Saturday, February 22, 2025

P.355 - ஆனைக்கா - நீரார் சடையுடையானை

2016-09-21

P.355 - ஆனைக்கா

---------------------------------

(அறுசீர் விருத்தம் - "விளம் கூவிளம் தேமா" - அரையடி அமைப்பு; * யாப்புக் குறிப்பைப் பிற்குறிப்பில் காண்க)

(சம்பந்தர் தேவாரம் - 2.66.1 - "மந்திர மாவது நீறு")


1)

நீரார் சடையுடை யானை நெற்றியிற் கண்ணுடை யானைக்

காரார் மிடறுடை யானைக் காரிகை பங்குடை யானைக்

கூரார் மழுவுடை யானைக் கோணல் மதியணிந் தானைச்

சீரார் திருவானைக் காவிற் செல்வனைச் சிந்தி மனனே.


நீர் ஆர் சடைடையானை - சடையில் கங்கையை அணிந்தவனை; (ஆர்தல் - பொருந்துதல்; நிறைதல்);

நெற்றியில் கண் உடையானைக் - நெற்றிக்கண்ணனை;

கார் ஆர் மிடறு உடையானைக் - நீலகண்டனை;

காரிகை பங்கு உடையானைக் - பெண்ணொரு பங்கனை;

கூர் ஆர் மழு உடையானைக் - கூரிய மழுவை ஏந்தியவனை;

கோணல் மதி அணிந்தானைச் - வளைந்த திங்களைச் சூடியவனை;

சீர் ஆர் திருவானைக்காவில் செல்வனைச் சிந்தி மனனே - அழகிய, திரு மிகுந்த திருவானைக்காவில் உறையும் செல்வனை, மனமே நீ சிந்திப்பாயாக; (மனன் - மனம்);


2)

சொல்ல அரும்புக ழானைச் சொல்லி வழிபடு வார்க்கு

நல்ல கதியருள் வானை நக்கு மதிலெரித் தானை

அல்லிற் கணம்புடை சூழ ஆடி மகிழ்பெரு மானைச்

செல்வத் திருவானைக் காவிற் செல்வனைச் சிந்தி மனனே.


நக்கு - சிரித்து;

அல் - இரவு;

கணம் - பூதகணங்கள்;


3)

வெங்கா னிடைநடம் ஆடும் விகிர்தனைத் தேவர்கள் எல்லாம்

எங்கோன் எனஅடி போற்றும் இறைவனை ஏந்திழை யாளைப்

பங்கா உடைய பரனைப் பால்மதி தன்னை அணாவும்

தெங்கார் திருவானைக் காவிற் செல்வனைச் சிந்தி மனனே.


வெங்கான் - சுடுகாடு;

விகிர்தன் - சிவன் திருநாமங்களுள் ஒன்று;

ஏந்திழையாள் - உமாதேவி;

பங்கா - பங்காக;

அணாவுதல் - கிட்டுதல்; நெருங்குதல்;

பால்மதி தன்னை அணாவும் தெங்கு ஆர் திருவானைக்காவில் - பால் போன்ற வெண்ணிறம் உள்ள சந்திரனை நெருங்கும்படி உயர்ந்த தென்னைமரங்கள் நிறைந்த திருவானைக்காவில்;


4)

வெண்பொடி மேனியி னானை வெள்விடை ஊர்தியி னானைப்

பண்பொலி பாடல்கள் பாடிப் பாத இணைதொழு வார்க்கு

விண்பொலி வாழ்வருள் வானை வெண்ணாவற் கீழிருந் தானைத்

தெண்புனல் சூழானைக் காவிற் செல்வனைச் சிந்தி மனனே.


வெண்பொடி - திருநீறு;

பண் பொலி பாடல்கள் - இசை பொருந்திய பாடல்கள்;

விண் பொலி வாழ்வு - விண்ணில் விளங்குகின்ற வாழ்வு;

வெண்ணாவற்கீழ் இருந்தானை - திருவானைக்காவில் வெண்ணாவல்-மரத்தின்கீழ் இருந்தவனை; (வெண்ணாவல்-மரம் - திருவானைக்காவில் தலவிருட்சம்);

தெண்-புனல் சூழ் - தெளிந்த நீரால் சூழப்பட்ட;


5)

தரையினிற் சக்கரம் இட்டுச் சலந்தர னைத்தடிந் தானை

அரையினிற் கச்சென நாகம் ஆர்த்த பெருமையி னானை

விரைகமழ் பூக்களைத் தூவி வேழம் வணங்கிய கோனைத்

திரைபுனல் சூழானைக் காவிற் செல்வனைச் சிந்தி மனனே.


தரையினில் சக்கரம் இட்டுச் சலந்தரனைத் தடிந்தானை - தரையில் ஒரு சக்கரத்தை வரைந்து அதுகொண்டு சலந்தராசுரனை அழித்தவனை;

அரையினில் கச்சு என நாகம் ஆர்த்த பெருமையினானை - அரையில் பாம்பைக் கச்சாகக் கட்டிய பெருமை உடையவனை; (ஆர்த்தல் - கட்டுதல்);

விரை கமழ் பூக்களைத் தூவி வேழம் வணங்கிய கோனை - மணம் கமழும் பூக்களைத் தூவி யானை வழிபாடு செய்த தலைவனை; (* திருவானைக்காவின் தலவரலாறு);

திரை-புனல் சூழ் ஆனைக்காவில் - அலைமோதும் காவிரி சூழ்ந்த திருவானைக்காவில்; (திரைதல் / திரைத்தல் - அலையெழுதல்);


6)

எழும்பொழு தீசன் பெயரை இயம்பிடும் அன்பரை வானும்

தொழும்படி உம்பர் இருத்தும் தூயனை மைம்மிடற் றானை

விழும்புனற் கங்கையைச் செம்பொன் வேணிக் கரந்தருள் வானைச்

செழும்புனல் சூழானைக் காவிற் செல்வனைச் சிந்தி மனனே.


எழும்பொழுது ஈசன் பெயரை இயம்பிடும் அன்பரை வானும் தொழும்படி உம்பர் இருத்தும் தூயனை - இறைவன் திருநாமத்தைச் சொல்லிக்கொண்டே துயிலெழும் பக்தர்களைத் தேவரும் வணங்கும்படி சிவலோகத்தில் வைக்கின்ற தூயவனை; (வான் - தேவர்கள்); (உம்பர் - மேலிடம்); (சம்பந்தர் தேவாரம் - 2.18.7 - "பெருமான் கழல் வாழ்க எனா எழுவாள்");

மைம் மிடற்றானை - நீலகண்டனை;

விழும் புனல்-கங்கையைச் செம்பொன் வேணிக் கரந்தருள்வானைச் - வானிலிருந்து விரைந்து இழிந்த கங்கைநதியைச் செம்பொன் போன்ற சடையினுள்ளே ஒளித்தவனை; (வேணி - சடை);

செழும் புனல் சூழ் ஆனைக்காவில் செல்வனைச் சிந்தி மனனே - வளம் மிக்க காவிரியால் சூழப்பட்ட திருவானைக்காவில் உறைகின்ற செல்வனான சிவபெருமானை, மனமே, சிந்திப்பாயாக.


7)

கோணா மனத்தினர் ஆகிக் கும்பிடு வார்க்கருள் வானைப்

பூணா அரவணிந் தானைப் பொருப்பைச் சிலையா வளைத்து

நாணா அரவினைக் கட்டி நள்ளார் புரமெரித் தானைச்

சேணார் மதிலானைக் காவிற் செல்வனைச் சிந்தி மனனே.


கோணா மனத்தினர் ஆகிக் கும்பிடுவார்க்கு அருள்வானை - மனத்தில் வஞ்சம் இன்றி வழிபடும் அன்பருக்கு அருள்செய்பவனை; (கோணா - கோணாத; கோணுதல் - வளைதல்; நெறிபிறழ்தல்);

பூணா அரவு அணிந்தானை - பாம்பை ஆபரணமாக அணிந்தவனை; (பூணா - பூணாக; பூண் - அணி; ஆபரணம்);

பொருப்பைச் சிலையா வளைத்து - மலையை வில்லாக வளைத்து; (பொருப்பு - மலை); (சிலையா - சிலையாக; சிலை - வில்);

நாணா அரவினைக் கட்டி - (அந்த வில்லில்) பாம்பை நாணாகக் கட்டி;

நள்ளார் புரம் எரித்தானை - பகைவர்களுடைய முப்புரங்களை எரித்தவனை; (நள்ளார் - பகைவர்);

சேண் ஆர் மதில் ஆனைக்காவில் செல்வனைச் சிந்தி மனனே - உயர்ந்த மதிலால் சூழப்பட்ட திருவானைக்காவில் உறைகின்ற செல்வனான சிவபெருமானை, மனமே, சிந்திப்பாயாக. (சேண் - உயரம்);


8)

இகழும் மொழிகளைச் சொல்லி இருங்கயி லாயம் எடுத்த

தகவில் தசமுகன் கத்தத் தாள்விரல் ஊன்று பிரானைப்

புகழும் அடியவர் தங்கள் பொல்லா வினையறுப் பானைத்

திகழும் பொழிலானைக் காவிற் செல்வனைச் சிந்தி மனனே.


இரும்-கயிலாயம் எடுத்த - பெரிய கயிலைமலையைத் தூக்கிய;

தகவு இல் தசமுகன் கத்த - நற்குணம் இல்லாத இராவணன் கத்தும்படி;


9)

கோனார் எனவாது செய்த குளிர்மல ரானரி காணா

வானார் கனலுரு வானை மணிதிகழ் மாமிடற் றானை

மானார் கரமுடை யானை மார்பில்வெண் ணூலணிந் தானைத்

தேனார் பொழிலானைக் காவிற் செல்வனைச் சிந்தி மனனே.


"கோன் ஆர்?" என வாது செய்த குளிர்மலரான் அரி காணா - "தலைவன் யார்" என்று வாதிட்ட பிரமன் திருமால் இவர்களால் அடிமுடி காண இயலாத;

வான் ஆர் கனல் உருவானை - வானோங்கிய ஜோதிவடிவினனை;

மணி திகழ் மா மிடற்றானை - கரிய மணி திகழும் அழகிய கண்டனை;

மான் ஆர் கரம் உடையானை - கையில் மானை ஏந்தியவனை;

மார்பில் வெண்ணூல் அணிந்தானை - மார்பில் பூணூல் அணிந்தவனை;

தேன் ஆர் பொழில் ஆனைக்காவிற் செல்வனைச் சிந்தி மனனே - வண்டுகள் ஒலிக்கும் சோலை சூழ்ந்த திருவானைக்காவில் உறைகின்ற செல்வனான சிவபெருமானை, மனமே, சிந்திப்பாயாக. (தேன் - வண்டு); (ஆர்த்தல் - ஒலித்தல்);


10)

ஒருவழி தன்னை உணரார் உளறிடும் பொய்களை எல்லாம்

பொருளென எண்ணி மயங்கேல் பூதப் படையுடை எம்மான்

அருளெனப் போற்றி வணங்கில் அல்லற் கடல்கடப் பிப்பான்

திருமலி தென்னானைக் காவிற் செழுநீர்த் திரளாம் சிவனே.


மயங்கேல் - மயங்காதே;

"பூதப்-படையுடை எம்மான்! அருள்!" எனப் போற்றி வணங்கில் அல்லற்-கடல் கடப்பிப்பான் - "பூதப்படை உடைய எம்மானே! அருள்க!" என்று போற்றி வணங்கினால் துன்பக்கடலைக் கடக்கச்செய்வான்;

திரு மலி தென் ஆனைக்காவிற் செழுநீர்த் திரள் ஆம் சிவனே - திரு மிக்க அழகிய ஆனைக்காவில் உறைகின்ற, செழுநீர்த் திரள் ஆன சிவபெருமான்; (அப்பர் தேவாரம் - 6.63.1 - "தென்னானைக் காவானைத் தேனைப் பாலைச் செழுநீர்த் திரளைச்சென் றாடி னேனே");


11)

நீர்மலி செஞ்சடை மீது நீள்மதி பாம்பணிந் தானே

கார்மலி கண்டத்தி னானே கல்லால் நிழலினாய் என்று

பேர்பல சொல்லி வணங்கிற் பெருந்துணை ஆகிப் புரப்பான்

சீர்மலி தென்னானைக் காவிற் செழுநீர்த் திரளாம் சிவனே.


நீர் மலி செஞ்சடைமீது நீள்-மதி பாம்பு அணிந்தானே - "கங்கையை அணிந்த சடையின்மேல் பிறையையும் பாம்பையும் சூடியவனே;

கார் மலி கண்டத்தினானே - நீலகண்டனே;

கல்லால் நிழலினாய் என்று பேர்பல சொல்லி வணங்கில் - கல்லால-மரத்தின்கீழ் வீற்றிருப்பவனே" என்று பல திருநாமங்களைச் சொல்லி வணங்கினால்;

பெருந்-துணை ஆகிப் புரப்பான் - பெரிய துணை ஆகிக் காப்பவன்;

சீர் மலி தென்-ஆனைக்காவில் செழுநீர்த்-திரள் ஆம் சிவனே - சீர் மிகுந்த அழகிய ஆனைக்காவில் செழுநீர்த்திரள் ஆன சிவபெருமான்;


பிற்குறிப்பு: யாப்புக் குறிப்பு:

  • அறுசீர் விருத்தம் - விளம் கூவிளம் தேமா - அரையடி அமைப்பு;

  • அரையடியினுள் வெண்டளை அமையும். 3-ஆம் 4-ஆம் சீர்களிடையே வெண்டளை தேவை இல்லை.

  • அரையடிகள்தோறும் ஈற்றுச்சீர் மாச்சீர். ((i.e. எல்லா அடிகளிலும் 3-ஆம், 6-ஆம் சீர்கள் மாச்சீர்);

  • விளச்சீர் வரும் இடத்தில் (1,2, 4,5-ஆம் சீர்கள்) ஒரோவழி மாங்காய்ச்சீர் வரக்கூடும்.

  • விளச்சீர் வரும் இடத்தில் (1,2, 4,5-ஆம் சீர்கள்) மாச்சீர் வரலாம். அப்படி அவ்விடத்தில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையசையில் தொடங்கும்.

  • அரையடி நேரசையில் தொடங்கினால் 8 எழுத்து; அரையடி நிரையசையில் தொடங்கினால் 9 எழுத்து.

(சம்பந்தர் தேவாரம் - 2.66.1 - "மந்திர மாவது நீறு")

(அப்பர் தேவாரம் - 4.2.1 - "சுண்ணவெண் சந்தனச் சாந்தும்")


வி. சுப்பிரமணியன்

----------- --------------


P.354 - கன்றாப்பூர் - உம்பனை முப்புரங்கள்

2016-08-18

P.354 - கன்றாப்பூர்

---------------------------------

(அறுசீர் விருத்தம் - விளம் மா தேமா - அரையடி வாய்பாடு)

(திருநேரிசை அமைப்பு) (அப்பர் தேவாரம் - 4.62.1 - "வேதியா வேத கீதா")


1)

உம்பனை முப்பு ரங்கள் ஒருங்கெரி வீழ ஒற்றை

அம்பினை ஏவி னானை அணிதிகழ் கொன்றை சூடும்

நம்பனைக் கன்றாப் பூரில் நடுதறி அப்பன் தன்னை

வம்பவிழ் மலர்கொண் டேத்த வல்வினை மாயு மன்றே.


உம்பனை - மேலானவனை; (உம்பன் - மேலோன்);

முப்புரங்கள் ஒருங்கு எரி வீழ ஒற்றை அம்பினை ஏவினானை - மூன்று கோட்டைகளும் ஒரே சமயத்தில் தீயில் விழும்படி ஓர் அம்பைச் செலுத்தியவனை;

அணிதிகழ் கொன்றை சூடும் நம்பனைக் - அழகிய கொன்றைமலரைச் சூடிய சிவனை; (நம்பன் - சிவன் திருநாமம் - விரும்பத்தக்கவன்);

கன்றாப்பூரில் நடுதறி அப்பன் தன்னை - திருக்கன்றாப்பூரில் உறைகின்ற நடுதறியப்பன் என்ற நாமம் உடைய ஈசனை;

வம்பு அவிழ் மலர் கொண்டு ஏத்த வல்வினை மாயுமன்றே - மணம் கமழும் மலர்களால் வழிபட்டால் வலிய வினைகள் அழியும்;


2)

வேதனைத் தேவர் போற்றும் விமலனைத் தோடி லங்கு

காதனைச் சடையின் மீது கதிர்மதி அரவம் சூடும்

நாதனைக் கன்றாப் பூரில் நடுதறி அப்பன் தன்னைக்

காதலால் ஏத்து வார்தம் கடுவினை கழலு மன்றே.


வேதனைத் - வேதங்களின் வடிவாயுள்ளவனை, அல்லது வேதங்களை அருளிச்செய்தவனை;

தேவர் போற்றும் விமலனைத் - வானோr வணங்கும் தூயனை; ("வேதனைத்-தேவர்" என்று சேர்த்து, "வருத்தமுற்ற தேவர்கள்" என்றும் பொருள்கொள்ளல் ஆம்);

தோடு இலங்கு காதனை - ஒரு காதில் தோடு அணிந்தவனை;

காதலால் ஏத்துவார்தம் - அன்பால் துதிப்பவர்களது;

கடுவினை கழலுமன்றே - கொடிய வினைகள் நீங்கும்; (கடுமை - கொடுமை); (கழல்தல் - நீங்குதல்);


3)

வானவர் தமக்கி ரங்கி வார்கடல் நஞ்சு தன்னைப்

போனகம் செய்த கோனைப் புனிதனை ஆல நீழல்

ஞானனைக் கன்றாப் பூரில் நடுதறி அப்பன் தன்னைத்

தேனலர் தூவி வாழ்த்தத் தீவினை தீரு மன்றே.


போனகம் செய்தல் - உண்ணுதல்; (போனகம் - உணவு);

வார்-கடல் - நீண்ட கடல்;

ஆல-நீழல் ஞானனை - கல்லால-மரத்தின்கீழ் இருக்கும் தட்சிணாமூர்த்தியை; (ஞானன் - ஞானவடிவினன்);

தேன்-அலர் - வாசமலர்கள்;


4)

மட்டினை யுடையம் பெய்த மதனுடல் நீறு செய்த

சிட்டனை ஊணி ரக்கும் செல்வனை இருளில் ஆடும்

நட்டனைக் கன்றாப் பூரில் நடுதறி அப்பன் தன்னை

இட்டமாய் ஏத்து வார்தம் இருவினை மாயு மன்றே.


மட்டினையுடை அம்பு எய்த - வாசனை உடைய அம்பினை (மலர்க்கணையை) எய்த; (மட்டு - வாசனை; தேன்);

மதன் உடல் நீறு செய்த சிட்டனை - மன்மதனது உடலைச் சாம்பலாக்கிய மேலானவனை; (மதன் - காமன்); (சிட்டன் - சிஷ்டாசாரம் உடையவன்; சிரேஷ்டன்);

ஊண் இரக்கும் செல்வனை - உணவை யாசிக்கும் செல்வனை; (ஊண் - உணவு);

இருளில் ஆடும் நட்டனை - இருளில் ஆடுகின்ற கூத்தனை;

இட்டம் - இஷ்டம்; விருப்பம்;


5)

தக்கனைத் தலைய ரிந்த தலைவனை ஆல வாயிற்

சொக்கனை அக்க ணிந்த தூயனைப் பலிதி ரிந்த

நக்கனைக் கன்றாப் பூரில் நடுதறி அப்பன் தன்னைத்

தக்கநன் மலரிட் டேத்தித் தாழ்பவர் தாழ்வி லாரே.


தக்கனைத் தலை அரிந்த தலைவனை - தக்கன் வேள்வியை அழித்து அவன் தலையை வெட்டிய தலைவனை;

ஆலவாயிற் சொக்கனை - மதுரையில் உறையும் சொக்கப்பெருமானை;

அக்கு அணிந்த தூயனைப் - எலும்பை மாலையாக அணிந்த தூயவனை;

பலி திரிந்த - பிச்சை ஏற்றுத் திரிந்த;

நக்கன் - திகம்பரன்;

தக்க நன்-மலர் இட்டு ஏத்தித் தாழ்பவர் தாழ்வு இலாரே - தகுந்த நல்ல பூக்களைத் தூவி வணங்கும் அடியவர்களுக்கு ஒரு குறையும் இல்லை; (தாழ்வு - குற்றம்; துன்பம்; வறுமை);


6)

வில்லென மலையை ஏந்தி மேவலர் எயில்கள் எய்ய

வல்லனை அடிய வர்க்கா வன்னமன் தனையு தைத்த

நல்லனைக் கன்றாப் பூரில் நடுதறி அப்பன் தன்னைச்

சொல்லிநை கின்ற அன்பர் தொல்வினை தொலையு மன்றே.


மேவலர் எயில்கள் எய்ய வல்லனை - பகைவர்களது முப்புரங்களை எய்த விரனை; (மேவலர் - பகைவர்); (எயில் - கோட்டை); (வல்லன் - வல்லவன் - ஆற்றல் உடையவன்);

அடியவர்க்கா வன்-நமன்-தனை உதைத்த நல்லனை - மார்க்கண்டேயருக்காகக் கொடிய கூற்றுவனை உதைத்த நல்லவனை;

சொல்லி நைகின்ற அன்பர் தொல்வினை தொலையுமன்றே - போற்றி உள்ளம் உருகுகின்ற பக்தர்களது பழவினைகள் அழியும்;


7)

பதியென உம்பர் போற்றும் பரமனை ஈறி லாத

நிதியனைத் தோளில் தூய நீற்றனைச் சென்னி மீது

நதியனைக் கன்றாப் பூரில் நடுதறி அப்பன் தன்னைத்

துதிசெயும் அன்பர் தங்கள் தொல்வினை தொலையு மன்றே.


பதி என உம்பர் போற்றும் பரமனை - தலைவன் என்று தேவர்களால் போற்றப்படும் பரமனை;

ஈறு இலாத நிதியனை - முடிவில்லாத அருள்நிதியை; அளவில்லாத திரு உடையவனை;

தோளில் தூய நீற்றனை - புஜங்களில் தூய திருநீற்றைப் பூசியவனை;

சென்னிமீது நதியனை - கங்காதரனை;

தொல்வினை - பழவினை;


8)

தூயனை இகழ்ந்து வெற்பைத் தூக்கினான் தனைநெ ரித்த

தேயனை அந்தி வான்போல் செய்யனைத் தேவர் கட்கு

நாயனைக் கன்றாப் பூரில் நடுதறி அப்பன் தன்னைத்

தூயநன் மலர்கொண் டேத்தத் தொல்வினை தொலையு மன்றே.


தூயன் - தூயவன்; புனிதன்;

இகழ்ந்து வெற்பைத் தூக்கினான்-தனை நெரித்த - ஏசிக் கயிலைமலையைப் பெயர்த்த இராவணனை நசுக்கிய; (வெற்பு - மலை);

தேயன் - தியானிக்கப்படுபவன்;

அந்தி-வான் போல் செய்யனை - மாலை-நேரத்து வானம் போலச் செம்மேனி உடையவனை; (செய் - செம்மை);

தேவர்கட்கு நாயனை - தேவர்களுக்குத் தலைவனை; (நாயன் - தலைவன்; கடவுள்);


9)

அம்புய னோடு மாலும் அடிமுடி நேடி வாடி

எம்பிரான் என்று போற்ற எல்லையில் எரிய தான

நம்பியைக் கன்றாப் பூரில் நடுதறி அப்பன் தன்னைக்

கும்பிடும் அன்பர் தங்கள் கொடுவினை தீரு மன்றே.


அம்புயன் - தாமரையில் உறையும் பிரமன்;

நேடி - தேடி;

எம் பிரான் - எம் தலைவன்;

எல்லை இல் எரிஅது ஆன நம்பியை - அளவு இல்லாத சோதி ஆகிய ஈசனை; (நம்பி - ஆணிற் சிறந்தவன்; கடவுள்);


10)

நெஞ்சினில் இருளை வைத்த நீசர்சொல் உரைகொள் ளேன்மின்

வெஞ்சின ஏற தேறும் விமலனை மிடறு தன்னில்

நஞ்சனைக் கன்றாப் பூரில் நடுதறி அப்பன் தன்னை

வஞ்சனை இன்றி வாழ்த்த வல்வினை மாயு மன்றே.


நீசர் சொல் உரை கொள்ளேன்மின் - கீழோர் சொல்லும் சொற்களை நீங்கள் மதிக்கவேண்டா;

வெஞ்-சின ஏறுஅது ஏறும் விமலனை - கொடிய கோபம் உடைய இடபத்தை வாகனமாக உடைய, தூயனை;

மிடறு தன்னில் நஞ்சனை - கண்டத்தில் விடத்தை மறைத்தவனை;


11)

வாசனை மிக்க கொன்றை மலரணி சடையி னானைத்

தேசனைத் ஈசன் தன்னைச் செருக்குடைத் தக்கன் வேள்வி

நாசனைக் கன்றாப் பூரில் நடுதறி அப்பன் தன்னைப்

பூசனை செய்வார்க் கில்லை புவிமிசைப் பிறவி தானே.


தேசனை - ஒளிவடிவினனை;

செருக்குடைத் தக்கன் வேள்வி நாசனை - ஆணவம் மிக்க தக்கன் செய்த வேள்வியை அழித்தவனை;

பூசனை செய்வார்க்கு இல்லை புவிமிசைப் பிறவிதானே - வழிபடும் பக்தர்கள் இம்மண்ணுலகில் மீண்டும் பிறவாத நிலை பெறுவார்கள்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


Thursday, February 20, 2025

N.043 - சுந்தரர் துதி - துயிலுங்கால் பாதமலர்

N.043 - சுந்தரர் துதி - துயிலுங்கால் பாதமலர்

2016-08-07

N.043 - சுந்தரர் துதி - சுந்தரர் குருபூஜை - ஆடிச் சுவாதி - 2016

----------------

(நேரிசை வெண்பா)

1)

துயிலுங்கால் பாதமலர் சூட்டியருள் செய்த

அயிற்சூலம் ஏந்தியை ஆடல் பயில்வானைத்

தோழன் எனப்பெற்ற சுந்தரர்பொற் றாள்போற்றித்

தாழும் எனது தலை.


* திருவதிகைப் புறத்தே சித்தவட-மடத்தில் சுந்தரர் உறங்கிக்கொண்டிருந்தபோது இறைவன் கிழ-அந்தணர் உருவில் வந்து சுந்தரர் தலையில் தன் திருவடியை வைத்து அருளியதைச் சுட்டியது.

* சுந்தரர் தேவாரம் - 7.38.1 - "தம்மானை அறியாத சாதியார் உளரே"


துயிலுங்கால் - உறங்கும்பொழுது;

அயிற்சூலம் ஏந்தி - கூர்மை பொருந்திய சூலத்தை ஏந்தியவன்;

ஆடல் பயில்வான் - ஆடல் செய்பவன்;

பொற்றாள் - பொன் போன்ற திருவடிகள்;


2)

மழுவாளர் தாமே மறையவராய் வந்து

பழவோலை காட்டிப் பணிகொள் அழகன்

திருநாவ லூராளி செந்தமிழை நாவே

ஒருநாளும் ஓவா துரை.


மழுவாளர் தாமே மறையவராய் வந்து - மழுவாள் ஏந்தும் ஈசரே அந்தணர் உருவில் வந்து;

பழ-ஓலை காட்டிப் பணிகொள் அழகன் - ஒரு பழைய அடிமை-ஓலையைக் காட்டி ஆட்கொண்ட சுந்தரன்;

திருநாவலூராளி செந்தமிழை, நாவே, ஒரு நாளும் ஓவாது உரை - திருநாவலூர்க்கோன் ஆன சுந்தரர் பாடியருளிய தேவாரத்தை, நாக்கே, நீ நாள்தோறும் பாடு; (ஓவுதல் - ஒழிதல்; நீங்குதல்; மறத்தல்);


3)

முதலையுண்ட பிள்ளையை முக்கணுடை மூவா

முதலருளால் மீட்டளித்த மொய்ம்பர் இதழியைச்

சூடரனை ஆரூரில் தூதனுப்ப வல்லவர்

பாடல்கள் உய்க்கும் பரம்.


* புக்கொளியூர் அவிநாசியில் முதலை உண்ட பாலகனைப் பதிகம் பாடிச் சுந்தரர் மீட்டதைச்

சுட்டியது;

மொய்ம்பு - வலிமை;

இதழி - கொன்றைமலர்;

உய்த்தல் - கொண்டுபோதல்; கொடுத்தல்;

பரம் - மேலுலகம்; மோட்சம்;


வி. சுப்பிரமணியன்

------------- -------------


Wednesday, February 19, 2025

P.353 - திலதைப்பதி - கண்ணீர் மல்கி

2016-07-24

P.353 - திலதைப்பதி

---------------------------------

(அறுசீர் விருத்தம் - மா மா மா மா மா மாங்காய் - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 1.69.1 - "பூவார் மலர்கொண் டடியார்")

(சுந்தரர் தேவாரம் - 7.95.1 - "மீளா அடிமை")


1)

கண்ணீர் மல்கித் தொழுவார் தம்மைக் காக்கும் அருளாளன்

தண்ணீர் தன்னைத் தாங்கு சடையன் சாந்தம் அதுவாக

வெண்ணீ றணியும் வேத நாவன் விடையன் இடமென்பர்

தெண்ணீர் அரிசிற் கரையில் திகழும் திலதைப் பதிதானே.


கண்ணீர் மல்கித் தொழுவார் தம்மைக் காக்கும் அருளாளன் - கண்ணீர் பெருக மனம் உருகி வழிபடுவாரைக் காக்கின்ற அருளாளன்;

தண்ணீர் தன்னைத் தாங்கு சடையன் - குளிர்ந்த கங்கையைச் சடையில் தாங்கியவன்;

சாந்தம் அதுவாக வெண்ணீறு அணியும் வேத-நாவன் - சந்தனம் போல வெண்-திருநீற்றைப் பூசிய, வேதங்களைப் பாடியருளியவன்;

விடையன் இடம் என்பர் - இடபவாகனன் உறையும் தலம் ஆவது;

தெண்ணீர் அரிசிற்-கரையில் திகழும் திலதைப்பதிதானே - தெளிந்த நீர் பாயும் அரிசிலாற்றின் கரையில் உள்ள திலதைப்பதி;


2)

பால்போல் நீறு பூசிப் பணியும் பத்தர் இடர்தீர்ப்பான்

நால்வே தத்தை ஓது நாவன் நாரி ஒருபங்கன்

நால்வாய் தன்னை உரித்துப் போர்த்த நாதன் இடமென்பர்

சேல்பாய் அரிசிற் றென்பால் திகழும் திலதைப் பதிதானே.


நால்வாய் - யானை; (தொங்கும் வாய்);

அரிசிற் றென்பால் - அரிசில் + தென்பால் - அரிசிலாற்றின் தென்கரையில்;


3)

அரையா அருளாய் என்று போற்றும் அன்பர்க் கணியாவான்

விரையார் கொன்றை வேணி மீது விரும்பிப் புனையீசன்

குரையார் கழலன் நரைவெள் ளேற்றுக் குழகன் இடமென்பர்

திரையார் அரிசில் தென்பால் திகழும் திலதைப் பதிதானே.


அரையா - அரசனே;

அணி ஆவான் - அருகு இருப்பான்;

விரை ஆர் கொன்றை - மணம் பொருந்திய கொன்றைமலர்;

வேணி - சடை;

குரை ஆர் கழலன் - ஒலிக்கின்ற கழலை அணிந்தவன்;

திரை ஆர் அரிசில் தென்பால் - அலை பொருந்திய அரிசிலாற்றின் தென்கரையில்;


4)

நீறு பூசி நித்தல் ஏத்தும் நேயர்க் கருள்நாதன்

ஆறு சூடி அங்கை மழுவன் அம்பொற் கொடிகூறன்

ஏறு காட்டும் கொடியை உடைய எந்தை இடமென்பர்

சேறு காட்டும் செய்ய ணிந்த திலதைப் பதிதானே.


அம் பொற்கொடி கூறன் - அழகிய பொற்கொடி போன்ற உமையை ஒரு கூறாக உடையவன்; (* பொற்கொடியம்மை - திலதைப்பதியில் இறைவி திருநாமம்);

சேறு காட்டும் செய் அணிந்த - சேறு திகழும் வயல்கள் சூழ்ந்த; (செய் - வயல்);


5)

அன்ற லர்ந்த பூக்கள் தூவி அடியைத் தொழுவார்க்கு

நன்று நல்கும் நம்பன் இன்பன் நஞ்சம் அணிகண்டன்

மன்றில் மங்கை காண ஆடும் மன்னன் இடமென்பர்

தென்றல் தன்னில் வாசம் வீசு திலதைப் பதிதானே.


அன்று அலர்ந்த பூக்கள் - நாண்மலர்கள்;

நம்பன் - சிவன் திருநாமம் - விரும்பத்தக்கவன்;

நஞ்சம் - விஷம்;

மன்று - அரங்கு;

மங்கை - உமாதேவி;


6)

மறைசொல் மாணி வாழ நமனை மார்பில் உதைசெய்தான்

கறைகொள் கண்டன் அண்டர் அண்டன் கங்கைச் சடைமீது

குறைவெண் திங்கள் சூடி ஆடு கூத்தன் இடமென்பர்

சிறைவண் டறையும் நறையார் சோலைத் திலதைப் பதிதானே.


மறை - வேதம்;

மாணி - மார்க்கண்டேயர்;

அண்டர் அண்டன் - தேவதேவன்;

சிறை-வண்டு அறையும் நறை ஆர் சோலை - சிறகுகளை உடைய வண்டுகள் ஒலிக்கின்ற தேன் (/ வாசனை) நிறைந்த சோலை சூழ்ந்த; (நறை - தேன்; வாசனை);


7)

போதை இட்டுப் பொற்ப தத்தைப் போற்றும் அடியார்தம்

வாதை தீர்த்து வரம ளிக்கும் வள்ளல் ஒருபக்கம்

மாதை வைத்த முக்கட் பரமன் வைகும் இடமென்பர்

சீதை கேள்வன் வந்து வாழ்த்து திலதைப் பதிதானே.


போதை இட்டு - பூக்களைத் தூவி;

வாதை - துன்பம்;

வைகுதல் - தங்குதல்; உறைதல்;

சீதை கேள்வன் வந்து வாழ்த்து - இராமன் வந்து வழிபாடு செய்த; (வாழ்த்துதல் - துதித்தல்); (* இராமர் இத்தலத்தில் வழிபாடு, தர்ப்பணம் செய்தார் என்பது இத்தலபுராணச் செய்தி);


8)

வான்வெற் பசைத்த வல்ல ரக்கன் வாய்பத் தழவூன்று

கோன்கற் சிலையைக் கையில் ஏந்திக் கூடார் புரமெய்தான்

நான்கி ரட்டி தோளன் நாக நாணன் இடமென்பர்

தேன்கள் ஆர்க்கும் சோலை சூழ்ந்த திலதைப் பதிதானே.


வான்-வெற்பு அசைத்த வல்-அரக்கன் வாய் பத்து அழ ஊன்று கோன் - பெருமை மிக்க உயர்ந்த கயிலைமலையை அசைத்த வலிய அரக்கனான இராவணனின் வாய்கள் பத்தும் அழும்படி விரலை ஊன்றி அவனை நசுக்கிய தலைவன்;

கற்சிலையைக் கையில் ஏந்திக் கூடார் புரம் எய்தான் - மேருமலையை வில்லாகக் கையில் ஏந்திப் பகைவர்களது முப்புரங்களை எய்தவன்; (கல் - மலை); (சிலை - வில்); (கூடார் - பகைவர்);

நான்கு இரட்டி தோளன் - எட்டுப்-புஜங்கள் உடையவன்;

நாக-நாணன் - நாகப்பாம்பை அரைநாணாகக் கட்டியவன்;

தேன்கள் ஆர்க்கும் - வண்டுகள் ஒலிக்கின்ற; (தேன் - வண்டு); (ஆர்த்தல் - ஒலித்தல்);


9)

அன்னம் ஏனம் ஆய இருவர் அறியா அழல்வண்ணன்

சென்னி தாழ்த்தும் அன்பர் தங்கள் சிந்தை பிரியாதான்

கன்னல் வில்லி தன்னைக் காய்முக் கண்ணன் இடமென்பர்

செந்நெல் வளரும் செய்ய ணிந்த திலதைப் பதிதானே.


அன்னம் ஏனம் ஆய இருவர் அறியா அழல்வண்ணன் - அன்னப்பறவையும் பன்றியும் ஆகிய பிரமன் திருமால் என்ற இருவரால் அறிய ஒண்ணாத ஜோதிவடிவினன்;

சென்னி - தலை;

கன்னல் வில்லி தன்னைக் காய் முக்கண்ணன் - கரும்பை வில்லாக ஏந்தும் மன்மதனை எரித்த நெற்றிக்கண்ணன்; (கன்னல் - கரும்பு); (வில்லி - வில்லை ஏந்தியவன்);

செந்நெல் வளரும் செய் அணிந்த - சிறந்த நெற்பயிர் வளர்கின்ற வயல் சூழ்ந்த; (செய் - வயல்);


10)

கோனைத் தெளியாக் குருடர் சொல்லும் குற்ற மொழிநீங்கும்

மானைத் தீயை மழுவை ஏந்து வானோர் பெருமான்வெங்

கானை ஆடும் களமென் றுடைய கருத்தன் இடமென்பர்

தேனை உண்டு வண்டு பாடு திலதைப் பதிதானே.


கோனைத் தெளியாக் குருடர் - இறைவனை அறியாதவர்கள்;

நீங்கும் - அவற்றை நீங்குங்கள்; ("அவை அழியும்" என்றும் பொருள்கொள்ளல் ஆம்);

மானைத் தீயை மழுவை ஏந்து வானோர் பெருமான் - கையில் மான், மழு, நெருப்பு இவற்றை ஏந்திய, தேவர்கள் தலைவன்;

வெங்கானை ஆடும் களம் என்று உடைய கருத்தன் - சுடுகாட்டைத் திருநடம் செய்யும் சபை என்று உடைய கடவுள்; (வெங்கான் - கொடிய சுடுகாடு); (களம் - சபை; இடம்); (கருத்தன் - கர்த்தா - கடவுள்)


11)

மௌவல் நந்தி வட்டம் தூவி வணங்கும் அடியார்கள்

எவ்வ ரங்கள் இரப்ப ரேனும் என்றும் இலையென்னா(து)

அவ்வ ரங்கள் அருளும் சடையன் அமரும் இடமென்பர்

செவ்வ ழிப்பண் வண்டார் சோலைத் திலதைப் பதிதானே.


மௌவல் நந்தி வட்டம் தூவி வணங்கும் அடியார்கள் - மல்லிகை, நந்தியாவட்டம் முதலிய பூக்களைத் தூவி வழிபடும் அடியவர்கள்; (மௌவல் - மல்லிகை); (அப்பர் தேவாரம் - 4.98.1 - "நந்திவட்டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே");

எவ்வரங்கள் இரப்பரேனும் என்றும் இலை என்னாது - என்ன வரங்களை யாசித்தாலும், ஒருநாளும் "இல்லை" என்று சொல்லாமல்;

அவ்வரங்கள் அருளும் சடையன் அமரும் இடம் என்பர் - அந்த வரங்களையெல்லாம் அருள்கின்ற பெருமான், சடையை உடையவன் விரும்பி உறையும் தலம் ஆவது; (அமர்தல் - விரும்புதல்);

செவ்வழிப் பண் வண்டு ஆர் சோலைத் திலதைப்பதிதானே - செவ்வழி என்ற பண்ணை வண்டுகள் பாடுகின்ற சோலை திகழும் திலதைப்பதி ஆகும்; (செவ்வழி - ஒரு பண்ணின் பெயர்);

(சம்பந்தர் தேவாரம் - 1.132.7 - "வண்டு வேறாய உரு ஆகிச் செவ்வழி நற்பண் பாடும் மிழலையாமே");


வி. சுப்பிரமணியன்

----------- --------------