Thursday, October 27, 2022

06.02.171 – பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி) - சோம்பித் திரிமனப் பாங்குற்று - (வண்ணம்)

06.02.171 – பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி) - சோம்பித் திரிமனப் பாங்குற்று - (வண்ணம்)

2013-02-06

06.02.171 - சோம்பித் திரிமனப் பாங்குற்று - பாண்டிக்கொடுமுடி (இக்காலத்தில் 'கொடுமுடி' )

-------------------------

(வண்ணவிருத்தம்;

தாந்தத் தனதனத் தாந்தத் தனதனத்

தாந்தத் தனதனத் .. தனதான )

(பெரும்பாலும் இச்சந்தத்தை ஒத்த திருப்புகழ் - "காந்தட் கரவளை" - பாண்டிக்கொடுமுடி)


சோம்பித் திரிமனப் பாங்குற் றிடர்மிகத்

.. .. தோன்றக் கவலையுற் .. றலைநீரில்

.. தூண்டிற் கயலையொத் தேங்கித் துயரிடைத்

.. .. தோய்ந்தித் தரைமிசைச் .. சுழலாமல்

சாம்பற் பொலிவினைத் தாங்கிப் பிறவியைத்

.. .. தாண்டிச் சுகமுறற் .. கருளாயே

.. தாங்கற் கருநெருப் பேந்திப் புனலினைத்

.. .. தாங்கித் திகழ்மழுப் .. படையானே

ஓம்பித் தொழநினைப் பாங்கற் றவர்நடுக்

.. .. கோங்கத் தழலுருக் .. கொளுமீசா

.. ஊண்பெற் றிடவிரப் பாம்பெற் றியசிரித்

.. .. தூன்றித் தசமுகற் .. செறுபாதா

பாம்பைப் புதுமலர்க் கோங்கைப் பிறைமதிப்

.. .. பாங்கிற் புனைசுடர்ச் .. சடையானே

.. பாய்ந்தெற் றிடுபுனற் பாங்கர்த் திகழ்திருப்

.. .. பாண்டிக் கொடுமுடிப் .. பெருமானே.


பதம் பிரித்து:

சோம்பித் திரி மனப்பாங்கு உற்று, இடர் மிகத்

.. .. தோன்றக் கவலையுற்று, அலைநீரில்

.. தூண்டிற் கயலை ஒத்து ஏங்கித், துயரிடைத்

.. .. தோய்ந்து, இத்-தரைமிசைச் சுழலாமல்,

சாம்பற் பொலிவினைத் தாங்கிப் பிறவியைத்

.. .. தாண்டிச் சுகம் உறற்கு அருளாயே;

.. தாங்கற்கு அரு-நெருப்பு ஏந்திப், புனலினைத்

.. .. தாங்கித் திகழ் மழுப்-படையானே;

ஓம்பித் தொழ நினைப்பு ஆங்கு அற்றவர் நடுக்கு

.. .. ஓங்கத் தழல்-உருக் கொளும் ஈசா;

.. ஊண் பெற்றிட இரப்பு ஆம் பெற்றிய; சிரித்து

.. .. ஊன்றித் தசமுகற் செறு-பாதா;

பாம்பைப், புதுமலர்க் கோங்கைப், பிறைமதிப்

.. .. பாங்கிற் புனை சுடர்ச்-சடையானே;

.. பாய்ந்து எற்றிடு புனற் பாங்கர்த் திகழ் திருப்

.. .. பாண்டிக் கொடுமுடிப் பெருமானே.


சோம்பித் திரி மனப்பாங்குற்று, டர் மிகத் தோன்றக்வலையுற்று - நற்செயல்கள் செய்யாது அலையும் மனநிலையினால், துன்பம் மிகவும் வர, அதனால் கவலையடைந்து; (சோம்புதல் - மந்தமாதல்); (திரிதல் - அலைதல்; தன்மைகெடுதல்); (மனப்பாங்கு - மனநிலை; பாங்கு - இயல்பு);

லைநீரில் தூண்டிற் கயலைத்து ஏங்கித் - அலைகின்ற நீரில் தூண்டிலில் சிக்கிய மீன் போல வருந்தி; (கயல் - ஒருவகை மீன்); (ஏங்குதல் - மனம்வாடுதல்; அஞ்சுதல்);

துயரிடைத் தோய்ந்து, த்-தரைமிசைச் சுழலாமல் - துயரத்தில் மூழ்கி, இந்தப் பூமியில் பிறவிகளில் சுழலாமல்; (தோய்தல் - முழுகுதல்); (சுழல்தல் - சுற்றுதல்; சஞ்சலப்படுதல்);

சாம்பற் பொலிவினைத் தாங்கிப் பிறவியைத் தாண்டிச் சுகம் உறற்கு அருளாயே - திருநீற்றைப் பூசிப் பிறவிக்கடலைக் கடந்து இன்பம் அடைவதற்கு அருள்புரிவாயாக; (சாம்பல் - திருநீறு); (உறல் - உறுதல் - அடைதல்; பெறுதல்); (அப்பர் தேவாரம் - 4.102.1 - "சாம்பலைப் பூசிச் சலமின்றித் தொண்டுபட் டுய்ம்மின்களே");


தாங்கற்கு அரு-நெருப்பு ஏந்திப், புனலினைத் தாங்கித் திகழ் மழுப்-படையானே - கையில் தாங்குவற்கு அரிய நெருப்பை ஏந்தி, முடிமேல் கங்கையைத் தாங்கித் திகழ்கின்ற, மழுவாயுதத்தை ஏந்தியவனே;


ஓம்பித் தொழ நினைப்பு ஆங்கு அற்றவர் நடுக்கு ங்கத் தழல்-ருக் கொளும் ஈசா - உன்னைப் பேணி வழிபட எண்ணாத பிரமனும் திருமாலும் அங்கு மிக அஞ்சும்படி சோதிவடிவாக அவரிடையே தோன்றிய ஈசனே; (ஓம்புதல் - பேணுதல்; போற்றுதல்); (ஆங்கு - அங்கு; அசைச்சொல்லாகவும் கொள்ளலாம்); (நடுக்கு - நடுக்கம் - அச்சம்; துன்பம்);

ஊண் பெற்றிட இரப்பு ஆம் பெற்றிய - உணவு பெற யாசித்தலை உடைய பெருமையினனே; (ஊண் - உணவு); ( இரப்பு - யாசித்தல்); (பெற்றிய - பெற்றியனே; பெற்றி - பெருமை);

சிரித்து ஊன்றித் தசமுகற் செறு-பாதா - சிரித்துத் திருப்பாத விரலை ஊன்றி இராவணனை நசுக்கியவனே; (தசமுகன் - இராவணன்); (செறுதல் - வருத்துதல்); (தசமுகற் செறு - தசமுகனைச் செற்ற; இரண்டாம்வேற்றுமைத்தொகையில் உயர்திணையில் பொருளின் தெளிவு கருதி முதற்சொல்லின் ஈற்றில் உள்ள கர ஒற்று றகர ஒற்றாகத் திரியும்); (அப்பர் தேவாரம் - 4.80.10 - "மலைமகள்கோன் சிரித்து அரக்கன் மணிமுடி பத்தும் அணிதில்லை அம்பலவன் நெருக்கி மிதித்த விரல்");


பாம்பைப், புதுமலர்க் கோங்கைப், பிறைமதிப் பாங்கிற் புனை சுடர்ச்-சடையானே - பாம்பையும், புதிய கோங்கமலரையும், பிறைச்சந்திரன் பக்கத்தில் அணிந்த ஒளியுடைய சடையை உடையவனே; (கோங்கு - கோங்கமலர்); (பாங்கு - பக்கம்);

பாய்ந்து எற்றிடு புனற் பாங்கர்த் திகழ் திருப் பாண்டிக் கொடுமுடிப் பெருமானே - பாய்ந்து அலைமோதும் காவிரியின் கரையில் திகழ்கின்ற பாண்டிக்கொடுமுடியில் எழுந்தருளிய பெருமானே; (எற்றுதல் - மோதுதல்); (பாங்கர் - பக்கம்);


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment