Thursday, July 25, 2024

08.05.037 - கூர்வேல் (பிறிதுபடுபாட்டு)

08.05.037 - கூர்வேல் (பிறிதுபடுபாட்டு)

08.05 - பலவகை

மிறைக்கவி - பிறிதுபடுபாட்டு:

அறுசீர் & வெண்பா - ஒரே பாடல்


2006-07-18

8.5.37 - கூர்வேல் (பிறிதுபடுபாட்டு - மிறைக்கவி)

-----------

1) ---- (வெண்பா) ----

கூர்வேல்நா கக்கச்சுக் கோளரா ஒண்திங்கள்

சேர்சென்னிக் கோன்ஈசன் தென்னானைக் காஉறைவான்

வார்சடைக்கண் ஆறுவைத்தான் மா(து)இடத்தில் சேர்த்தவன்மா

ஊர்ந்தசெல்வன் தாளேநீ ஓர்.


2) ---- (அறுசீர் விருத்தம் - 6 மா - வாய்பாடு) ----

கூர்வேல் நாகக் கச்சுக் கோள ராஒண் திங்கள்

சேர்சென் னிக்கோன் ஈசன் தென்ஆ னைக்கா உறைவான்

வார்ச டைக்கண் ஆறு வைத்தான் மா(து)இ டத்தில்

சேர்த்த வன்மா ஊர்ந்த செல்வன் தாளே நீஓர்.


கூர்வேல் நாகக்-கச்சுக் கோள்-அரா ஒண்-திங்கள் சேர் சென்னிக்கோன் - கூர்மையான சூலமும், அரையில் நாகக்கச்சும், கொடிய பாம்பையும் ஒளியுடைய சந்திரனையும் சேர்த்த திருமுடியும் உடைய தலைவன்;

ஈசன் - கடவுள்;

தென்-ஆனைக்கா உறைவான் - அழகிய திருவானைக்காவில் உறைகின்றவன்;

வார்-சடைக்கண் ஆறு வைத்தான் - நீண்ட சடையில் கங்கையை அணிந்தவன்;

மாது இடத்தில் சேர்த்தவன் - உமையைத் திருமேனியில் இடப்பாகமாக சேர்த்தவன்;

மா ஊர்ந்த செல்வன் தாளே நீ ஓர் - இடபத்தின்மேல் ஏறிய செல்வனது திருவடியையே, (மனமே) நீ எண்ணு;


பிற்குறிப்புகள்:

1. இலக்கணக் குறிப்பு: பிறிதுபடுபாட்டு என்பது ஒரே பாடலை வெவ்வேறு சீர், அடி அமைப்புகள் ஆக்கி இருவகைப் பாடல் அமைப்பாகக் கருதுமாறு அமைவது.

இங்கே, இந்த ஒரே பாடலை வெண்பா என்றும் அறுசீர் விருத்தம் என்று நோக்குமாறு அமைந்தது.


வி. சுப்பிரமணியன்

--------- ---------

No comments:

Post a Comment