனே.


மருந்து வேண்டு வானவர் வழுத்த நஞ்சம் உண்டவன் - அமுதினை விரும்பிய தேவர்கள் வணங்க, அவர்களுக்கு இரங்கி ஆலகால விஷத்தை உண்டவன்; (மருந்து - அமுதம்); (வழுத்துதல் - துதித்தல்); (நஞ்சம் - விஷம்);

அருந்தவம் புரிந்தவர்க்கு அறங்கள் ஓதும் ஆரியன் - அரிய தவமுடைய சங்காதியர்களுக்கு வேதப்பொருளை உபதேசித்த குரு; (ஆரியன் - ஆசாரியன்);

பொருந்திநின்று சந்ததம் புகழ்ந்திடும் தொழும்பரை நெருங்கிநின்று காப்பவன் - மனம் ஒன்றி எப்பொழுதும் துதிக்கும் பக்தர்களை அருகிருந்து காத்தருள்பவன்; (சந்ததம் - எப்பொழுதும்); (தொழும்பர் - அடியவர்);


7)

மறைந்துவாளி எய்தவல் மதன்தனைப் பொடித்தவன்

குறைந்ததிங்கள் ஏத்தவே குளிர்ந்துகுஞ்சி வைத்தவன்

நிறந்திகழ் மிடற்றினான் நிலத்திலும் விசும்பிலும்

நிறைந்திலங்கு பெற்றியான் நெடுங்களத்து நாதனே.


மறைந்து வாளி எய்த வல்-மதன்தனைப் பொடித்தவன் - ஒளித்திருந்து அம்பை எய்த வலிய மன்மதனைச் சாம்பலாக்கியவன்; (மறைந்து - "மறைத்து" என்றது எதுகைநோக்கி மெலித்தல் விகாரம்); (வாளி - அம்பு); (சம்பந்தர் தேவாரம் - 3.22.5 - "கொங்கலர் வன்மதன் வாளி ஐந்தகத்து");

குறைந்த திங்கள் ஏத்தவே குளிர்ந்து குஞ்சி வைத்தவன் - தேய்ந்து அழியவிருந்த சந்திரன் வணங்கவும், இரங்கித் தன் தலைமேல் அணிந்து அதனைக் காத்தவன்; (குளிர்தல் - கருணையால் முகங்கனிதல்); (குஞ்சி - தலை);

நிறம் திகழ் மிடற்றினான் - கரிய நிறம் திகழும் கண்டத்தன்; (கருமை என்பது குறிப்பால் பெறப்பட்டது);

நிலத்திலும் விசும்பிலும் நிறைந்து இலங்கு பெற்றியான் - மண்ணிலும் விண்ணிலும் எங்கும் வியாபித்து இருப்பவன்; (விசும்பு - ஆகாயம்); (பெற்றி - தன்மை);


8)

தரித்தவன் சலத்தினைத் தலைச்சரம் புனைந்தவன்

எரித்தவன் திரிந்தமூ வெயில்களைக் கணத்தினில்

சிரித்துவா ளரக்கனார் சிரங்களஞ்சொ டஞ்சையும்

நெரித்துவாள் அளித்தவன் நெடுங்களத்து நாதனே.


தரித்தவன் சலத்தினைத் - கங்காதரன்; (சலம் - ஜலம்);

தலைச்சரம் புனைந்தவன் - தலைமாலை அணிந்தவன்; (சரம் - மாலை); (முதலடியில் "தலை" என்ற சொல், "தரித்தவன் சலத்தினைத் தலை", "தலைச்சரம் புனைந்தவன்" என்று இருபக்கமும் இடைநிலைத் தீவகமாகி இயையும்);

எரித்தவன் திரிந்த மூவெயில்களைக் கணத்தினில், சிரித்து - திரிந்த முப்புரங்களைத் தன் சிரிப்பினால் நொடியளவில் எரித்தவன்; (எயில் - மதில்); (கணம் - க்ஷணம்);

சிரித்து, வாள்-அரக்கனார் சிரங்கள் அஞ்சொடு அஞ்சையும் நெரித்து வாள் அளித்தவன் - (இராவணன் கயிலைமலையைப் பெயர்த்தபொழுது) சிரித்துக், கொடிய அரக்கனான அவன் தலைகள் பத்தையும் நசுக்கிப், பின் (அவன் பாடிய இசையைக் கேட்டு இரங்கி அவனுக்குச் சந்திரஹாஸம் என்ற) வாளைத் தந்தருளியவன்; (அரக்கனார் - ஆர் என்றது இழிவு குறித்து); ("சிரித்து" என்ற சொல் இடைநிலைத் தீவகமாக இருபக்கமும் சேர்த்துப் பொருள்கொள்ள நின்றது); (அப்பர் தேவாரம் - 4.80.10 - "மலைமகள் கோன்சிரித்து அரக்கன் மணிமுடி பத்தும் ... நெருக்கி மிதித்த விரல்");

நெடுங்களத்து நாதனே - திருநெடுங்களத்தில் உறையும் சிவபெருமான்.


9)

அலம்புமாழி வண்ணனும் மலர்ந்தபோதின் அண்ணலும்

புலம்புமா றுயர்ந்தவன் புறத்தகத் திருப்பவன்

சலம்புகுந்த வேணியன் சலந்தரற் றடிந்தவன்

நிலம்பணிந்து போற்றிசெய் நெடுங்களத்து நாதனே.


அலம்பும் ஆழி வண்ணனும் லர்ந்த போதின் அண்ணலும் புலம்புமாறுயர்ந்தவன் - ஒலிக்கின்ற கடலின் நிறத்தை உடைய திருமாலும் மலர்ந்த தாமரைமேல் இருக்கும் பிரமனும் அடிமுடி தேடி வருந்துமாறு ஓங்கியவன்; (அலம்புதல் - ஒலித்தல்); (ஆழி - கடல்); (போது - பூ - தாமரைப்பூ); (புலம்புதல் - வாடுதல்; வருந்துதல்; அடிக்கடி கூறுதல்); (வண்ணனும்மலர்ந்த - வண்ணனும் அலர்ந்த - மகர ஒற்று விரித்தல் விகாரம்);

புறத்து அகத்து இருப்பவன் - வெளியிலும் உள்ளும் இருப்பவன்; (உம்மைத்தொகை);

சலம் புகுந்த வேணியன் - சடையில் ஜலத்தை (கங்கையை) உடையவன்;

சலந்தரற் றடிந்தவன் - சலந்தரனைத் தடிந்தவன் - சலந்தராசுரனை அழித்தவன்; (உயர்திணைப் பெயர்கள் வரும் இடத்தில் இரண்டாம் வேற்றுமைத்தொகையில் னகர ஒற்று றகர ஒற்றாகத் திரியும்);

நிலம் பணிந்து போற்றிசெய் நெடுங்களத்து நாதனே - உலகோர் வழிபடும் ஈசன், திருநெடுங்களத்தில் உறைகின்ற சிவபெருமான்;


10)

பொலாததே புகன்றிடும் புரட்டரும் பிரட்டரும்

இலார்நலங்கள் ஏத்துவீர் இரங்குவான் உருத்திரன்

நலார்கள்நால்வ ருக்கறம் விரித்தவேத நாயகன்

நிலாவணிந்த உச்சியான் நெடுங்களத்து நாதனே.


பொலாததே புகன்றிடும் புரட்டரும் பிரட்டரும் இலார் நலங்கள் - பொல்லாதவற்றையே பேசுகின்ற வஞ்சகர்களும் நெறிக்குப் புறம்பானவர்களும் நன்மை இல்லாதவர்கள்; (பொலாததே, இலார், நலார்கள் - பொல்லாததே, இல்லார், நல்லார்கள் - இடைக்குறை விகாரம்); (புரட்டர் - பொய்யர்கள்; வஞ்சகர்கள்); (பிரட்டர் - பிரஷ்டர் - நெறிக்குப் புறம்பானவர்கள்); (நலம் - நல்ல குணம்; உயர்வு; அன்பு; இன்பம்);

