Friday, September 9, 2022

06.04.021 – மாணிக்க வாசகர் துதி - கள்ளாரும் கடிமலர்மேல்

06.04.021 – மாணிக்க வாசகர் துதி கள்ளாரும் கடிமலர்மேல்

2012-06-24

06.04.021 - மாணிக்க வாசகர் துதி - மாணிக்கவாசகர் குருபூஜை - ஆனி மகம் - 2012

----------------------------------------

1) ---- நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா ----

கள்ளாரும் கடிமலர்மேல் உறைவானும் கரியானும்

புள்ளேன மாய்ப்பறந்தும் புவியிடந்தும் காண்பரிய

வெள்ளேற்றன் மென்மலர்த்தாள் மிகநினைந்து மனமுருகித்

தெள்ளேணம் பாடுமணி வாசகர்சே வடிபோற்றி.


கள் ஆரும் கடி-மலர்மேல் உறைவானும் கரியானும் - தேன் நிறைந்த வாசம் மிகுந்த தாமரைமேல் உறையும் பிரமனும் திருமாலும்; (கரியான் - திருமால்);

புள் ஏனம் ஆய்ப் பறந்தும் புவி இடந்தும் காண்பரிய - பறவையும் பன்றியும் ஆகிப் பறந்து சென்றும் நிலத்தை அகழ்ந்தும் காண ஒண்ணாத;

வெள் ஏற்றன் மென்-மலர்த்தாள் மிக நினைந்து மனம் உருகித் - வெள்ளை இடபத்தின்மேல் வரும் சிவபெருமானது மென்மையான மலர்ப்பாதத்தை மிகவும் எண்ணி மனம் உருகி;

தெள்ளேணம் பாடு மணிவாசகர் சேவடி போற்றி - திருவாசகத்தில் ஒரு பகுதியான திருத்தெள்ளேணத்தைப் பாடியருளிய மாணிக்கவாசகரது சிவந்த திருவடிகளுக்கு வணக்கம்;


2) ---- நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா ----

ஆத்தங்கொள் மனத்தாலே அரிவையொரு பாகத்தன்

பூத்துன்று சடையான்றன் பொன்னடிக்கே சென்றூதாய்

கோத்தும்பீ என்றென்று கோதில்லாத் தமிழ்மாலை

கோத்தீந்த வாதவூர்க் கோமான்றன் தாள்போற்றி.


ஆத்தம் - ஆப்தம் - அன்பு;

அரிவைரு பாகத்தன் - உமைபங்கன்;

பூத் துன்று சடையான் - பூக்கள் செறிந்திருக்கும் சடையினன்;

கோத்தும்பீ - அரசவண்டே; (திருக்கோத்தும்பி - திருவாசகத்தில் ஒரு பகுதி);

கோத்து ஈந்த - தொடுத்து அளித்த;

கோமான் - பெருமையிற் சிறந்தோன்; குரு;


வி. சுப்பிரமணியன்

-------------------------------- -------------------------------


No comments:

Post a Comment