Saturday, October 4, 2025

V.060 - செல்லும் இடமறியேன் - தனிப்பாடல்

2014-10-17

V.060 - செல்லும் இடமறியேன் - தனிப்பாடல்

----------------

(வெண்பா)


செல்லும் இடமறியேன்; செல்லும் தடமறியேன்;

அல்லும் பகலுமுன்பேர் அன்போடு - சொல்லும்

குணமறியேன்; பத்தர் கணமறியேன்; கூடும்

வணமறியேன்; சங்கரகா வந்து.


சென்றடையும் இடத்தை அறியமாட்டேன்; செல்லவேண்டிய வழியை அறியமாட்டேன்; இரவும் பகலும் உன் திருநாமத்தைப் பக்தியோடு சொல்லும் குணத்தை அறியமாட்டேன்; அடியார் திருக்கூட்டத்தையும் அறியமாட்டேன்; அவர்களைக் கூடும் வகையையும் அறியமாட்டேன்; சங்கரனே, நீயே இரக்கத்தோடு வந்து என்னைக் காத்தருள்க!


தடம் - வழி; பாதை;

பத்தர்-கணம் - அடியவர் திருக்கூட்டம்;

வண்ணம் - வகை - Way, manner, method;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


Thursday, September 25, 2025

P.463 - அவிநாசி - முடிமிசைவெண் பிறையணிந்த

2019-01-27

P.463 - அவிநாசி

-------------------------------

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

(சம்பந்தர் தேவாரம் - 2.48.1 - "கண்காட்டு நுதலானும்")

* தேவாரத்தில் - புக்கொளியூர் அவிநாசி;


1)

முடிமிசைவெண் பிறையணிந்த முக்கணனே முழுமுதலே

கொடிமிசையோர் ஏறுடையாய் கூடல்நகர் தனிற்பிரம்பால்

அடியுணுமோர் அருட்கடலே அவிநாசி அப்பனே

அடிபரவும் அடியேனை அஞ்சேலென் றருளாயே.


முடிமிசை வெண்-பிறை அணிந்த முக்கணனே - தலைமேல் வெண்மையான பிறையைச் சூடிய முக்கண்ணனே;

முழுமுதலே - முழுமுதற்பொருளே;

கொடிமிசை ஓர் ஏறு உடையாய் - இடபச்சின்னம் பொறித்த கொடியை உடையவனே;

கூடல்நகர்தனில் பிரம்பால் அடியுணும் ஓர் அருட்கடலே - மதுரையில் பிரம்படி பட்ட ஒப்பற்ற அருட்கடல் ஆனவனே; (கூடனகர் = கூடல் நகர்; கூடல் = மதுரை);

அவிநாசி அப்பனே - அவிநாசியில் உறைகின்ற, அழிவற்ற தந்தையே;

அடி-பரவும் அடியேனை அஞ்சேல் என்று அருளாயே - உன் திருவடியை வழிபடும் எனக்கு அபயம் தந்து அருள்வாயாக; (அப்பர் தேவாரம் - 6.47.10 - "அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண் துறையுறையும் அமரர் ஏறே");


2)

திரளாகிச் சரண்புகுந்த தேவர்களுக் கமுதீந்த

கருளாரும் கண்டத்தாய் கதிர்மதியத் துண்டத்தாய்

அரைநாணா அரவுடையாய் அவிநாசி அப்பனே

அருளாளா அடியேனை அஞ்சேலென் றருளாயே.


திரளாகிச் சரண்புகுந்த தேவர்களுக்கு அமுது ஈந்த கருள் ஆரும் கண்டத்தாய் - திரண்டுவந்து சரணடைந்த தேவர்களுக்கு அமுதத்தை அருளி, ஆலகாலத்தை உண்டு கருமை பொருந்திய கண்டத்தை உடையவனே; (கருள் - கறுப்பு);

கதிர்மதியத் துண்டத்தாய் - நிலாத்துண்டத்தைச் சூடியவனே; (கதிர் - கிரணம்);

அரைநாணா அரவு உடையாய் - அரைநாணாகப் பாம்பைக் கட்டியவனே; (நாணா - நாணாக);

அவிநாசி அப்பனே - அவிநாசியில் உறைகின்ற, அழிவற்ற தந்தையே;

அருளாளா, அடியேனை அஞ்சேல் என்று அருளாயே - அருளாளனே, உன் திருவடியை வழிபடும் எனக்கு அபயம் தந்து அருள்வாயாக;


3)

கங்குலினில் ஆடுகின்ற கணநாதா கழல்தொழுத

திங்களணி செஞ்சடையில் திரைமலிந்த கங்கையினாய்

அங்கமணி ஆரழகா அவிநாசி அப்பனே

அங்கணனே அடியேனை அஞ்சேலென் றருளாயே.


கங்குலினில் ஆடுகின்ற கணநாதா - இருளில் கூத்தாடுகின்றவனே, கணநாதனே; (கங்குல் - இரவு);

கழல் தொழுத திங்கள் அணி செஞ்சடையில் திரை மலிந்த கங்கையினாய் - திருவடியை வணங்கிய சந்திரனை அணிந்த சிவந்த சடையில் அலைமிக்க கங்கையைத் தாங்கியவனே; (திரை - அலை);

அங்கம் அணி ஆரழகா - எலும்பைப் பூணுகின்ற அரிய அழகனே; (அங்கம் - எலும்பு); (அப்பர் தேவாரம் - 6.60.5 - "அங்கம் அணி ஆகத்தானை"); (சுந்தரர் தேவாரம் - 7.84.7 - "அங்கம் அணிந்தவனை");

அவிநாசி அப்பனே - அவிநாசியில் உறைகின்ற, அழிவற்ற தந்தையே;

அங்கணனே, அடியேனை அஞ்சேல் என்று அருளாயே - அருள்நோக்கம் உடையவனே, உன் திருவடியை வழிபடும் எனக்கு அபயம் தந்து அருள்வாயாக;


4)

கோலமங்கை கூறுடையாய் கும்பிட்ட மார்க்கண்டர்

பாலடைந்த கூற்றுதைத்த பைங்கழலாய் அறமுரைக்க

ஆலமர்ந்த பரங்குருவே அவிநாசி அப்பனே

ஆலமுண்டாய் அடியேனை அஞ்சேலென் றருளாயே.


கோல-மங்கை கூறு உடையாய் - அழகிய உமையை ஒரு கூறாக உடையவனே;

கும்பிட்ட மார்க்கண்டர்பால் அடைந்த கூற்று உதைத்த பைங்கழலாய் - வழிபட்ட மார்க்கண்டேயரிடம் வந்த காலனை உதைத்த திருவடியினனே;

அறம் உரைக்க ஆல் அமர்ந்த பரங்குருவே - சனகாதியருக்கு மறைப்பொருளை உபதேசிக்கக் கல்லால-மரத்தடியை நாடிய மேலான குருவே; (பரம் - மேலானது);

அவிநாசி அப்பனே - அவிநாசியில் உறைகின்ற, அழிவற்ற தந்தையே;

ஆலம் உண்டாய், அடியேனை அஞ்சேல் என்று அருளாயே - ஆலகால விடத்தை உண்டவனே, உன் திருவடியை வழிபடும் எனக்கு அபயம் தந்து அருள்வாயாக;


5)

வெஞ்சினவெள் விடையுடையாய் வெண்மழுவாட் படையுடையாய்

மஞ்சணவும் மலைமன்னன் மகளொருபால் மகிழ்ந்தவனே

அஞ்சடைமேல் அரவணிந்த அவிநாசி அப்பனே

அஞ்செழுத்தாய் அடியேனை அஞ்சேலென் றருளாயே.


வெஞ்சின வெள்-விடை உடையாய் - கொடிய சினமுடைய வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவனே;

வெண்மழுவாட்படை உடையாய் - ஒளி திகழும் மழுவாயுதத்தை ஏந்தியவனே; (படை - ஆயுதம்);

மஞ்சு அணவும் மலைமன்னன் மகள் ஒருபால் மகிழ்ந்தவனே - மேகம் பொருந்தும் மலைக்கு மன்னன் மகளான உமையை ஒரு பாகமாக விரும்பியவனே; (அணவுதல் - அணுகுதல்; தழுவுதல்);

அஞ்சடைமேல் அரவு அணிந்த அவிநாசி அப்பனே - அழகிய சடைமேல் பாம்பை அணிந்தவனே, அவிநாசியில் உறைகின்ற, அழிவற்ற தந்தையே; (அம் - அழகு);

அஞ்செழுத்தாய், அடியேனை அஞ்சேல் என்று அருளாயே - ஐந்தெழுத்து மந்திரம் ஆனவனே, உன் திருவடியை வழிபடும் எனக்கு அபயம் தந்து அருள்வாயாக; (திருமந்திரம் - 10.4.2.55 - "உண்ணும் மருந்தும் .. .. எண்ணின் றெழுத்தஞ்சு மாகிநின் றானே"); (ஒரு பெரியவர் சொன்னது: "தெய்வ நாமத்தைச் சொல்வது சுலபவழி! ... நாம‌த்தை உச்ச‌ரித்து அதனைக் கேட்கும்போது நாம் உண‌ர்வ‌து இறைவ‌னையேதான்! ஏனெனில் அவ‌ர‌து உருவினில் ஒன்று நாம‌உரு!");


6)

நீறணிந்த மேனிதனில் நேரிழையாள் தன்னையொரு

கூறணிந்த கொள்கையினாய் குழைக்காதா மறையங்கம்

ஆறறிந்தார் தொழுமிறையே அவிநாசி அப்பனே

ஆறணிந்தாய் அடியேனை அஞ்சேலென் றருளாயே.


நீறு அணிந்த மேனிதனில் நேரிழையாள்தன்னை ஒரு கூறு அணிந்த கொள்கையினாய் - திருநீற்றைப் பூசிய திருமேனியில் உமையை ஒரு கூறாக விரும்பியவனே; (சுந்தரர் தேவாரம் - 7.64.1 - "மடந்தை கூறு தாங்கிய கொள்கையினானை");

குழைக்காதா - காதில் குழையை அணிந்தவனே;

மறை அங்கம்-ஆறு அறிந்தார் தொழும் இறையே - நால்வேதங்களையும் ஆறு-அங்கங்களையும் ஓதியவர்களால் வழிபடப்பெறும் இறைவனே;

அவிநாசி அப்பனே - அவிநாசியில் உறைகின்ற, அழிவற்ற தந்தையே;

ஆறு அணிந்தாய், அடியேனை அஞ்சேல் என்று அருளாயே - கங்கையை அணிந்தவனே, உன் திருவடியை வழிபடும் எனக்கு அபயம் தந்து அருள்வாயாக;


7)

கவினுறுபூங் கணையெய்த காமனைமுன் காய்ந்தவனே

செவியினிலோர் தோடுடையாய் செருக்குடையான் வேள்விதனில்

அவியளியான் சிரமறுத்தாய் அவிநாசி அப்பனே

அவிர்சடையாய் அடியேனை அஞ்சேலென் றருளாயே.


கவினுறு பூங்கணை எய்த காமனை முன் காய்ந்தவனே - அழகிய மலர்க்கணையை எய்த மன்மதனை முன்பு கோபித்துச் சாம்பலாக்கியவனே; (காய்தல்- சினத்தல்; எரித்தல்);

செவியினில் ஓர் தோடு உடையாய் - ஒரு காதில் தோடு அணிந்தவனே;

செருக்கு உடையான், வேள்விதனில் அவி அளியான் சிரம் அறுத்தாய் - ஆணவம் மிக்கவனும், தான் செய்த யாகத்தில் சிவனுக்கு ஹவிர்பாகம் கொடாதவனுமான தக்கனது தலையை வெட்டியவனே;

அவிநாசி அப்பனே - அவிநாசியில் உறைகின்ற, அழிவற்ற தந்தையே;

அவிர்-சடையாய், அடியேனை அஞ்சேல் என்று அருளாயே - ஒளிவீசும் சடையை உடையவனே, உன் திருவடியை வழிபடும் எனக்கு அபயம் தந்து அருள்வாயாக; (அவிர்தல் - பிரகாசித்தல்);


8)

உழுவைத்தோல் உடையானே ஒள்ளெரியில் புரமூன்றை

விழவைத்த விறலுடையாய் வெற்பெடுத்த தசமுகனை

அழவைத்த விரலுடையாய் அவிநாசி அப்பனே

அழல்வண்ணா அடியேனை அஞ்சேலென் றருளாயே.


உழுவைத்தோல் உடையானே - புலித்தோலை உடையாக உடையவனே; (உழுவை - புலி);

ஒள்-எரியில் புரம்-மூன்றை விழவைத்த விறல் உடையாய் - ஒளிவீசும் தீயில் முப்புரங்களை விழச்செய்த வெற்றியுடையவனே; (விறல் - வெற்றி; வலிமை; பெருமை);

வெற்பு எடுத்த தசமுகனை அழவைத்த விரல் உடையாய் - கயிலைமலையைப் பெயர்த்து எடுத்த இராவணனைத் திருப்பாத-விரலை ஊன்றி அழச்செய்தவனே;

அவிநாசி அப்பனே - அவிநாசியில் உறைகின்ற, அழிவற்ற தந்தையே;

அழல்வண்ணா, அடியேனை அஞ்சேல் என்று அருளாயே - தீவண்ணனே, உன் திருவடியை வழிபடும் எனக்கு அபயம் தந்து அருள்வாயாக;


9)

கைம்மாவை உரிசெய்த கண்ணுதலே கறைக்கண்டா

தம்மானை அறியாது தருக்கித்த சதுர்முகனும்

அம்மாலும் தேடநின்ற அவிநாசி அப்பனே

அம்மானே அடியேனை அஞ்சேலென் றருளாயே.


கைம்மாவை உரிசெய்த கண்ணுதலே - யானையின் தோலை உரித்த நெற்றிக்கண்ணனே; (கைம்மா - யானை);

கறைக்கண்டா - நீலகண்டனே;

தம்மானை அறியாது தருக்கித்த சதுர்முகனும் அம்மாலும் தேட நின்ற - தம் தலைவனை அறியாமல் வாதுசெய்த நான்முகனும் அந்தத் திருமாலும் தேடும்படி ஜோதியாகி ஓங்கி நின்ற; (மான் - தலைவன்); (தருக்கித்தல் - வாதஞ்செய்தல்); (- பண்டறிசுட்டு);

அவிநாசி அப்பனே - அவிநாசியில் உறைகின்ற, அழிவற்ற தந்தையே;

அம்மானே, அடியேனை அஞ்சேல் என்று அருளாயே - பெருமானே, உன் திருவடியை வழிபடும் எனக்கு அபயம் தந்து அருள்வாயாக; (அம்மான் - இறைவன்);


10)

வெந்தபொடி அணியார்சொல் வெற்றுரையில் வீழாமல்

வந்துதொழும் அடியாரை வாழ்விப்பாய் சூலத்தால்

அந்தகனை அழித்தவனே அவிநாசி அப்பனே

அந்தணனே அடியேனை அஞ்சேலென் றருளாயே.


வெந்த-பொடி அணியார் சொல் வெற்றுரையில் வீழாமல் வந்து தொழும் அடியாரை வாழ்விப்பாய் - திருநீற்றைப் பூசாதவர்கள் சொல்லும் வெற்றுப்பேச்சில் (அர்த்தமற்ற வார்த்தைகளில்) மயங்காமல், அன்போடு வந்து வழிபடும் பக்தர்களை இனிது வாழ்விப்பவனே;

சூலத்தால் அந்தகனை அழித்தவனே - சூலாயுதத்தால் அந்தகாசுரனைக் குத்தியவனே;

அவிநாசி அப்பனே - அவிநாசியில் உறைகின்ற, அழிவற்ற தந்தையே;

அந்தணனே, அடியேனை அஞ்சேல் என்று அருளாயே - குளிர்ந்த அருளுடைய சிவபெருமானே, உன் திருவடியை வழிபடும் எனக்கு அபயம் தந்து அருள்வாயாக; (அந்தணன் - குளிர்ந்த தண்ணளியைச் செய்பவன் - சிவன்); (அப்பர் தேவாரம் - 5.97.10 - "ஐயன் அந்தணன் ஆணொடு பெண்ணுமாம் மெய்யன்");


11)

பாடவலாய் நான்மறையைப் பார்த்தனுக்காப் பன்றிப்பின்

ஓடவலாய் ஊணிரக்க ஓடுடையாய் தோலல்லால்

ஆடையிலாய் அற்புதனே அவிநாசி அப்பனே

ஆடவலாய் அடியேனை அஞ்சேலென் றருளாயே.


பாட வலாய் நான்மறையைப் - நால்வேதங்களைப் பாடியருளியவனே; (வலாய் - வல்லாய் - வல்லவனே);

பார்த்தனுக்காப் பன்றிப்பின் ஓட வலாய் - அர்ஜுனனுக்குப் பாசுபதம் அருள்வதற்காக ஒரு வேடனாகி ஒரு பன்றியைத் துரத்திச் சென்றவனே;

ஊண் இரக்க ஓடு உடையாய் - உணவை யாசிக்க மண்டையோட்டை ஏந்தியவனே; (ஊண் - உணவு);

தோல் அல்லால் ஆடை இலாய், அற்புதனே - தோலைத் தவிர வேறு ஆடை இல்லாதவனே, அற்புதனே;

அவிநாசி அப்பனே - அவிநாசியில் உறைகின்ற, அழிவற்ற தந்தையே;

ஆட வலாய், அடியேனை அஞ்சேல் என்று அருளாயே - கூத்தாட வல்லவனே, உன் திருவடியை வழிபடும் எனக்கு அபயம் தந்து அருள்வாயாக;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


V.059 - பனி மலிந்த தடவரை - தனிப்பாடல்

2019-01-19

V.059 - பனி மலிந்த தடவரை - தனிப்பாடல்

---------------------------------

(கட்டளைக் கலிப்பா)

(அப்பர் தேவாரம் - 5.1.1 - "அன்னம் பாலிக்கும்");

(சம்பந்தர் தேவாரம் - 3.114.1 - "பாயு மால்விடை")


பனிம லிந்த தடவரை மன்னவன்

.. பயந்த பைங்கிளி பூங்கொடி மெல்லிடை

வனிதை தன்னையோர் பாகம் விரும்பினாய்

.. மறைவி ரிக்கக்கல் லாலமர் அண்ணலே

மனிதர் வானவர் வாச மலரிட்டு

.. வைக லும்தொழும் முக்கட் பரமனே

புனித னேஉன் புகழ்தனைச் செப்பினேன்

.. புன்மை ஆயின தீர்த்தருள் செய்திடே.


பனி மலிந்த தடவரை மன்னவன் பயந்த பைங்கிளி பூங்கொடி மெல்லிடை வனிதை தன்னை ஓர் பாகம் விரும்பினாய் - மலைமன்னனான இமவான் பெற்ற அழகிய கிளி போன்றவளும் கொடி போன்ற மெல்லிடையை உடைய பெண்னுமான உமாதேவியை ஒரு பாகமாக விரும்பியவனே;

மறை விரிக்கக் கல்லால் அமர் அண்ணலே - வேதங்களை உபதேசிக்கக் கல்லால-மரத்தின்கீழ் வீற்றிருந்த தலைவனே;

மனிதர் வானவர் வாசமலர் இட்டு வைகலும் தொழும் முக்கட் பரமனே - மனிதர்களும் தேவர்களும் நாள்தோறும் மணம் கமழ் பூக்களைத் தூவி வழிபடும் முக்கண்ணனே, பரமனே;

புனிதனே உன் புகழ்தனைச் செப்பினேன் புன்மை ஆயின தீர்த்தருள் செய்திடே - தூயனே, உன் புகழைச் சொல்லும் அடியேனுடைய குற்றங்களைத் தீர்த்து அருள்வாயாக;


பிற்குறிப்பு: யாப்புக்குறிப்பு:

கட்டளைக் கலிப்பா - திருக்குறுந்தொகை அமைப்பின் இரட்டித்த வடிவம். (அடிதோறும் 8 சீர்கள்).

அரையடியில் 4 சீர்கள். அரையடிகளின் அமைப்புத் திருக்குறுந்தொகைப் பாடல்களின் அடி அமைப்பில் இருக்கும்.


வி. சுப்பிரமணியன்

----------- --------------


P.462 - இடையாறு - புனிதன் கழலும்பர்

2018-12-25

P.462 - இடையாறு

-------------------------

(கலிவிருத்தம் - மா மாங்காய் மா மாங்காய் - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 1.80.1 - "கற்றாங் கெரியோம்பி")


1)

புனிதன் கழலும்பர் போற்ற ஒருகுன்றைக்

குனிவில் எனவேந்திக் கூடார் புரமெய்தான்

தனியன் உமைபங்கன் தாளை மறவாதார்க்

கினியன் உறைகோயில் எழில்கொள் இடையாறே.


புனிதன் - தூயவன்;

கழல் உம்பர் போற்ற ஒரு குன்றைக் குனி-வில் என ஏந்திக் கூடார்-புரம் எய்தான் - திருவடியைத் தேவர்கள் வழிபட, அவர்களுக்கு இரங்கி ஒரு மலையை வளைக்கின்ற வில்லாக ஏந்திப் பகைவர்களது முப்புரங்களை எய்தவன்; (உம்பர் - தேவர்கள்); (குனித்தல் - வளைத்தல்); (கூடார் - பகைவர்);

தனியன், உமைபங்கன் - ஒப்பற்றவன், உமையை ஒரு பங்கில் உடையவன்;

தாளை மறவாதார்க்கு இனியன் உறை-கோயில் எழில்கொள் இடையாறே - தன் திருவடியை எப்பொழுதும் நினைந்து போற்றும் பக்தர்களுக்கு இனிமை பயக்கின்ற சிவபெருமான் உறையும் கோயில் அழகிய திருவிடையாறு ஆகும்;


2)

மறையின் பொருள்நால்வர் மகிழ விரிசெய்தான்

அறையும் கடல்நஞ்சை ஆர்ந்த அருளாளன்

பறையின் ஒலியோங்கப் படுகா னிடையாடும்

இறைவன் உறைகோயில் எழில்கொள் இடையாறே.


மறையின் பொருள் நால்வர் மகிழ விரி-செய்தான் - வேதப்பொருளைச் சனகாதியர் நால்வருக்கு உபதேசித்தவன்;

அறையும் கடல் நஞ்சை ஆர்ந்த அருளாளன் - ஒலிக்கின்ற கடலில் எழுந்த விடத்தை உண்ட (/உண்டு அணிந்த) அருளாளன்; (ஆர்தல் - உண்தல்; அணிதல்);

பறையின் ஒலி ஓங்கப் படுகானிடை ஆடும் - பறையின் ஓசை பெருகச் சுடுகாட்டில் ஆடுகின்ற;

இறைவன் உறை-கோயில் எழில்கொள் இடையாறே - சிவபெருமான் உறையும் கோயில் அழகிய திருவிடையாறு ஆகும்;


3)

அம்மால் தொழுதேத்த ஆழி அருள்செய்தான்

கைம்மா உரிபோர்த்தான் கசியும் அடியார்தம்

வெம்மா வினையெல்லாம் வீட்டி நலம்நல்கும்

எம்மான் உறைகோயில் எழில்கொள் இடையாறே.


அம்-மால் தொழுதேத்த ஆழி அருள்செய்தான் - விஷ்ணு செய்த வழிபாட்டிற்கு மகிழ்ந்து சக்கராயுதத்தை ஈந்தவன்; (- பண்டறிசுட்டு); (ஆழி - சக்கரம்);

கைம்மா உரி போர்த்தான் - யானைத்தோலைப் போர்த்தவன்; (கைம்மா - யானை); (உரி - தோல்);

கசியும் அடியார்தம் வெம்-மா-வினையெல்லாம் வீட்டி நலம் நல்கும் - உள்ளம் கசிந்து வழிபடும் பக்தர்களது கொடிய பெரிய வினைகளையெல்லாம் அழித்து நன்மை புரிகின்ற; (வீட்டுதல் - அழித்தல்);

எம்மான் உறை-கோயில் எழில்கொள் இடையாறே - எம்பெருமான் உறையும் கோயில் அழகிய திருவிடையாறு ஆகும்;


4)

கந்த மலர்சூடும் கற்றைச் சடையின்மேல்

இந்து தனைவைத்த ஈசன் இளவேற்றன்

அந்தம் முதலில்லான் அடியார் மிடிதீர்க்கும்

எந்தை உறைகோயில் எழில்கொள் இடையாறே.


கந்தமலர் சூடும் கற்றைச்-சடையின்மேல் - வாசமலர்களைச் சூடிய கற்றைச்சடைமீது;

இந்துதனை வைத்த ஈசன் இள-ஏற்றன் - சந்திரனை வைத்த ஈசன், இளைய எருதை வாகனமாக உடையவன்; (இந்து - சந்திரன்);

அந்தம் முதல் இல்லான் - முதலும் முடிவும் இல்லாதவன்;

அடியார் மிடி தீர்க்கும் எந்தை உறை-கோயில் எழில்கொள் இடையாறே - பக்தர்களது துன்பத்தைத் தீர்க்கும் சிவபெருமான் உறையும் கோயில் அழகிய திருவிடையாறு ஆகும்;


5)

ஆய்ந்த மலரைந்தை அம்பா உடையானைக்

காய்ந்த நுதல்நாட்டம் காட்டும் இறைகங்கை

பாய்ந்த சடையண்ணல் பலிதேர்ந் துழல்கின்ற

ஏந்தல் உறைகோயில் எழில்கொள் இடையாறே.


ஆய்ந்த மலர் ஐந்தை அம்பா உடையானைக் காய்ந்த நுதல்-நாட்டம் காட்டும் இறை - சிறந்த பூக்கள் ஐந்தை அம்பாக உடைய மன்மதனைச் சுட்டெரித்த நெற்றிக்கண் காட்டும் இறைவன்; (அம்பா - அம்பாக; கடைக்குறை விகாரம்); (நுதல் - நெற்றி); (நாட்டம் - கண்);

கங்கை பாய்ந்த சடை அண்ணல் - கங்கையைச் சடையில் தரித்தவன்;

பலி தேர்ந்து உழல்கின்ற ஏந்தல் உறை-கோயில் எழில்கொள் இடையாறே - பிச்சையேற்றுத் திரிகின்ற தலைவனான சிவபெருமான் உறையும் கோயில் அழகிய திருவிடையாறு ஆகும்; (பலி - பிச்சை);


6)

கூற்றைக் குமைகாலன் கூனற் பிறைசூடும்

ஆற்றுச் சடையண்ணல் அங்கை மழுவாளன்

போற்றித் தொழுதார்தம் பொல்லா வினைதீர்க்கும்

ஏற்றன் உறைகோயில் எழில்கொள் இடையாறே.


கூற்றைக் குமை காலன் - நமனை அழித்த காலகாலன்; (குமைத்தல் - அழித்தல்);

கூனல்-பிறை சூடும் ஆற்றுச்-சடைண்ணல் - வளைந்த பிறையைக் கங்கை பாயும் சடையின்மேல் சூடிய தலைவன்; (கூனல் - வளைவு);

அங்கை மழுவாளன் - கையில் மழுவை ஏந்தியவன்;

போற்றித் தொழுதார்தம் பொல்லா-வினை தீர்க்கும் - போற்றி வணங்கும் அன்பர்களது தீவினைகளைத் தீர்க்கின்ற;

ஏற்றன் உறை-கோயில் எழில்கொள் இடையாறே - இடபவாகனனான சிவபெருமான் உறையும் கோயில் அழகிய திருவிடையாறு ஆகும்;


7)

நெய்தேன் தயிராடும் நிமலன் மணிபோல

மைதான் திகழ்கண்டன் மலரோன் சிரமொன்றைக்

கொய்தான் மலைவில்லாக் கொண்டு புரமூன்றை

எய்தான் உறைகோயில் எழில்கொள் இடையாறே.


நெய் தேன் தயிர் ஆடும் நிமலன் - நெய், தேன், தயிர் இவற்றால் அபிஷேகம் செய்யப்பெறும் தூயவன்;

மணி போல மைதான் திகழ் கண்டன் - ஆலகாலம் ஒரு மணி போலக் கண்டத்தில் திகழ்கின்றவன்;

மலரோன் சிரம் ஒன்றைக் கொய்தான் - பிரமனது தலைகளில் ஒன்றைக் கிள்ளியவன்;

மலை வில்லாக் கொண்டு புரமூன்றை எய்தான் உறை-கோயில் எழில்கொள் இடையாறே - மேருமலையை வில்லாகக் கொண்டு முப்புரங்களை எய்த சிவபெருமான் உறையும் கோயில் அழகிய திருவிடையாறு ஆகும்; (வில்லா - வில்லாக);


8)

தொட்டு மலைபேர்த்த துட்டன் அழவூன்று(ம்)

நட்டன் நரையேற்றன் நல்ல இசைகேட்டு

மட்டில் வரமீந்த வள்ளல் மலைமங்கை

இட்டன் உறைகோயில் எழில்கொள் இடையாறே.


தொட்டு மலைபேர்த்த துட்டன் அழன்று(ம்) நட்டன் - கைகளால் பற்றிக் கயிலைமலையைப் பெயர்த்த துஷ்டனான இராவணன் வலியால் துடித்து அழும்படி பாதவிரல் ஒன்றை ஊன்றி அவனை நசுக்கிய கூத்தன்; (நட்டன் - கூத்தன்);

நரையேற்றன் - வெண்மையான எருதை வாகனமாக உடையவன்; (நரை - வெண்மை);

நல்ல இசை கேட்டு மட்டு-இல் வரம் ஈந்த வள்ளல் - பின் அவன் பாடிய இனிய கீதத்தைக் கேட்டு அவனுக்கு அளவற்ற வரம் தந்த வள்ளல்; (மட்டு இல் - அளவு இல்லாத);

மலைமங்கை இட்டன் உறை-கோயில் எழில்கொள் இடையாறே - மலைமகளுக்கு நேயனான சிவபெருமான் உறையும் கோயில் அழகிய திருவிடையாறு ஆகும்; (இட்டன் - இஷ்டன்);


9)

பிரமன் அரிநேடிப் பிறகு துதிசெய்ய

வரையில் எரியென்ற வடிவில் வருநாதன்

பரவை விடமுண்ணி பல்லில் தலையேந்தும்

இரவன் உறைகோயில் எழில்கொள் இடையாறே.


பிரமன் அரி நேடிப் பிறகு துதிசெய்ய வரை-இல் எரி என்ற வடிவில் வரும் நாதன் - பிரமனும் திருமாலும் தேடிப் பின்னர்ப் போற்றி வணங்கும்படி எல்லையில்லாத ஜோதி என்ற உருவில் வந்த தலைவன்; (நேடுதல் - தேடுதல்); (வரை - எல்லை); (எரி - தீ);

பரவை-விடம் உண்ணி - கடல்விடத்தை உண்டவன்; (பரவை - கடல்);

பல் இல் தலை ஏந்தும் இரவன் உறை-கோயில் எழில்கொள் இடையாறே - பற்கள் உதிர்ந்த மண்டையோட்டைக் கையில் ஏந்தி யாசிக்கின்ற சிவபெருமான் உறையும் கோயில் அழகிய திருவிடையாறு ஆகும்; (இரவன் - பிச்சை இரப்பவன்); (அப்பர் தேவாரம் - 4.41.3 - "பல்லில்வெண்தலை கையேந்திப் பல்லிலம் திரியும் செல்வர்"); (சம்பந்தர் தேவாரம் - 1.51.4 - "பல்லிலோடு கையிலேந்தி"); (அப்பர் தேவாரம் - 5.34.2 - "இரவனை இடுவெண்தலை ஏந்தியை");


10)

ஏசு மொழிபேசும் எத்தர் தமைநீங்கும்

வாச மலர்தூவி வாழ்த்தும் அடியார்க்கு

நேசன் சுடுநீற்றன் நித்தன் நடமாடும்

ஈசன் உறைகோயில் எழில்கொள் இடையாறே.


ஏசு-மொழி பேசும் எத்தர்தமை நீங்கும் - பழித்துப் பேசும் வஞ்சகர்களை நீங்குங்கள்; (எத்தர் - ஏமாற்றுபவர்);

வாசமலர் தூவி வாழ்த்தும் அடியார்க்கு நேசன் - மணம் கமழும் மலர்களைத் தூவி வணங்கும் பக்தர்களுக்கு அன்பு உடையவன்;

சுடுநீற்றன், நித்தன் - வெந்த வெண்ணீற்றைப் பூசியவன், அழிவற்றவன்;

நடம் ஆடும் ஈசன் உறை-கோயில் எழில்கொள் இடையாறே - கூத்தாடும் ஈசனான சிவபெருமான் உறையும் கோயில் அழகிய திருவிடையாறு ஆகும்;


11)

கல்லால் தொழுதாலும் கடியார் மலராக்கொள்

நல்லான் தமிழ்பாடி நம்பி அடைவார்கட்கு

எல்லாம் அருள்கின்ற எந்தை கரவென்றும்

இல்லான் உறைகோயில் எழில்கொள் இடையாறே.


கல்லால் தொழுதாலும் கடி ஆர் மலராக்கொள் நல்லான் - கல்லை எறிந்து வழிபட்டாலும் வாசமலராக ஏற்று அருளும் நல்லவன்; (* சாக்கியநாயனார் வரலாற்றைக் காண்க);

தமிழ் பாடி நம்பி அடைவார்கட்கெல்லாம் அருள்கின்ற எந்தை - தேவாரம் திருவாசகம் முதலிய பாமாலைகளைப் பாடி விரும்பி அன்போடு சரணடைந்தவர்களுக்கெல்லாம் அருள்செய்யும் எம் தந்தை; (நம்பி அடைவார்கட் கெல்லாம் அருள்கின்ற = 1. அடி அடைந்தவர்கள் எத்தகையவரே ஆயினும் அருள்கின்ற; 2. அடி அடைந்தவர்களுக்கு அவர்கள் விரும்பிய எல்லா வரங்களையும் அருள்கின்ற);

கரவு என்றும் இல்லான் உறை-கோயில் எழில்கொள் இடையாறே - வஞ்சமின்றி வழங்குகின்ற சிவபெருமான் உறையும் கோயில் அழகிய திருவிடையாறு ஆகும்; (கரவு - ஒளித்தல்; வஞ்சம்);


வி. சுப்பிரமணியன்

----------- --------------


Tuesday, September 16, 2025

P.461 - பொது - ஆதிரை நாயகன்

2018-12-20

P.461 - பொது - "பாவைப் பதிகம்"

-------------------------

(12 பாடல்கள்)

(எட்டடித் தரவு கொச்சகக் கலிப்பா - வெண்டளை பயின்று வரும்)

(திருவாசகம் - திருவெம்பாவை - 8.7.1 – "ஆதியும் அந்தமும் இல்லா")


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;


1)

ஆதிரை நாயகன் அண்ணா மலையண்ணல்

மாதிரையார் கங்கையை வார்சடையில் தாங்கியவன்

நாதியவன் சீர்பாடி நாம்வந்தோ(ம்) நங்காய்உன்

காதில் விழுந்திலவோ? காதல் மலரணைக்கோ?

வேதியனை வித்தகனை வெற்பரையன் பாவையொரு

பாதியனைப் பத்தர் பழவினையைத் தீர்த்தருளு(ம்)

நீதியனை எம்மோடு நீயும் உடனாகி

ஓதி வழிபட் டுருகேலோர் எம்பாவாய்.


ஆதிரை நாயகன் அண்ணாமலை அண்ணல் - திருவாதிரை என்ற நட்சத்திரத்திற்கு நாயகன், திருவண்ணாமலை இறைவன்; (அப்பர் தேவாரம் - 5.100.1 - "ஆதி நாயகன் ஆதிரை நாயகன்");

மா-திரை ஆர் கங்கையை வார்-சடையில் தாங்கியவன் - பெரிய அலை மிக்க கங்கையை நீள்சடையில் தாங்கியவன்; (வார்தல் - நீள்தல்);

நாதிஅவன் சீர் பாடி நாம் வந்தோம் - நம்மைக் காக்கும் அப்பெருமான் புகழைப் பாடி நாங்கள் வந்தோம்; (நாதி - உறவினன்; காப்பாற்றுவோன்);

நங்காய் உன் காதில் விழுந்திலவோ? - பெண்ணே, நாங்கள் பாடுகின்ற அப்பாடல்கள் உன் காதில் விழவில்லையோ? (நங்காய் - நங்கையே என்ற விளி);

காதல் மலரணைக்கோ? - உன் அன்பு மலர்மெத்தைக்குத்தானா? (அணை - மெத்தை; படுக்கை); (திருவெம்பாவை - 8.7.2 - "இப்போதார் அமளிக்கே நேசமும் வைத்தனையோ");

வேதியனை வித்தகனை - வேதப்பொருள் ஆனவனை, எல்லாம் அறிந்தவனை, சர்வ-வல்லமை உடையவனை;

வெற்பு-அரையன் பாவை ஒரு பாதியனைப் - மலைக்கு அரசனான இமவானுக்கு மகளைத் திருமேனியில் ஒரு பாதியாக உடையவனை;

பத்தர் பழவினையைத் தீர்த்தருளும் நீதியனை - பக்தர்களது பழைய வினைகளைத் தீர்த்து அருளும் அறவடிவினனை; (சம்பந்தர் தேவாரம் - 2.33.7 - "நீதியர் நெடுந்தகையர் நீண்மலையர் பாவை பாதியர்");

எம்மோடு நீயும் உடனாகி ஓதி வழிபட்டு உருகு - எங்களோடு நீயும் கூடிப் பாடி வழிபட்டு உருகுவாயாக;

ஏல் ஓர் எம் பாவாய் - பாவைப் பாடல்களில் இச்சொற்றொடர் வருதல் மரபு; அப்படிப் பாடலை நிரப்பி நிற்பதன்றி வேறு பொருள்படாமையால், அசைநிலை போலவே கொள்ளப்படும்.


2)

மின்னல் கொடியன்ன மெல்லிடை மங்கையே

இன்னும் துயில்தானோ? இங்கேபார் எத்தனைபேர்

உன்னில்லின் முன்னே உனக்காகக் காத்துள்ளோம்

பொன்னனைய மேனிமிசைப் பூதியணி மேன்மையினான்

சென்னிமிசைப் பாம்பையும் திங்களையும் சேர்த்துவைத்த

மன்னனவன் வானோரு(ம்) மண்ணோரும் கூவிளம்

வன்னிகொடு போற்றிசெயு(ம்) மாதேவன் சீர்வாயால்

பன்னி அவன்தாள் பணியேலோர் எம்பாவாய்.


மின்னல் கொடியன்ன மெல்லிடை மங்கையே - மின்னல் போன்றதும் கொடி போன்றதுமான மெல்லிடையை உடைய பெண்ணே; (மின்னல் கொடி - உம்மைத்தொகை - மின்னலும் கொடியும்);

இன்னும் துயில்தானோ? - இன்னுமா உறங்குகின்றாய்?

இங்கே பார், எத்தனை பேர் உன் இல்லின்முன்னே உனக்காகக் காத்துள்ளோம் - இங்கே பார், உன் வீட்டின்முன் எத்தனை பேர் உனக்காகக் காத்துக்கொண்டு நிற்கின்றோம்.

பொன் அனைய மேனிமிசைப் பூதி அணி மேன்மையினான் - பொன் போன்ற திருமேனியின்மேல் திருநீற்றைப் பூசிய மேன்மை உடையவன்; (அப்பர் தேவாரம் - 6.51.12 - "பூதியணி பொன்னிறத்தர் பூண நூலர்");

சென்னிமிசைப் பாம்பையும் திங்களையும் சேர்த்துவைத்த மன்னன்அவன் - திருமுடிமேல் நாகத்தையும் சந்திரனையும் ஒன்றாகச் சேர்த்துவைத்த தலைவன்; (அவன் - பகுதிப்பொருள்விகுதி);

வானோரும் மண்ணோரும் கூவிளம் வன்னி கொடு போற்றிசெயும் மாதேவன் - தேவர்களும் மனிதர்களும் வில்வம் வன்னி இவற்றால் வழிபாடு செய்யும் மகாதேவன்;

சீர் வாயால் பன்னி அவன் தாள் பணி - அப்பெருமானது புகழை வாயால் பாடி அவன் திருவடியைப் பணிவாயாக; (பன்னுதல் - பாடுதல்; புகழ்தல்); (சம்பந்தர் தேவாரம் - 2.106.1 - "வலஞ்சுழி வாணனை வாயாரப் பன்னி ஆதரித்து ஏத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே");

ஏலோர் எம்பாவாய் - அசைநிலை;


3)

நாடே அறியு(ம்) நரைவிடையான் நற்கழலை

நாடோறும் ஏத்திடுவேன் நானென்றாய்; நம்பிவந்தோம்

தோடாரும் காதுடையோம்; சொல்லாய்நீ எங்குள்ளாய்?

காடே இடமாக் கருதிநடம் ஆடுமிறை

ஓடே கலனாக உண்பலி தேர்ந்துழல்வான்

வீடே தரவல்ல வீறுடையான் வெங்கணையால்

கூடார் புரமெய்த குன்றவில்லி தாள்மலரை

வாடாத மாலைகளால் வாழ்த்தேலோர் எம்பாவாய்.


நாடே அறியும் நரைவிடையான் நற்கழலை நாள்தோறும் ஏத்திடுவேன் நான் என்றாய் - உலகமே அறிந்த வெள்விடை-வாகனனான சிவபெருமானது நல்ல திருவடியைத் தினந்தோறும் புகழ்ந்து வழிபடுவேன் நான் என்று (முன்பு / நேற்று) எல்லாரும் அறியும்படி சொன்னாய்; ("நாடே அறியும்" என்ற சொற்றொடரை இப்படி இருவிதமாகவும் பொருத்திப் பொருள்கொள்ளல் ஆம்);

நம்பி வந்தோம் தோடு ஆரும் காது உடையோம் - அந்தப் பேச்சை நம்பி நாங்கள் வந்தோம்; காதில் தோடு அணிந்தவர்கள் நாங்கள்; (நம்பிவந்தோம் = உன் பேச்சை இதுவரை நம்பிக்கொண்டிருந்தோம்" என்றும் பொருள்கொள்ளல் ஆம்); (தோடு ஆரும் காது உடையோம் = நாங்கள் ஏற்கெனவே காதுகுத்தித் தோடு அணிந்திருக்கின்றோம். "இப்போது நீ புதிதாகக் காதுகுத்தப் பார்க்கின்றாயோ?" என்றும் தொனிக்கப் பொருள்கொள்ளல் ஆம்; காதுகுத்துதல் = வஞ்சித்தல்);

சொல்லாய் நீ எங்கு உள்ளாய்? - நீ எங்கே இருக்கின்றாய், சொல்லு!

காடே இடமாக் கருதி நடம் ஆடும் இறை - சுடுகாடே திருநடம் செய்யும் இடமாக விரும்பிக் கூத்தாடும் இறைவன்; (இடமா - இடமாக); (சம்பந்தர் தேவாரம் - 1.48.5 - "பேயடைந்த காடிடமாப் பேணுவ தன்றியும்போய்");

ஓடே கலனாக உண்பலி தேர்ந்து உழல்வான் - மண்டையோட்டையே உண்கலனாக ஏந்திப் பிச்சைக்குத் திரிபவன்;

வீடே தரவல்ல வீறு உடையான் - முக்தியே கொடுக்கவல்ல பெருமை உடையவன்;

வெங்கணையால் கூடார் புரம் எய்த குன்றவில்லி - மேருமலையை வில்லாக ஏந்திச் சுடுகணை ஒன்றால் பகைவர்களது முப்புரங்களை எய்தவன்; (கூடார் - பகைவர்);

தாள்மலரை வாடாத மாலைகளால் வாழ்த்து - அப்பெருமானது திருவடித்தாமரையை வாடாத பாமாலைகளால் வாழ்த்துவாயாக;

ஏலோர் எம்பாவாய் - அசைநிலை;


4)

எண்திசையும் நின்ற இருள்நீங்கும் வேளையிது;

விண்தனிலே தாரகைகள் மின்மங்கி நீங்கினகாண்;

கண்டுநாம் சொன்னோம்; கருங்குழலாய் தாழ்நீக்காய்;

பண்டு பலதேவர் பாதம் தொழநஞ்சை

உண்டமணி கண்டன், உலகங்கட் கோர்தலைவன்,

கெண்டையங் கண்ணியுமை கேள்வனறுஞ் சாந்தமென

வெண்திரு நீறணிந்த வேந்தன் வியன்புகழைப்

பண்திகழப் பாடிப் பரவேலோர் எம்பாவாய்.


எண்திசையும் நின்ற இருள் நீங்கும் வேளையிது - எட்டுத் திக்கிலும் இருந்த இருள் நீங்கும் வேளை இது;

விண்தனிலே தாரகைகள் மின் மங்கி நீங்கின காண் - ஆகாயத்தில் நட்சத்திரங்கள் ஒளி குன்றி மறைந்தன; (மின் - ஒளி); (காண் - முன்னிலை அசைச்சொல்);

கண்டு நாம் சொன்னோம் - அதனைப் பார்த்து நாங்கள் உனக்குச் சொன்னோம்;

கருங்குழலாய் தாழ் நீக்காய் - கரிய கூந்தலை உடையவளே; உன் கதவின் தாழை நீக்கி வெளியே வா;

பண்டு பல தேவர் பாதம் தொழ நஞ்சை உண்ட மணிகண்டன் - முன்பு பல தேவர்கள் திருவடியை வணங்க, அவர்களுக்கு இரங்கி ஆலகாலத்தை உண்ட நீலகண்டன்;

உலகங்கட்கு ஓர் தலைவன் - எல்லா உலகங்களுக்கும் ஒப்பற்ற தலைவன்;

கெண்டை அம் கண்ணி உமை கேள்வன் - கெண்டைமீன் போல் அழகிய கண்களையுடைய உமைக்குக் கணவன்; (சுந்தரர் தேவாரம் - 7.61.4 - "கெண்டையந் தடங்கண் உமைநங்கை கெழுமி ஏத்தி வழிபடப் பெற்ற");

நறும்-சாந்தம் என வெண்-திருநீறு அணிந்த வேந்தன் - மணம் மிக்க சந்தனம் போல வெண்ணிறத் திருநீற்றை அணிந்த அரசன்;

வியன்-புகழைப் பண் திகழப் பாடிப் பரவு - அப்பெருமானது பெரும்புகழை இசையோடு பாடி வழிபடுவாயாக; (சுந்தரர் தேவாரம் - 7.56.7 - "வீடிலாத வியன்புகழானைக்");

ஏலோர் எம்பாவாய் - அசைநிலை;


5)

புள்ளினங்கள் ஆர்த்தன பூம்பொழிலில் வண்டறையக்,

கள்ளுகுபூ வாசமது காற்றில் கமழ்ந்துவர,

வெள்ளெனக்கீழ் வானம் விளங்கியதே; இன்னுந்தான்

உள்ளே உறக்கமோ? ஒற்றை விடையேறும்

வள்ளல், மழுவாளன், மங்கையொரு பங்குடையான்,

தெள்ளுபுனற் கங்கைதனைச் செஞ்சடையில் தேக்கியவன்,

கள்ளமிலா அன்பர்க்குக் காவலவன் சீர்தன்னை

உள்ளத்தில் எண்ணி உருகேலோர் எம்பாவாய்.


புள்ளினங்கள் ஆர்த்தன பூம்பொழிலில் - பூஞ்சோலைகளில் பறவைகள் ஒலித்தன;

பூம்பொழிலில் வண்டு அறையக் கள் உகு பூ வாசம்அது காற்றில் கமழ்ந்துவர - பூஞ்சோலைகளில் வண்டுகள் ரீங்காரம் செய்ய, மதுவைச் சொரியும் பூக்களின் வாசனை காற்றில் கமழ்ந்துவர; (பூம்பொழிலில் - என்ற சொற்றொடரை இடைநிலைத் தீவகமாக இருபக்கமும் இயைத்துப் பொருள்கொள்ளல் ஆம்); (சம்பந்தர் தேவாரம் - 2.33.1 - "கோடுமலி ஞாழல் குரவேறு சுரபுன்னை நாடுமலி வாசமது வீசிய நள்ளாறே.");

வெள்ளெனக் கீழ்வானம் விளங்கியதே - கீழ்வானம் வெளுத்துவிட்டது;

இன்னுந்தான் உள்ளே உறக்கமோ? - இன்னுமா உள்ளே உறங்குகின்றாய்?

ஒற்றை-விடை ஏறும் வள்ளல் மழுவாளன் - ஒப்பற்ற இடபத்தை வாகனமாக உடைய வள்ளல், மழு ஏந்தியவன்;

மங்கை ஒரு பங்கு உடையான் - உமையை ஒரு பாகமாக உடையவன்;

தெள்ளு-புனல் கங்கைதனைச் செஞ்சடையில் தேக்கியவன் - தெளிந்த நீரை உடைய கங்கையைச் சிவந்த சடையில் அடைத்தவன்;

கள்ளம் இலா அன்பர்க்குக் காவலவன் - தூய மனம் உடைய தொண்டர்களுக்குக் காவலாக இருப்பவன்; (காவல் - பாதுகாப்பு; காவலவன் - காப்பவன்; அரசன்); (சம்பந்தர் தேவாரம் - 2.56.11 - "கழுமலத்தார் காவலவன்");

சீர்தன்னை உள்ளத்தில் எண்ணி உருகு - அப்பெருமானது புகழை உள்ளத்தில் எண்ணி உருகுவாயாக;

ஏலோர் எம்பாவாய் - அசைநிலை;


6)

அல்லும் அகன்ற தடிவானில் செஞ்சுடர்

மெல்ல எழுந்தது; வெண்முத்துப் போலொளிரும்

பல்லினளே, பஞ்சணைக்கே பற்றுமிக வைத்தாயோ?

சொல்லு; தெருவினிலுன் தோழிகள்நாம் காத்துள்ளோம்;

வெல்லரு மன்மதனை வெண்பொடிசெய் கண்ணுதலான்,

கல்லொருவில் ஆக்கிக் கடியரண்மூன் றெய்தபிரான்,

தொல்லைவினை யெல்லாம் தொலைந்தொழிய ஈசனவன்

நல்லதிரு நாம(ம்) நவிற்றேலோர் எம்பாவாய்.


அல்லும் அகன்றது - இருள் நீங்கியது; (அல் - இருள்);

அடிவானில் செஞ்சுடர் மெல்ல எழுந்தது - கீழ்வானத்தில் செஞ்சூரியன் மெல்ல உதித்தது;

("அல்லும் அகன்ற தடிவானில்" என்ற சொற்றொடரில் "அடி" என்ற சொல்லை இடைநிலைத்தீவகமாகக் கொண்டு இருபுறமும் இயைத்துப் பொருள்கொள்ளல் ஆம்; = 1. "அல்லும் அகன்றதடி; வானில்.." 2. "அல்லும் அகன்றது; அடிவானில்.."; (அடி - ஒரு மகடூஉமுன்னிலைச் சொல்; - ஒரு பெண்ணை விளிக்கும் சொல்);

வெண்முத்துப் போல் ஒளிரும் பல்லினளே, - வெண்முத்துப்போல் ஒளிவீசும் பற்கள் உடையவளே;

பஞ்சணைக்கே பற்று மிக வைத்தாயோ? சொல்லு; - பஞ்சுமெத்தைக்கே மிகவும் அன்பு கொண்டாயோ? சொல்வாயாக;

தெருவினில் உன் தோழிகள் நாம் காத்துள்ளோம் - வீதியில் உன் தோழிகளாகிய நாங்கள் உனக்காகக் காத்திருக்கின்றோம்;

வெல்லரு மன்மதனை வெண்பொடிசெய் கண்ணுதலான் - வெல்வதற்கு அரிய மன்மதனைச் சாம்பலாக்கிய நெற்றிக்கண்ணன்; (வெல்லருமன்மதனை - வெல்ல அரு-மன்மதனை; தொகுத்தல் விகாரம்);

கல் ஒரு வில் ஆக்கிக் கடி-அரண் மூன்று எய்த பிரான் - மேருமலையை ஒரு வில்லாக ஏந்திக் காவல் மிக்க முப்புரங்களை எய்த தலைவன்; (கடி - காவல்);

தொல்லைவினை ல்லாம் தொலைந்தொழிய – பழவினை எல்லாம் அடியோடு அழியும்படி; (தொல்லை - பழமை; துன்பம்);

ஈசன்அவன் நல்ல திருநாமம் நவிற்று - ஈசனது நல்ல திருப்பெயரைச் சொல்வாயாக; (நவிற்றுதல் - சொல்லுதல்);

ஏலோர் எம்பாவாய் - அசைநிலை;


7)

காமரம் பாடிக் கருவண்டு சூழ்கின்ற

தாமரை பூத்த தடம்பொய்கைத் தண்ணீரில்

நா(ம்)மகிழ ஆடி நமது மல(ம்)நீங்க

மாமறைகள் நாலும் வழுத்திடு(ம்) மெய்ப்பொருள்

கோமள வல்லியைக் கூர்வேல்போற் கண்ணியை

வாம(ம்) மகிழ்ந்தபிரான் மாணிக்காக் கூற்றுதைத்தான்

நாமம் பலவுடைய நம்பெருமான் பாதத்தில்

பாமலர்கள் இட்டுப் பரவேலோர் எம்பாவாய்.


காமரம் பாடிக் கருவண்டு சூழ்கின்ற தாமரை பூத்த தடம்பொய்கைத் தண்ணீரில் - சீகாமரம் முதலிய பண்கள் பொருந்தும் இனிய இசையை எழுப்பிக் கரிய வண்டுகள் சூழ்கின்ற தாமரைப்பூக்கள் பூத்த பெரிய பொய்கையின் குளிர்ந்த நீரில்; (காமரம் - இசை; சீகாமரம் என்ற பண்);

நாம் மகிழ ஆடி நமது மலம் நீங்க – நாம் மகிழுமாறும் நம் மாசுகள் நீங்குமாறும் குளித்து; (ஆடுதல் - குளித்தல்);

மாமறைகள் நாலும் வழுத்திடும் மெய்ப்பொருள் - நால்வேதங்களும் போற்றும் மெய்ப்பொருள் ஆனவன்;

கோமள-வல்லியைக் கூர்வேல் போல் கண்ணியை வாமம் மகிழ்ந்த பிரான் - அழகிய இளமென்கொடி போன்றவளைக், கூரிய வேல் போன்ற கண்களையுடைய உமையை, இடப்பக்கம் பாகமாக மகிழ்ந்த பெருமான்; (கோமளம் - மென்மை; இளமை; அழகு); (வல்லி - கொடி);

மாணிக்காக் கூற்று உதைத்தான் - மார்க்கண்டேயருக்காக நமனை உதைத்தவன்;

நாமம் பல உடைய நம்பெருமான் - பல பெயர்களை உடைய நம் பெருமான்;

பாதத்தில் பாமலர்கள் இட்டுப் பரவு - அவன் திருவடியில் பாடல்களாகிய மலர்களைத் தூவிப் போற்றுவோமாக;

ஏலோர் எம்பாவாய் - அசைநிலை;


8)

பத்துமுடி வாளரக்கன் பண்டு மலைவீச

எத்தனிக்கத் தாளை இறையூன்றித் தோள்நெரித்துக்

கத்தியழ வைத்தவனே கைதொழு தொன்றிரந்தோம்

புத்தம் புதியமலர் போற்பொலியும் நின்னடிக்குப்

பத்தியுடை யாரேஎம் கைத்தலம் பற்றிடுக

நித்தலும் எம்கைகள் நின்பணியே செய்திடுக

கைத்த விடந்தன்னைக் கண்டத்தில் இட்டவனே

இத்தனையே வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்.


பத்துமுடி வாளரக்கன் பண்டு மலைவீச எத்தனிக்கத் - பத்துத்தலைகளையுடைய கொடிய அரக்கனான இராவணன் முன்னர்க் கயிலைமலையைப் பெயர்த்து எறிய முயன்றபோது; (வாள் - கொடுமை); (எத்தனித்தல் - முயல்தல்);

தாளை இறைன்றித் தோள் நெரித்துக் கத்திழவைத்தவனே - திருப்பாதத்தைச் சிறிதளவு ஊன்றி அவனது புஜங்களை நசுக்கி, அவனை ஓலமிட்டு அழச்செய்தவனே;

கைதொழுது ஒன்று இரந்தோம் - உன்னைக் கைகூப்பி வணங்கி ஒரு வரம் யாசித்தோம்;

புத்தம்புதிய மலர்போல் பொலியும் நின் அடிக்குப் பத்தி உடையாரே எம் கைத்தலம் பற்றிடுக – மிகப் புதிய மலர் போன்ற அழகிய உன் திருவடிக்குப் பக்தி உடைய அன்பர்களே எம் கணவர்கள் ஆகுக;

நித்தலும் எம் கைகள் நின் பணியே செய்திடுக – நாள்தோறும் எங்கள் கைகள் உன் திருத்தொண்டே செய்யட்டும்;

கைத்த விடந்தன்னைக் கண்டத்தில் இட்டவனே - கசந்த ஆலகாலத்தை உண்டு கண்டத்தில் வைத்தவனே; (கைத்தல் - கசத்தல்);

இத்தனையே வேண்டும் எமக்கு - இந்த வரமே எங்களுக்கு வேண்டும்;

ஏலோர் எம்பாவாய் - அசைநிலை;


9)

பன்றியுருக் கொண்டகழ்ந்தும் புள்ளாய்ப் பறந்துயர்ந்தும்

சென்றஅரி வேதனிவர் தேடவருந் தீயாகி

நின்றவனே கண்திகழும் நெற்றியனே தில்லைதனுள்

மன்றுதனில் கூத்தாடும் மன்னவனே காலனையும்

வென்றவனே வேதத்தின் மெய்ப்பொருளே கங்கைநதி

கொன்றைமலர் கூவிளம் கொக்கிறகு பாம்புமதி

துன்றிய செஞ்சடையாய் தொல்வினையைத் தீர்ப்பவனே

என்றுபுகழ் பாடிமகிழ்ந் தாடேலோர் எம்பாவாய்.


பன்றி-உருக் கொண்டு அகழ்ந்தும், புள்ளாய்ப் பறந்து உயர்ந்தும், சென்ற – பன்றி வடிவில் அகழ்ந்தும் அன்னப்பறவை வடியில் உயரப் பறந்தும் சென்ற;

அரி வேதன் இவர் தேட அருந்-தீயாகி நின்றவனே - திருமால் பிரமன் இவர்கள் தேடிக்காண அரிய ஜோதியாகி அங்கே வந்து ஓங்கியவனே; (சென்றவரி - சென்ற அரி); (தேடவருந் தீயாகி = 1. தேட அருந்-தீ ஆகி; 2. தேட வரும் தீ ஆகி);

கண் திகழும் நெற்றியனே - நெற்றிக்கண்ணனே;

தில்லைதனுள் மன்றுதனில் கூத்தாடும் மன்னவனே - தில்லை அம்பலத்தில் திருநடம் செய்யும் அரசனே;

காலனையும் வென்றவனே - இயமனை உதைத்தவனே; (காரைக்கால் அம்மையார் அருளிய அற்புதத் திருவந்தாதி - 11.4.80 - "காலனையும் வென்றுதைத்த கால்");

வேதத்தின் மெய்ப்பொருளே - வேதங்கள் போற்றும் மெய்ப்பொருளே;

கங்கைநதி கொன்றைமலர் கூவிளம் கொக்கிறகு பாம்பு மதி துன்றிய செஞ்சடையாய் - கங்கை, கொன்றைப்பூ, வில்வம், கொக்கின் இறகு, பாம்பு, சந்திரன் இவையெல்லாம் நெருங்கி இருக்கும் சிவந்த சடையினனே; (கொக்கிறகு - 1.கொக்கிறகு என்ற பூ; 2.கொக்குவடிவம் உடைய குரண்டாசுரனை அழித்த அடையாளம்); (அப்பர் தேவாரம் - 5.55.4 - "கொக்கின் தூவலும் கூவிளங் கண்ணியும் மிக்க வெண்டலை மாலை விரிசடை");

தொல்வினையைத் தீர்ப்பவனே - பழவினையைத் தீர்ப்பவனே;

என்று புகழ் பாடி மகிழ்ந்து ஆடு - என்றெல்லாம் ஈசன் புகழைப் பாடி இப்பொய்கையில் மகிழ்ந்து நீராடுவோமாக;

ஏலோர் எம்பாவாய் - அசைநிலை;


10)

கைதவமே நற்றவமாக் கைக்கொண்டு நாள்தோறும்

பொய்களையே சொல்லியுழல் புல்லர்கட் கெட்டாத

செய்யவனே தில்லைநகர்ச் சிற்றம் பலத்தாடல்

செய்பவனே மாலையெனச் செத்தார்தம் என்பணிந்தாய்

நெய்திகழும் சூலத்தாய் நீள்மதியத் துண்டத்தாய்

மைதிகழும் கண்டத்தாய் மார்பினில்வெண் ணூலினனே

பைதிகழும் பாம்பார்த்தாய் பாசுபதா என்றேத்திக்

கைதொழுது வாழ்வோம் களித்தேலோர் எம்பாவாய்.


"கைதவமே நற்றவமாக் கைக்கொண்டு நாள்தோறும் பொய்களையே சொல்லி உழல் புல்லர்கட்கு எட்டாத செய்யவனே - "வஞ்சனையையே சிறந்த தவம் போல மேற்கொண்டு தினமும் பொய்களையே சொல்லித் திரிகின்ற கீழோர்களால் அடையப்படாதவனே, செம்மேனியனே; நடுநிலைமையை உடையவனே; (செய்யவன் - செய்யன் - 1. செந்நிறம் உடையவன்; 2. நடுநிலை தவறாதவன்); (சம்பந்தர் தேவாரம் - 3.51.1 - "செய்யனே திருஆலவாய் மேவிய ஐயனே"); (அப்பர் தேவாரம் - 4.11.6 - "சலமிலன் சங்கரன்");

தில்லைநகர்ச் சிற்றம்பலத்து ஆடல் செய்பவனே - தில்லைச் சிற்றம்பலத்தில் திருநடம் புரிபவனே;

மாலையெனச் செத்தார்தம் என்பு அணிந்தாய் - இறந்த பிரமவிஷ்ணுக்களின் எலும்பை மாலையாக அணிந்தவனே; (கங்காளன்);

நெய் திகழும் சூலத்தாய் - நெய் பூசப்பெற்ற திரிசூலத்தை ஏந்தியவனே; (ஆயுதங்களுக்கு எண்ணெய் பூசிவைப்பது வழக்கம்); (சம்பந்தர் தேவாரம் - 3.60.4 - "நெய்யணி சூலமொடு");

நீள்மதியத் துண்டத்தாய் - நீண்ட பிறையை அணிந்தவனே; (சம்பந்தர் தேவாரம் - 1.109.4 - "நீள்மதியோடு ஆறணி சடையினன்");

மை திகழும் கண்டத்தாய் - கரிய கண்டத்தை உடையவனே;

மார்பினில் வெண்ணூலினனே - மார்பில் வெண்மையான பூணூலை அணிந்தவனே;

பை திகழும் பாம்பு ஆர்த்தாய் - படம் உடைய பாம்பை அரைநாணாகக் கட்டியவனே; (பை - பாம்பின் படம்); (ஆர்த்தல் - கட்டுதல்);

பாசுபதா" என்று ஏத்திக் - பாசுபதனே" என்றெல்லாம் புகழ் பாடி;

கைதொழுது வாழ்வோம் களித்து - கைகூப்பி வணங்கி இன்புற்று வாழ்வோமாக;

ஏலோர் எம்பாவாய் - அசைநிலை;


11)

பாரினைச் சூழ்ந்து பரந்து விளங்குகின்ற

வாரிதியின் நீருண்டு வானெழுந்து மாதேவன்

ஏரிலகு கண்டநிறம் ஏற்றவன்பூண் முப்புரிநூல்

நேரொளிர மின்னிமதில் நீறுசெய்தான் தன்னகைபோல்

பேரிடி ஆர்த்துப் பினாகம்போல் வில்காட்டி

நாரிபங்கன் நாமமுரை நாவர் மகிழஅவர்

கோரியன நல்கிக் குறைதீர்க்கும் நாதனருள்

மாரியெனப் பெய்யாய் மழையேலோர் எம்பாவாய்.


பாரினைச் சூழ்ந்து பரந்து விளங்குகின்ற வாரிதியின் நீர் உண்டு வான் எழுந்து - உலகத்தைச் சுற்றிப் பரந்து இருக்கின்ற கடலின் நீரைப் பருகி வானில் உயர்ந்து; (வாரிதி - கடல்);

மாதேவன் ஏர் இலகு கண்ட நிறம் ஏற்று - மகாதேவனது அழகிய கண்டத்தின் நிறத்தை ஏற்று; (ஏர் - அழகு); (ஏர் - அழகு); (இலகுதல் - விளங்குதல்);

அவன் பூண் முப்புரிநூல் நேர் ஒளிர மின்னி - அவன் அணிந்த பூணூல் போல ஒளிவீச மின்னி; (நேர்தல் - ஒத்தல்);

மதில் நீறுசெய்தான்-தன் நகை போல் பேரிடி ஆர்த்துப் - முப்புரங்களைச் சாம்பலாக்கிய பெருமானது சிரிப்பினைப் போல் பேரொலியுடைய இடிகள் முழக்கி; (அட்டஹாஸம் - பெருநகை); (ஆர்த்தல் - ஒலித்தல்);

பினாகம் போல் வில் காட்டி - சிவபெருமானது வில்லான பினாகம் போல் வானவில் காட்டி;

நாரிபங்கன் நாமம் உரை நாவர் மகிழ அவர் கோரியன நல்கிக் குறைதீர்க்கும் - உமைபங்கனது திருநாமத்தை நாவால் சொல்லும் பக்தர்கள் மகிழும்படி அவர்கள் விரும்பிய வரங்களையெல்லாம் அளித்துக் குறைதீர்க்கின்ற;

நாதன் அருள் மாரி எனப் பெய்யாய் மழை - அப்பெருமானது அருள்மழை போல, மழையே, நீ பெய்வாயாக;

ஏலோர் எம்பாவாய் - அசைநிலை;


12)

ஆற்றைச் சடைக்கரந்த அண்ணல் அடிபோற்றி

கீற்று மதிசூடி கேடில் அடிபோற்றி

ஏற்றுக் கொடியுடைய ஏந்தல் அடிபோற்றி

நீற்றன் உமைமங்கை நேயன் அடிபோற்றி

தோற்றம் முடிவில்லாத் தூயன் அடிபோற்றி

காற்றுநீர் தீவெளிபார் ஆனான் கழல்போற்றி

கூற்றை உதைசெய்த கூத்தன் கழல்போற்றி

போற்றிநாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய்.


ஆற்றைச் சடைக் கரந்த அண்ணல் அடி போற்றி - கங்கையைச் சடையில் ஒளித்த பெருமான் திருவடிக்கு வணக்கம்; (கரத்தல் - மறைத்தல்; ஒளித்தல்);

கீற்று மதிசூடி கேடு இல் அடி போற்றி - பிறையைச் சூடியவனது அழிவற்ற திருவடிக்கு வணக்கம்;

ஏற்றுக்-கொடி உடைய ஏந்தல் அடி போற்றி - இடபச்சின்னம் பொறித்த கொடியை உடைய தலைவனது திருவடிக்கு வணக்கம்;

நீற்றன் உமைமங்கை நேயன் அடி போற்றி - திருநீற்றைப் பூசியவனும் உமாதேவிக்கு அன்பனுமான ஈசன் திருவடிக்கு வணக்கம்;

தோற்றம் முடிவு இல்லாத் தூயன் அடி போற்றி - ஆதியும் அந்தமும் இல்லாத நின்மலனது திருவடிக்கு வணக்கம்;

காற்று நீர் தீ வெளி பார் ஆனான் கழல் போற்றி - நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் என்ற ஐம்பூதங்கள் ஆனவனது திருவடிக்கு வணக்கம்; (யாப்புக் கருதி ஐம்பூதங்களின் வரிசை மாறி வந்தது);

கூற்றை உதைசெய்த கூத்தன் கழல் போற்றி - காலனை உதைத்து அழித்தவனும் நடராஜனும் ஆன பெருமானது திருவடிக்கு வணக்கம் ;

போற்றி நாம் மார்கழிநீர் ஆடு - இவ்வாறு பன்முறை ஈசன் திருவடிகளைப் போற்றி மார்கழி நீராடல் செய்வோமாக;

ஏலோர் எம்பாவாய் - அசைநிலை;


வி. சுப்பிரமணியன்

----------- --------------