Monday, June 27, 2022

06.02.131 – பொது - தனத்துக்குஞ் சுகத்துக்கும் - (வண்ணம்)

06.02.131 – பொது - தனத்துக்குஞ் சுகத்துக்கும் - (வண்ணம்)


2010-11-24

06.02.131 - தனத்துக்குஞ் சுகத்துக்கும் - பொது

-------------------------

(வண்ணவிருத்தம்;

தனத்தத்தந் தனத்தத்தந்

தனத்தத்தந் தனத்தத்தந்

தனத்தத்தந் தனத்தத்தந் .. தனதான )


(பெருக்கச்சஞ் சலித்துக்கந் தலுற்றுப்புந் தியற்றுப்பின் - திருப்புகழ் - திருச்செந்தூர்)


தனத்துக்குஞ் சுகத்துக்குந் .. தவிப்புற்றுங் கடைப்பட்டுஞ்

.. .. சலிப்புற்றுந் திகைப்புற்றும் .. பலகாலம்

.. சகத்திற்றுன் பினைப்பெற்றுந் .. திரைப்புற்றுங் கறுப்பற்றுந்

.. .. தனுக்கெட்டுந் தகிப்புற்றிங் .. கழியாமுன்


சினப்பற்றுங் குடிப்பற்றுஞ் .. செலப்பெற்றென் செருக்கற்றுன்

.. .. சிறப்பைத்தண் டமிழ்ச்சொற்கொண் .. டுரையேனோ

.. சிலைப்பற்றுங் கரத்துத்திண் .. புயத்திட்டன் களித்துத்தன்

.. .. செருப்பைக்கொண் டிடத்தைக்கண் .. டறிவானாய்த்


தனக்குக்கண் கெடுத்துக்கண் .. தரச்சித்தங் கொளப்பற்றுந்

.. .. தடக்கைப்பங் கயத்தற்கன் .. றருள்வோனே

.. தளத்தைக்கொண் டிருக்கைக்கொண் .. டுவப்புற்றுன் றனைப்பற்றுந்

.. .. தவத்தற்கந் தகற்குற்றுங் .. கழலானே


கனைத்தெட்டுந் துளிப்பட்டஞ் .. சுனைப்புட்பந் தனக்கொக்குங்

.. .. களத்தக்குஞ் சடைக்கொக்கின் .. சிறகோடு

.. கலித்தெற்றுந் திரைத்தட்பம் .. படச்சர்ப்பந் தரித்துச்செங்

.. .. கரத்திற்றண் டினைப்பற்றும் .. பெருமானே.


பதம் பிரித்து:

தனத்துக்கும் சுகத்துக்கும் .. தவிப்பு-உற்றும், கடைப்பட்டும்,

.. .. சலிப்பு-உற்றும், திகைப்பு-உற்றும், .. பல காலம்

.. சகத்தில் துன்பினைப் பெற்றும், .. திரைப்பு-உற்றும், கறுப்பு அற்றும்,

.. .. தனுக் கெட்டும், தகிப்பு-உற்று-இங்கு .. அழியாமுன்,


சினப்-பற்றும் குடிப்-பற்றும் .. செலப் பெற்று, என் செருக்கு அற்று, உன்

.. .. சிறப்பைத் தண்-தமிழ்ச்சொற்கொண்டு .. உரையேனோ;

.. சிலைப் பற்றும் கரத்துத் திண் .. புயத்து இட்டன் களித்துத் தன்

.. .. செருப்பைக்கொண்டு இடத்தைக் கண்டு-அறிவானாய்த்,


தனக்குக் கண் கெடுத்துக் கண் .. தரச் சித்தம் கொளப், பற்றும்

.. .. தடக்-கைப்-பங்கயத்தற்கு அன்று .. அருள்வோனே;

.. தளத்தைக்கொண்டு, இருக்கைக்கொண்டு .. உவப்பு-உற்று உன்-தனைப் பற்றும்

.. .. தவத்தற்கு அந்தகற்-குற்றும் .. கழலானே;


கனைத்து எட்டும் துளிப்-பட்டு அம் .. சுனைப்-புட்பம் தனக்கு ஒக்கும்

.. .. களத்து, அக்கும், சடைக் கொக்கின் .. சிறகோடு

.. கலித்து எற்றும் திரைத்-தட்பம் .. படச் சர்ப்பம் தரித்துச், செங்

.. .. கரத்தில் தண்டினைப் பற்றும் .. பெருமானே.


தனத்துக்கும் சுகத்துக்கும் தவிப்பு-ற்றும், கடைப்பட்டும், சலிப்பு-ற்றும், திகைப்பு-ற்றும் - பணத்திற்காகவும் உலகச் சுகங்களுக்காகவும் தவித்தும், இழிவடைந்தும், சோர்வடைந்தும், மயங்கியும்;

பல காலம் சகத்தில் துன்பினைப் பெற்றும் - நெடுங்காலம் உலகில் துன்பத்தை அனுபவித்தும்;

திரைப்பு-ற்றும், கறுப்பு அற்றும், தனுக் கெட்டும், தகிப்பு-ற்று-ங்கு ழியாமுன் - தோற்சுருக்கம் அடைந்து, (மயிர்) கருமையை இழந்து ( = நரைத்து), உடல் தளர்ந்து, (இறந்து), எரிக்கப்பட்டு அழிந்துபோகாமல்; (திரைப்பு - தோலின் சுருக்கம்); (தனு - உடம்பு); (தகிப்பு - தகித்தல் - எரித்தல்); (உம் - எண்ணும்மை; சில இடங்களில் அசை என்றும் கொள்ளலாம்);


சினப்-பற்றும் குடிப்-பற்றும் செலப் பெற்று - கோபத்திற்குக் காரணமாக உள்ள ஆசைகளும், குடும்பப் பற்றும் நீங்கி; (சினப்பற்று - கோபம்கொள்ளக் காரணமாக உள்ள பல ஆசைகள்); (குடி - குடும்பம்);

ன் செருக்கு அற்று - என் ஆணவம் நீங்கி;

ன் சிறப்பைத் ண்-மிழ்ச்சொற்கொண்டு ரையேனோ - உன் பெருமையைக் குளிர்ந்த தமிழ்ச்சொற்களால் உரைத்து உய்ய அருள்வாயாக;


சிலைப் பற்றும் கரத்துத் திண் புயத்து இட்டன் - வில்லைப் பற்றிய கையும் வலிய புஜங்களும் உடைய அன்பன்; (சிலை - வில்); (இட்டன் - இஷ்டம் உடையவன்); (சிலைப் பற்றும் - சந்தம் கருதி "ப்" மிக்கு வந்தது);

களித்துத் தன் செருப்பைக்கொண்டு இடத்தைக் கண்டு-றிவானாய்த் - (உன் இரண்டாம் கண்ணில் குருதி வழியக்கண்டு, அதற்கு மருந்து தன்னிடம் உண்டு என்று) மகிழ்ந்து, தன் செருப்பை உன் திருமுகத்தில் ஊன்றி உன் கண் இருக்கும் இடத்தைக் அறிந்துகொள்பவனாகி;

தனக்குக் கண் கெடுத்துக் கண் தரச் சித்தம் கொளப் - தனக்குக் கண் இழந்து உனக்கு அந்தக் கண்ணைத் தர எண்ணம் கொண்டு தன் இரண்டாம் கண்ணையும் தோண்டுவதற்கு;

பற்றும் தடக்-கைப்-பங்கயத்தற்கு அன்று ருள்வோனே - (அம்பினைப்) பற்றிய பெரிய தாமரைக்கை உடைய கண்ணப்பனுக்கு அன்று அருள்புரிந்தவனே; (தடம் - பெருமை); (பங்கயம் - தாமரை);


தளத்தைக்கொண்டு, ருக்கைக்கொண்டு வப்பு-ற்றுன்-னைப் பற்றும் தவத்தற்கு அந்தகற்-குற்றும் கழலானே - வில்வம் முதலிய இலைகளாலும் வேதமந்திரங்களாலும் மகிழ்ந்து வழிபாடு செய்து உன்னைச் சரணடைந்த மார்க்கண்டேயருக்காக நமனை உதைத்த திருவடியினனே; (தளம் - இலை - வில்வம் முதலியன); (இருக்கு - வேதம்); (தவத்தன் - தவம் உடையவன் - முனிவன்); (தவத்தற்கு - தவத்தன்+கு - தவம் செய்தவனுக்கு - மார்க்கண்டேயருக்காக); (அந்தகற்-குற்றும் = அந்தகனைக் குற்றும்); (குற்றுதல் - தாக்குதல்);

இலக்கணக் குறிப்பு:

இரண்டாம் வேற்றுமைத்தொகையில் உயர்திணையில் பொருள் தெளிவாகவேண்டி, முதற்சொல்லின் ஈற்றில் உள்ள னகர ஒற்று றகர ஒற்றாகத் திரியும்;

ஆறுமுக நாவலரின் இலக்கணச்சுருக்கத்திலிருந்து:
#101. உயர்திணைப் பெயரீற்று லகர ளகரங்கள், மாற்கடவுள், மக்கட்சுட்டு என இரு பெயரொட்டுப் பண்புத்தொகையினும், லகர ளகர னகரங்கள், குரிசிற் கண்டேன், மகட்கொடுத்தான், தலைவற்புகழ்ந்தான் என இரண்டாம் வேற்றுமைத் தொகையினுந் திரியுமெனக் கொள்க.

கனைத்து எட்டும் துளிப்-பட்டு அம் சுனைப்-புட்பம் தனக்கு ஒக்கும் களத்து - ஆரவாரம் செய்யும் கடலில் தோன்றிய, பரவிய இடத்திலெல்லாம் அனைத்தையும் சுட்டெரிக்க அதனைத் தாளமாட்டாரின் ஓல ஒலியை எச்செய்த, தேவர்களின் ஓலத்தோடு சிவபெருமானிடம் வந்தடைந்த, இருண்ட நாவற்கனி போல் திரண்ட ஆலகால விடம் படுவதால், அழகிய, சுனையில் பூக்கும் (நீல) மலர் போன்ற கண்டத்தை உடைய பெருமானே; ("களத்து..... பெருமானே" என்று இயைத்துப் பொருள்கொள்ளல் ஆம்); (கனைத்தல் - ஒலித்தல்; இருளுதல்; திரளுதல்); (துளி - விடம்); (அம் - அழகு); (புட்பம் - புஷ்பம் - பூ); (புட்பம் தனக்கு ஒக்கும் - புட்பம்தனை ஒக்கும் - உருபு மயக்கம்); (களம் - கழுத்து); (துளி + பட்டு = துளிப்பட்டு; - சந்தத்திற்காக 'ப்' ஒற்று விரித்தல் விகாரம் என்று வேண்டுமானாலும் கருதலாம்);

இலக்கணக் குறிப்பு:

இரு குறில்களாலான சொல் நிலைமொழியாக, வருமொழி முதல் வல்லினமிருப்பின் *எழுவாய்த் தொடரில்* வல்லினம் மிகுந்தேனும் மிகாமலும் புணரலாம் (கே.ராஜகோபாலாச்சாரியார்): எடுத்துக்காட்டு - தினை சிறிது அல்லது தினைச்சிறிது.

க்கும் - எலும்பையும்; (அக்கு - எலும்பு; உருத்திராக்கம்); (கண்டி/கண்டிகை - கழுத்தில் அணியும் ருத்ராக்ஷ மாலை);

 (சம்பந்தர் தேவாரம் - 2.88.1 - "துளிமண்டி யுண்டு நிறம்வந்த கண்டன்");

(அப்பர் தேவாரம் - 5.19.5 - "சுனையுள் நீல மலரன கண்டத்தன்");

(அப்பர் தேவாரம் - 4.95.6 - "கண்டியிற் பட்ட கழுத்துடையீர்" - உருத்திராக்கமாலை அணிந்த கழுத்தை உடையவரே);

சடைக் கொக்கின் சிறகோடு, கலித்து எற்றும் திரைத்-தட்பம் படச் சர்ப்பம் தரித்துச் - சடையில் கொக்கின் இறகோடு, ஒலித்து மோதுகின்ற அலையின் குளிர்ச்சி அதன்மேல் படுமாறு பாம்பையும் அணிந்து; (கொக்கின் இறகு - குரண்டாசுரனை அழித்த அடையாளம்); (கலித்தல் - ஒலித்தல்); (எற்றுதல் - மோதுதல்); (திரை - அலை); (தட்பம் - குளிர்ச்சி); (சர்ப்பம் - பாம்பு);

செங் கரத்தில் தண்டினைப் பற்றும் பெருமானே - சிவந்த கையில் தண்டாயுதத்தை ஏந்தும் பெருமானே; (தண்டு - தண்டாயுதம்); ( சம்பந்தர் தேவாரம் - 1.116.3 - "இலைத்தலைச் சூலமுந் தண்டு மழுவு மிவையுடையீர்");


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment