Thursday, October 11, 2018

04.54 - ஆக்கூர் - கண்ணில் தீயாரும்

04.54 - ஆக்கூர் - கண்ணில் தீயாரும்

2014-03-08

ஆக்கூர்

(இத்தலம் திருக்கடவூர் அருகே உள்ளது)

----------------------------------

(வஞ்சித்துறை - மா மாங்காய் - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 1.91.1 - "சித்தம் தெளிவீர்காள்")


1)

கண்ணில் தீயாரும்

அண்ணல் ஆக்கூரை

நண்ணி அடிபோற்றில்

விண்ணும் எளிதாமே.


கண்ணில் தீ ஆரும் அண்ணல் - கண்ணில் நெருப்பை உடைய கடவுள் - நெற்றிக்கண்ணன்; (ஆர்தல் - பொருந்துதல்);

ஆக்கூரை நண்ணி அடிபோற்றில் விண்ணும் எளிதாமே - அப்பெருமான் உறைகின்ற ஆக்கூரை அடைந்து வழிபாடு செய்தால் சிவலோக வாழ்வும் எளிதில் கிட்டும்; (நண்ணுதல் - அடைதல்);


2)

செய்யன் சேவேறும்

ஐயன் ஆக்கூரை

மெய்யன் பாலேத்த

வெய்ய வினைவீடே.


செய்யன் சே ஏறும் ஐயன் ஆக்கூரை - செம்மேனியனும் இடபவாகனத்தை உடைய தலைவனுமான சிவபெருமான் உறைகின்ற ஆக்கூரை;

மெய்-அன்பால் ஏத்த - உண்மையான பக்தியோடு போற்றினால்;

வெய்ய-வினை வீடே - கொடிய வினைகள் நீங்கும்;


3)

பணிநீர் வெண்திங்கள்

அணிவான் ஆக்கூரைப்

பணியும் பத்தர்க்குப்

பிணியில் நிலைதானே.


பணி நீர் வெண்-திங்கள் அணிவான் - பாம்பு, கங்கை, வெண்பிறை இவற்றைச் சூடுகின்றவன்;

ஆக்கூரைப் பணியும் பத்தர்க்குப் பிணி இல் நிலைதானே - அப்பெருமான் உறையும் ஆக்கூரை அடைந்து வழிபடும் பக்தர்களுக்குப் பிணிகள் (/பந்தங்கள்) இல்லாத நிலை வரும்;


4)

உழையன் ஓர்காதில்

குழையன் கூத்தாடும்

அழகன் ஆக்கூரைத்

தொழநம் துயர்போமே.


உழையன் ஓர் காதில் குழையன் - மானை ஏந்தியவன், ஒரு செவியில் குழையை அணிந்தவன்; (உழை - மான்); (அப்பர் தேவாரம் - 5.38.1 - "குழைகொள் காதினர் கோவண ஆடையர் உழையர்");

கூத்தாடும் அழகன் ஆக்கூரைத் தொழ - கூத்தாடும் சுந்தரன் உறைகின்ற ஆக்கூரைத் தொழுதால்;

நம் துயர் போம் - நம் துன்பம் தீரும்; (போதல் - ஒழிதல்; நீங்குதல்);


5)

பொடிகொள் செம்மேனி

அடிகள் ஆக்கூரைக்

கடிகொள் மலர்தூவச்

செடிகொள் வினைதீர்வே.


பொடிகொள் செம்மேனி அடிகள் ஆக்கூரைக் - திருநீற்றைப் பூசிய செம்மேனியனான சிவபெருமான் உறைகின்ற ஆக்கூரை;

கடிகொள் மலர் தூவ - வாசமலர்களைத் தூவி வழிபட்டால்;

செடிகொள் வினை தீர்வே - துன்பம் தரும் வினைகள் நீங்கும்; (தீர்வு - நீங்குதல்);


6)

இரவில் நடமாடி

கரவில் கரத்தீசன்

அரவன் ஆக்கூரைப்

பரவப் பழிபோமே.


இரவில் நடம் ஆடி - நள்ளிருளில் கூத்தாடுபவன்;

கரவு இல் கரத்து ஈசன் - வஞ்சனையின்றி வழங்கும் திருக்கரம் உடைய ஈசன் - வரதஹஸ்தன்;

அரவன் - பாம்புகளை அணிந்த சிவபெருமான்;

பரவுதல் - துதித்தல்;


7)

திரைநீர் ஏற்றானே

அரனே ஆக்கூரில்

பரனே என்பாரை

விரவா வினைநோயே.


திரை-நீர் ஏற்றானே - அலைகளையுடைய கங்கையை ஏற்றவனே;

விரவா - நெருங்கா; (விரவுதல் - அடைதல்);


8)

பொருப்பை இடந்தானை

வருத்த விரல்வைத்த

அருத்தர் ஆக்கூர்நெஞ்(சு)

இருத்த இலைதுன்பே.


பொருப்பை இடந்தானை - கயிலைமலையைப் பெயர்த்த இராவணனை;

வருத்த விரல் வைத்த அருத்தர் - வருத்துவதற்கு அம்மலைமேல் விரலை ஊன்றிய செல்வர்; வேதப்பொருளாய் விளங்குபவர்; (அருத்தம் - அர்த்தம் - பொருள்; செல்வம்; பாதி;); (சம்பந்தர் தேவாரம் - 1.111.1 - "அருத்தனை அறவனை"); (அப்பர் தேவாரம் - 5.1.7 - "அருத்தனார் அடியாரை அறிவரே");

ஆக்கூர் நெஞ்சு இருத்த இலை துன்பே - அப்பெருமானார் உறைகின்ற திருஆக்கூரை மனத்தில் வைத்தால் துன்பம் இல்லை;


9)

அரிநான் முகனாருக்(கு)

அரியான் ஆக்கூரில்

பெரியான் அடியாரைப்

பிரியாத் துணைதானே.


அரி நான்முகனாருக்கு அரியான் - திருமால் பிரமன் இவர்களால் அடைவதற்கு அரியவன்;

ஆக்கூரில் பெரியான் - திருஆக்கூரில் உறைகின்ற மகாதேவன்;

அடியாரைப் பிரியாத் துணைதானே - அப்பெருமான் அடியாரை என்றும் நீங்காத துணை;


10)

நீற்றைப் பூசாதார்

கூற்றைக் கொள்ளேன்மின்

ஆற்றன் ஆக்கூரில்

ஏற்றன் எம்காப்பே.


நீற்றைப் பூசாதார் கூற்றைக் கொள்ளேன்மின் - திருநீறு பூசாதவர்கள் சொல்லும் பேச்சை நீங்கள் மதிக்கவேண்டா;

ஆற்றன், ஆக்கூரில் ஏற்றன், எம் காப்பே - கங்காதரன், இடப-வாகனன், ஆக்கூரில் எழுந்தருளியிருக்கும் அப்பெருமான் நம் துணை; (காப்பு - பாதுகாவல்);


11)

மணியார் கண்டத்தன்

பணிசேர் அகலத்தான்

அணியார் ஆக்கூரைப்

பணிவார் கவலாரே.


மணி ஆர் கண்டத்தன் - நீலமணி போல் கண்டம் உடையவன்;

பணி சேர் அகலத்தான் - பாம்பை மார்பில் அணிந்தவன்; (பணி - நாகப்பாம்பு); (அகலம் - மார்பு); (சம்பந்தர் தேவாரம் - 2.40.9 - "அரவஞ்சேர் அகலத்தான்");

அணி ஆர் ஆக்கூரைப் பணிவார் கவலாரே - அழகிய ஆக்கூரைப் பணியும் பக்தர்கள் மனம் வருந்தார்; (கவல்தல் - மனம்வருந்துதல்);


வி. சுப்பிரமணியன்

----------- --------------

Wednesday, October 10, 2018

04.53 - புறம்பயம் (திருப்புறம்பியம்) - கருப்புவிற் கரத்தனை

04.53 - புறம்பயம் (திருப்புறம்பியம்) - கருப்புவிற் கரத்தனை

2014-03-02

புறம்பயம் (திருப்புறம்பியம்)

----------------------

(சந்தக் கலிவிருத்தம் - தனாதனா தனாதனா தனாதனா தனாதனா)

(தனாதனான தானனா தனாதனான தானனா - என்றும் நோக்கலாம்)

(கணேச பஞ்சரத்ன ஸ்தோத்திரம் - "முதாகராத்த மோதகம்")

(சம்பந்தர் தேவாரம் - 2.98.1 - "வரைத்தலைப் பசும்பொனோடு")


1)

கருப்புவிற் கரத்தனைக் கனற்கணால் எரித்தவன்

பருப்பதன் மகட்கிடம் விருப்பினாற் கொடுத்தவன்

வருத்தமுற் றவானவர்க் கிரங்கிமுப் புரஞ்சுடப்

பொருப்புவில் வளைத்தவன் புறம்பயத் தொருத்தனே.


கருப்புவில் கரத்தனைக் கனற்கணால் எரித்தவன் - கரும்பை வில்லாகக் கையில் ஏந்தும் மன்மதனைக் கனலை உடைய நெற்றிக்கண்ணால் எரித்தவன்;

பருப்பதன் மகட்கு டம் விருப்பினால் கொடுத்தவன் - மலையான் மகளுக்கு இடப்பாகத்தை விரும்பிக் கொடுத்தவன்;

வருத்தமுற்ற வானவர்க்கு இரங்கி முப்புரம் சுடப் - வருந்திய தேவர்களுக்கு இரங்கி முப்புரங்களை எரிக்க;

பொருப்பு-வில் வளைத்தவன் - மேருமலையை வில்லாக வளைத்தவன்;

புறம்பயத்து ஒருத்தனே - திருப்புறம்பயத்தில் எழுந்தருளியிருக்கும் ஒப்பற்றவன்; (ஒருத்தன் - ஒப்பற்றவன்; ஒருவன்); (அப்பர் தேவாரம் - 5.1.7 - "ஒருத்தனார் உலகங்கட்கு ஒருசுடர்");


2)

இகழ்ச்சியால் பதந்தொழார்க் கிலாதவன் தினந்தொறும்

நெகிழ்ச்சியால் வணங்குவார் அகத்துளே நிலைத்தவன்

மகிழ்ச்சியோ டிருப்பவன் மனைக்கிடம் கொடுத்தவன்

புகழ்ச்சியைக் கடந்தவன் புறம்பயத் தொருத்தனே.


இகழ்ச்சியால் பதம் தொழார்க்கு இலாதவன் - திருவடியை வழிபடாமல் இகழ்வார்களுக்கு அருள் இல்லாதவன்;

தினந்தொறும் நெகிழ்ச்சியால் வணங்குவார் அகத்துளே நிலைத்தவன் - தினமும் உருகி வணங்கும் பக்தர்கள் நெஞ்சை நீங்காதவன்;

மகிழ்ச்சியோடு இருப்பவன் - என்றும் இன்பநிலையில் இருப்பவன்;

மனைக்கு இடம் கொடுத்தவன் - மனைவிக்கு (உமைக்கு) இடப்பக்கத்தைக் கொடுத்தவன்;

புகழ்ச்சியைக் கடந்தவன் - எல்லையற்ற புகழ் உடையவன்;

புறம்பயத்து ஒருத்தனே - திருப்புறம்பயத்தில் எழுந்தருளியிருக்கும் ஒப்பற்றவன்;


3)

பரந்தநஞ் சினால்மிகப் பயந்தவர்க் கிரங்கினான்

சிரந்தனால் தினந்தொழும் குணத்தினார் விரும்பிடும்

வரந்தரும் கரப்பிலாக் கரத்தினான் முராரிவான்

புரந்தரன் வணங்கிடும் புறம்பயத் தொருத்தனே.


பரந்த நஞ்சினால் மிகப் பயந்தவர்க்கு இரங்கினான் - எங்கும் பரவிய ஆலகால விஷத்தைக் கண்டு மிகவும் அஞ்சிய தேவர்களுக்கு இரங்கியவன்;

சிரந்தனால் தினம் தொழும் குணத்தினார் விரும்பிடும் வரம் தரும் கரப்பு இலாக் கரத்தினான் - நாள்தோறும் தலையால் வணங்கி வழிபடும் அன்பர்கள் விரும்பிய வரமெல்லாம் வஞ்சமின்றி அருளும் வரதஹஸ்தன்;

முராரி வான் புரந்தரன் வணங்கிடும் புறம்பயத்து ஒருத்தனே - திருமால், தேவர்கள், இந்திரன் எல்லாரும் வணங்குகின்ற பெருமான், திருப்புறம்பயத்தில் எழுந்தருளியிருக்கும் ஒப்பற்றவன்; (முராரி - முரனென்ற அசுரனைக் கொன்றவன் - திருமால்); (வான் - தேவர்கள்); (புரந்தரன் - இந்திரன்);


4)

பழித்தவன் சிரத்தினைப் பறித்தவன் புரங்களை

அழித்தவன் மலர்ச்சரத் தனங்கனைச் சினந்துகண்

விழித்தவன் விடைச்சினம் பொறித்தவெல் கொடிச்சிவன்

பொழிற்குயில் சுரம்பயில் புறம்பயத் தொருத்தனே.


பழித்தவன் சிரத்தினைப் பறித்தவன் - இகழ்ந்த பிரமன் தலையைக் கிள்ளியவன்; ("பழித்தவன் - தக்கன்"; என்றுகொண்டும் பொருள்கொள்ளக் கூடும்);

புரங்களை அழித்தவன் - முப்புரங்களை எரித்தவன்;

மலர்ச்சரத்து அனங்கனைச் சினந்து கண் விழித்தவன் - மலர்க்கணையை எய்த மன்மதனைக் கோபித்து நெற்றிக்கண்ணால் பார்த்தவன்; (அனங்கன் - மன்மதன்); (சம்பந்தர் தேவாரம் - 2.98.8 - "சுடப்பொடிந்து உடம்பிழந்து அநங்கனாய மன்மதன்");

விடைச்சினம் பொறித்த வெல்கொடிச் சிவன் - இடபச்-சின்னம் பொறித்த வெற்றிக்கொடியை உடைய சிவன்; (சினம் - சின்னம்; இடைக்குறை விகாரம்); (திருவாசகம் - போற்றித் திருவகவல் - அடி-95: "சேவார் வெல்கொடிச் சிவனே போற்றி");

பொழிற்குயில் சுரம் பயில் - பொழிலில் இருக்கும் குயில்கள் ஏழுசுரங்களை ஒலிக்கின்ற (= இசை பாடுகின்ற);

புறம்பயத்து ஒருத்தனே - திருப்புறம்பயத்தில் எழுந்தருளியிருக்கும் ஒப்பற்றவன்;


5)

இலங்குவெண் பிறைச்சடைக் குராவராப் புனைந்தவன்

அலங்கலால் திருந்துதாள் அலங்கரித் தவர்க்குயர்

நலன்களைக் கொடுப்பவன் நகைத்தெயில் கொளுத்தினான்

புலன்களுக் கரும்பரன் புறம்பயத் தொருத்தனே.


இலங்கு வெண்பிறைச்சடைக் குரா அராப் புனைந்தவன் - திகழும் வெண்பிறைச்சந்திரன் இருக்கும் சடையில் குராமலரையும் பாம்பையும் அணிந்தவன்;

அலங்கலால் திருந்து-தாள் அலங்கரித்தவர்க்கு உயர் நலன்களைக் கொடுப்பவன் - பூமாலைகளால் தன் அழகிய திருவடியை அலங்கரித்து வழிபடும் அடியவர்களுக்கு உயர்ந்த நன்மையை அளிப்பவன்; (அலங்கல் - பூமாலை); (திருந்துதல் - செவ்விதாதல்; மேன்மையாதல்); (திருநாவுக்கரசர் தேவாரம் - 5.5.5 - "தேடிச் சென்று திருந்தடி ஏத்துமின்");

நகைத்து எயில் கொளுத்தினான் - சிரித்து முரங்களை எரித்தவன்; (நகைத்தல் - நகுதல்; சிரித்தல்); (கொடுப்பவன் னகைத்தெயில் - னகர ஒற்று விரித்தல் விகாரம் - கொடுப்பவன் நகைத்து எயில்);

புலன்களுக்கு அரும் பரன் - ஐம்புலன்களால் அறிதற்கு அரிய பரமன்; (திருநாவுக்கரசர் தேவாரம் - 6.97.10 - "அவனருளே கண்ணாகக் காணின் அல்லால் இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவனிறைவன் என்றெழுதிக் காட்டொணாதே");

புறம்பயத்து ஒருத்தனே - திருப்புறம்பயத்தில் எழுந்தருளியிருக்கும் ஒப்பற்ற பெருமான்.


6)

இரிந்தவான் வணங்கியோ எனப்புலம் பிடுந்தினம்

பரிந்தவன் கறைக்களன் குவிந்தவன் படைப்பினில்

விரிந்தவன் மறைப்பொருள் விரித்தவன் மதிக்கருள்

புரிந்தவன் பொழில்திகழ் புறம்பயத் தொருத்தனே.


இரிந்த வான் வணங்கி "" எனப் புலம்பிடும் தினம் பரிந்தவன்- அஞ்சிய தேவர்கள் "ஓலம்" என்று கதறித் திருவடியை வழிபட்டபோது அவர்களுக்கு இரங்கியவன்;

கறைக்களன் - கறைக்கண்டன் - நீலகண்டன்;

குவிந்தவன் படைப்பினில் விரிந்தவன் - சம்ஹார-காலத்தில் குவிந்தவன், படைப்புக்-காலத்தில் விரிந்தவன்; (அப்பர் தேவாரம் - 6.86.6 - "விரிந்தானைக் குவிந்தானை வேதவித்தை");

மறைப்பொருள் விரித்தவன் - கல்லால-மரத்தின்கீழ் வேதப்பொருளை உபதேசித்த தட்சிணாமூர்த்தி;

மதிக்கு அருள் புரிந்தவன் - சந்திரனுக்கு அருளியவன்;

பொழில் திகழ் புறம்பயத்து ஒருத்தனே - சோலை சூழ்ந்த திருப்புறம்பயத்தில் எழுந்தருளியிருக்கும் ஒப்பற்ற பெருமான்.


7)

அறத்தினன் முனர்த்தவர்க் கறங்களால் அமர்ந்துரை

திறத்தினன் திருச்சடைத் திரைத்தெழும் பெரும்புனல்

மறைத்தவன் மழுப்படைக் கரத்தினன் மடந்தையோர்

புறத்தினன் பொழில்திகழ் புறம்பயத் தொருத்தனே.


அறத்தினன் - தர்மத்தின் வடிவு ஆனவன்;

முனர்த் தவர்க்கு அறங்கள் ஆல் அமர்ந்து உரை திறத்தினன் - முன்னர்ச் சனகாதியருக்குக் கல்லால-மரத்தின்கீழ் அறம் உபதேசித்தவன்;

திருச்சடைத் திரைத்து எழும் பெரும்புனல் மறைத்தவன் - திருச்சடையினுள் அலைத்து எழும் பெரிய கங்கையை ஒளித்தவன்;

மழுப்படைக் கரத்தினன் - கையில் மழுவை ஏந்தியவன்;

மடந்தைர் புறத்தினன் - உமையை ஒரு பக்கத்தில் உடையவன்;

பொழில் திகழ் புறம்பயத்து ஒருத்தனே - சோலை சூழ்ந்த திருப்புறம்பயத்தில் எழுந்தருளியிருக்கும் ஒப்பற்ற பெருமான்.


8)

இராவணன் செருக்கழித் திசைத்துதிக் கிரங்கினான்

அராநிலா அணிந்தவன் மனங்கசிந் தடித்தலம்

பராவுவார் தமக்கரும் பதந்தரும் பரம்பரன்

புராதனன் பொழில்திகழ் புறம்பயத் தொருத்தனே.


இராவணன் செருக்கு அழித்து இசைத்-துதிக்கு இரங்கினான் - இராவணனின் ஆணவத்தை அழித்துப், பின் அவன் இசையோடு துதிக்க அதனைக் கேட்டு இரங்கியவன்;

அரா நிலா அணிந்தவன் - பாம்பையும் சந்திரனையும் சூடியவன்;

மனம் கசிந்து அடித்தலம் பராவுவார் தமக்கு அரும்-பதம் தரும் பரம்பரன் - உள்ளம் உருகித் திருவடியைப் போற்றும் அன்பர்களுக்குச் சிவலோக வாழ்வைத் தந்தருளும் பரமன்; (பராவுதல் - பரவுதல் - போற்றுதல்);

புராதனன் - தொன்மையானவன்;

பொழில் திகழ் புறம்பயத்து ஒருத்தனே - சோலை சூழ்ந்த திருப்புறம்பயத்தில் எழுந்தருளியிருக்கும் ஒப்பற்ற பெருமான்.


9)

மயங்கயன் பறந்துமால் அகழ்ந்திளைத் திறைஞ்சிய

தயங்கெரிப் பிழம்பினன் தமர்க்கிரங் கருட்கரன்

கயங்குராப் புனைந்தவன் கறுத்தநஞ் சருந்தினான்

புயங்களெட் டுடைச்சிவன் புறம்பயத் தொருத்தனே.


மயங்கு அயன் பறந்து, மால் அகழ்ந்து, இளைத்து இறைஞ்சிய - அறிவுமயங்கி அயன் (அன்னமாய்ப்) பறந்தும், திருமால் (பன்றியாய் நிலத்தை) அகழ்ந்தும் (அடிமுடி தேடிக் காணாமல்) வருந்தி வழிபட்ட;

தயங்கு எரிப் பிழம்பினன் - பிரகாசித்த ஒளித்தூண் ஆனவன்; (தயங்குதல் - ஒளிவிடுதல்);

தமர்க்கு இரங்கு அருட்கரன் - அடியவர்களுக்கு இரங்குகின்ற, அருள் நிறைந்த திருக்கரம் உடையவன்;

கயம் குராப் புனைந்தவன் - கங்கையையும் குராமலரையும் சடையினன்; (கயம் - நீர்நிலை);

கறுத்த நஞ்சு அருந்தினான் - கரிய விடத்தை உண்டவன்;

புயங்கள் எட்டுடைச் சிவன் - எண்தோள்கள் உடையவன்; (புயங்கள் - புஜங்கள்);

புறம்பயத்து ஒருத்தனே - திருப்புறம்பயத்தில் எழுந்தருளியிருக்கும் ஒப்பற்ற பெருமான்.


10)

தினந்தினம் புரட்டையே செபித்திடும் பிரட்டரின்

இனந்தவிர்ந் தருத்தியால் இருங்கழல் வழுத்துவீர்

சினந்துகூற் றுதைத்தவன் சிறந்ததார் எனப்பணம்

புனைந்தவன் பொழில்திகழ் புறம்பயத் தொருத்தனே.


தினந்தினம் புரட்டையே செபித்திடும் பிரட்டரின் இனம் தவிர்ந்து - நாள்தோறும் பொய்யையே ஜெபம் செய்யும் கீழோரின் கூட்டத்தை நீங்கி; (புரட்டு - பொய்); (பிரட்டர் - ப்ரஷ்டர் - நெறியினின்று வழுவினவர்); (இனம் - கூட்டம்); (தவிர்தல் - நீங்குதல்); (திருக்குறள் அதிகாரம் 46 - "சிற்றினம் சேராமை");

ருத்தியால் இருங்-கழல் வழுத்துவீர் - பெருமை மிக்க திருவடியை அன்பால் வணங்குங்கள்; (அருத்தி - அன்பு); (இருங்கழல் - பெருமைமிக்க திருவடி); (இருமை - பெருமை); (திருவாசகம் - போற்றித் திருவகவல் - அடி 129-130: "என்னையும் ஒருவ னாக்கி இருங்கழல் சென்னியில் வைத்த சேவக போற்றி");

சினந்து கூற்றுதைத்தவன் - காலணைக் கோபித்து உதைத்தவன்;

சிறந்த தார் எனப் பணம் புனைந்தவன் - சிறந்த மாலை என்று நாகத்தை அணிந்தவன்; (தார் - மலர்மாலை); (பணம் - பாம்பின் படம்; பாம்பு);

பொழில் திகழ் புறம்பயத்து ஒருத்தனே - சோலை சூழ்ந்த திருப்புறம்பயத்தில் எழுந்தருளியிருக்கும் ஒப்பற்ற பெருமான்.


11)

துடிக்கரன் பதந்தொழும் தொழும்பரின் விருப்பெலாம்

முடிப்பவன் முழாவெலாம் முழங்கநள் ளிராவினில்

நடிப்பவன் நகைத்துவான் புரங்களைக் கணத்தினில்

பொடித்தவன் பொழில்திகழ் புறம்பயத் தொருத்தனே.


துடிக்கரன் - உடுக்கைக் கையில் ஏந்தியவன்; (துடி - உடுக்கு);

பதம் தொழும் தொழும்பரின் விருப்பு-லாம் முடிப்பவன் - திருவடியை வழிபடும் அடியார்களது விருப்பங்களையெல்லாம் நிறைவேற்றுபவன்; (தொழும்பர் - அடியவர்); (முடித்தல் - நிறைவேற்றுதல்);

முழாவெலாம் முழங்க நள்-ராவினில் நடிப்பவன் - பல முழவுகள் முழங்க நள்ளிருளில் கூத்தாடுபவன்;

நகைத்து வான்-புரங்களைக் கணத்தினில் பொடித்தவன் - சிரித்து முப்புரங்களை ஒரு நொடியளவில் சாம்பலாக்கியவன்; (கணம் - க்ஷணம்);

பொழில் திகழ் புறம்பயத்து ஒருத்தனே - சோலை சூழ்ந்த திருப்புறம்பயத்தில் எழுந்தருளியிருக்கும் ஒப்பற்ற பெருமான்.


பிற்குறிப்பு: யாப்புக் குறிப்பு:

சந்தக் கலிவிருத்தம் - தனாதனா தனாதனா தனாதனா தனாதனா.

இச்சந்தத்தைத் - தனாதனான தானனா தனாதனான தானனா - என்றும் நோக்கலாம்.

"லகு-குரு" என்ற அமைப்பு அடிகள்தோறும் 8 முறை வரும்.

குரு = நெடில் / நெடில்+ஒற்று / குறில்+ஒற்று.

லகு = குறில் (ஒற்றுத் தொடராதபோது).

அடி ஈற்றில் வரும் லகுவும் குருவாகக் கருதப்படும்.

இச்சந்தத்தை வடமொழியில் "பஞ்சசாமரம்" (pañcacāmaram - पञ्चचामरम्) என்பர்;

உதாரணம் - கணேச பஞ்சரத்ன ஸ்தோத்திரம் - "முதாகராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸாதகம்";


சம்பந்தர் தேவாரம் - 2.98.1 - "வரைத்தலைப் பசும்பொனோ டருங்கலன் களுந்திவந்(து)"


(தேவாரத்தில் 4 விளச்சீர்கள் வரும் வேறு பதிகங்களும் உள்ளன. ஆனால் அவை இச்சந்தத்தினின்று சற்றே வேறுபடுவன. உதாரணம்: சம்பந்தர் தேவாரம் - 3.25.1 - "மருந்துவேண் டில்இவை மந்திரங் கள்இவை")


வி. சுப்பிரமணியன்

------------ ------------------

Monday, September 17, 2018

04.52 - புடைமருதூர் - சொற்சுவையோடு

04.52 - புடைமருதூர் - சொற்சுவையோடு

2014-03-01

4.52 - புடைமருதூர் - (திருப்புடைமருதூர்)

----------------------------------

(எழுசீர் விருத்தம் - விளம் மா விளம் மா விளம் விளம் மா - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 3.120.1 - "மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை");

(சுந்தரர் தேவாரம் - 7.14.1 - "வைத்தனன் தனக்கே தலையும்என் நாவும்");


1)

சொற்சுவை யோடு பொருட்சுவை மிக்க

.. தொடைபல கொண்டடி போற்றும்

நற்சுவை அறிந்த நாவினர் தமக்கு

.. நலமெலாம் நல்கிடும் நம்பன்

கற்சிலை ஒன்றைக் கையினில் ஏந்திக்

.. கடிமதில் மூன்றையும் எய்த

பொற்சடை யானூர் பொருநையின் கரைமேற்

.. பொழிலணி புடைமரு தூரே.


சொற்சுவையோடு பொருட்சுவை மிக்க தொடை பல கொண்டு அடி போற்றும் - சொல் நயமும் பொருள் நயமும் மிகுந்த பாமாலைகளால் திருவடியை வழிபடும்; (தொடை - மாலை);

நற்சுவை அறிந்த நாவினர் தமக்கு நலமெலாம் நல்கிடும் நம்பன் - நல்ல சுவையை அறிந்த நாவுடைய அன்பர்க்கு எல்லா நலங்களையும் அருளும் நம்பன்; (நம்பன் - சிவன் திருநாமம் - விரும்பத்தக்கவன்);

கற்சிலை ஒன்றைக் கையினில் ஏந்திக் கடி-மதில் மூன்றையும் எய்த பொற்சடையான் ஊர் - மேருமலையை வில்லாகக் கையில் ஏந்திக் காவல் மிக்க முப்புரங்களையும் எய்த, பொன் போன்ற சடையுடைய ஈசன் உறையும் தலம்; (கல் - மலை; சிலை - வில்); (கடி - காவல்);

பொருநையின் கரைமேல் பொழில் அணி புடைமருதூரே - தாமிரபரணியின் கரையில் சோலைகள் சூழ்ந்த திருப்புடைமருதூர்; (பொருநை - தாமிரபரணி ஆறு);


2)

துரிசடை யாத தூயம னத்தர்

.. துணையடி தோத்திரம் செய்யும்

பரிசுடை யார்தம் பழவினை தீர்த்துப்

.. பரகதி கொடுத்தருள் பரமன்

விரிசடை யாய்வெள் விடையினாய் என்று

.. வேண்டிய பகீரதற் கருள்செய்

புரிசடை யானூர் பொருநையின் கரைமேற்

.. பொழிலணி புடைமரு தூரே.


துரிசு அடையாத தூய மனத்தர், துணையடி தோத்திரம் செய்யும் பரிசு உடையார்தம் பழவினை தீர்த்துப் பரகதி கொடுத்து அருள் பரமன் - ; (துரிசு - குற்றம்); (துணையடி - இரு திருவடிகள்; துணையாக உள்ள திருவடி என்றும் கொள்ளலாம்); (பரிசு - குணம்; தன்மை);

"விரி-சடையாய்! வெள்-விடையினாய்!" என்று வேண்டிய பகீரதற்கு அருள்செய் புரி-சடையான் ஊர் - ; (விரிசடையாய் - விரிந்த சடையை உடையவனே); (இங்கே கங்கையை மண்ணுலகிற்குக் கொண்டுவருவதற்காகப் பகீரதன் வேண்டுவதால், "சடையானே, அதை விரிப்பாயாக" என்றும் பொருள்கொள்ளாலாம்); (விடையினாய் - இடபவாகனனே); (புரிசடையான் - முறுக்கிய சடையினன்);

பொருநையின் கரைமேல் பொழில் அணி புடைமருதூரே - ;


3)

முன்சிறு நகையால் முப்புரம் எரித்த

.. முக்கணன் தன்திரு நாம

இன்சுவை அறிந்த நாவுடை யார்தம்

.. இருவினை தீர்த்தருள் ஈசன்

மென்சிறை வண்டு முரல்நறுங் கொன்றை

.. வெறிகமழ் கூவிளம் விரவும்

புன்சடை யானூர் பொருநையின் கரைமேற்

.. பொழிலணி புடைமரு தூரே.


மென்-சிறை வண்டு - மெல்லிய சிறகுகளை உடைய வண்டுகள்; முரல்தல் - ஒலித்தல்; பாடுதல்; வெறி கமழ் கூவிளம் - மணம் வீசும் வில்வம்; புன்சடை - செஞ்சடை;


4)

கலியிடை மலையை மத்தென நாட்டிக்

.. கடைந்திடும் போதெழு நஞ்சால்

மெலிவடை உம்பர் ஒலிகழல் போற்ற

.. மிடற்றினில் வைத்தருள் விமலன்

பலிகடை தோறும் சென்றிரந் துண்ணும்

.. பண்பினன் பணிந்தெழு திங்கள்

பொலிசடை யானூர் பொருநையின் கரைமேற்

.. பொழிலணி புடைமரு தூரே.


கலி - கடல்; நாட்டுதல் - ஸ்தாபித்தல்; நடுதல்; (சுந்தரர் தேவாரம் - 7.55.5 - "கோல மால்வரை மத்தென நாட்டிக்"); மெலிவு அடைதல் - துன்புறுதல்; உம்பர் - தேவர்கள்: ஒலி-கழல் - ஒலிக்கின்ற கழலை அணிந்த திருவடி; பலி கடைதோறும் சென்று இரந்து உண்ணும் - பிச்சையை வீட்டுவாயில்கள்தோறும் சென்று யாசித்து உண்கின்ற; (அப்பர் தேவாரம் - 6.79.7 - "கடைதோறும் பலிகொள்வானை"); திங்கள் பொலிசடையான் - சந்திரன் திகழ்கின்ற சடையை உடையவன்;


5)

தனக்கிணை இல்லான் தாயினும் நல்லான்

.. தடவரை யான்மகள் தலைவன்

பனைக்கர வேழம் படவுரி செய்து

.. பாரிடம் சூழந டிப்பான்

முனர்ச்சலந் தரனைத் தடிந்தசக் கரத்தை

.. முளரிபோற் கண்ணனுக் கீந்த

புனற்சடை யானூர் பொருநையின் கரைமேற்

.. பொழிலணி புடைமரு தூரே.


தட-வரையான் மகள் தலைவன் - மலைமகளுக்குத் தலைவன்; (தட-வரை - பெரிய மலை); பனைக்கர வேழம் பட உரி செய்து - பனை போன்ற துதிக்கையை உடைய யானையைக் கொன்று தோலை உரித்து; (படுதல் - சாதல்); பாரிடம் - பூதம்; நடித்தல் - கூத்தாடுதல்; நடம்செய்தல்; முனர் - முன்னர் - இடைக்குறை விகாரம்; தடிதல் - வெட்டுதல்; அழித்தல்; முளரி போல் கண்ணன் - தாமரை போன்ற கண் உடையவன் - திருமால்; (முளரி - தாமரை); (சுந்தரர் தேவாரம் - 7.16.2 - "செருமேவு சலந்தரனைப் பிளந்தசுடர் ஆழி செங்கண்மலர் பங்கயமாச் சிறந்தானுக் கருளி");


6)

மருவுடை மலரை வாளியாக் கொண்ட

.. மன்மதன் மதியில னாகி

அருகடை நாளில் அழலுமிழ் கண்ணால்

.. அவனழ குடல்தனைக் காய்ந்தான்

திருவுடை யான்ஓர் சிரத்தினில் ஐயம்

.. தேர்பவன் அடியவர்க் கரணாம்

பொருவிடை யானூர் பொருநையின் கரைமேற்

.. பொழிலணி புடைமரு தூரே.


மரு - வாசனை; வாளி - அம்பு; அவன் அழகு உடல்தனைக் காய்ந்தான் - மன்மதனின் அழகிய உடலை எரித்துச் சாம்பலாக்கியவன்; திரு - செல்வம்; நன்மை; விபூதி/திருநீறு; (சம்பந்தர் தேவாரம் - 1.98.1 - "சென்றடையாத திருவுடையானை..."); (திருவாசகம் - அச்சப்பத்து - 8.35.9 - "திருமுண்டம் தீட்ட மாட்டாது அஞ்சுவார் அவரைக் கண்டால் அம்ம நாம் அஞ்சுமாறே"); ஐயம் - பிச்சை; அடியவர்க்கு அரண் ஆம் பொரு-விடையான் - பக்தர்களுக்குக் காவலாக இருக்கும், போர்செய்ய வல்ல இடபத்தை வாகனமாக உடையவன்; (திருநாவுக்கரசர் தேவாரம் - 4.2.1 - "அண்ணல் அரண்முரண் ஏறும்");


7)

கனைகடல் கக்கு கருவிடந் தன்னைக்

.. கருணையொ டுண்டிருள் கண்டன்

புனலடை சடையான் கொடியிடை உடையாள்

.. புரிகுழற் கோமதி நாதன்

நினைபவர் நெஞ்சில் நின்றருள் நிமலன்

.. நீறொளிர் மார்பினில் அரவம்

புனைபெரு மானூர் பொருநையின் கரைமேற்

.. பொழிலணி புடைமரு தூரே.


கனைகடல் கக்கு கருவிடம் தன்னைக் கருணையொடு உண்டு இருள் கண்டன் - ஒலிக்கின்ற கடல் உமிழ்ந்த கரிய நஞ்சைக் கருணையினால் உண்டு கறுத்த கண்டத்தை உடையவன்;

புனல் அடை சடையான் - கங்கையைச் சடையில் அடைத்தவன்;

கொடியிடை உடையாள் புரி-குழல் கோமதி நாதன் - கொடி போன்ற இடையும் சுருண்ட கூந்தலும் உடைய கோமதிக்குத் தலைவன்; (புரிதல் - சுருள்தல்); (* கோமதி - இத்தலத்து இறைவி திருநாமம்);

நினைபவர் நெஞ்சில் நின்றருள் நிமலன் - எண்ணி வழிபடும் பக்தர்கள் நெஞ்சிள் தங்கும் தூயவன்;

நீறு ஒளிர் மார்பினில் அரவம் புனை பெருமான் ஊர் - திருநீற்றைப் பூசிய மார்பில் பாம்பை மாலையாக அணிந்த பெருமான் உறையும் ஊர்;

பொருநையின் கரைமேல் பொழில் அணி புடைமருதூரே - தாமிரபரணியின் கரையில், சோலை சூழ்ந்த திருப்புடைமருதூர் ஆகும்;


8)

தேர்விடத் தடையோ இம்மலை என்று

.. சின(ம்)மிகு மனத்தனாய் அதனைப்

பேர்மட அரக்கன் வலிகெட ஊன்றிப்

.. பின்னவன் பெரிதழு தேத்தப்

பேர்கொடுத் தருள்செய் பிஞ்ஞகப் பித்தன்

.. பேதையோர் பங்கினன் வெள்ளைப்

போர்விடை யானூர் பொருநையின் கரைமேற்

.. பொழிலணி புடைமரு தூரே.


பேர் மட அரக்கன் வலி கெட ஊன்றிப் - கயிலைமலையைப் பெயர்க்க முயன்ற, மடமை மிக்க தசமுகனது வலிமை அழியும்படி ஒரு விரலை ஊன்றி; (வலி - வலிமை);

பின் அவன் பெரிது அழுது ஏத்தப், பேர் கொடுத்து அருள்செய் - பிறகு அவன் நெடுங்காலம் ஓலமிட்டு அழுது துதிக்க, அவனுக்கு இரங்கி, இராவணன் என்ற பெயரும் கொடுத்து அருள்செய்த; (அப்பர் தேவாரம் - 6.79.10 - "பாடல் கேட்டுப் பரிந்து அவனுக்கு இராவணன் என்று ஈந்த நாமத் தத்துவனை" - இராவணன் - அழுதவன்);

பிஞ்ஞகப் பித்தன் - தலைக் கோலமும், பேரருளும் உடையவன்; (சுந்தரர் தேவாரம் - 7.48.10 - "பிஞ்ஞகப் பித்தனை");

பேதைர் பங்கினன் - உமையொருபங்கன்;


9)

மருப்பொசி மாலும் மலர்மிசை அயனும்

.. மலரடி மணிமுடி காணா

நெருப்புரு வாகி நின்றவன் இன்று

.. நேற்றொடு நாளையும் ஆகி

இருப்பவன் அன்பர் விருப்பவன் உம்பர்

.. இடர்கெட எயில்களை எரித்த

பொருப்புவில் லானூர் பொருநையின் கரைமேற்

.. பொழிலணி புடைமரு தூரே.


மருப்பு ஒசி மாலும் - குவலயாபீடம் என்ற யானையின் தந்தத்தை ஒடித்த திருமாலும்; (மருப்பு - யானைக்கொம்பு; தந்தம்); (ஒசித்தல் - ஒடித்தல்); (சம்பந்தர் தேவாரம் - 1.52.9 - "வேழ வெண்கொம்பு ஒசித்த மாலும்"); மலர்மிசை அயனும் - தாமரைமேல் இருக்கும் பிரமனும்; விருப்பவன் - விருப்பமாய் இருப்பவன்; (அப்பர் தேவாரம் - 6.90.9 - "தக்கோர் சிந்தை விருப்பவனை"); பொருப்பு வில் - மேருமலை வில்;


10)

சேர்வழி அறியாக் கார்மலி நெஞ்சர்

.. செப்பிடும் சிறுமொழி கொள்ளேல்

ஓர்வழி உண்மை நேர்வழி எளிதில்

.. உய்வழி நீறணி பத்தர்

சார்வழி ஆன சங்கரன் கங்கைச்

.. சடையினன் கடகரி உரிவைப்

போர்வையி னானூர் பொருநையின் கரைமேற்

.. பொழிலணி புடைமரு தூரே.


வழி - நெறி; கார் - கருமை; இருள்; அறிவுமயக்கம்; மலிதல் - மிகுதல்; சிறுமொழி - புன்மொழி; சிறுசொல்; அற்ப வார்த்தைகள்; கொள்ளேல் - மதிக்கவேண்டா; ஓர் வழி - ஒப்பற்ற நெறி; உண்மை நேர்வழி - உண்மைவழி, நேர்வழி - மெய்ந்நெறி, செவ்வையான வழி; எளிதில் உய் வழி - எளிதில் உய்யும் நெறி; நீறு அணி பத்தர் சார் வழி - திருநீறு பூசிய பக்தர்கள் சாரும் நெறி; (சார்தல் - சென்றடைதல்; புகலடைதல்; பொருந்துதல்); கட-கரி உரிவைப் போர்வையினான் - மதயானையின் தோலைப் போர்வையாக அணிந்தவன்; (கடம் - யானை மதம்); (கரி - யானை); (உரிவை - தோல்); (அப்பர் தேவாரம் - 4.66.5 - "கடகரி யுரியர் போலும்");


11)

தீங்கரும் பன்ன இன்மொழி பேசும்

.. தேவியோர் பங்கனே சிவனே

தாங்கருந் துன்பம் தருவினை தீராய்

.. சம்புவே என்றடி தொழுவார்க்(கு)

ஈங்கருந் துணையாய் இன்பம ருள்வான்

.. இரக்கமில் காலனை உதைத்த

பூங்கழ லானூர் பொருநையின் கரைமேற்

.. பொழிலணி புடைமரு தூரே.


தீங்-கரும்பு அன்ன இன்மொழி - இனிய கரும்பு போன்ற இன்மொழி; தாங்கருந்துன்பம் - தாங்க அரும் துன்பம் - தரிக்க ஒண்ணாத துன்பம்; (தாங்கரும் - தாங்க அரும்; தொகுத்தல் விகாரம்); துன்பம் தருவினை தீராய் - துன்பத்தைத் தரும் வினைகளைத் தீர்ப்பாயாக; சம்பு - சிவன் திருநாமம் - இன்பத்தை ஆக்குபவன்; சுகத்தைத் தருபவன்; ஈங்கு அரும் துணையாய் - இங்கே (இப்பிறப்பில், இவ்வுலகில்) அரிய துணை ஆகி; இரக்கம் இல் காலனை - இரக்கமற்ற எமனை; பூங்கழலான் - பூவையொத்த பொலிவுடைய கழலணிந்த திருவடியினன்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------