த்துவீர் இரங்குவான் உருத்திரன் - நீங்கள் உருத்திரமூர்த்தியான சிவபெருமானைத் துதியுங்கள்; அப்பெருமான் இரங்கி அருள்வான்; (அப்பர் தேவாரம் - 4.11.6 - "சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கலால் நலமிலன்");

நலார்கள் நால்வருக்கு அறம் விரித்த வேதநாயகன் - முனிவர்கள் நால்வருக்கு மறைப்பொருளை உபதேசித்தவனும் வேதங்களுக்குத் தலைவனுமான தட்சிணாமூர்த்தி; (நலார்கணால்வர் - நலார்கள் நால்வர்);

நிலாணிந்த உச்சியான் - சந்திரசேகரன்;

நெடுங்களத்து நாதனே - திருநெடுங்களத்தில் உறைகின்ற சிவபெருமான்;


11)

கரந்தவன் திரைப்புனல் சிரத்திலூண் இரந்தவன்

கரந்தொழும் தொழும்பரின் கருத்தறிந்து வேண்டிய

வரந்தரும் பரம்பரன் மடக்கொடிக் கிடந்தரும்

நிரந்தரன் சுதந்திரன் நெடுங்களத்து நாதனே.


கரந்தவன் திரைப்புனல் - அலைமிக்க கங்கையைச் சடையில் ஒளித்தவன்; (கரத்தல் - ஒளித்தல்; மறைத்தல்);

சிரத்தில் ஊண் இரந்தவன் - பிரமனது மண்டையோட்டில் பிச்சை ஏற்பவன்; (ஊண் - உணவு);

கரம் தொழும் தொழும்பரின் கருத்து அறிந்து வேண்டிய வரம் தரும் பரம்பரன் - கைதொழும் அடியவர்களது எண்ணத்தை அறிந்து அவர்கள் விரும்பிய வரங்களையெல்லாம் தருகின்ற மேலானவன்; (தொழும்பர் - அடியவர்);

மடக்கொடிக்கு இம் தரும் - இளங்கொடி போன்ற உமைக்கு இடப்பாகத்தைத் தருகின்ற;

நிரந்தரன் சுதந்திரன் - அழிவற்றவன், தனக்கு ஒரு தலைவன் இல்லாதவன்; (அப்பர் தேவாரம் - 6.98.1 - "தாம் ஆர்க்கும் குடி அல்லாத் தன்மையான சங்கரன்");

நெடுங்களத்து நாதனே - திருநெடுங்களத்தில் உறைகின்ற சிவபெருமான்;


பிற்குறிப்பு: யாப்புக் குறிப்பு:

சந்தக் கலிவிருத்தம் - தனாதனா தனாதனா தனாதனா தனாதனா.

இச்சந்தத்தைத் - தனாதனான தானனா தனாதனான தானனா - என்றும் நோக்கலாம்.

"லகு-குரு" என்ற அமைப்பு அடிகள்தோறும் 8 முறை வரும்.

குரு = நெடில் / நெடில்+ஒற்று / குறில்+ஒற்று.

லகு = குறில் (ஒற்றுத் தொடராதபோது).

அடி ஈற்றில் வரும் லகுவும் குருவாகக் கருதப்படும்.

இச்சந்தத்தை வடமொழியில் "பஞ்சசாமரம்" (pañcacāmaram - पञ्चचामरम्) என்பர்;

உதாரணம் - கணேச பஞ்சரத்ன ஸ்தோத்திரம் - "முதாகராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்";


சம்பந்தர் தேவாரம் - 2.98.1 - "வரைத்தலைப் பசும்பொனோ டருங்கலன் களுந்திவந்(து)"


(தேவாரத்தில் 4 விளச்சீர்கள் வரும் வேறு பதிகங்களும் உள்ளன. ஆனால் அவை இச்சந்தத்தினின்று சற்றே வேறுபடுவன. உதாரணம்: சம்பந்தர் தேவாரம் - 3.25.1 - "மருந்துவேண் டில்இவை மந்திரங் கள்இவை")


வி. சுப்பிரமணியன்

------------ ------------------