Saturday, October 29, 2022

06.01.137 - சிவன் - சாளரம் (window) - சிலேடை

06.01 – சிவன் சிலேடைகள்

2013-02-24

06.01.137 - சிவன் - சாளரம் (window) - சிலேடை

-------------------------------------------------------

வளியொளி செல்லும் வழியாகும் உள்ளும்

வெளியும் உளபொருள் தோற்றும் - எளிதில்

அடைநீர்மை உண்டுகார் கண்டவிடத் தந்தாழ்

சடையீசன் சாளரம் தான்.


சொற்பொருள்:

வளி - காற்று;

ஒளி - வெளிச்சம்;

வழி - பாதை; நெறி;

தோற்றுதல் - 1. காட்டுதல்; 2. படைத்தல்;

அடைதல் - சேர்தல்; பெறுதல்;

அடைத்தல் - சாத்துதல்;

நீர்மை - தன்மை;

கார் - 1. மழை; / 2. கருமை;

கண்டவிடத்தே - கண்ட இடத்தே;

இடம் - 1. பொழுது; / 2. தானம் (ஸ்தானம்);

அம் - அழகு;

தாழ் - தாழ்ப்பாள்;

தாழ்தல் - நீண்டுதொங்குதல்;


சாளரம் (window):

வளி ஒளி செல்லும் வழி ஆகும் - காற்றும் வெளிச்சமும் செல்லும் வழி ஆகும்;

உள்ளும் வெளியும் உள பொருள் தோற்றும் - (வெளியில் இருப்போர்க்கு) உள்ளே இருப்பதையும், (உள்ளிருப்போர்க்கு) வெளியே இருப்பதையும் காட்டும்;

எளிதில் அடை நீர்மை உண்டு கார் கண்ட இடத்து அம் தாழ் - மழை வரும்போது அழகிய தாழ்ப்பாளால் சுலபமாகச் சாத்தும் தன்மை இருக்கும்.

சாளரம் - ஜன்னல்;


சிவன்:

வளி, ஒளி, செல்லும் வழி ஆகும் - காற்று ஒளி என ஐம்பூதங்களாகவும், நாம் செல்லும் நன்னெறியாகவும் இருப்பவன்; (நீர், நிலம், நெருப்பு ஆகியன குறிப்பால் பெறப்பட்டன);

உள்ளும் வெளியும் உள பொருள் - பிரபஞ்சத்தின் உள்ளேயும் புறத்தேயும் இருக்கும் மெய்ப்பொருள்; நமக்கு உள்ளும் இருப்பவன்; வெளியிலும் இருப்பவன்; ('கடவுள்');

உள பொருள் தோற்றும் - உள்ள எல்லாவற்றையும் படைப்பவன்; ("உள பொருள்" என்பதை இடைநிலைத்தீவகமாக இருபுறமும் இயைத்துப் பொருள்கொள்ள அமைந்தது);

எளிதில் அடை நீர்மை உண்டு - பக்தர்களால் எளிதில் அடையப்படும் இயல்பு உடையவன்;

உண்டு கார் கண்ட இடத்து - கழுத்துப் பகுதியில் கருமை உண்டு; ("உண்டு" என்ற சொல் இடைநிலைத்தீவகமாக இருபுறமும் இயைத்துப் பொருள்கொள்ள அமைந்தது);

அம் தாழ் சடை ஈசன் - அழகிய தாழும் சடையை உடைய சிவபெருமான்.


பிற்குறிப்புகள்:

1. சிவபெருமான் என்ற விளக்கத்திற்கு, 'உண்டு' என்ற சொல்லை - 'எளிதில் அடை நீர்மை உண்டு', 'உண்டு கார் கண்ட இடத்தே ' என்று இரு சொற்றொடர்களுக்கும் கூட்டிக்கொள்க.

(An example such construction in poetry: திருநாவுக்கரசர் தேவாரம்: 6.98.1 - "நாமார்க்கும் குடியல்லோம் ... இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை ..." -- 'எந்நாளும்' என்றதனை, 'இன்பமே' என்றதற்கு முன்னும் கூட்டுக. - we will always enjoy happiness only; we have no suffering at any time.)


2. தீவக அணி: ஒரு சொல், செய்யுளின் ஓரிடத்தில் நின்று, அச்செய்யுளில் பல இடங்களிலும் உள்ள சொற்களாடு சென்று பொருந்திப் பொருளைத் தருவது தீவக அணியாம்.

இடைநிலைத்தீவகம்: a figure of speech in which a word used in the middle of a sentence goes to amplify the meanings of words in various parts of the same.


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment