Monday, November 7, 2022

06.03.059 - கையானை - ஊரான் - மடக்கு

06.03 – மடக்கு

2013-03-15

06.03.059 - கையானை - ஊரான் - மடக்கு

-------------------------

கையானை ஈருரிபோர் மெய்யானை மான்மறிக்

கையானை அன்பர்க்கெக் காலத்தும் - கையானை

ஊரான் மகிழ்ந்தானை ஒப்பிலியைப் பூந்துருத்தி

ஊரான் தனைநெஞ்சே உன்னு.


பதம் பிரித்து:

கை-யானை ஈருரி போர் மெய்யானை, மான்மறிக்

கையானை, அன்பர்க்கு எக்காலத்தும் கையானை,

ஊர்-ஆன் மகிழ்ந்தானை, ஒப்பிலியைப், பூந்துருத்தி

ஊரான் தனை, நெஞ்சே உன்னு.


கையானை - 1) துதிக்கையை உடைய ஆனை; 2) கையை உடையவனை; 2) கசத்தல் இல்லாதவனை;

ஊரான் - 1) ஊர் ஆன் - இடப வாகனம்; 2) ஊரில் உறைபவன்;

ஊர்தல் - நகர்தல்; ஏறிச் செலுத்துதல்;

ஆன் - இடபம்;

ஈர் உரி - உரித்த தோல்;

கைத்தல் - கசத்தல்;

உன்னுதல் - நினைதல்;


துதிக்கையை உடைய ஆனையின் உரித்த தோலைப் போர்க்கின்ற திருமேனியனை, மான்கன்றைக் கையில் தரிப்பவனைப், பக்தர்களுக்கு எக்காலத்திலும் கசத்தல் இல்லாதவனை ('என்றும் இனிப்பவனை'), இடபத்தை ஊர்தியாக விரும்பியவனை, ஒப்பு இல்லாதவனைத், திருப்பூந்துருத்தி என்ற ஊரில் உறைபவனை, நெஞ்சே நீ நினை!


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment