Thursday, October 27, 2022

06.03.058 - சேயவன் - பேரான்றன் - மடக்கு - (முருகன் / சிவன்)

06.03 – மடக்கு

2012-08-10 (ஆடிக்கிருத்திகை நாள்)

06.03.058 - சேயவன் - பேரான்ன் - மடக்கு - (முருகன் / சிவன்)

-------------------------

சேயவன் முக்கண்ணன் தேவர் தொழஅருள்செய்

சேயவன் வந்தனை செய்யார்க்குச் - சேயவன்

பேரான்றன் தாள்பேணும் பெற்றியரை ஆயிரம்

பேரான்றன் சீர்நாவே பேசு.


பதம் பிரித்து:

சேயவன்; முக்கண்ணன் தேவர் தொழ அருள்செய்

சேய் அவன்; வந்தனை செய்யார்க்குச் - சேயவன்;

பேரான் தன் தாள் பேணும் பெற்றியரை; ஆயிரம்

பேரான்தன் சீர் நாவே பேசு.


சேய் - செம்மை; மகன்; தலைவன்; தூரம்;

பேர்தல் - பெயர்தல் - நீங்குதல்; விலகுதல்;

பேர் - பெயர்; நாமம்;

சேயவன் - 1) சிவந்தவன்; 2) தலைவன் அவன்; 3) தூரத்தில் உள்ளவன்;

பேரான்தன் - 1) நீங்கான் தன்னுடைய; 2) பெயர் உடையவனுடைய;

பெற்றி - குணம்;

சீர் - புகழ்;


செம்மேனியன்; தேவர்கள் தொழ, அவர்களுக்கு இரங்கி முக்கண்ணன் அருளிய திருமகன்; போற்றி வழிபடாதவர்களுக்குத் தொலைவில் உள்ளவன்; தன் திருவடியைப் போற்றும் குணம் உடைய அடியவர்களை அகலாமல் அவர்களோடு இருப்பவன்; ஆயிரம் திருப்பெயர்கள் உடையவன்; நாக்கே! நீ அந்த முருகனது புகழைப் பேசு.


பிற்குறிப்பு:

இப்பாடலில் இரண்டாம் அடியின் முதற்சீரில் "சேயவன் = தலைவன்" என்று பொருள்கொண்டு சிவனைப் போற்றும் பாடலாகவும் கொள்ளல் ஆம்.

சேயவன் - செம்மேனியன்;

முக்கண்ணன் - நெற்றிக்கண்ணன்;

தேவர் தொழ அருள்செய் சேய் அவன் - தொழுத தேவர்களுக்கு அருள்செய்த தலைவன்;

வந்தனை செய்யார்க்குச் சேயவன் - வழிபடாதவர்களுக்குத் தொலைவில் இருப்பவன்;

பேரான் தன் தாள் பேணும் பெற்றியரை - தன் திருவடியைப் போற்றும் பக்தர்களை நீங்கமல் உடனே இருப்பவன்;

ஆயிரம் பேரான்தன் சீர் நாவே பேசு - ஆயிரம் திருநாமங்கள் உடைய சிவபெருமானது புகழை, நாக்கே நீ பேசு;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment