2014-10-30
P.251 - கொடிமாடச் செங்குன்றூர் (திருச்செங்கோடு)
----------------------------------
(நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
(சம்பந்தர் தேவாரம் - 2.48.1 - "கண்காட்டு நுதலானும்")
1)
வெளியபொடி
திகழ்கின்ற மேனியனை வேதியனைத்
தளிர்மதியும் திரைபுனலும் சடைமீது தரித்தவனைக்
குளிர்மதியம் அணவுகின்ற கொடிமாடச் செங்குன்றூர்
எளியவனை இருபோதும் எண்ணிலிரு வினைவீடே.
வெளிய பொடி திகழ்கின்ற மேனியனை - வெண்திருநீறு திகழும் திருமேனியனை; (வெளிய - வெள்ளிய - வெண்மையான); (சம்பந்தர் தேவாரம் - 1.2.5 - "செய்யமேனி வெளியபொடிப் பூசுவர்");
வேதியனைத் - வேதப்பொருளை; வேதம் ஒதுபவனை;
தளிர்மதியும் திரைபுனலும் சடைமீது தரித்தவனைக் - இளந்திங்களையும் அலைக்கின்ற கங்கையையும் சடைமேல் சூடியவனை; (திரைதல் / திரைத்தல் - அலையெழுதல்);
குளிர்மதியம் அணவுகின்ற கொடிமாடச் செங்குன்றூர் - குளிர்ந்த திங்கள் அணுகும் (= உயரம் மிக்க) திருச்செங்கோட்டில் உறைகின்ற; (அணவுதல் - அணுகுதல்; தழுவுதல்); (கொடிமாடச் செங்குன்றூர் - திருச்செங்கோடு);
எளியவனை இருபோதும் எண்ணில் இருவினை வீடே - (அன்பர்க்கு) எளியவனை இருவேளையும் எண்ணினால் இருவினைகள் அழியும்; (வீடு - நீக்கம்; முடிவு);
2)
ஏலமலர்க் குழலாளை இடப்பக்கம் உடையானை
ஆலமர நீழலில்நல் லறஞ்சொன்ன ஆரியனைக்
கோலமதி தடவுகின்ற கொடிமாடச் செங்குன்றூர்
நீலமணி மிடற்றானை நினையவிரு வினைவீடே.
ஏலமலர்க் குழலாளை இடப்பக்கம் உடையானை - வாசமலர்க்கூந்தலை உடைய உமாதேவியை இடப்பாகமாக உடையவனை;
ஆலமரநீழலில் நல்லறம் சொன்ன ஆரியனைக் - கல்லாலின்கீழ் வேதப்பொருளை உபதேசித்த குருவை;
கோலமதி தடவுகின்ற கொடிமாடச் செங்குன்றூர் - அழகிய திங்கள் தொடும்படி உயர்ந்த திருச்செங்கோட்டில் உறைகின்ற; (கோலம் - அழகு);
நீலமணி மிடற்றானை நினையவிரு வினைவீடே - நீலமணிகண்டனை நினைந்தால் இருவினை நீங்கும்; (மிடறு - கண்டம்);
3)
இரக்கமுடைப் பெருமானை ஏந்திழையார் கடையிற்போய்
இரக்கவொரு சிரமேந்தும் எம்மானைச் செம்மானைக்
குரக்கினங்கள் குதிகொள்ளும் கொடிமாடச் செங்குன்றூர்
வரக்கரனை மறவாது வாழ்த்தவிரு வினைவீடே.
இரக்கமுடைப் பெருமானை - தயாபரனை;
ஏந்திழையார் கடையிற்போய் இரக்க ஒரு சிரம் ஏந்தும் எம்மானை - பெண்கள் வீட்டுவாயிலில் சென்று யாசிக்க ஒரு மண்டையோட்டை ஏந்தும் எம்பெருமானை; (ஏந்திழை - பெண்); (இரத்தல் - பிச்சையெடுத்தல்); (கடை - வீட்டுவாயில்);
செம்மானை - செம்மேனியனை; (சம்பந்தர் தேவாரம் - 1.87.10 - "செருமால் விடையூருஞ் செம்மான்");
குரக்கினங்கள் குதிகொள்ளும் கொடிமாடச் செங்குன்றூர் - குரங்குகள் குதித்து மகிழும் திருசெங்கோட்டில் உறைகின்ற; (குரக்கினங்கள் - குரங்குக் கூட்டங்கள்; செம்பு-செப்பு, இரும்பு-இருப்பு, என்பன போல், குரங்கு-குரக்கு என்று திரியும்);
வரக்-கரனை மறவாது வாழ்த்த இருவினை வீடே - வரதஹஸ்தனான சிவபெருமானை மறவாமல் என்றும் துதித்தால் இருவினை நீங்கும்; (வரக்கரன் - வரத்தை அருளும் கரத்தை உடையவன் - வரதஹஸ்தன்; வரம், கரம் என்ற சொற்களைத் தமிழ்ச்சொற்களாகக் கொண்டதால், புணர்ச்சியில் 'க்' மிக்கது. அன்றேல், "வரகரன்" - வரத்தைத் தருபவன் - என்ற வடசொல், எதுகைக்காக 'க்' மிக்கு வந்தது என்றும் கொள்ளல் ஆம்); (வரக்கரன் - இரண்டாம்வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையில் வலிமிகும்); (சம்பந்தர் தேவாரம் - 1.20.4 - "நலம் மலிதரு கரன் - நன்மை மிகுந்த திருக்கரங்களை உடையவன்); (ஆதிசங்கரர் அருளிய அன்னபூர்ணாஷ்டகம் - "நித்யானந்தகரீ வராபயகரீ"; வராபயகரீ = வரகரீ, அபயகரீ = Salutations to Mother Annapoorna, who always give joy to Her devotees, along with boons and assurance of fearlessness ); (करः 1 A hand; .....-9 A doer. )
4)
மட்டவிழும் மலர்க்குழலி மலைமகளோர் பங்குடையான்
இட்டமொடு நஞ்சுண்ட இருள்கண்டன் இமையவர்கோன்
குட்டியொடு மந்திதிரி கொடிமாடச் செங்குன்றூர்ச்
சிட்டனவன் திருநாமம் செப்பவிரு வினைவீடே
மட்டு அவிழும் மலர்க்குழலி மலைமகள் ஓர் பங்கு உடையான் - மணம் விரியும் மலர்களைச் சூடிய கூந்தலை உடைய உமாதேவியை ஒரு பங்கில் உடையவன்; (மட்டு - தேன்);
இட்டமொடு நஞ்சு உண்ட இருள்கண்டன் - விரும்பி ஆலகாலத்தை உண்டருளிய நீலகண்டன்; (இட்டம் - இஷ்டம் - விருப்பம்); (இருள்தல் - கறுத்தல்);
இமையவர்கோன் - வானோர் தலைவன்;
குட்டியொடு மந்தி திரி- கொடிமாடச் செங்குன்றூர்ச் - மந்திகள் குட்டிகளோடு திரிகின்ற திருச்செங்கோட்டில் உறைகின்ற;
சிட்டனவன் திருநாமம் செப்ப இருவினை வீடே - சிஷ்டனான சிவபெருமான் திருநாமத்தைச் சொன்னால் இருவினை நீங்கும்; (சிட்டன் - சிஷ்டாசாரம் உடையவன்; மேலானவன்);
5)
வண்டமரும் மலர்க்குழலி மருவுமிடப் பாகத்தன்
வெண்டிரையார் வேலைதனில் விளைநஞ்சை அமுதுண்ட
கொண்டலன கண்டத்தன் கொடிமாடச் செங்குன்றூர்
அண்டனடி தொழுவாரை அருவினைநோய் அடையாவே.
வண்டு அமரும் மலர்க்குழலி மருவும் இடப் பாகத்தன் - வண்டுகள் விரும்பும் மலர்க்கூந்தலையுடைய உமையை இடப்பாகமாக உடையவன்; (மருவுதல் - தழுவுதல்);
வெண்-திரை ஆர் வேலைதனில் விளை நஞ்சை அமுதுண்ட கொண்டல் அன கண்டத்தன் - வெள்ளிய அலைகள் இருக்கும் பாற்கடலில் தோன்றிய ஆலகாலத்தை அமுதுபோல் உண்ட, மேகம் போன்ற கரிய நிறமுடைய கண்டத்தை உடையவன்; (திரை - அலை); (வேலை - கடல்); (கொண்டல் - மேகம்) (அன - அன்ன - இடைக்குறை);
கொடிமாடச் செங்குன்றூர் அண்டன் அடி தொழுவாரை அருவினைநோய் அடையாவே - திருச்செங்கோட்டில் உறைகின்ற கடவுளின் திருவடியை வழிபடுபவர்களை வினைகள் அடையமாட்டா; (அண்டன் - அண்டங்களுக்கெல்லாம் தலைவன்);
6)
வாளனகண் மங்கைபங்கன் மலர்க்கணைகள் ஐந்துடைய
வேளையெரி கண்ணுதலான் விரிசடைமேல் வெண்மதியன்
கோளரவக் கச்சுடையான் கொடிமாடச் செங்குன்றூர்க்
காளகண்டன் கழலிணையைக் கைதொழுவார் கவலாரே.
வாள் அன கண் மங்கைபங்கன் - வாள் போன்ற கண்ணையுடைய உமையை ஒரு பங்கில் உடையவன்; (அன - அன்ன); (சுந்தரர் தேவாரம் - 7.20.1 - "வாளன கண்மடவாளவள்");
மலர்க்கணைகள் ஐந்து உடைய வேளை எரி கண்ணுதலான் - ஐந்து மலரம்புகளை உடைய மன்மதனை எரித்த நெற்றிக்கண்ணன்; (வேள் - மன்மதன்);
விரிசடைமேல் வெண்மதியன் - விரித்த சடைமேல் பிறையைச் சூடியவன்;
கோள்-அரவக் கச்சு உடையான் - கொடிய பாம்பை அரைக்கச்சாகக் கட்டியவன்; (கோள் - கொடிய)
கொடிமாடச் செங்குன்றூர்க் காளகண்டன் கழலிணையைக் கைதொழுவார் கவலாரே - திருச்செங்கோட்டில் உறைகின்ற நீலகண்டனது இரு-திருவடிகளை வழிபடும் அன்பர்களுக்குக் கவலை இல்லை; (காளகண்டன் - நீலகண்டன்);
7)
செம்பொன்னார் சடையுடையான் சிலையாக மலையேந்தி
அம்பொன்றால் அரண்மூன்றை ஆரழல்வாய்ப் படவைத்தான்
கொம்பன்னாள் ஒருகூறன் கொடிமாடச் செங்குன்றூர்
நம்பன்தாள் தொழுதேத்த நசியும்வல் வினைக்கட்டே.
செம்பொன் ஆர் சடை உடையான் - செம்பொன் போன்ற சடையை உடையவன்;
சிலையாக மலை ஏந்தி அம்பு ஒன்றால் அரண் மூன்றை ஆரழல்வாய்ப் படவைத்தான் - வில்லாக மேருமலையைக் கையில் ஏந்தி ஒரு கணையால் முப்புரங்களைத் தீப்புகச்செய்தவன்; (சிலை - வில்);
கொம்பு அன்னாள் ஒரு கூறன் - பூங்கொம்பு போன்ற உமையை ஒரு கூறாக உடையவன்;
கொடிமாடச் செங்குன்றூர் நம்பன் தாள் தொழுதேத்த நசியும் வல்வினைக்கட்டே - திருச்செங்கோட்டில் உறைகின்ற சிவபெருமானது திருவடியை வழிபட்டால் வலிய வினைக்கட்டு அழியும்; (நம்பன் - சிவன் திருநாமம் - விரும்பத்தக்கவன்); (நசிதல் - அழிதல்);
8)
வாராரும் முலைமங்கை ஒருபங்கன் மாமலையை
ஓராமல் இடந்தவனை ஒருவிரலால் அடர்த்தபரன்
கூராரும் சூலத்தன் கொடிமாடச் செங்குன்றூர்ப்
பேராமல் உறைவான்சீர் பேசவரும் பெரும்புகழே.
வார் ஆரும் முலை மங்கை ஒரு பங்கன் மாமலையை - கச்சு அணிந்த முலையை உடைய உமையை ஒரு பங்கில் உடையவனது கயிலைமலையை;
ஓராமல் இடந்தவனை ஒருவிரலால் அடர்த்தபரன் - சற்றும் எண்ணாமல் பெயர்த்து எறிய முயன்ற இராவணனை ஒரு திருப்பாதவிரலை ஊன்றி நசுக்கிய பரமன்; (ஓர்தல் - எண்ணுதல்); (இடத்தல் - தோண்டுதல்; பெயர்த்தல்); (அடர்த்தல் - நசுக்குதல்);
கூர் ஆரும் சூலத்தன் - கூர்மை மிக்க திரிசூலத்தை உடையவன்;
கொடிமாடச் செங்குன்றூர்ப் பேராமல் உறைவான் - திருச்செங்கோட்டில் நீங்காமல் உறைகின்ற பெருமானது; (இலக்கணக் குறிப்பு: ஏழாம்வேற்றுமைத்தொகையில் வரும் வலி மிகும்);
சீர் பேசவரும் பெரும்புகழே. - 1. சீர் பேச, வரும் பெரும்புகழே = சீரைப் பேசும் பக்தர்களுக்குப் பெரும்புகழ் வரும்; 2. சீர், பேச அரும்-பெரும்-புகழே = சீர் பேசுவதற்கு அரிய பெரிய புகழே = எல்லையற்ற புகழை உடையவன்;
9)
வெல்பவரார் என்றிருவர் மிகநேடித் தொழுசோதி
சில்பலிக்கென் றுழல்பெருமான் சேயிழையோர் பங்குடையான்
கொல்புலித்தோல் அரைக்கசைத்தான் கொடிமாடச் செங்குன்றூர்ப்
பல்புகழான் பாதமலர் பணிவார்தம் வினைவீடே.
வெல்பவர் ஆர் என்று இருவர் மிக நேடித் தொழு-சோதி - தம்மில் யார் பெரியவர் என்ற போட்டியில் பிரமனும் திருமாலும் அடிமுடியை மிகவும் தேடிக் காணாராய்த் தொழுத ஜோதி; (நேடுதல் - தேடுதல்);
சில்பலிக்கு என்று உழல் பெருமான் - பிச்சைக்காகத் திரியும் பெருமான்; (சில் - சில); (பலி - பிச்சை);
சேயிழை ஓர் பங்கு உடையான் - உமையை ஒரு பங்கில் உடையவன்;
கொல்புலித்தோல் அரைக்கு அசைத்தான் - கொல்லும் புலியின் தோலை அரையில் கட்டியவன்; (அசைத்தல் - கட்டுதல்);
கொடிமாடச் செங்குன்றூர்ப் பல்புகழான் - திருச்செங்கோட்டில் உறைகின்ற, பலவாகப் புகழ்ந்துரைக்கப்படுபவன்; (சம்பந்தர் தேவாரம் - 3.55.1 - "உரையார் பல்புகழாய்");
பாதமலர் பணிவார்தம் வினை வீடே - அப்பெருமானது திருவடித்தாமரையை வணங்கும் அன்பர்களது வினைகள் நீங்கும்;
10)
செவியிருந்தும் சிவன்சீரைக் கேளாத செவிடருரை
அவிநெறிகள் அடையேன்மின் ஆதியந்தம் இல்லாதான்
குவிமுலையாள் பிரியாதான் கொடிமாடச் செங்குன்றூர்
அவிர்சடையான் திருநாமம் அணிநாவர்க் கரணாமே.
செவி இருந்தும் சிவன்-சீரைக் கேளாத செவிடர் உரை அவிநெறிகள் அடையேன்மின் - காதுகள் இருந்தும் சிவன் திருப்புகழைக் கேளாத செவிடர்கள் சொல்கின்ற அழியும் மார்க்கங்களை நீங்கள் சென்றடையவேண்டா; (அவிதல் - அழிதல்; அவித்தல் - அழித்தல்; கெடுத்தல்) (அடையேன்மின் - நீங்கள் சேரவேண்டா);
ஆதி அந்தம் இல்லாதான் - முதலும் முடிவும் இல்லாதவன்;
குவிமுலையாள் பிரியாதான் - குவிந்த முலைகளையுடைய உமையை ஒரு கூறாக உடையவன்;
கொடிமாடச் செங்குன்றூர் அவிர்-சடையான் - திருச்செங்கோட்டில் உறைகின்ற, ஒளிவீசும் சடையை உடையவன்; (அவிர்தல் - பிரகாசித்தல்);
திருநாமம் அணி-நாவர்க்கு அரண் ஆம் - அப்பெருமானது திருநாமமான திருவைந்தெழுத்தை நாவில் அணிந்தவர்களுக்கு அது சிறந்த பாதுகாவல் ஆகும்; (அப்பர் தேவாரம்- 4.11.2 - "நாவினுக்கு அருங்கலம் நமச்சிவாயவே"); (அப்பர் தேவாரம்- 4.81.8 - "படைக்கலமாக உன் நாமத்து எழுத்தஞ்சு என் நாவிற்கொண்டேன்");
11)
பொடியணிந்த திருமார்பன் பூதகணம் புடைசூழ்ந்து
துடியொலிக்கச் சுடலைதனிற் சுழன்றாடும் திருப்பாதன்
கொடியிடையாள் கூறுடையான் கொடிமாடச் செங்குன்றூர்
அடிகளையே அடிபரவும் அடியார்தம் வினையறுமே.
பொடி அணிந்த திருமார்பன் - திருமார்பில் திருநீற்றைப் பூசியவன்;
பூதகணம் புடைசூழ்ந்து துடி ஒலிக்கச் சுடலைதனில் சுழன்று ஆடும் திருப்பாதன் - பூதகணங்கள் சூழ்ந்து உடுக்கைகளை ஒலிக்கச் சுடுகாட்டில் சுழன்று ஆடுகின்ற திருப்பாதத்தை உடையவன்; (துடி - உடுக்கை); (சுடலை - சுடுகாடு);
கொடியிடையாள் கூறு உடையான் - கொடி போன்ற இடையை உடைய உமையை ஒரு கூறாக உடையவன்; அர்த்தநாரீஸ்வரன்;
கொடிமாடச் செங்குன்றூர் அடிகளையே அடிபரவும் அடியார்தம் வினை அறுமே - திருச்செங்கோட்டில் உறையும் சுவாமியையே வணங்கும் அடியவர்களது வினைகள் அழியும்; (அடிகள் - கடவுள்); (அடிபரவுதல் - வணங்குதல்);
வி. சுப்பிரமணியன்
----------- --------------
No comments:
Post a Comment