Thursday, May 25, 2017

03.04.036 - சிவன் - சோறு - சிலேடை

03.04 – சிவன் சிலேடைகள்

2006-04-20

3.4.36 - சிவன் - சோறு - சிலேடை

-------------------------------------------------------------

மூன்று முறைநாள்நாம் வேண்டுவதால் பாலினில்

தோன்றுதயிர் ஆடுவதால் தூயமலை போன்றவுருத்

தோன்ற இலையிடச் சொல்வதால் ஏறேறு

தோன்றல் பசிதீர்க்கும் சோறு.


சொற்பொருள்:

நாள் - நாளும்; (உம்மைத்தொகை);

வேண்டுதல் - 1. இன்றியமையாததாதல்; தேவைப்படுதல்; / 2. வணங்குதல்; பிரார்த்தித்தல்;

ஆடுதல் - குளித்தல்; அபிஷேகம் பெறுதல்;

தோன்றுதல் - 1. உண்டாதல்; / 2. கண்ணுக்குப் புலப்படுதல்; அறியப்படுதல்;

ஏறு - இடபம்;

ஏறுதல் - மேலே ஏறுதல்; ஏறிச் செலுத்துதல்;

தோன்றல் - தலைவன்;


சோறு:

மூன்றுமுறை நாள் நாம் வேண்டுவதால் - தினமும் மூன்று வேளை நமக்குத் தேவைப்படுகிறது;

பாலினில் தோன்று-தயிர் ஆடுவதால் - பாலில் உண்டாகும் தயிரில் குளிக்கும் (தயிர்சோறு);

தூய-மலை போன்ற உருத் தோன்ற இலை இடச் சொல்வதால் - இலையில் இடும்படி சொல்வோம்; அப்படி அதனை இடும்போது தூய வெண்மலை போன்ற வடிவம் தோன்றும்;

பசி தீர்க்கும் சோறு - நம் பசியத் தீர்க்கின்ற சோறு;


சிவன்:

மூன்றுமுறை நாள் நாம் வேண்டுவதால் - (பக்தர்கள்) தினமும் மூன்று வேளை வணங்குவார்கள். (சுந்தரர் தேவாரம் - திருமுறை 7.83.1 - "அந்தியும் நண்பகலும் அஞ்சுபதஞ் சொல்லி");

பாலினில் தோன்று-தயிர் ஆடுவதால் - பாலில் உண்டாகும் தயிரால் அபிஷேகம் உண்டு.

தூய-மலை போன்ற உருத் தோன்ற இலை இடச் சொல்வதால் - தூய பவளமலை போன்ற திருவுரு உடைய சிவபெருமான் காட்சிதர வேண்டுமானால் (வில்வம், வன்னி முதலிய) இலைகளைத் தூவி வழிபடுங்கள் என்று (பெரியோர்) சொல்வர்; (திருவாசகம் - திருப்பள்ளியெழுச்சி - 8.20.2 - "அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே");

ஏறு ஏறு தோன்றல் - இடபவாகனம் உடைய தலைவன்;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------

No comments:

Post a Comment