Tuesday, April 4, 2023

08.04.035 – காரைக்கால் அம்மையார் துதி - பசித்து வந்தவர் - (வண்ணம்)

08.04.035 – காரைக்கால் அம்மையார் துதி - பசித்து வந்தவர் - (வண்ணம்)



2007-05-11

8.4.35 - பசித்து வந்தவர் - (காரைக்கால் அம்மையார் துதி)

--------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தனத்த தந்தன தனதன தனதன

தனத்த தந்தன தனதன தனதன

தனத்த தந்தன தனதன தனதன .. தனதான )

(உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை - திருப்புகழ் - திருப்பரங்குன்றம்)


முற்குறிப்பு: இப்பாடல் காரைக்கால் அம்மையார் வரலாற்றுச் சுருக்கமாக அமைந்துள்ளது;


பசித்து வந்தவ ருணவொரு கறியிலை

.. .. .. எனப்ப ரிந்தவர் இலைதனில் ஒருகனி

.. .. படைத்து வந்தவர் பிறகுண வருமவர் .. மணவாளன்

.. பழத்தை இங்கிட எனவுள வொருகனி

.. .. .. கலத்தில் அன்பினொ டிடவுணும் அவனவர்

.. .. பதைத்தி டும்படி இனுமொரு கனியையும் .. இடுவாய்நான்


புசிக்க என்றிட அவரரன் அடிதொழு

.. .. .. திரக்க அங்கொரு கனிவர மறுகனி

.. .. புசித்த வன்கழ றிருகனி இருசுவை .. வருமாறு

.. புலப்ப டும்படி எனவவர் அரனருள்

.. .. .. தனைப்ப கர்ந்திட அவனறி வணமொரு

.. .. புதுப்ப ழங்கரம் வரவவன் வெருவொடு .. பிரிவானே


நசிக்க ஒன்பது துளையுட லழகொரு

.. .. .. கணத்து டம்பது தனையிவண் அருளென

.. .. நயக்கு மன்பர துளமகி ழுருவிறை .. தருவானே

.. நரிக்கு லந்திரி சுடலையில் நடமிடு

.. .. .. நிருத்தன் அங்கழல் இணைதொழும் அடியவர்

.. .. நரர்க்கி டும்பைகள் அறவிரு பதிகமும் .. மொழிவாரே


வசிட்டர் அந்தரர் அயனரி தொழுபதி

.. .. .. மலைத்த டந்தனி லடியிட வெருவிய

.. .. மனத்தர் தந்தலை நடைகொடு கயிலையை .. அடைவாரே

.. மலைக்கு மங்கையும் வினவிட அனையிவர்

.. .. .. நமக்கெ னுஞ்சொலை அரனுரை செயுமவர்

.. .. மலர்ப்ப தங்களை நினைபவர் கதிபெறல் .. எளிதாமே.


பதம் பிரித்து:

பசித்து வந்தவர் உண ஒரு கறி இலை

.. .. .. எனப், பரிந்து அவர் இலைதனில் ஒரு கனி

.. .. படைத்து உவந்தவர்; பிறகு உண வரும் அவர் .. மணவாளன்

.. "பழத்தை இங்கு இட" என, உள ஒரு கனி

.. .. .. கலத்தில் அன்பினொடு இட, உணும் அவன் அவர்

.. .. பதைத்திடும்படி, "இனும் ஒரு கனியையும் இடுவாய் நான்


புசிக்க" என்றிட, அவர் அரன் அடிதொழுது

.. .. .. இரக்க, அங்கு ஒரு கனி வர, மறு-கனி

.. .. புசித்தவன், "கழறு, இருகனி இருசுவை வரும் ஆறு

.. புலப்படும்படி" என, அவர் அரன் அருள்-

.. .. .. தனைப் பகர்ந்திட, அவன் அறி-வணம் ஒரு

.. .. புதுப்பழம் கரம் வர, அவன் வெருவொடு .. பிரிவானே;


"நசிக்க ஒன்பது துளை உடல் அழகு; ஒரு

.. .. .. கணத்து உடம்பதுதனை இவண் அருள்" என

.. .. நயக்கும் அன்பரது உளம் மகிழ் உரு இறை .. தருவானே;

.. நரிக்குலம் திரி சுடலையில் நடமிடு

.. .. .. நிருத்தன் அங்கழல்-இணை தொழும் அடியவர்,

.. .. நரர்க்கு இடும்பைகள் அற, இரு பதிகமும் .. மொழிவாரே;


வசிட்டர் அந்தரர் அயன் அரி தொழு-பதி

.. .. .. மலைத்தடந்தனில் அடி இட வெருவிய

.. .. மனத்தர் தம் தலை-நடைகொடு கயிலையை .. அடைவாரே;

.. மலைக்கு மங்கையும் வினவிட, "அனை இவர்

.. .. .. நமக்கு" எனும் சொலை அரன் உரை-செயும் அவர்

.. .. மலர்ப்பதங்களை நினைபவர் கதிபெறல் .. எளிதாமே.


பசித்து வந்தவர் ரு கறி லை எனப், பரிந்து அவர் இலைதனில் ஒரு கனி படைத்து வந்தவர் - (காலையில்) பசியோடு வந்த ஓர் அடியவர்க்கு உணவிடும்பொழுது, கறி இன்னும் சமைக்கப்பட்டிராத காரணத்தால், அன்போடு அவர் இலையில் (கணவன் கொடுத்தனுப்பியிருந்த இரு மாம்பழங்களில்) ஒரு மாம்பழத்தை இட்டு மகிழ்ந்தவர்;

பிறகு ண வரும் அவர் மணவாளன், "பழத்தை இங்கு இ" என, ரு கனி கலத்தில் அன்பினொடு இ, ணும் அவன் - பின்னர்ப் பகலில் உண்ண வந்த அவர் கணவன் "பழத்தை இங்கே இடுக" என்று சொல்ல, இருந்த ஒரு பழத்தை இலையில் அன்போடு இட, உண்ட அவன்; (இட – இடுக என்ற வியங்கோள்);

வர் பதைத்திடும்படி, "இனும் ஒரு கனியையும் இடுவாய் நான் புசிக்க" என்றிட – அவர் மனம் கலங்கும்படி, "இன்னொரு பழத்தையும் நான் சாப்பிட இடு" என்று சொன்னதும்;

அவர் அரன் அடிதொழுது இரக்க, அங்கு ஒரு கனி வர, மறு-கனி புசித்தவன், "கழறு, ருகனி இருசுவை வரும் ஆறு புலப்படும்படி" என – அவர் ஈசன் திருவடியை வணங்கி வேண்ட, அங்கே அவர் கையில் ஒரு பழம் வந்தடைய, (அதனை இட்டதும்), அந்த இரண்டாம் பழத்தை உண்டவன், "(ஒரே மரத்தின்) இரு பழங்கள் இருவிதச் சுவை பெற்ற உண்மையை நான் அறியும்படி சொல்லு" என்று சொல்ல;

வர் அரன் அருள்தனைப் பகர்ந்திட, அவன் அறி-வணம் ஒரு புதுப்பழம் கரம் வர, வன் வெருவொடு பிரிவானே - அவர் சிவன் அருள்புரிந்ததைச் சொல்ல, (அப்படி எனில் இன்னொரு பழம் வரவழைத்துக் காட்டு என்று அவன் சொன்னதும்), அவனும் அறியும்படி ஒரு புதிய பழம் அவர் கையில் வந்ததும், அவன் (இவர் தெய்வம் என்று) அஞ்சி அவரைப் பிரிந்தான்;


"நசிக்க ஒன்பது துளை ல் அகு; ரு கணத்து டம்பதுதனை வண் அருள்" நயக்கும் அன்பரது ம் மகிழ் உரு றை தருவானே - (சில காலம் கழித்து, அவன் இவரோடு வாழ மறுத்ததும்), "இந்த நவத்துவாரம் உடைய உடலழகு அழியட்டும்; ஒரு பூதகணத்தின் உடம்பை இவ்விடம் அருள்வாயாக" என்று விரும்பி இறைஞ்சிய அன்பரது உள்ளம் மகிழும் உருவினை இறைவன் தந்தான்; (இவண் - இவ்விடம்);

நரிக்குலம் திரி சுடலையில் நடமிடு நிருத்தன் அங்கழல்-இணை தொழும் அடியவர், நரர்க்கு இடும்பைகள் அற, ரு பதிகமும் மொழிவாரே - (பின்னர்) நரிகள் திரியும் சுடுகாட்டில் ஆடும் கூத்தனது அழகிய இரு திருவடிகளைத் தொழும் அடியவரான அவர், மனிதர்களுக்குத் துன்பம் தீர (மூத்த பதிகங்கள் என்று அழைக்கப்படும்) இரு பதிகங்களைப் பாடினார்;


வசிட்டர் அந்தரர் அயன் அரி தொழு-பதி மலைத்தடந்தனில் அடி ட வெருவிய மனத்தர் தம் தலை-நடைகொடு கயிலையை அடைவாரே - வசிஷ்டர் (முதலான ரிஷிகள்), தேவர்கள், பிரமன், திருமால் எல்லாரும் தொழும் தலைவனான சிவன் உறையும் தலமான கயிலைமலையைக் காலால் மிதிக்க அஞ்சித் தலையால் நடந்து ஏறிக் கயிலையை அடைந்தார்; (அந்தரர் - தேவர்); (பதி - தலம்; தலைவன்); (தடம் - வழி; இடம்); (மலைத்தடம் - தடமலை என்று முன்பின்னாக மாற்றியும் பொருள்கொள்ளல் ஆம்; தடமலை - பெரிய மலை);

மலைக்கு மங்கையும் வினவிட, "அனை வர் நமக்கு" னும் சொலை அரன் உரை-செயும் - (அப்பொழுது "இவர் யார்" என்று) உமாதேவி வினவிய பொழுது, "இவர் நம்மைப் பேணும் அம்மை" என்ற சொல்லை ஹரன் உரைத்தான் (/உரைத்த); (அனை - அன்னை - இடைக்குறை); (செயும் - செய்யும் - இடைக்குறை);

வர் மலர்ப்பதங்களை நினைபவர் கதிபெறல் எளிதாமே - (அத்தகையவரான) காரைக்கால் அம்மையார் மலர்ப்பாதங்களைப் போற்றுபவர்கள் நற்கதி அடைதல் எளிது;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment