Sunday, September 13, 2026

P.512 - நல்லம் (கோனேரிராஜபுரம்) - உம்பர் உய்ய

2020-07-30

P.512 - நல்லம் (கோனேரிராஜபுரம்)

-----------

(அறுசீர்ச் சந்தவிருத்தம் - தான தான தானனா தான தான தானனா - சந்தம்)

(சம்பந்தர் தேவாரம் - 3.53.1 - "வானைக் காவல் வெண்மதி")

(சம்பந்தர் தேவாரம் - 2.99.1 - "இன்று நன்று நாளைநன்று")


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

* திருநல்லத்தில் (கோனேரிராஜபுரத்தில்) நடராஜமூர்த்தம் விசேஷம்;


1)

உம்பர் உய்ய நஞ்சினை .. உண்டி ருள்மி டற்றினான்

கொம்ப னாளொர் பங்கினன் .. குஞ்சி மீது கூவிளம்

வம்பு நாறு கொன்றையன் .. மார்பில் நூலன் நற்கழல்

நம்பி னார்தம் நற்றுணை .. நல்ல(ம்) மேய கூத்தனே.


உம்பர் உய்ய நஞ்சினை உண்டு இருள்-மிடற்றினான் - தேவர் உய்யுமாறு ஆலகாலத்தை உண்டு கறுத்த கண்டன்; (இருள்தல் - கறுப்பாதல்); (மிடறு - கண்டம்);

கொம்பனாள் ஒர் பங்கினன் - பூங்கொம்பு போன்ற உமையை ஒரு பங்கில் உடையவன்;

குஞ்சி மீது கூவிளம், வம்பு நாறு கொன்றையன் - தலைமேல் வில்வம், வாசனை கமழும் கொன்றைமலர் இவற்றை அணிந்தவன்; (குஞ்சி - தலை); (கூவிளம் - வில்வம்); (வம்பு - வாசனை);

மார்பில் நூலன் - திருமார்பில் பூணூல் அணிந்தவன்;

நற்கழல் நம்பினார்தம் நற்றுணை - நல்ல திருவடியை விரும்பியவர்களுக்கு நல்ல துணைவன்; (நம்புதல் - விரும்புதல்; நம்பிக்கைவைத்தல்);

நல்லம் மேய கூத்தனே - திருநல்லத்தில் எழுந்தருளிய கூத்தப்பெருமான்;


2)

நச்ச ராவை மார்பினில் .. நல்ல ஆரம் ஆக்கினான்

கச்ச தாக மாசுணம் .. கட்டி வந்து வெண்டலைப்

பிச்சை ஏற்று ழல்பவன் .. பேதை பங்கன் நாள்தொறும்

நச்சி வாழ்த்தி னார்துணை .. நல்ல(ம்) மேய கூத்தனே.


நச்சராவை மார்பினில் நல்ல ஆரம் ஆக்கினான் - விஷப்பாம்பை மார்பில் சிறந்த மாலை போல அணிந்தவன்; (ஆரம் - மாலை);

கச்சதாக மாசுணம் கட்டி வந்து வெண்லைப் பிச்சை ஏற்று உழல்பவன் - கச்சாகப் பாம்பை அரையில் கட்டி வந்து வெள்ளை மண்டையோட்டில் பிச்சை ஏற்றுத் திரிபவன்; (மாசுணம் - பாம்பு);

பேதை-பங்கன் - உமைபங்கன்;

நாள்தொறும் நச்சி வாழ்த்தினார் துணை - தினமும் விரும்பித் துதிப்பவர்களுக்குத் துணைவன்; (நச்சுதல் - விரும்புதல்);

நல்லம் மேய கூத்தனே - திருநல்லத்தில் எழுந்தருளிய கூத்தப்பெருமான்;


3)

நூல்வி ளங்கு மார்பினன் .. நோயு(ம்) மூப்பும் அற்றவன்

சேல்வி ளங்கு கண்ணுமை .. சேர்ந்த செய்ய மேனியன்

பால்வி ரும்பி ஆடினான் .. பண்டை வேதம் ஆல்நிழல்

நால்வ ருக்கு ரைத்தவன் .. நல்ல(ம்) மேய கூத்தனே.


நூல் விளங்கு மார்பினன் - பூணூல் திகழும் திருமார்பன்;

நோயு(ம்) மூப்பும் அற்றவன் - பிணியும் முதுமையும் இல்லாதவன்;

சேல் விளங்கு கண்-உமை சேர்ந்த செய்ய மேனியன் - சேல்மீன் போன்ற கண்ணுடைய உமை ஒரு பாகமாகச் சேர்ந்த செம்மேனியன்; (செய்ய - சிவந்த);

பால் விரும்பி ஆடினான் - பால்அபிஷேகம் விரும்பியவன்;

பண்டை வேதம் ஆல்நிழல் நால்வருக்கு உரைத்தவன் - தொன்மையான வேதங்களைக் கல்லாலமரத்தின்கீழ்ச் சனகாதியர் நால்வருக்கு உபதேசித்தவன்; (பண்டை - பழமை);

நல்லம் மேய கூத்தனே - திருநல்லத்தில் எழுந்தருளிய கூத்தப்பெருமான்;


4)

பொன்செய் கொன்றை மாமலர் .. புற்ற ராவி ளம்பிறை

புன்ச டைப்பு னைந்தவன் .. பூத நாதன் மென்கொடி

மின்செய் நுண்ம ருங்குலாள் .. மேனி பாகம் ஆயினான்

நன்செய் நாற்பு றந்திகழ் .. நல்ல(ம்) மேய கூத்தனே.


பொன்-செய் கொன்றை மாமலர், புற்றரா, இளம்பிறை புன்சடைப் புனைந்தவன் - பொன் போன்ற கொன்றைமலரையும், புற்றில் வாழும் இயல்புடைய பாம்பையும், இளந்திங்களையும் செஞ்சடையில் அணிந்தவன்; (செய்தல் - ஒத்தல்); (புன்சடை - செஞ்சடை; புன்மை - புகர்நிறம்)

பூதநாதன் - பூதகணநாதன்;

மென்கொடி மின்-செய் நுண்-மருங்குலாள் மேனி பாகம் ஆயினான் - மென்மையான கொடி போன்றவளும் மின்னல் போன்ற சிற்றிடை உடையவளுமான உமாதேவி தன் திருமேனியில் ஒரு பாகம் ஆனவன்; (மின் - மின்னல்); (மருங்குல் -இடை); (செய் + நுண் = செய்ந்நுண்; இங்கே, ஓசைகருதி ந் மிகாது வந்தது);

நன்செய் நாற்புறம் திகழ் - வளம் மிக்க வயல் புடைசூழ்ந்த;

நல்லம் மேய கூத்தனே - திருநல்லத்தில் எழுந்தருளிய கூத்தப்பெருமான்;


5)

மென்மை மிக்க தாளிணை .. மெச்சு மாணி வாழவே

வன்மை மிக்க கூற்றினை .. மாளு மாறு தைத்தவன்

புன்மை அற்ற நெஞ்சராய்ப் .. போற்றி செய்யில் நாள்தொறும்

நன்மை செய்யு(ம்) நம்பிரான் .. நல்ல(ம்) மேய கூத்தனே.


மென்மை மிக்க தாளிணை மெச்சு மாணி வாழவே வன்மை மிக்க கூற்றினை மாளுமாறு உதைத்தவன் - மென்மையான இருதிருவடிகளைப் போற்றிய மார்க்கண்டேயர் சிரஞ்சீவியாக என்றும் உயிர்வாழ வலிய காலனை இறக்கும்படி உதைத்தவன்; (மெச்சுதல் - புகழ்தல்); (மாணி - இங்கே, மார்க்கண்டேயர்);

புன்மை அற்ற நெஞ்சராய்ப் போற்றிசெய்யில் நாள்தொறும் நன்மை செய்யு(ம்) நம்பிரான் - தூயநெஞ்சினராகி வழிபாடு செய்தால் எந்நாளும் நன்மையே செய்யும் நம்பெருமான்;

நல்லம் மேய கூத்தனே - திருநல்லத்தில் எழுந்தருளிய கூத்தப்பெருமான்;


6)

வேகம் ஆர்ந்த கங்கையை .. வேணி யிற்க ரந்தவன்

பாகம் ஆர ணங்கமர் .. பற்றி லாத பண்பினன்

மேகம் ஆர்மி டற்றினன் .. வேதம் ஓது நாவினன்

நாகம் ஆரு(ம்) மார்பினன் .. நல்ல(ம்) மேய கூத்தனே.


வேகம் ஆர்ந்த கங்கையை வேணியில் கரந்தவன் - வேகம் மிகுந்த கங்கையைச் சடையில் ஒளித்தவன்; (ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்); (வேணி - சடை); (கரத்தல் - ஒளித்தல்);

பாகம் ஆரணங்கு அமர், பற்று-இலாத பண்பினன் - ஒரு பாகத்தில் உமாதேவியை விரும்பிய, எப்பற்றும் இல்லாதவன்; (அணங்கு - தெய்வம்; தெய்வப்பெண்); (அப்பர் தேவாரம் - 5.18.9 - "ஆரணங்கு ஒருபாலுடை மைந்தனே"); (அமர்தல் - விரும்புதல்; இருத்தல்);

மேகம் ஆர் மிடற்றினன் - மேகம் போன்ற நீலகண்டம் உடையவன்; (ஆர்தல் - ஒத்தல்);

வேதம் ஓது நாவினன் - வேதங்களைப் பாடியருளியவன்;

நாகம் ஆரு(ம்) மார்பினன் - பாம்பை அணிந்த திருமார்பன்; (ஆர்தல் - அணிதல்);

நல்லம் மேய கூத்தனே - திருநல்லத்தில் எழுந்தருளிய கூத்தப்பெருமான்;


7)

தக்கன் வேள்வி செற்றவன் .. தந்தை தாயி லாதவன்

அக்கி னைப்பு னைந்தவன் .. அங்கம் ஆறும் ஓதினான்

செக்கர் அஞ்ச டைப்பரன் .. தேரில் ஏறி அச்சிற

நக்க ரண்கள் அட்டவன் .. நல்ல(ம்) மேய கூத்தனே.


தக்கன் வேள்வி செற்றவன் - தக்கன் செய்த அவவேள்வியை அழித்தன்; (செறுதல் - அழித்தல்);;

தந்தை தாய் இலாதவன் - தனக்கு ஒரு தாய்தந்தை இல்லாதவன்;

அக்கினைப் புனைந்தவன் - எலும்பை அணிந்தவன்; (அக்கு - எலும்பு);

அங்கம் ஆறும் ஓதினான் - ஆறங்கங்களைப் பாடியருளியவன்;

செக்கர் அஞ்சடைப்-பரன் - சிவந்த அழகிய சடையுடைய பரமன்; (செக்கர் - சிவப்பு); (அம் - அழகு);

தேரில் ஏறி அச்சு இற, நக்கு அரண்கள் அட்டவன் - (தேவர்கள் செய்த) தேரில் ஏறியதும் அதன் அச்சு முரிந்ததும், சிரித்து முப்புரங்களை எரித்தவன்; (இறுதல் - முரிதல்); (நகுதல் - சிரித்தல்); (அடுதல் - அழித்தல்);

நல்லம் மேய கூத்தனே - திருநல்லத்தில் எழுந்தருளிய கூத்தப்பெருமான்;


8)

வரையி டந்த மூடனார் .. வாய்கள் பத்த ரற்றவே

விரலை வைத்த டர்த்தவன் .. வெற்றி வாளும் ஈந்தவன்

பரவி னார்கள் தீவினை .. பாற்றி இன்ப(ம்) நல்குவான்

நரைவெ ளேறு கந்தவன் .. நல்ல(ம்) மேய கூத்தனே.


வரை இடந்த மூடனார் வாய்கள் பத்து அரற்றவே விரலை வைத்து அடர்த்தவன் - கயிலைமலையைப் பெயர்த்த அறிவிலியான இராவணனது பத்து வாய்களும் அழுது புலம்பும்படி திருப்பாதவிரலை ஊன்றி அவனை நசுக்கியவன்; (வரை - மலை); (இடத்தல் - பெயர்த்தல்); (மூடனார் - அறிவில்லாதவன் - இங்கே, இராவணன்; ஆர் விகுதி இழிவுசிறப்பு); (அரற்றுதல் - புலம்புதல்); (அடர்த்தல் - நசுக்குதல்);

வெற்றி வாளும் ஈந்தவன் - (பிறகு, இராவணன் பாடிய துதிகளைக் கேட்டு இரங்கி) அவனுக்கு (வாழ்நாள், பெயர் இவற்றோடு) சந்திரஹாஸம் என்ற வாளையும் அருளியவன்; (வாளும் - உம் - எச்சவும்மை);

பரவினார்கள் தீவினை பாற்றி இன்ப(ம்) நல்குவான் - போற்றித் துதிக்கும் பக்தர்களது தீவினையை அழித்து அவர்களுக்கு இன்பம் தருபவன்; (பரவுதல் - துதித்தல்); (பாற்றுதல் - நீக்குதல்; அழித்தல்);

நரை-வெளேறு உகந்தவன் - மிகவும் வெண்மையான எருதை வாகனமாக மகிழ்ந்தவன்; (நரை - வெண்மை); (வெளேறு - வெள்ளேறு; ஓசைகருதி ள் மிகாது வந்தது); (நரைவெள் - ஒருபொருட்பன்மொழி);

நல்லம் மேய கூத்தனே - திருநல்லத்தில் எழுந்தருளிய கூத்தப்பெருமான்;


9)

வெண்ணெய் உண்ட மாலொடு .. வேதன் நேட நீண்டவன்

கண்ணி லங்கு நெற்றியன் .. காம னைச்சி னந்தவன்

பெண்ணி லங்கு மேனியன் .. பெற்றம் ஏறு பெற்றியன்

நண்ணி னார்க்க ருள்பவன் .. நல்ல(ம்) மேய கூத்தனே.


வெண்ணெய் உண்ட மாலொடு வேதன் நேட நீண்டவன் - (கிருஷ்ணாவதாரத்தில்) வெண்ணெய் உண்டவனான திருமாலும் பிரமனும் அடிமுடி தேட எல்லையின்றி ஓங்கிய ஜோதி; (நேடுதல் - தேடுதல்);

கண் இலங்கு நெற்றியன் - நெற்றியில் கண் உடையவன்;

காமனைச் சினந்தவன் - மன்மதனைக் கோபித்து எரித்தவன்;

பெண் இலங்கு மேனியன் - திருமேனியில் உமையை ஒரு பாகமாக உடையவன்;

பெற்றம் ஏறு பெற்றியன் - இடபவாகனம் ஏறும் பெருமையினன்; (பெற்றம் - எருது); (பெற்றி - தன்மை; பெருமை);

நண்ணினார்க்கு அருள்பவன் - தன்னை அடைந்தவர்களுக்கு அருள்பவன்; (நண்ணுதல் - கிட்டுதல்; பொருந்துதல்);

நல்லம் மேய கூத்தனே - திருநல்லத்தில் எழுந்தருளிய கூத்தப்பெருமான்;


10)

நீறு பூச அஞ்சிடும் .. நீசர் சொல்லை நீங்குமின்

ஆறு சூடி நாமமாம் .. அஞ்செ ழுத்தை நாள்தொறும்

கூறும் அன்பர் நெஞ்சிடம் .. கொள்ளும் எந்தை சங்கரன்

நாறு கொன்றை மாலையான் .. நல்ல(ம்) மேய கூத்தனே.


நீறு பூச அஞ்சிடும் நீசர் சொல்லை நீங்குமின் - திருநீற்றைப் பூச அஞ்சுகின்ற கீழோர்களது பேச்சை மதியாமல் நீங்குங்கள்; (மின் - ஏவற்பன்மை விகுதி);

ஆறுசூடி நாமம் ஆம் அஞ்செழுத்தை நாள்தொறும் கூறும் அன்பர் நெஞ்சு இடம் கொள்ளும் எந்தை - கங்காதரனது திருநாமம் ஆகும் திருவைந்தெழுத்தைத் தினமும் சொல்லும் பக்தர்களது நெஞ்சில் குடிகொள்ளும் எம் தந்தை;

சங்கரன் - சங்கரன் (நன்மை செய்பவன்);

நாறு கொன்றை மாலையான் - மணம் கமழும் கொன்றைமாலை அணிந்தவன்;

நல்லம் மேய கூத்தனே - திருநல்லத்தில் எழுந்தருளிய கூத்தப்பெருமான்;


11)

கோளு(ம்) நாளும் என்செயும் .. குன்ற வில்லி தன்னையே

மூளும் அன்பி னால்தினம் .. முன்ப ணிந்து போற்றினால்

நீளும் வேணி தன்னிடை .. நீர்க ரந்த நின்மலன்

நாளும் இன்ப(ம்) நல்குவான் .. நல்ல(ம்) மேய கூத்தனே.


கோளு(ம்) நாளும் என் செயும் - நவகிரகங்களும், (நட்சத்திரம், திதி, கிழமை முதலிய) நாள்களும் என்ன செய்யும்? (தீமை செய்யமாட்டா); (செயும் - செய்யும்);

குன்றவில்லி-தன்னையே மூளும் அன்பினால் தினம் முன்-பணிந்து போற்றினால் - மேருவில் ஏந்தியவனையே பொங்கும் அன்பால் தினமும் வணங்கித் துதித்தால்; (குன்றம் - மலை);

நீளும் வேணி-தன்னிடை நீர் கரந்த நின்மலன் - நீளும் சடையில் கங்கையை ஒளித்த பரிசுத்தன்; (வேணி - சடை); (நின்மலன் - நிர்மலன்);

நாளும் இன்ப(ம்) நல்குவான் - எந்நாளும் இன்பம் தருவான்;

நல்லம் மேய கூத்தனே - திருநல்லத்தில் எழுந்தருளிய கூத்தப்பெருமான்;


பிற்குறிப்புகள் :

யாப்புக்குறிப்பு:

  • அறுசீர்ச் சந்தவிருத்தம் - "தான தான தானனா தான தான தானனா" என்ற சந்தம்.

    • 1, 4-ஆம் சீர்களில் தான என்பது தனன என்றும் வரலாம்.

    • 2, 5-ஆம் சீர்களில் தான என்பது ஒரோவழி தனன என்று வரும்.

    • 3, 6-ஆம் சீர்களில் தானனா என்பது ஒரோவழி தனதனா என்று வரலாம்.

  • (சம்பந்தர் தேவாரம் - 3.53.1 - "வானைக் காவல் வெண்மதி மல்கு புல்கு வார்சடைத்")

  • (சம்பந்தர் தேவாரம் - 2.99.1 - "இன்று நன்று நாளைநன் றென்று நின்ற விச்சையால்");


வி. சுப்பிரமணியன்

--------- ---------


Tuesday, September 1, 2026

P.511 - நீலக்குடி - இகல்வல்வினை இல்லாநிலை

2020-07-29

P.511 - நீலக்குடி

--------------

(கலிவிருத்தம் - மாங்கனி மாங்கனி மாங்கனி மா - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 1.10.1 - "உண்ணாமுலை உமையாளொடும்")

(சுந்தரர் தேவாரம் - 7.1.1 -"பித்தாபிறை சூடீ");


1)

இகல்வல்வினை இல்லாநிலை ஈவான்நினை மனமே

தகவில்மகம் புரிதக்கனைத் தண்டித்தவன் நாமம்

பகரில்வரம் எல்லாமருள் பரமன்படர் சடையன்

நிகரில்முலை மங்கைக்கிறை நீலக்குடி அரனே.


இகல்-வல்வினை இல்லா நிலை ஈவான் நினை மனமே - தாக்குகின்ற வலிய வினை இல்லாத நிலையை அளிப்பான்; மனமே எண்ணுவாயாக; (இகல்தல் - பகைத்தல்; போர்செய்தல்);

தகவு-இல் மகம் புரி தக்கனைத் தண்டித்தவன் நாமம் - அவவேள்வியைச் செய்த தக்கனைத் தண்டித்த பெருமானது திருநாமத்தை; (தகவு - தகுதி; பெருமை; குணம்); (மகம் - வேள்வி);

பகரில் வரம்-எல்லாம் அருள் பரமன் படர்-சடையன் - சொல்லி வழிபட்டால் எல்லா வரங்களையும் அருளும் பரமன், படரும் சடையை உடையவன்; (பகர்தல் - சொல்லுதல்);

நிகர்-இல் முலை மங்கைக்கு இறை நீலக்குடி அரனே - ஒப்பில்லா முலையுடைய உமைக்குக் கணவன், திருநீலக்குடியில் எழுந்தருளிய ஹரன்; (நிகர் - ஒப்பு); (* ஒப்பிலாமுலையம்மை - இத்தலத்து இறைவி திருநாமம்; வடமொழியில் "அநுபமஸ்தனி");


2)

மறவாதடி இணைவாழ்த்திடில் மாயும்வினை மனமே

பிறவாதவன் இறவாதவன் நறவார்கணை எய்த

சுறவார்கொடி மதனாருடல் சுடுமுக்கணன் நீல

நிறமார்மிட றுடையான்திரு நீலக்குடி அரனே.


மறவாது அடிஇணை வாழ்த்திடில் மாயும் வினை, மனமே - மனமே, மறத்தல் இன்றி இருதிருவடிகளை வாழ்த்தினால் வினை அழியும்;

பிறவாதவன் இறவாதவன் - பிறப்பு இறப்பு இல்லாதவன்;

நறவு ஆர் கணை எய்த சுறவு ஆர் கொடி மதனார் உடல் சுடு முக்கணன் - வாசனை மிக்க (மலர்) அம்பை எய்தவனும் சுறாக்கொடியை உடையவனுமான மன்மதனது உடலைச் சுட்டெரித்த முக்கண்ணன்; (நறவு - வாசனை); (சுறவு - சுறா); (மதன் - மன்மதன்); (சம்பந்தர் தேவாரம் - 2.23.4 - "சுறவக்கொடி கொண்டவன் நீறதுவாய் உற நெற்றிவிழித்த எம் உத்தமனே");

நீலநிறம் ஆர் மிடறு உடையான் திருநீலக்குடி அரனே - நீலகண்டத்தை உடையவன், திருநீலக்குடியில் எழுந்தருளிய ஹரன்; (மிடறு - கண்டம்);


3)

ஞாலத்தினில் இன்புற்றிட நாடாய்மட நெஞ்சே

சாலத்துயர் உற்றுச்சுரர் தாளைத்தொழ அந்த

ஆலத்தினை அமுதுண்டருள் அருமாமணி கண்டன்

நீலக்குயில் ஆலும்பொழில் நீலக்குடி அரனே.


ஞாலத்தினில் இன்புற்றிட நாடாய் மடநெஞ்சே - பேதைமனமே, இவ்வுலகில் இன்புற நாடுவாயாக;

சாலத் துயர் உற்றுச் சுரர் தாளைத் தொழ - மிகவும் வருந்தித் தேவர்கள் திருவடியை வணங்கவும்;

அந்த ஆலத்தினை அமுதுண்டு அருள் அரு-மா-மணிகண்டன் - அந்த ஆலகாலத்தை உண்டு அருளிய அரிய அழகிய நீலகண்டன்; (அந்த - பண்டறிசுட்டு);

நீலக்குயில் ஆலும் பொழில் நீலக்குடி அரனே - கருங்குயில்கள் ஒலிக்கும் சோலை சூழ்ந்த திருநீலக்குடியில் எழுந்தருளிய ஹரன்; (ஆலுதல் - ஒலித்தல்);


4)

இல்லாநிலை இல்லாநிலை ஈவான்நினை மனமே

பல்லார்தலை ஓடேந்திய பரமன்பெரு வள்ளல்

வில்லாவொரு மலைகொண்டெயில் வேவக்கணை தொட்டான்

நெல்லார்வயல் புடைசூழ்திரு நீலக்குடி அரனே.


இல்லாநிலை இல்லா நிலை ஈவான் நினை, மனமே - மனமே, நீ நினைவாயாக, இல்லையென்ற நிலை இல்லாத நிலையைத் தருவான்;

பல் ஆர் தலை ஓடு ஏந்திய பரமன் பெருவள்ளல் - பற்கள் திகழும் மண்டையோட்டைப் பிச்சைப்பாத்திரமாக ஏந்திய பரமன், பெரிய வள்ளல்; (அப்பர் தேவாரம் - 6.89.7 - "பல்லார் தலையோட்டில் ஊணார் போலும்");

வில்லா ஒரு மலைகொண்டு எயில் வேவக் கணை தொட்டான் - மேருமலையை வில்லாகக்கொண்டு முப்புரங்களும் வெந்து அழிய ஒரு கணையை எய்தவன்; (வில்லா - வில்லாக);

நெல் ஆர் வயல் புடைசூழ் திருநீலக்குடி அரனே - நெல் விளையும் வயல் சூழ்ந்த திருநீலக்குடியில் எழுந்தருளிய ஹரன்;


5)

எய்யாதுயர் இன்பம்பெற எண்ணாய்மட நெஞ்சே

வையார்மழு வாளேந்திறை மதமாவுரி போர்த்தான்

மையாடிய கண்ணாள்தனை வாமம்மகிழ் அண்ணல்

நெய்யாடிய பெருமான்திரு நீலக்குடி அரனே.


எய்யாது உயர்- இன்பம் பெற எண்ணாய் மடநெஞ்சே - வருந்தாமல் பேரின்பம் பெறப் பேதைமனமே எண்ணுவாயாக; (எய்த்தல் - வருந்துதல்; இளைத்தல்);

வை ஆர் மழுவாள் ஏந்து-இறை - கூர்மை மிக்க மழுவாளை ஏந்திய இறைவன்; (வை - கூர்மை);

மதமா உரி போர்த்தான் - மதயானையின் தோலைப் போர்த்தவன்; (உரி - தோல்);

மை ஆடிய கண்ணாள்தனை வாமம் மகிழ் அண்ணல் - மை திகழும் கண்ணியான உமையை இடப்பக்கம் கூறாக விரும்பிய தலைவன்; (வாமம்மகிழ் - மகரஒற்று விரித்தல் விகாரம்);

நெய் ஆடிய பெருமான் திருநீலக்குடி அரனே - எண்ணெயால் (/ நெய்யால்) அபிஷேகம் பெறும் பெருமான், திருநீலக்குடியில் எழுந்தருளிய ஹரன்; (நெய் - எண்ணெய்; வெண்ணெயிலிருந்து பெறும் நெய்); (* இத்தலத்தில் மூலவருக்குத் தைலாபிஷேகம் (எண்ணெய் அபிஷேகம்) விசேஷம்);


6)

பற்றித்தொடர் வினையற்றிடப் பரவாய்மட நெஞ்சே

வெற்றிக்கொடி விடைகாட்டிடும் வேந்தன்சடை மேலே

ஒற்றைக்கலை மதிவைத்தவன் உரகம்புனை மார்பன்

நெற்றிக்கணில் அழலன்திரு நீலக்குடி அரனே.


பற்றித் தொடர் வினை அற்றிடப் பரவாய் மடநெஞ்சே - நம்மைப் பற்றித் தொடர்கின்ற வினை தீரப் பேதைமனமே துதிப்பாயாக;

வெற்றிக்கொடி விடை காட்டிடும் வேந்தன் - இடபச்சின்னத்தைக் காட்டும் வெற்றிக்கொடியுடைய மன்னன்;

சடைமேலே ஒற்றைக்கலை மதி வைத்தவன் - ஒருகலையை உடைய சந்திரனைச் சடையின்மீது சூடியவன்;

உரகம் புனை மார்பன் - பாம்பை மாலை போல மார்பில் அணிந்தவன்;

நெற்றிக்கணில் அழலன் திருநீலக்குடி அரனே - நெற்றிக்கண்ணில் நெருப்பை உடையவன், திருநீலக்குடியில் எழுந்தருளிய ஹரன்; (கணில் - கண்ணில்; இடைக்குறை விகாரம்); (அழல் - நெருப்பு);


7)

சேமத்தினை உறவேஅனு தினமெண்ணிடு மனமே

தூமத்தமும் அரவும்புனை சூலன்கழல் போற்றி

நேமத்தொடு தொழுமால்மலர் போல்நேத்திரம் இடவும்

நேமிப்படை ஈந்தான்திரு நீலக்குடி அரனே.


சேமத்தினை உறவே அனுதினம் எண்ணிடு மனமே - நற்கதி பெற மனமே நாள்தோறும் எண்ணுவாயாக; (சேமம் - க்ஷேமம்);

தூ-மத்தமும் அரவும் புனை சூலன் கழல் போற்றி - தூய ஊமத்தமலரையும் பாம்பையும் அணிந்த சூலபாணியது திருவடியைப் போற்றி;

நேமத்தொடு தொழு மால் மலர் போல் நேத்திரம் இடவும் - முறைப்படி தொழுத திருமால் (ஆயிரத்தில் ஒரு தாமரைமலர் குறையக்கண்டு) பூப் போலத் தன் கண்ணைத் தோண்டித் தூவி அர்ச்சிக்கவும் அது கண்டு இரங்கி; (நேமம் - நியமம் - விதிமுறைமை);

நேமிப்படை ஈந்தான் திருநீலக்குடி அரனே - சக்கராயுதத்தை அளித்தவன் திருநீலக்குடியில் எழுந்தருளிய ஹரன்; (நேமி - சக்கரம்); (படை - ஆயுதம்);


8)

சீற்றப்பழ வினைதீர்ந்திடச் சிந்தித்தெழு நெஞ்சே

காற்றிற்செலும் தேர்நிற்கவும் கடுகிப்பல வாறு

தூற்றிச்சிலை பேர்த்தான்முடி தோளிற்றிட ஊன்றி

நீற்றைப்புனை நிமலன்திரு நீலக்குடி அரனே.


சீற்றப் பழவினை தீர்ந்திடச் சிந்தித்து-ழு நெஞ்சே - சீற்றம் மிக்க பழவினைகள் தீர, மனமே சிந்திப்பாயாக;

காற்றில் செலும் தேர் நிற்கவும், கடுகிப் பலவாறு தூற்றிச், சிலை பேர்த்தான் முடி தோள் இற்றிட ஊன்றி - பறந்து செல்லும் தன் தேர் ஓடாமல் நின்றதும், விரைந்து சென்று பல புன்மொழிகள் சொல்லி இகழ்ந்து, கயிலைமலையைப் பெயர்த்த இராவணனது தலைகளும் புஜங்களும் நசுங்கும்படி ஊன்றியவன்; (கடுகுதல் - விரைதல்); (சிலை - மலை); (இறுதல் - முறிதல்; கெடுதல்; தளர்தல்); (ஊன்றி - ஊன்றியவன்);

நீற்றைப் புனை நிமலன் திருநீலக்குடி அரனே - திருநீற்றைப் பூசியவன் திருநீலக்குடியில் எழுந்தருளிய ஹரன்;


9)

உழலாதுயர் வாழ்வேபெற உள்காய்மட நெஞ்சே

அழலாய்முனம் அயன்மாலிவர் அறியாவகை நீண்டான்

கழலேதொழு மாணிக்கெனக் காலன்றனைக் காய்ந்தான்

நிழலார்மழு உடையான்திரு நீலக்குடி அரனே.


உழலாது உயர் வாழ்வே பெற உள்காய் மடநெஞ்சே - வருந்தி உழலாமல் உயர்ந்த வாழ்வைப் பெறப் பேதைமனமே எண்ணுவாயாக; (உள்குதல் - உள்ளுதல் - நினைத்தல்);

அழலாய் முனம் அயன் மால் இவர் அறியாவகை நீண்டான் - முன்பு பிரமன் திருமால் இவர்களால் அறிய முடியாதபடி ஜோதிவடிவில் நீண்டவன்; (அழல் - தீ);

கழலே தொழு மாணிக்கெனக் காலன்-தனைக் காய்ந்தான் - திருவடியையே வழிபட்ட மார்க்கண்டேயருக்காகக் காலனைச் சினந்து உதைத்து அழித்தவன்;

நிழல் ஆர் மழு உடையான் திருநீலக்குடி அரனே - ஒளி திகழும் மழுவை ஏந்தியவன் திருநீலக்குடியில் எழுந்தருளிய ஹரன்; (நிழல் - ஒளி);


10)

ஆயத்திறன் இல்லார்சொலும் அவவார்த்தையை நீங்கும்

பாயத்திரை சடையேற்றவன் பால்போல்திரு நீற்றன்

சேயைத்தரு கண்ணார்நுதல் சிவனெம்மிறை ஏத்தும்

நேயத்தினர் இடர்தீர்ப்பவன் நீலக்குடி அரனே.


ஆயத் திறன் இல்லார் சொலும் அவ-வார்த்தையை நீங்கும் - ஆராயும் திறன் இல்லாதவர்கள் சொல்லும் அவமொழிகளை நீங்குங்கள்;

பாய் அத்-திரை சடை ஏற்றவன் - பாயும் அந்தக் கங்கையாற்றைச் சடையில் ஏற்றவன்; (திரை - அலை; நதி);

பால் போல் திருநீற்றன் - பால் போன்ற வெண்ணீற்றைப் பூசியவன்;

சேயைத் தரு கண் ஆர் நுதல் சிவன் எம் இறை - முருகனைத் தந்த நெற்றிக்கண்ணன், சிவபெருமான், எம் இறைவன்; (சேய் - மகன்; முருகன்); (நுதல் - நெற்றி);

ஏத்தும் நேயத்தினர் இடர் தீர்ப்பவன் நீலக்குடி அரனே - துதிக்கும் அன்பர்களது துன்பத்தைத் தீர்ப்பவன் திருநீலக்குடியில் எழுந்தருளிய ஹரன்;


11)

வனவாரணம் உரிசெய்தவன் மணிமார்பினில் நூலன்

கனையார்கடல் உமிழ்நஞ்சது கண்டத்தினில் வைத்தான்

இனமாமலர் மணமார்தமிழ் இவைகொண்டடி போற்றி

நினைவார்வினை தீர்ப்பான்திரு நீலக்குடி அரனே.


வன-வாரணம் உரிசெய்தவன் - காட்டு-யானையின் தோலை உரித்தவன்; (வனம் - காடு); (வாரணம் - யானை);

மணி-மார்பினில் நூலன் - அழகிய பவளம் போன்ற மார்பில் முப்புரிநூல் அணிந்தவன்; (மணி - அழகு; பவளம்);

கனை ஆர் கடல் உமிழ் நஞ்சுஅது கண்டத்தினில் வைத்தான் - ஒலிக்கும் பாற்கடல் கக்கிய ஆலகாலத்தைக் கண்டத்தில் வைத்தவன்; (கனை - ஒலி);

இன-மா-மலர், மணம் ஆர் தமிழ், இவைகொண்டு அடி போற்றி நினைவார் வினை தீர்ப்பான் - சிறந்த பூக்களாலும் மணம் கமழும் தமிழ்ப்-பாமாலைகளாலும் திருவடியைப் போற்றி மனத்தில் தியானிப்பவர்களது வினையைத் தீர்ப்பவன்;

திருநீலக்குடி அரனே - திருநீலக்குடியில் எழுந்தருளிய ஹரன்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


Tuesday, August 25, 2026

T.245 - அம்பர் (அம்பல்) - வெஞ்சமரே புரி

2020-07-29

T.245 - அம்பர் (அம்பல்) - வெஞ்சமரே புரி

-------------

(வண்ணவிருத்தம்;

தந்தன தானன .. தனதான)

(அஞ்சன வேல்விழி மடமாதர் - திருப்புகழ் - தஞ்சை)


வெஞ்சம ரேபுரி .. வினையாலே

.. விண்தொடும் ஆசையின் .. விளைவாலே

அஞ்சிடு வேனென .. திடர்தீர

.. அங்கண னேயருள் .. புரியாயே

நஞ்சணி மாமிட .. றுடையானே

.. நங்கையை ஓர்புற(ம்) .. மகிழ்வானே

அஞ்சடை மேலிள .. மதிசூடீ

.. அம்பரில் மேவிய .. பெருமானே.


பதம் பிரித்து:

வெஞ்சமரே புரி வினையாலே,

.. விண் தொடும் ஆசையின் விளைவாலே,

அஞ்சிடுவேன் எனது இடர் தீர,

.. அங்கணனே, அருள் புரியாயே;

நஞ்சு அணி மா மிடறு உடையானே;

.. நங்கையை ஓர் புற(ம்) மகிழ்வானே;

அஞ்சடைமேல் இளமதி-சூடீ;

.. அம்பரில் மேவிய பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர-ஒற்றுக் கெடும் இடம்;

வெஞ்சமரே புரி வினையாலே - கொடிய போரே செய்யும் தீவினையால்; (சமர் - போர்);

விண் தொடும் ஆசையின் விளைவாலே - வானைத் தொடும் அளவு இருக்கும் அளவற்ற ஆசைகளின் விளைவால்; (விண்டொடும் - விண் தொடும்);

அஞ்சிடுவேன் எனது இடர் தீர - அஞ்சுகின்ற எனது துன்பம் தீருமாறு;

அங்கணனே, அருள் புரியாயே - அருள்நோக்கம் உடையவனே, அருள்வாயாக;

நஞ்சு அணி மா மிடறு உடையானே - ஆலகாலத்தை அணிந்த அழகிய கண்டத்தை உடையவனே;

நங்கையை ஓர் புற(ம்) மகிழ்வானே - உமையை இடப்பக்கம் பாகமாக விரும்பியவனே;

ஞ்சடைமேல் இளமதி சூடீ - அழகிய சடையின்மேல் இளந்திங்களைச் சூடியவனே; (அம் - அழகிய);

அம்பரில் மேவிய பெருமானே - அம்பர் என்ற தலத்தில் உறைகின்ற பெருமானே;


வி. சுப்பிரமணியன்

----------- --------------