Saturday, June 18, 2022

06.05.017 - இருமை இலான் இருமை உளான் - (மடக்கு)

 

06.05 – பலவகை

2010-11-07

06.05.017) இருமை இலான் இருமை உளான் - (மடக்கு)

----------------------------------------

(எண்சீர் விருத்தம் - 'காய் காய் மா தேமா' என்ற அரையடி வாய்பாடு;

அரையடிதோறும் 3-ஆம் சீரில் சொற்கள் மடக்குப் பெற்று வருமாறு அமைந்தது)


மலமிலனே பிறப்பொடுமூப் பிறப்பும் இல்லாய்

.. வளர்எரியாய் மண்விண்ணை இறந்து நிற்பாய்

தலைவனிலாய் தனக்கொரு துணையும் இல்லாய்

.. தஞ்சமடை அன்பருக்குத் துணையாய் உள்ளாய்

அலைகடலில் அன்றெழுந்து பரவு நஞ்சம்

.. அதுகண்ட அமரரெலாம் பரவு கண்டா

மலையெடுத்தான் உறுவலியைத் தாளான் ஆக

.. மலர்விரலை வெற்பிட்ட தாளான் நீயே.


பதம் பிரித்து:

மலம் இலனே; பிறப்பொடு மூப்பு இறப்பும் இல்லாய்;

.. வளர்-எரியாய் மண்-விண்ணை இறந்து நிற்பாய்;

தலைவன் இலாய், தனக்கு ஒரு துணையும் இல்லாய்;

.. தஞ்சம் அடை அன்பருக்குத் துணையாய் உள்ளாய்;

அலைகடலில் அன்று எழுந்து பரவு நஞ்சம்

.. அது கண்ட அமரரெலாம் பரவு கண்டா;

மலை எடுத்தான் உறு-வலியைத் தாளான் ஆக

.. மலர்விரலை வெற்பு இட்ட தாளான் நீயே.


இருமை - 1. இம்மை, மறுமை; 2. இரு தன்மை (ஆணும் பெண்ணும் ஆயவன்); பெருமை;


இறத்தல் - 1. சாதல் 2. கடத்தல்;

துணை - 1. ஒப்பு; 2. உதவி; காப்பு;

பரவுதல் - 1. விரிதல்; 2. துதித்தல்;

உறு வலி - அடைந்த துன்பம்; பெரும் துன்பம்;

தாள் - பாதம்;

தாளுதல் - பொறுத்தல் (To bear, suffer, tolerate);

தாளான் - 1. தாங்காதவன்; 2. பாதத்தை உடையவன்;


தலைவன் இலாய், தனக்கு ஒரு துணையும் இல்லாய் - "தனக்கொரு" என்ற சொற்றொடரை இடைநிலைத்தீவகமாக இருபக்கமும் இயைத்து - "தனக்கு ஒரு தலைவன் இலாய்" & "தனக்கு ஒரு துணையும் இல்லாய்" என்று பொருள்கொள்ளல் ஆம்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

1 comment: