Wednesday, July 9, 2025

V.049 - புனை சேவடியே புகல் - இரதபந்தம்

2018-01-27

புனை சேவடியே புகல் - (இரதபந்தம்)

---------------------------------

(வெண்பா)


முற்குறிப்பு - இந்தப் பாடலைப் படிக்கும் முறை:

1. தேரின் இடப்பக்கம் உள்ள சக்கர இடத்திலிருந்து தொடங்கி மேலேறி அடுத்த சக்கரத்தில் இறங்கிப் பின் மீண்டும் மேலேறி, வரி வரியாகச் சுற்றிச்சுற்றி மேல்நோக்கிச் சென்று, பின் நடுவே மேலிருந்து கீழ்நோக்கி இறங்க வேண்டும்.

2. பந்த-அமைப்புக் கருதிப் பாடலின் எழுத்துகள் புணர்ச்சி பிரியாத வடிவத்தில் படத்தின் கட்டங்களில் காட்டப்பெற்றுள்ளன.


கல்வில்லி கச்சிப் புராண ரரவையே

நல்ல அணியா முடிபூண வல்லா

ரனைவ ரிறையெழில் சேர்பூ வனைய

புனைசே வடியே புகல்.


பதம் பிரித்து:

கல்வில்லி; கச்சிப் புராணர்; அரவையே

நல்ல அணியா முடி பூண வல்லார்;

அனைவர் இறை; எழில்சேர் பூ அனைய

புனை சேவடியே புகல்.


கல்-வில்லி - மேருமலையை வில்லாக ஏந்தியவர்; (கல் - மலை);

கச்சிப்-புராணர் - காஞ்சிபுரத்தில் எழுந்தருளிய தொன்மையானவர்;

அரவையே நல்ல அணியா முடி பூண வல்லார் - பாம்பையே நல்ல ஆபரணமாகத் தலையில் அணிந்தவர்; (இலக்கணக் குறிப்பு : "முடிப் பூணவல்லார்" என்பது இங்கே பந்தத்தைக் கருதி "முடி பூணவல்லார்" என்று ப் கெட்டு வந்தது);

னைவர் இறை - எல்லாருக்கும் தலைவர்;

எழில்சேர் பூ அனைய புனை சேவடியே புகல் - அப்பெருமானாரின் பூப் போன்ற அழகிய சிவந்த திருவடியே நமக்குப் பற்றுக்கோடு; (புனை - அழகு); (புகல் - துணை; பற்றுக்கோடு; சரண்);


வி. சுப்பிரமணியன்

----------- --------------


V.048 - நலிந்தடியே நம்பி - திருவலிதாயம் - இலிங்கபந்தம்

2018-01-24

V.048 - நலிந்தடியே நம்பி - திருவலிதாயம் - (இலிங்கபந்தம்)

---------------------------------

(ஆறடித் தரவு கொச்சகக் கலிப்பா)


பாடலைப் படிக்கும் முறை: கீழ்வரிசையில் இடம் வலமாகத் தொடங்கிச் சுற்றிச்சுற்றிக் கீழிருந்து மேலேறிப் பின் நடுக்கட்டங்கள் வழியாக மேலிருந்து நேரே கீழே இறங்கவேண்டும்.


நலிந்தடியே நம்பியடை பிறையையணி நாதனே

மெலிந்த மருங்குலுமை மாதுகூ றானமெய்யா

ஒலிவெடியை நிகர்க்குமொரு துடியுடை அங்கணனே

புலியுரி புனையமலா பூரணா பிதாவே

பலியையுவந் தீர்செந்தீப் போலிய வாகனே

கலிதீர் வலிதாயங் குடியான மாமணியே.


பதம் பிரித்து:

நலிந்து அடியே நம்பி அடை பிறையை அணி நாதனே;

மெலிந்த மருங்குல் உமை மாது கூறு ஆன மெய்யா;

ஒலி வெடியை நிகர்க்கும் ஒரு துடியுடை அங்கணனே;

புலி-உரி புனை அமலா; பூரணா; பிதாவே;

பலியை உவந்தீர்; செந்தீப் போலிய வாகனே;

கலி தீர், வலிதாயம் குடியான மாமணியே.


நலிந்து அடியே நம்பிடை பிறையைணி நாதனே - சாபத்தால் தேய்ந்து வாடித் திருவடியே புகல் என்று அடைந்த சந்திரனை அணிந்த தலைவனே; (நம்புதல் - விரும்புதல்; நம்பிக்கை வைத்தல்);

மெலிந்த மருங்குல் உமை மாது கூறு ஆன மெய்யா - சிற்றிடையை உடைய உமைமங்கையை ஒரு கூறாக உடைய திருமேனியனே, மெய்ப்பொருளே; (மருங்குல் - இடை); (மெய்யன் - மேனியை உடையவன்; மெய்ப்பொருள்);

ஒலி வெடியை நிகர்க்கும் ஒரு துடியுடை அங்கணனே - வெடி போல ஒலிக்கும் உடுக்கையை உடைய அருட்கண்ணனே; (துடி - உடுக்கை);

புலி-ரி புனை அமலா - புலித்தோலை அணிந்த தூயனே; (உரி - தோல்); (அமலன் - மாசற்றவன்);

பூரணா - குறைவற்றவனே;

பிதாவே - தந்தையே;

பலியைவந்தீர் - பிச்சையை மகிழ்ந்தவரே; (பலி - பிச்சை); (உவந்தாய் என்று ஒருமையில் கூறாமல் உவந்தீர் என்றது - யாப்புக் கருதி வந்த ஒருமைபன்மை மயக்கம்);

செந்தீப் போலிய வாகனே - செந்தழல் போன்ற நிறமுடைய மேனியனே / அழகனே; (போலியவாகனே = போலிய வாகனே / போலிய ஆகனே); (போலிய - போன்ற); (ஆகம் - மேனி; மார்பு); (வாகன் - அழகுள்ளவன்); (சம்பந்தர் தேவாரம் - 2.34.3 - "வாலிய புரத்திலவர் வேவ விழிசெய்த போலிய ஒருத்தர் புரிநூலர் இடம் என்பர்"); (சம்பந்தர் தேவாரம் - 3.115.2 - "கோதினீறது பூசிடு மாகனே");

கலி தீர், வலிதாயம் குடியான மாமணியே - திருவலிதாயத்தில் நீங்காமல் உறைகின்ற மாமணியே, என் துன்பத்தைத் தீர்த்து அருள்வாயாக; (கலி - துன்பம்); (திருவலிதாயம் - சென்னைப் புறநகரில் உள்ள பாடி என்ற இடத்தில் உள்ள கோயில்);


வி. சுப்பிரமணியன்

----------- --------------


V.047 - மாறா நின்றாய் - கூடசதுர்த்தம்

2018-01-23

V.047 - மாறா நின்றாய் - (கூடசதுர்த்தம்)

---------------------------------

(கூடம் - gūḍha. 1. மறைவு. 2. மறைபொருள்;

கூடசதுர்த்தம் - நான்காமடியில் உள்ள எழுத்துகள் யாவும் ஏனை மூன்றடிகளுள்ளும் மறைந்து நிற்குமாறு பாடப்பெறுஞ் சித்திரகவி.)


கீழே உள்ள பாடலின் அமைப்பு - பாடலைப் படிக்கும் முறை:


1

6

7

12

13

18

19

34

25

30

31

36

2

5

8

11

14

17

20

23

26

29

32

35

3

4

9

10

15

16

21

22

27

28

33

34



மா

யே

றூ

றா

தூ

ற்

நு

ளே

றா

றா

ர்

வே

ணி

யா

யா

ரு

வி

ங்

கே

நி

ன்

தே

வா

ணி

நீ

றா

னே

டி


கட்டங்களில் உள்ள எழுத்துகளை மேல்-கீழ், இடம்-வலம், கீழ்-மேல் என்று சுற்றிச்சுற்றி வாசித்தால் - பாடலின் முதல் மூன்று அடிகள் வரும்.

கட்டங்களின் நடுவில் உள்ள இரண்டாம் வரிசையை இடமிருந்து வலமாக வாசித்தால் - பாடலின் நாலாம் அடி வரும்.


முற்குறிப்பு: யாப்புக் கருதிச் சொற்கள் புணர்ச்சி பிரியாத வடிவில் தரப்பட்டுள்ளன.


மாறா நின்றா யேறூர் தேவா

வேறா மணிபணி யான தூயா

நீறாரு நற்றவனே விடநுங் கடிகேளே

றாறார் வேணியா யாருற விங்கே?


பதம் பிரித்து:

மாறா நின்றாய்; ஏறு ஊர் தேவா;

வேறு ஆம் அணி பணி ஆன தூயா;

நீறு ஆரும் நற்றவனே; விடம் நுங்கு அடிகேள்;

ஏறு ஆறு ஆர் வேணியாய்; ஆர் உறவு இங்கே?


மாறா நின்றாய் - என்றும் மாறாத மெய்ப்பொருளே;

ஏறு ஊர் தேவா - இடபவாகனம் உடைய தேவனே; (ஊர்தல் - ஏறுதல்);

வேறு ஆம் அணி பணி ஆன தூயா - நாகம் சிறந்த அணி ஆன தூயனே; (வேறு - சிறப்புடையது); (பணி - நாகம்);

நீறு ஆரும் நற்றவனே - திருநீறு பூசிய நல்ல தவ-வடிவினனே; (சுந்தரர் தேவாரம் - 7.48.1 - "நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே");

விடம் நுங்கு அடிகேள் - விடத்தை விழுங்கிய கடவுளே; (அடிகேள் - அடிகள் என்பதன் விளி); (சுந்தரர் தேவாரம் - 7.51.11 - "கடல்நஞ்சை வானவர்கள் தாம்உய்ய நுங்கி அமுது அவர்க்கருளி"); (சம்பந்தர் தேவாரம் - 3.55.2 - "திருவான்மியூர் உறையும் அடிகேள்");

ஏறு-ஆறு ஆர் வேணியாய் - நீர் மிக்க கங்கையைச் சடையில் உடையவனே; (ஏறுதல் - உயர்தல்; மிகுதல்); (அப்பர் தேவாரம் - 5.100.3 - "ஏறு கங்கை மணல்எண்ணில் இந்திரர்");

ஆர் உறவு இங்கே - (உன்னையன்றி எனக்கு) இங்கு எவர் உறவு? (சுந்தரர் தேவாரம் - 7.70.1 - "ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே");


வி. சுப்பிரமணியன்

----------- --------------


Tuesday, July 8, 2025

V.046 - தொழுகழல் ஏத்தல் வழி - இரதபந்தம்

2018-01-20

V.046 - தொழுகழல் ஏத்தல் வழி - ( இரதபந்தம் )

---------------------------------

(வெண்பா)


முற்குறிப்பு - இந்தப் பாடலைப் படிக்கும் முறை:

1. தேரின் இடப்பக்கம் உள்ள சக்கர இடத்திலிருந்து தொடங்கி ஒவ்வொரு வரியாக மேல்நோக்கி வலம்இடம் இடம்வலம் என்று சுற்றிச்சுற்றிச் சென்று, பின் நடுவே மேலிருந்து கீழ்நோக்கி நேரே இறங்கித் தேரின் வலப்பக்கம் உள்ள சக்கர இடத்தில் முடியும்.

2. பந்த-அமைப்புக் கருதிப் பாடலின் எழுத்துகள் புணர்ச்சி பிரியாத வடிவத்தில் படத்தின் கட்டங்களில் காட்டப்பெற்றுள்ளன.


மூவரில் வேறாந் தனிமுக் கணத்தனா

ரேவலர் மாலேறே றீசனா ராவ

ரழக ரருடாங் கவரை யழுது

தொழுகழ லேத்தல் வழி.


பதம் பிரித்து:

மூவரில் வேறு ஆம் தனி முக்கண் அத்தனார்;

ஏ வலர்; மால்-ஏறு ஏறு ஈசனார் ஆவர்;

அழகர்; அருள் தாங்கு அவரை அழுது

தொழு; கழல் ஏத்தல் வழி.


மூவரில் வேறு ஆம் தனி - மும்மூர்த்திகளிலிருந்து வேறுபட்ட ஒப்பற்றவர்; (இல் - ஐந்தாம் வேற்றுமை உருபு); (சுந்தரர் தேவாரம் - 7.57.7 - "முந்தையாகிய மூவரின் மிக்க மூர்த்தியை");

முக்கண் அத்தனார் - முக்கண் உடைய தந்தையார்;

வலர் - அம்பு எய்தலில் வல்லவர்; (ஏ – அம்பு); (முப்புரங்களை ஓரம்பினால் எய்தவர்); (அப்பர் தேவாரம் - 6.49.7 - "ஏவலன்காண்");

மால்-ஏறு ஏறு ஈசனார் ஆவர் - பெரிய இடபத்தை வாகனமாக உடையவர்; (மால் - பெரிய; திருமால்);

ழகர் - சுந்தரர்;

அருள் தாங்கு அவரை அழுது தொழு - அருளாளரான அவரை அழுது வழிபடு; (திருவாசகம் - அச்சப்பத்து - 8.35.4 - "தொழுதழுது உள்ளம் நெக்கு");

கழல் ஏத்தல் வழி - அவர் திருவடியைப் போற்றுவதே உய்யும் வழி; (ஏத்தல் - துதித்தலே; ஏகாரம் தொக்கது);

குறிப்பு: "அவரை அழுது தொழுகழல் ஏத்தல் வழி." என்றதில் "தொழு" என்ற சொல்லை இடைநிலைத் தீவகமாகக் கொண்டு இருபுறமும் இயைத்து - "அவரை அழுது தொழு; தொழுகழல் ஏத்தல் வழி" என்றும் பொருள்கொள்ளல் ஆம். (தொழுகழல் - தொழத்தக்க திருவடி; எல்லாரும் தொழுகின்ற திருவடி); (சம்பந்தர் தேவாரம் - 1.52.5 - "பாடலோடு தொழுகழலே வணங்கி");


வி. சுப்பிரமணியன்

----------- --------------


V.045 - எங்களிறை - கோமூத்திரி

2018-01-16

V.045 - எங்களிறை - ( கோமூத்திரி )

---------------------------------

(குறள்வெண் செந்துறை)


முற்குறிப்பு - யாப்புக் குறிப்பு : கோமூத்திரி = இரண்டிரண்டு வரியாக ஒரு செய்யுள் எழுதப்பட்டு மேலும் கீழும் ஒன்று இடையிட்டு வாசித்தாலும் அச்செய்யுளே வருவது.

= அதாவது - 2, 4, 6, 8, , , என இரட்டைப்படை இடங்களில் வரும் எழுத்துகள் ஈரடிகளிலும் ஒன்றாகவே அமையும்.


ங்

ளி

றை

கு

ண்

ணி

வே

தி

ன்

தி

ங்

ளி

கு

ரு

ணி

வே

ணி

ன்


எங்க ளிறைகுண் டலமணி வேதியன்

திங்க ளிலகு படருமணி வேணியன்.


பதம் பிரித்து:

எங்கள் இறை, குண்டலம் அணி வேதியன்,

திங்கள் இலகு படரு(ம்) மணி வேணியன்.


எங்கள் இறை - எம் இறைவன்;

குண்டலம் அணி வேதியன் - காதில் குண்டலம் அணிந்தவன், வேதம் ஓதுபவன், வேதங்களின் பொருள் ஆனவன்; (சுந்தரர் தேவாரம் - 7.61.4 - "குண்டலந் திகழ் காதுடையானை"); (வேதியன் - வேதம் ஓதுபவன்; வேதப்பொருள் ஆனவன்);

திங்கள் இலகு படரும் மணி வேணியன் - சந்திரன் ஒளிவீசும், படர்ந்த அழகிய பவளம் போன்ற சடை உடையவன்; (இலகுதல் - விளங்குதல்); (மணி - அழகு; பவளம்); (அணி - அழகு); (வேணி - சடை);


பிற்குறிப்பு : இப்பாடலில் முதலடியின் ஈற்று-எழுத்தும் இரண்டாம் அடியின் முதல்-எழுத்தும் புணர்ச்சியோடு நோக்கினும் பாடலின் கோமூத்திரி அமைப்புக் கெடாது.


வி. சுப்பிரமணியன்

----------- --------------


P.421 - பேரூர் - திருமலியும் தமிழ்பாடி

2017-12-25

P.421 - பேரூர்

---------------------------------

(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

(சம்பந்தர் தேவாரம் - 2.48.1 - "கண்காட்டு நுதலானும்")


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

1)

திருமலியும் தமிழ்பாடிச் சேவித்தார் இடர்தீர்ப்பான்,

அருமறையின் பொருள்விரிக்க ஆலநிழல் அமர்ந்தபிரான்,

கருமுகிலின் வண்ணத்தைக் கண்டத்திற் காட்டுமரன்,

பெருமதில்சூழ்ந் தழகாரும் பேரூரெம் பெருமானே.


திரு மலியும் தமிழ் பாடிச் சேவித்தார் இடர் தீர்ப்பான் - திரு மிகுந்த தமிழ்ப்-பாமாலைகளைப் பாடி வணங்கியவர் துன்பத்தைத் தீர்ப்பவன்;

அருமறையின் பொருள் விரிக்க ஆலநிழல் அமர்ந்த பிரான் - அரிய வேதப்பொருளை உபதேசிக்கக் கல்லால-மரத்தின்கீழ் விரும்பி வீற்றிருந்த தலைவன்;

கருமுகிலின் வண்ணத்தைக் கண்டத்தில் காட்டும் அரன் - கரிய மேகத்தின் நிறத்தைக் கண்டத்தில் காட்டுகின்ற ஹரன்;

பெருமதில் சூழ்ந்து அழகு ஆரும் பேரூர் எம் பெருமானே - பெரிய மதிலால் சூழப்பெற்று அழகு மிகும் பேரூரில் உறையும் எம்பெருமான்;


2)

போதையடி இட்டுமிகப் போற்றிடுவார் இடர்தீர்ப்பான்,

வாதையுறு வானவர்கள் வாழவிடம் உண்டபிரான்,

சீத(ம்)மலி கங்கைநதித் திரைமோது செஞ்சடையான்,

பேதையொரு பங்கமரும் பேரூரெம் பெருமானே.


போதை அடி இட்டு மிகப் போற்றிடுவார் இடர் தீர்ப்பான் - திருவடியில் பூக்களைத் தூவி மிகவும் போற்றி வணங்கும் பக்தர்களது துன்பத்தைத் தீர்ப்பவன்; (போது - பூ);

வாதையுறு வானவர்கள் வாழ விடம் உண்ட பிரான் - துன்புற்ற தேவர்கள் வாழும் பொருட்டு ஆலகாலத்தை உண்டருளிய தலைவன்; (வாதை - துன்பம்); (உறுதல் - அனுபவித்தல்);

சீத(ம்)மலி கங்கைநதித் திரை மோது செஞ்சடையான் - குளிர்ச்சி மிகுந்த கங்கையாற்றின் அலைகள் மோதுகின்ற சிவந்த சடையுடையவன்; (திரை - )லை;

பேதை ஒரு பங்கு அமரும் பேரூர் எம் பெருமானே - உமை ஒரு பாகம் விரும்பும், பேரூரில் உறையும் எம்பெருமான்; (பேதை - பெண்);


3)

அரியதமிழ் பாடியடி அடைந்தார்தம் இடர்தீர்ப்பான்,

திரியரணம் மூன்றெய்யச் சிலையாக மலைவளைத்தான்,

வரியரவ அரைநாணன், வார்சடைமேல் மதிசூடி,

பெரியவிடை ஒன்றேறும் பேரூரெம் பெருமானே.


திரி அரணம் மூன்று எய்யச் சிலையாக மலை வளைத்தான் - எங்கும் திரிந்த முப்புரங்களை எய்ய மேருமலையை வில்லாக வளைத்தவன்;

வரி-ரவ அரைநாணன் - வரியுடைய பாம்பை அரைநாணாகக் கட்டியவன்;

வார்-சடைமேல் மதிசூடி - நீள்சடைமேல் சந்திரனைச் சூடியவன்;


4)

பன்னியிரு பாதமலர் பணிவார்தம் இடர்தீர்ப்பான்,

மின்னலென முப்புரிநூல் மிளிர்மார்பில் வெண்ணீற்றன்,

தன்னிகரில் தலைவன்,முன் தக்கன்செய் வேள்விசெற்றான்,

பின்னுசடைப் பிறைசூடி, பேரூரெம் பெருமானே.


பன்னுதல் - புகழ்தல்; பாடுதல்;

தன் நிகர் இல் தலைவன் - தனக்கு எவ்வொப்பும் இல்லாத தலைவன்;

தக்கன் செய் வேள்வி செற்றான் - தக்கன் செய்த வேள்வியை அழித்தவன்;

பின்னு-சடைப் பிறைசூடி - பின்னுகின்ற (முறுக்குண்ட) சடையின்மேல் பிறையை அணிந்தவன்;


5)

மறவாது நாள்தோறும் வழிபடுவார் இடர்தீர்ப்பான்,

இறவாது மார்க்கண்டர் இருக்கநமன் தனையுதைத்தான்,

மறையோது திருநாவன், மலைமங்கை மணவாளன்,

பிறவாத பெருமையினான், பேரூரெம் பெருமானே.


மறை ஓது திருநாவன் - வேதங்களைப் பாடியருளியவன்;


6)

கடிமலரிட் டடிவாழ்த்தும் காதலர்தம் இடர்தீர்ப்பான்,

துடிபறைகள் பலவார்க்கச் சுடலைதனில் நடமாடி,

கடியவிடை ஊர்தியினான், காமனைக்காய் கண்ணுதலான்,

பிடிநடையாள் ஒருபங்கன், பேரூரெம் பெருமானே.


கடிமலர் இட்டு அடிவாழ்த்தும் காதலர்தம் இடர் தீர்ப்பான் - வாசமலர்களைத் தூவித் திருவடியை வழிபடும் பக்தர்களது துன்பத்தைத் தீர்ப்பவன்;

துடி பறைகள் பல ஆர்க்கச் சுடலைதனில் நடமாடி - உடுக்கை, பறை முதலிய வாத்தியங்கள் பல ஒலிக்கச் சுடுகாட்டில் கூத்தாடுபவன்; (ஆர்த்தல் - ஒலித்தல்);

கடிய விடை ஊர்தியினான் - விரைந்து செல்லும் இடபவாகனம் உடையவன்; (கடி - விரைவு);

காமனைக் காய் கண்ணுதலான் - மன்மதனை எரித்த நெற்றிக்கண்ணன்; (காய்தல் - கோபித்தல்; எரித்தல்);

பிடி-நடையாள் ஒரு பங்கன் - பெண்யானை போன்ற நடையை உடைய உமையைத் திருமேனியில் ஒரு கூறாக உடையவன்; (பிடி - பெண்யானை);

பேரூர் எம் பெருமானே - பேரூரில் உறைகின்ற எம் பெருமான்;


7)

அறைகழலை அனுதினமும் அருச்சிப்பார் இடர்தீர்ப்பான்,

மறைமுதல்வன், அந்தகனை மாய்த்ததிரி சூலத்தன்,

கறையொளிரும் கண்டத்தன், களிற்றுரிவை போர்த்தபிரான்,

பிறைமதியைச் சடைக்கணிந்த பேரூரெம் பெருமானே.


அறைகழலை - ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடியை;

மறைமுதல்வன் - வேதமுதல்வன்;

அந்தகனை மாய்த்த திரிசூலத்தன் - அந்தகாசுரனை அழித்த சூலபாணி; (அந்தகன் - அந்தகாசுரன்);

கறை ஒளிரும் கண்டத்தன் - நீலகண்டன்;

களிற்று-உரிவை போர்த்த பிரான் - யானைத்தோலைப் போர்த்த தலைவன்;


8)

நித்த(ம்)மலர் தூவியடி நினைவார்தம் இடர்தீர்ப்பான்,

பத்துமுடி அரக்கனழப் பாதவிரல் ஊன்றியவன்,

மத்த(ம்)மதி திகழ்முடிமேல் வாளரவும் வைத்துகந்த

பித்தனெனும் பேருடையான், பேரூரெம் பெருமானே.


நித்தம் மலர் தூவி அடி நினைவார்தம் இடர் தீர்ப்பான் - தினமும் பூக்களைத் தூவித் திருவடியை நினைந்து தொழும் பக்தர்களது துன்பத்தைத் தீர்ப்பவன்;

பத்துமுடி அரக்கன் அழப் பாதவிரல் ஊன்றியவன் - பத்துத்தலை இராவணன் அழும்படி திருப்பாத-விரல் ஒன்றை ஊன்றி அவனை நசுக்கியவன்;

மத்தம் மதி திகழ் முடிமேல் வாளரவும் வைத்து உகந்த பித்தன் எனும் பேர் உடையான் - ஊமத்த-மலரும் சந்திரனும் விளங்கும் தலையின்மேல் கொடிய பாம்பையும் தாங்கி மகிழ்பவன், பித்தன் (பேரருளாளன்) என்ற பெயரை உடையவன்;

பேரூர் எம் பெருமானே - பேரூரில் உறைகின்ற எம் பெருமான்;


9)

கண்ணிபல புனைந்தேத்திக் கைதொழுவார் இடர்தீர்ப்பான்,

மண்ணிடந்த மாயவனும் வானிலுயர் மலரோனும்

நண்ணலரும் சோதியினான், நால்வேதப் பொருளானான்,

பெண்ணிடமாம் பெற்றியினான், பேரூரெம் பெருமானே.


கண்ணி பல புனைந்து ஏத்திக் கைதொழுவார் இடர் தீர்ப்பான் - பல மாலைகள் (பூமாலை / பாமாலை) தொடுத்துத் துதித்து வணங்கும் பக்தர்களது துன்பத்தைத் தீர்ப்பவன்; (கண்ணி - தலையில் அணியும் மாலைவகை; சிலவகைப் பாடல்களில் வரும் இரண்டடி உள்ள பகுதி);

மண் இடந்த மாயவனும் வானில் உயர் மலரோனும் நண்ணல் அரும் சோதியினான் - நிலத்தை அகழ்ந்த திருமாலாலும் உயரப் பறந்த பிரமனாலும் அடைவதற்கு அரிய ஜோதி; (நண்ணல் - நண்ணுதல் - நெருங்குதல்);

நால்வேதப்-பொருள் ஆனான் - நாள்வேதங்கள் கூறும் மெய்ப்பொருள் ஆனவன்;

பெண் இடம் ஆம் பெற்றியினான் - உமையை இடப்பாகத்தில் உடைய பண்பினன்;

பேரூர் எம் பெருமானே - பேரூரில் உறைகின்ற எம் பெருமான்;


10)

நெற்றிமிசை நீறணிந்து நினைவார்தம் இடர்தீர்ப்பான்,

குற்ற(ம்)மிகு மொழிபேசிக் கூட்டஞ்சேர் கொள்கையினார்

சற்றுமறி யாத்தலைவன், தண்மதிசேர் தாழ்சடையன்,

பெற்றமிவர் பெருமையினான், பேரூரெம் பெருமானே.


நெற்றிமிசை நீறு அணிந்து நினைவார்தம் இடர் தீர்ப்பான் - நெற்றியில் திருநீற்றைப் பூசி எண்ணி வழிபடும் பக்தர்களது துன்பத்தைத் தீர்ப்பவன்;

குற்ற(ம்)மிகு மொழி பேசிக் கூட்டம் சேர் கொள்கையினார் சற்றும் அறியாத் தலைவன் - குற்றம் மிகுந்த புன்மொழிகள் பேசிக் கூட்டத்தைச் சேர்க்கும் கொள்கை உடையவர்கள் அறியாத தலைவன்;

தண்மதி சேர் தாழ்சடையன் - குளிர்ந்த திங்களைத் தாழும் சடையில் அணிந்தவன்;

பெற்றம் இவர் பெருமையினான் - இடபத்தின்மேல் ஏறும் பெருமை உடையவன்; (பெற்றம் - எருது); (இவர்தல் - ஏறுதல்);

பேரூர் எம் பெருமானே - பேரூரில் உறைகின்ற எம் பெருமான்;


11)

பண்தங்கு பாடலினால் பரவிடுவார் இடர்தீர்த்து

விண்தங்கு வாழ்வளிப்பான், விரிசடைமேல் வெண்பிறையன்,

கண்தங்கு நெற்றியினாற் காமனைமுன் காய்ந்தபிரான்,

பெண்தங்கு மேனியினான், பேரூரெம் பெருமானே.


பண் தங்கு பாடலினால் பரவிடுவார் இடர் தீர்த்து விண் தங்கு வாழ்வு அளிப்பான் - இனிய இசை பொருந்திய பாமாலைகளால் துதிக்கும் பக்தர்களது துன்பத்தைத் தீர்த்து அவர்களுக்குச் சிவலோக வாழ்வைத் தருபவன் (/ தருவான்);

விரிசடைமேல் வெண்பிறையன் - விரிந்த சடைமேல் வெண்திங்களை அணிந்தவன்;

கண் தங்கு நெற்றியினால் காமனை முன் காய்ந்த பிரான் - நெற்றிக்கண்ணால் மன்மதனை முன்பு எரித்த தலைவன்;

பெண் தங்கு மேனியினான் - உமையொரு பங்கன்;

பேரூர் எம் பெருமானே - பேரூரில் உறைகின்ற எம் பெருமான்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------