2017-08-06
V.042 - சிவாஷ்டகம் - ( தமிழ் மொழிபெயர்ப்பு )
---------------------------------
(மூவடிமேல் ஓரடி வைப்பு)
(தனானா தனானா தனானா தனானா - சந்தம்; இந்தச் சந்தத்தை வடமொழியில் புஜங்கம் என்பர்)
* முற்குறிப்பு : சிவாஷ்டகங்கள் சில உள்ளன. அவற்றுள் "ப்ரபும் ப்ராணநாதம்" என்று தொடங்கும் சிவாஷ்டகம் பலரும் கேட்டுள்ள / கேள்விப்பட்டுள்ள ஒன்று. பல துதிப்பாடல்களில் நிகழ்வதுபோல இதனிலும் சில பாடபேதங்கள் உள்ளன. இந்தச் சிவாஷ்டகம் வடமொழியில் புஜங்கம் என்ற யாப்பமைப்பில் உள்ளது.
இந்தச் சிவாஷ்டகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பாக அதே புஜங்கச் சந்தத்தில் அமைந்த அஷ்டகம் இது.
1)
பிரானெம்மு யிர்க்கோன் அகன்ஞால நாதன்
முராரிக்கு மையன் அறாவின்ப னாகி
இராவிற்கு மப்பால் உளன்பூத நாதன்
.. சிவன்சங்க ரன்சம் புதாள்போற்றி போற்றி.
பதம் பிரித்து:
பிரான்; எம் உயிர்க்-கோன்; அகன் ஞால நாதன்;
முராரிக்கும் ஐயன்; அறா இன்பன் ஆகி,
இராவிற்கும் அப்பால் உளன்; பூத-நாதன்;
.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.
பிரான் - தலைவன்;
எம் உயிர்க்-கோன் - எம் உயிர்க்குத் தலைவன்;
அகன் ஞால நாதன் - அகன்ற உலகங்களுக்குத் தலைவன்; (ஞாலம் - உலகம்);
முராரிக்கும் ஐயன் - திருமாலுக்கும் தலைவன்; (முராரி - முரன் என்ற அசுரனைக் கொன்றவன் - திருமால்);
அறா இன்பன் ஆகி - என்றும் தீராத, அழியாத பேரின்ப வடிவன் ஆகி; (அறுதல் - இல்லாமற் போதல்; தீர்தல்);
இராவிற்கும் அப்பால் உளன் - காலத்தைக் கடந்தவன்; அன்றும் இன்றும் என்றும் உள்ளவன்; (இரா - இரவு - மஹா சம்ஹார காலம்); (அற்புதத் திருவந்தாதி - 11.4.25 - பொங்கிரவில் ஈமவனத் தாடுவதும்");
பூத-நாதன் - பூதகணங்களுத் தலைவன்;
சிவன் சங்கரன் சம்பு - ஈசன் திருநாமங்கள்;
தாள் போற்றி போற்றி - திருவடிகளுக்குப் பன்முறை வணக்கம்;
2)
சிரங்கள்பு னைந்தான் அராவார்ந்த ஆகன்
இருங்கூற்று தைத்தான் விசும்போர்ப்பு ரந்தான்
பெருங்கங்கை மோதும் படர்செஞ்ச டைக்கோன்
.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.
பதம் பிரித்து:
சிரங்கள் புனைந்தான்; அரா ஆர்ந்த ஆகன்;
இருங்கூற்று உதைத்தான்; விசும்போர்ப் புரந்தான்;
பெருங்கங்கை மோதும் படர்-செஞ்சடைக்-கோன்;
.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.
சிரங்கள் புனைந்தான் - தலைமாலை அணிந்தவன்; (சிரம் - தலை; கபாலம்); (சம்பந்தர் தேவாரம் - 1.44.2 - "கனல்சுடரால் இவர் கண்கள் தலையணி சென்னியர்");
அரா ஆர்ந்த ஆகன் - பாம்புகளை உடம்பில் அணிந்தவன்; (அரா - பாம்பு); (ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்; அணிதல்); (ஆகம் - உடம்பு);
இரும்-கூற்று உதைத்தான் - பெரிய கரிய நமனை உதைத்தவன்; (இருமை - பெருமை; கருமை); (அப்பர் தேவாரம் - 6.85.6 - "பெருங்கூற்றைச் சேவடியினால் செற்றவன்காண்"); (அப்பர் தேவாரம் - 4.109.1 - "இருங்கூற்றகல"); (குலோத்துங்க சோழனுலா - "பேழ்வா யிருங்கூற்றுக் கேற்ப வழக்குரைக்குஞ் செங்கோல் வளவன்");
விசும்போர்ப் புரந்தான் - தேவர்களைக் காப்பவன்; (விசும்பு - வானுலகு; விசும்போர் - தேவர்கள்): (புரத்தல் - காத்தல்; பாலனம் செய்தல்; அருள்செய்தல்); (புரந்தான் என்ற இறந்தகாலப் பிரயோகம் - சில பாடல்களில் அது போல இறந்தகாலப் பிரயோகம் வருவதுண்டு. உதாரணம்: அப்பர் தேவாரம் - 6.68.7 - "தொண்டர் வல்வினைவே ரறும்வண்ணம் மருந்துமாகித் தீர்த்தானை"); (இலக்கணக் குறிப்பு - "விசும்போர்ப் புரந்தான்" - உயர்திணையில் இரண்டாம்-வேற்றுமைத்தொகையில் பொருளின் தெளிவு கருதி வல்லொற்று மிகும்);
பெரும்-கங்கை மோதும் படர்-செஞ்சடைக்-கோன் - பெரிய கங்கைநதியின் அலைகள் மோதுகின்ற, படர்ந்த செஞ்சடையை உடைய தலைவன்;
சிவன் சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி - சிவபெருமான் திருவடிகளுக்குப் பன்முறை வணக்கம்;
3)
மகிழ்ச்சிக்கொ ரூற்றாய் மணிக்குள்மி ளிர்ந்தான்
நிகர்ப்பில்லி அண்டன் பொடிப்பூசு மண்ணல்
தகர்ப்பான்ம யக்கம் வரம்பாதி இல்லான்
.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.
பதம் பிரித்து:
மகிழ்ச்சிக்கொர் ஊற்றாய், மணிக்குள் மிளிர்ந்தான்;
நிகர்ப்பில்லி; அண்டன்; பொடிப்-பூசும் அண்ணல்;
தகர்ப்பான் மயக்கம்; வரம்பு-ஆதி இல்லான்;
.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.
மகிழ்ச்சிக்கு ஒர் ஊற்று ஆய் - ஒப்பற்ற இன்ப ஊற்று ஆகி; (ஒர் - ஓர் என்பதன் குறுக்கல் விகாரம்; ஓர் - ஒப்பற்ற);
மணிக்குள் மிளிர்ந்தான் - அழகுக்கு அழகுசெய்து திகழ்பவன்; (மணி - நவரத்தினங்கள்; ஆபரணம்; அழகு); (மிளிர்தல் - பிரகாசித்தல்); ("மணிக்குள் மிளிர்ந்தான்" - மணியுள் மிளிர்ந்தான் என்பது சந்தம் கருதி இப்படி வந்தது); (சம்பந்தர் தேவாரம் - 2.6.7 - "சோதியாய் நிறைந்தான் சுடர்ச்-சோதியுட் சோதியான்"); (அபிராமி அந்தாதி - 24 - "மணியே, மணியின் ஒளியே, ஒளிரும் மணி புனைந்த அணியே, அணியும் அணிக்கு அழகே");
நிகர்ப்பு-இல்லி, அண்டன் - ஒப்பற்றவன், அண்டன்; (நிகர்ப்பு - ஒப்பு); (அண்டன் - பிரபஞ்சத்தின் தலைவன்);
பொடிப் பூசும் அண்ணல் - திருநீற்றைப் பூசிய பெருமான்; (பொடிப்பூசு, பொடிபூசு - என்று இருவகைப் பிரயோகங்களையும் தேவாரத்தில் காணலாம். இவ்விடத்தில் சந்தம் கருதிப், "பொடிப்பூசு" என்ற பிரயோகம்); (சம்பந்தர் தேவாரம் - 1.135.7 - "வெண்பொடிப்பூசுவர்");
தகர்ப்பான் மயக்கம் - அறியாமையை அழிப்பவன்;
வரம்பு ஆதி இல்லான் - எல்லையும் முதலும் அற்றவன்; (வரம்பு - எல்லை);
சிவன் சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி - சிவபெருமான் திருவடிகளுக்குப் பன்முறை வணக்கம்;
4)
புரம்வேவ நக்கான் அறஞ்சொல்லு மாலன்
அரும்பாவ நாசன் வளம்பொங்கு தேசன்
பெருந்தேவ தேவன் கணம்போற்று வெற்பன்
.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.
பதம் பிரித்து:
புரம் வேவ நக்கான்; அறம் சொல்லும் ஆலன்;
அரும் பாவ நாசன்; வளம் பொங்கு தேசன்;
பெருந்தேவ தேவன்; கணம் போற்று வெற்பன்;
.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.
புரம் வேவ நக்கான் - முப்புரங்கள் எரியும்படி சிரித்தவன்;
அறம் சொல்லும் ஆலன் - மறைப்பொருளைக் கல்லால-மரத்தின்கீழ் உபதேசித்தவன்;
அரும்-பாவ-நாசன் - தீர்த்தற்கு அரிய பாவங்களை எல்லாம் அழிப்பவன்;
வளம் பொங்கு தேசன் - மேன்மை பொங்குகின்ற ஒளிவடிவினன்;
பெரும்-தேவதேவன் - மஹாதேவன், தேவர்களுக்கெல்லாம் தலைவன்;
கணம் போற்று வெற்பன் - பூதகணங்கள் எல்லாம் போற்றுகின்ற கயிலைமலையான்; (வெற்பு - மலை); (அப்பர் தேவாரம் - 4.111.2 - "விஞ்சத் தடவரை வெற்பா");
சிவன் சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி - சிவபெருமான் திருவடிகளுக்குப் பன்முறை வணக்கம்;
5)
மலைப்பாவை ஆகத் திடப்பாக மானான்
அலைப்புண்ட டைந்தார் அலம்தீர்பொ ருப்பன்
கலைப்பாவை கேள்வன் சுரர்போற்று மேலோன்
.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.
பதம் பிரித்து:
மலைப்-பாவை ஆகத்து இடப்-பாகம் ஆனான்;
அலைப்புண்டு அடைந்தார் அலம் தீர் பொருப்பன்;
கலைப்-பாவை கேள்வன், சுரர் போற்று மேலோன்;
.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.
மலைப்பாவை ஆகத்து இடப்பாகம் ஆனான் - தன் திருமேனியில் இடப்பாகமாக மலைக்கு மகளான உமையை உடையவன்; (ஆகம் - மேனி);
அலைப்புண்டு அடைந்தார் அலம் தீர் பொருப்பன் - மிக-வருந்தி வந்து தன்னைச் சரணடைந்தவர்களது துன்பத்தைத் தீர்த்து அருளும் கயிலாயன்; (அலைப்பு - வருத்தம்); (அலம் - துன்பம்); (பொருப்பு - மலை);
கலைப்பாவை கேள்வன் சுரர் போற்று மேலோன் - சரஸ்வதி கணவனான பிரமனாலும் பிற தேவர்களாலும் வணங்கப்பெறுகின்ற பரம்பொருள்; (கலைப்பாவை - கலைமகள் - சரஸ்வதி); (கேள்வன் - கணவன்); (சுரர் - தேவர்);
சிவன் சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி - சிவபெருமான் திருவடிகளுக்குப் பன்முறை வணக்கம்;
6)
கரத்திற்க பாலம் சுடர்சூல மேந்தி
வரத்தைக்கொ டுப்பான் மலர்த்தாள்வ ணங்கில்
சுரர்க்கோர்பி ரான்தான் பெரும்பெற்ற மூர்ந்தான்
.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.
பதம் பிரித்து:
கரத்தில் கபாலம், சுடர்-சூலம் ஏந்தி;
வரத்தைக் கொடுப்பான் மலர்த்-தாள் வணங்கில்;
சுரர்க்கோர் பிரான் தான்; பெரும் பெற்றம் ஊர்ந்தான்;
.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.
கரத்தில் கபாலம், சுடர் சூலம் ஏந்தி - கையில் கபாலத்தையும், (நெருப்பையும்), ஒளிவீசும் சூலத்தையும் ஏந்தியவன்; (சுடர்தல் - பிரகாசித்தல்); (சுடர் - நெருப்பு);
வரத்தைக் கொடுப்பான் மலர்த்தாள் வணங்கில் - தாமரைத்திருவடியை வணங்கினால் விரும்பிய வரங்களையெல்லாம் தருபவன்;
சுரர்க்கு ஓர் பிரான் தான் - தேவர்களுக்கெல்லாம் ஒரு தலைவன் அவன்; (தான் - அவன்; தேற்றச்சொல்லாகவோ அசைச்சொல்லாகவோ கொண்டும் பொருள்கொள்ளலாம்);
பெரும்-பெற்றம் ஊர்ந்தான் - பெரிய விடையை வாகனமாக உடையவன்; (பெற்றம் - இடபம்); (சம்பந்தர் தேவாரம் - 2.80.1 - "பெரிய விடைமேல் வருவார்"); (சம்பந்தர் தேவாரம் - 1.1.2 - "பெற்றமூர்ந்த பிரமாபுர மேவிய பெம்மானிவனன்றே");
சிவன் சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி - சிவபெருமான் திருவடிகளுக்குப் பன்முறை வணக்கம்;
7)
சுடர்ச்சோதி ஆகன் கணங்கட்கி னிப்பான்
சுடர்க்கண்ண னீற்றன் குபேரற்கு நண்பன்
மடப்பாவை கேள்வன் திகழ்கின்ற மெய்யன்
.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.
பதம் பிரித்து:
சுடர்ச்-சோதி ஆகன்; கணங்கட்கு இனிப்பான்;
சுடர்க்-கண்ணன்; நீற்றன்; குபேரற்கு நண்பன்;
மடப்-பாவை கேள்வன்; திகழ்கின்ற மெய்யன்;
.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.
சுடர்ச்-சோதி ஆகன் - சந்திரனது ஒளி போலக் குளிர்ந்த ஒளி திகழும் திருமேனியன்; (சுடர் - சந்திரன்); (சோதி - ஒளி; கிரணம்); (ஆகம் - மேனி);
கணங்கட்கு இனிப்பான் - பூதகணங்களுக்கும் அன்பர் கூட்டங்களுக்கும் இன்பம் தருபவன்; (கணம் - பூதகணம்; கூட்டம்); (இனித்தல் - தித்தித்தல்); (அப்பர் தேவாரம் - "பத்திசெய் வித்தகர்க்கு அண்ணித்தாகும் அமுதினை" - அண்ணித்தாகும் - இனிக்கும்);
சுடர்க்கண்ணன் - தீயை (நெற்றிக்) கண்ணில் உடையவன்; சூரியன், சந்திரன், அக்கினி என்ற மூன்று சுடர்களை மூன்று கண்களாக உடையவன்; (சுடர் - சூரியன்; சந்திரன்; நெருப்பு); (அப்பர் தேவாரம் - 6.90.1 - "மூன்றுசுடர்க் கண்ணானை"); (அப்பர் தேவாரம் - 6.98.4 - " சுடர்நயனச் சோதியையே தொடர்வுற்றோமே");
நீற்றன் - திருநீற்றைப் பூசியவன்; (திருநீறு - தூய்மையைக் குறிப்பது); (சம்பந்தர் தேவாரம் - 2.66.7 - "சுத்தமதாவது நீறு");
குபேரற்கு நண்பன் - குபேரனுக்குத் தோழன்; (திருவிசைப்பா - 9.1.7 - "தனதன் நற்றோழா சங்கரா" - தனதன் - குபேரன் - धनदः - an epithet of Kubera);
மடப்பாவை கேள்வன் - உமாதேவி மணவாளன்;
திகழ்கின்ற மெய்யன் - என்றும் இருக்கும் மெய்ப்பொருள்; ஒளிவீசும் திருமேனியை உடையவன்; (திகழ்தல் - விளங்குதல்); (மெய் - உண்மை; உடல்);
சிவன் சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி - சிவபெருமான் திருவடிகளுக்குப் பன்முறை வணக்கம்;
8)
அரன்பாம்ப ணிந்தான் மயானத்தி லாடி
பரன்வேத நாதன் பவன்மாற்ற மில்லான்
கருங்காடு றைந்தான் மதன்தன்னை அட்டான்
.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.
பதம் பிரித்து:
அரன்; பாம்பு அணிந்தான்; மயானத்தில் ஆடி;
பரன்; வேத நாதன்; பவன்; மாற்றம் இல்லான்;
கருங்காடு உறைந்தான்; மதன்-தன்னை அட்டான்;
.. சிவன்; சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி.
அரன் - ஹரன்;
பாம்பு அணிந்தான் - நாகத்தை மாலையாகப் பூண்டவன்;
மயானத்தில் ஆடி - மயானத்தில் சஞ்சரிப்பவன்; சுடுகாட்டில் கூத்தன்; (ஆடுதல் - சஞ்சரித்தல்; கூத்தாடுதல்);
பரன் - மேலானவன்;
வேத-நாதன் - வேதத்தலைவன்; வேதப்பொருள் ஆனவன்;
பவன் - என்றும் இருப்பவன்;
மாற்றம் இல்லான் - என்றும் மாறாமல் இருப்பவன் - மெய்ப்பொருள்;
கருங்காடு உறைந்தான் - சுடுகாட்டை வாழும் இடமாக உடையவன்; (கருங்காடு - சுடுகாடு); (சம்பந்தர் தேவாரம் - 2.38.2 - "வெண்டலைக் கருங்காடுறை வேதியன்");
மதன்தன்னை அட்டான் - மன்மதனைச் சுட்டெரித்தவன்; (அடுதல் - எரித்தல்); (அப்பர் தேவாரம் - 6.26.1 - "வன்கருப்புச்-சிலைக் காமன்-உடல் அட்டானை");
சிவன் சங்கரன் சம்பு தாள் போற்றி போற்றி - சிவபெருமான் திருவடிகளுக்குப் பன்முறை வணக்கம்;
வி. சுப்பிரமணியன்
----------- --------------