Sunday, July 28, 2019

03.05.029 – பொது - நீதியை மறந்து நித்தம் - (வண்ணம்)

03.05.029 – பொது - நீதியை மறந்து நித்தம் - (வண்ணம்)

2007-04-03

3.5.29 - நீதியை மறந்து நித்தம் - (பொது)

----------------------------------------------------

(வண்ணவிருத்தம்;

தானதன தந்த தத்த

தானதன தந்த தத்த

தானதன தந்த தத்த .. தனதான )

(சேலுமயி லுந்த ரித்த - திருப்புகழ் - சுவாமிமலை)


நீதியைம றந்து நித்தம் ஈனரைய டைந்து சித்த(ம்)

..... நேர்வழிது றந்து சற்று(ம்) .. நினையாமல்

... நேருமிடர் கண்ட யர்த்து வீழுமவ லந்து டைத்து

..... நீர்பரவி நின்றொ லிக்கும் .. அலைசூழும்

மேதினியில் வந்தி றக்கு மாறுசெயும் என்க ணக்கு

..... வேரறவ ரங்கொ டுக்க .. வருவாயே

... வேணியுளொர் மங்கை வைத்து மாதையொரு பங்கி ணைத்து

..... வீணைதனை அங்கை வைத்த .. பெருமானே

ஆதியுனை அன்பு மிக்கு மாணியவ னன்ற ழைக்க

..... ஆருயிர்வ லிந்தி ழுக்க .. வருகாலன்

... ஆவிவிட நன்று தைத்த தாளதனை நெஞ்சி ருத்தி

..... ஆசைமிக இண்டை கட்டி .. இசைபாடி

நாதியென உன்ப தத்தை நாடியதொ ழும்பர் கட்கு

..... நாளுமிக இன்ப ளிக்கும் .. அருளாளா

... நாகமொடெ லும்பு மக்கும் ஆபரணம் என்று வைத்த

..... நாததிரு வைந்தெ ழுத்து .. வடிவோனே.


பதம் பிரித்து:

நீதியை மறந்து நித்தம் ஈனரை அடைந்து, சித்தம்

..... நேர்வழி துறந்து, சற்றும் .. நினையாமல்,

... நேரும் இடர் கண்டு அயர்த்து வீழும் அவலம் துடைத்து,

..... நீர் பரவி நின்று ஒலிக்கும் .. அலை சூழும்

மேதினியில் வந்து இறக்குமாறு செயும் என் கணக்கு

..... வேரற வரம் கொடுக்க .. வருவாயே;

... வேணியுள் ஒர் மங்கை வைத்து, மாதை ஒரு பங்கு இணைத்து,

..... வீணைதனை அங்கை வைத்த .. பெருமானே;

ஆதி உனை அன்பு மிக்கு மாணி அவன் அன்று அழைக்க,

..... ஆருயிர் வலிந்து இழுக்க .. வரு காலன்

... ஆவி விட நன்று உதைத்த தாள் அதனை நெஞ்சு இருத்தி,

..... ஆசை மிக இண்டை கட்டி, .. இசை பாடி,

நாதி என உன் பதத்தை நாடிய தொழும்பர்கட்கு

..... நாளும் மிக இன்பு அளிக்கும் .. அருளாளா;

... நாகமொடு எலும்பும் அக்கும் ஆபரணம் என்று வைத்த

..... நாத; திருவைந்தெழுத்து .. வடிவோனே.


நீதியை மறந்து நித்தம் ஈனரை அடைந்து சித்தம் நேர்வழி துறந்து சற்றும் நினையாமல் - தர்மத்தை மறந்து, என்றும் கீழோரை அடைந்து, மனம் நல்வழியைவிட்டு விலகி, விளைவுகளைச் சிறிதும் நினையாமல்;

நேரும் இடர் கண்டு அயர்த்து வீழும் அவலம் துடைத்து - சம்பவிக்கும் துன்பத்தைக் கண்டு நான் வாடி விழும் அவலத்தை நீக்கி;

நீர் பரவி நின்று ஒலிக்கும் அலை சூழும் மேதினியில் வந்து இறக்குமாறு செயும் என் கணக்கு வேரற வரம் கொடுக்க வருவாயே - நீர் விரிந்து அலை ஒலிக்கின்ற கடலால் சூழப்பெற்ற இவ்வுலகில் முடிவின்றிப் பிறந்து இறக்குமாறு செய்யும் என் வினைக்கணக்கு அடியோடு தீரும்படி வரம் கொடுக்க வந்துஅருள்வாயாக;

வேணியுள் ஒர் மங்கை வைத்து மாதை ஒரு பங்கு இணைத்து வீணைதனை அங்கை வைத்த பெருமானே - சடையுள் கங்கையை வைத்து, உமையை ஒரு பங்காக உடலில் இணைத்துக், கையில் வீணையை ஏந்திய பெருமானே; (ஒர் - ஓர் என்பதன் குறுக்கல் விகாரம்); (சம்பந்தர் தேவாரம் - கோளறு பதிகம் - 2.85.1 - "வேயுறு தோளிபங்கன் விடமுண்டகண்டன் மிகநல்ல வீணை தடவி");

ஆதி உனை அன்பு மிக்கு மாணி அவன் அன்று அழைக்க ஆருயிர் வலிந்து இழுக்க வரு காலன் ஆவி விட நன்று உதைத்த தாள் அதனை நெஞ்சு இருத்தி - ஆதியான உன்னை அன்போடு போற்றிய மார்க்கண்டேயரது ஆருயிரைக் கவர வந்த காலனே உயிர் விடும்படி அந்தக் காலனை நன்றாக உதைத்த திருவடியை நெஞ்சில் தாங்கி;

ஆசை மிக இண்டை கட்டி இசை பாடி - அன்போடு இண்டை முதலிய மாலைகள் கட்டிப் பாமாலைகள் பாடி; (இண்டை - மாலைவகைகளில் ஒன்று);

நாதி என உன் பதத்தை நாடிய தொழும்பர்கட்கு நாளும் மிக இன்பு அளிக்கும் அருளாளா - (நீயே) நாதி என்று உன் திருவடியைச் சரணடைந்த அடியார்களுக்கு என்றும் இன்பம் அளிக்கும் அருளாளனே; (நாதி - காப்பாற்றுவோன்);

நாகமொடு எலும்பும் அக்கும் ஆபரணம் என்று வைத்த நாத - பாம்பு, எலும்பு, உருத்திராக்கம் இவற்றை அணியாக மகிழ்ந்த தலைவனே; (சம்பந்தர் தேவாரம் - 1.78.7 – "கழன்மல்கு காலினர் வேலினர் நூலர் கவர்தலை அரவொடு கண்டியும் பூண்பர்" - கண்டி - உருத்திராக்க மாலை),

திருவைந்தெழுத்து .வடிவோனே - பஞ்சாட்சரவடிவம் ஆனவனே;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment