Thursday, May 6, 2021

P.259 - குரோம்பேட்டைக் குமரன் குன்றம் - பண்டும் இன்றும்

2014-12-08

P.259 - குரோம்பேட்டைக் குமரன் குன்றம்

-------------------

(அறுசீர் விருத்தம் - மா மா காய் - அரையடி வாய்பாடு)

(அப்பர் தேவாரம் - 4.15.1 - "பற்றற் றார்சேர் பழம்பதியை")

(சுந்தரர் தேவாரம் - 7.53.1 - "மருவார் கொன்றை மதிசூடி")


முற்குறிப்பு: சென்னையின் தெற்கே தாம்பரம் அருகே உள்ளது குரோம்பேட்டை. இக்கோயிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் தனிக்கோயிலும் உள்ளது.


1)

பண்டும் இன்றும் என்றுமுளாய் .. பாவை பங்கா எனவாழ்த்தித்

தொண்டு செய்யும் அடியார்தம் .. தொல்லை வினையைத் துடைத்தருள்வான்

அண்டர் வேண்ட அவர்க்கிரங்கி .. அருநஞ் சத்தை அமுதுண்ட

கொண்டற் கண்டன் குரோம்பேட்டைக் .. குமரன் குன்றச் சுந்தரனே.


பண்டும் இன்றும் என்றும் உளாய் - அன்றும் இன்றும் என்றும் உள்ளவனே;

பாவை-பங்கா என வாழ்த்தித் - உமைபங்கனே என்று வாழ்த்தி;

தொண்டு செய்யும் அடியார்தம் தொல்லை-வினையைத் துடைத்தருள்வான் - தொண்டு செய்யும் பக்தர்களது பழவினையைத் தீர்த்து அருள்வான்;

அண்டர் வேண்ட அவர்க்கு இரங்கி அருநஞ்சத்தை அமுதுண்ட கொண்டற்-கண்டன் - தேவர்கள் இறைஞ்ச, அவர்களுக்கு இரங்கிக் கொடிய விஷத்தை உண்ட, மேகம் போன்ற நீலகண்டத்தை உடையவன்; (அண்டர் - தேவர்); (கொண்டல் - மேகம்);

குரோம்பேட்டைக் குமரன் குன்றச் சுந்தரனே - குரோம்பேட்டையில் குமரன் குன்றத்தில் எழுந்தருளிய சுந்தரனான சிவபெருமான்;


2)

நீற்றைப் பூசி நெஞ்சத்தில் .. நிலைத்த நேயம் உடையவராய்

ஆற்றுச் சடையாய் அடல்விடையாய் .. அமரர் கோவே அருளென்று

போற்றி நாளும் பொன்னடியிற் .. பூவிட் டேத்து மாணிக்காக்

கூற்றை உதைத்தான் குரோம்பேட்டைக் .. குமரன் குன்றச் சுந்தரனே.


நீற்றைப் பூசி நெஞ்சத்தில் நிலைத்த நேயம் உடையவராய் - திருநீற்றைப் பூசி, உள்ளத்தில் நீங்காத அன்பு உடையவர் ஆகி;

"ஆற்றுச்-சடையாய், அடல்-விடையாய், அமரர்-கோவே அருள்" என்று போற்றி - "கங்கையைச் சடையில் உடையவனே, வலிய இடபத்தை வாகனமாக உடையவனே, தேவர்தலைவா, அருள்க" என்று துதித்து;

நாளும் பொன்னடியில் பூ இட்டு ஏத்து மாணிக்காக் கூற்றை உதைத்தான் - தினமும் பொற்பாதத்தில் பூவைத் தூவி வழிபட்ட மார்க்கண்டேயருக்காகக் காலனை உதைத்தவன்; (மாணி - மார்க்கண்டேயர்; மாணிக்கா - மாணிக்காக; கடைக்குறை விகாரம்);

குரோம்பேட்டைக் குமரன் குன்றச் சுந்தரனே - குரோம்பேட்டையில் குமரன் குன்றத்தில் எழுந்தருளிய சுந்தரனான சிவபெருமான்;


3)

புத்தம் புதிய மலர்தூவிப் .. புகழ்ந்து பாடிப் பொன்னடியை

நித்தம் நீள நினைந்தேத்தும் .. நேயர்க் கன்பன் நீள்சடையன்

மத்தன் வலிய அந்தகன்றன் .. மார்பில் கூரார் சூலத்தால்

குத்திச் செற்றான் குரோம்பேட்டைக் .. குமரன் குன்றச் சுந்தரனே.


புத்தம் புதிய மலர் தூவிப், புகழ்ந்து பாடிப், பொன்னடியை நித்தம் நீள நினைந்தேத்தும் நேயர்க்கு அன்பன் - புதிய பூக்களைத் தூவிப், போற்றிப் பாடிப், பொன்னடியைத் தினமும் தியானித்து வழிபாடு செய்யும் அன்பர்களுக்கு அன்பு உடையவன்;

நீள்சடையன் - நீளும் சடையினன்;

மத்தன் - ஊமத்தமலர் அணிந்தவன்;

வலிய அந்தகன்-தன் மார்பில் கூர் ஆர் சூலத்தால் குத்திச் செற்றான் - வலிய அந்தகாசுரனது மார்பில் கூர்மையான சூலத்தால் குத்தி அவனை அழித்தவன்; (அந்தகன் - அந்தகாசுரன்); (செறுதல் - அழித்தல்);

குரோம்பேட்டைக் குமரன் குன்றச் சுந்தரனே - குரோம்பேட்டையில் குமரன் குன்றத்தில் எழுந்தருளிய சுந்தரனான சிவபெருமான்;


4)

பொக்கம் இன்றிப் பொன்னடியைப் .. போற்றிப் பணியும் அடியார்தம்

துக்கம் எல்லாம் தீர்த்தருளித் .. தோன்றாத் துணையாய் நிற்குமரன்

அக்கும் அரவும் அணிமார்பன் .. ஆறு லாவும் சடைமீது

கொக்கின் இறகன் குரோம்பேட்டைக் .. குமரன் குன்றச் சுந்தரனே.


பொக்கம் இன்றிப் பொன்னடியைப் போற்றிப் பணியும் அடியார்தம் துக்கம் எல்லாம் தீர்த்தருளித் தோன்றாத் துணையாய் நிற்கும் அரன் - வஞ்சனையின்றிப் பொன்னடியை வணங்கும் பக்தர்களது துன்பத்தையும் மனவருத்தத்தையும் தீர்த்துத், தோன்றாத துணையாக உடனிருந்து காக்கும் ஹரன்; (பொக்கம் - பொய்);

அக்கும் அரவும் அணி-மார்பன் - எலும்பையும் பாம்பையும் மாலையாக மார்பில் அணிந்தவன்; (அக்கு - எலும்பு);

ஆறு உலாவும் சடைமீது கொக்கின் இறகன் - கங்கை தங்கிய சடைமேல், கொக்கிறகை அணிந்தவன்; (கொக்கின் இறகு - 1, கொக்கிறகு என்ற மலர்; 2. கொக்கு வடிவம் உடைய குரண்டாசுரனை அழித்து அதன் அடையாளமாகச் சூடிய இறகு);

குரோம்பேட்டைக் குமரன் குன்றச் சுந்தரனே - குரோம்பேட்டையில் குமரன் குன்றத்தில் எழுந்தருளிய சுந்தரனான சிவபெருமான்;


5)

ஒன்றும் பலவும் ஆகியவன் .. உமையாள் பங்கன் தில்லைதனுள்

மன்றில் ஆடும் மலர்ப்பாதன் .. மறவா அன்பர் மனத்தளியில்

என்றும் உள்ள எம்பெருமான் .. இளவெண் திங்கள் திகழ்முடிமேல்

கொன்றை சூடி குரோம்பேட்டைக் .. குமரன் குன்றச் சுந்தரனே.


ஒன்றும் பலவும் ஆகியவன் - ஏகன் அனேகன்;

உமையாள் பங்கன் - அர்த்தநாரீஸ்வரன்;

தில்லைதனுள் மன்றில் ஆடும் மலர்ப்பாதன் - சிதம்பரத்தில் சிற்றம்பலத்தில் கூத்தாடும் மலர்ப்பாதன்;

மறவா அன்பர் மனத்தளியில் என்றும் உள்ள எம்பெருமான் - மறத்தல் இன்றித் தியானிக்கும் பக்தர்களது மனக்கோயிலில் உறையும் எம்பெருமான்; (தளி - கோயில்);

இள-வெண்-திங்கள் திகழ்-முடிமேல் கொன்றை சூடி - இளைய வெண்மையான பிறை திகழும் திருமுடிமேல் கொன்றைமலரைச் சூடியவன்;

குரோம்பேட்டைக் குமரன் குன்றச் சுந்தரனே - குரோம்பேட்டையில் குமரன் குன்றத்தில் எழுந்தருளிய சுந்தரனான சிவபெருமான்;


6)

பறைகள் ஒலிக்க இருளில்நடம் .. பயிலும் பரமன் படுநஞ்சால்

கறைகொள் கண்டன் கணையெய்த .. காம னைக்காய் கண்ணுதலான்

மறைகள் பாடு மாதேவன் .. வணங்கு கின்ற அடியார்தம்

குறைகள் தீர்க்கும் குரோம்பேட்டைக் .. குமரன் குன்றச் சுந்தரனே.


பறைகள் ஒலிக்க இருளில் நடம் பயிலும் பரமன் - பறைகள் ஒலிக்க நள்ளிருளில் கூத்தாடும் பரமன்; (இருளினடம் - இருளில் + நடம்); (பயில்தல் - தொடர்ந்து செய்தல்);

படுநஞ்சால் கறைகொள் கண்டன் - கொடிய ஆலகாலத்தால் கறையை அணிந்த கண்டம் உடையவன்; (படுத்தல் - கொல்லுதல்; அழித்தல்); (படு - கொடிய);

கணை எய்த காமனைக் காய்- கண்ணுதலான் - மலர்க்கணை தொடுத்த மன்மதனை எரித்த நெற்றிக்கண்ணன்;

மறைகள் பாடு மாதேவன் - வேதங்களைப் பாடியருளிய மகாதேவன்; வேதங்கள் போற்றிப் பாடுகின்ற மகாதேவன்;

வணங்குகின்ற அடியார்தம் குறைகள் தீர்க்கும் - வணங்கும் பக்தர்களது குறைகளைத் தீர்த்தருளும்;

குரோம்பேட்டைக் குமரன் குன்றச் சுந்தரனே - குரோம்பேட்டையில் குமரன் குன்றத்தில் எழுந்தருளிய சுந்தரனான சிவபெருமான்;


7)

பிழைசெய் தாதை தாள்துணித்த .. பிள்ளை சண்டிக் கருளீசன்

பழையாய் பதியே அருளென்று .. பணிந்த தேவர் உயிர்காத்த

மழையார் மிடற்றன் கயிலாய .. மலையன் கையில் மழுவேந்தி

குழையோர் செவியன் குரோம்பேட்டைக் .. குமரன் குன்றச் சுந்தரனே.


பிழைசெய் தாதை-தாள் துணித்த பிள்ளை சண்டிக்கு அருள் ஈசன் - (சிவவழிபாட்டைக் கெடுத்துக்) குற்றம் செய்த தந்தையின் இருகால்களையும் வெட்டிய மகனாரான சண்டீசருக்கு அருளிய ஈசன்; (தாதை - தந்தை); (துணித்தல் - வெட்டுதல்);

"பழையாய் பதியே அருள்" என்று பணிந்த தேவர் உயிர் காத்த மழை ஆர் மிடற்றன் - "புராதனனே; தலைவனே; அருளாய்" என்று இறைஞ்சிய தேவர்களது உயிரைக் காத்த, மேகம் போன்ற நீலகண்டம் உடையவன்; (மழை = மேகம்); (ஆர்தல் - ஒத்தல்);

கயிலாய மலையன் - கயிலைமலையில் வீற்றிருப்பவன்;

கையில் மழு ஏந்தி - கையில் மழுவை ஏந்தியவன்;

குழை ஓர் செவியன் - ஒரு காதில் குழை அணிந்தவன் - அர்த்தநாரீஸ்வரன்;

குரோம்பேட்டைக் குமரன் குன்றச் சுந்தரனே - குரோம்பேட்டையில் குமரன் குன்றத்தில் எழுந்தருளிய சுந்தரனான சிவபெருமான்;


8)

சூலப் படையான் திருமலையைத் .. துணிந்து தூக்கு தசமுகனைச்

சால நாள்கள் அழுமாறு .. தனியோர் விரலால் நசுக்கியவன்

மூலர் மூவா யிரந்தமிழை .. மொழிய அருள்செய் முக்கண்ணன்

கோலப் பிறையன் குரோம்பேட்டைக் .. குமரன் குன்றச் சுந்தரனே.


சூலப்படையான் திருமலையைத் துணிந்து தூக்கு தசமுகனைச் - சூலாயுதத்தை ஏந்தும் சிவபெருமான் உறையும் கயிலைமலையைத் துணிந்து பேர்த்துத் தூக்கிய இராவணனை;

சால நாள்கள் அழுமாறு தனி ஓர் விரலால் நசுக்கியவன் - பல காலம் அழும்படி அவனை ஒரே ஒரு விரலால் நசுக்கிய பெருமான்;

மூலர் மூவாயிரம் தமிழை மொழிய அருள்செய் முக்கண்ணன் - திருமூலரைத் திருமந்திரம் பாட அருள்செய்த நெற்றிக்கண்ணன்; (மூவாயிரம் தமிழ் - 3000 பாடல்களையுடைய திருமந்திரம்);

கோலப் பிறையன் - அழகிய பிறையை அணிந்தவன்;

குரோம்பேட்டைக் குமரன் குன்றச் சுந்தரனே - குரோம்பேட்டையில் குமரன் குன்றத்தில் எழுந்தருளிய சுந்தரனான சிவபெருமான்;


9)

தோடி லங்கும் திருச்செவியன் .. சுடலைப் பொடியன் தூமறைகள்

பாடி யருளும் திருநாவன் .. பன்றி அன்னம் அடிமுடியைத்

தேடி நாண எழுசோதி .. சிவனே அருளென் றடியார்கள்

கூடிப் போற்றும் குரோம்பேட்டைக் .. குமரன் குன்றச் சுந்தரனே.


தோடு இலங்கும் திருச்செவியன் - ஒரு காதில் தோடு அணிந்தவன்;

சுடலைப்பொடியன் - சுடுகாட்டுச் சாம்பலைப் பூசியவன்;

தூமறைகள் பாடியருளும் திருநாவன் - தூய வேதங்களைப் பாடியருளியவன்;

பன்றி அன்னம் அடிமுடியைத் தேடி நாண எழு-சோதி - திருமாலும் பிரமனும் பன்றியும் அன்னப்பறவையும் ஆகி அடியையும் முடியையும் தேடிக் காணாது நாணுமாறு உயர்ந்த ஜோதி;

"சிவனே அருள்" என்று அடியார்கள் கூடிப் போற்றும் - "சிவனே அருளாய்" என்று பக்தர்கள் திரண்டு போற்றுகின்ற;

குரோம்பேட்டைக் குமரன் குன்றச் சுந்தரனே - குரோம்பேட்டையில் குமரன் குன்றத்தில் எழுந்தருளிய சுந்தரனான சிவபெருமான்;


10)

பாதை அறியாப் புன்னெறியார் .. பகலில் விளக்கைப் பிடித்துழல்வார்

வாதை சேர்க்கும் அவர்மொழியில் .. மயங்கேல் திருவைந் தெழுத்தோதின்

தீதை நீக்கித் திருவருள்வான் .. திங்கள் திகழும் செஞ்சடையான்

கோதை பங்கன் குரோம்பேட்டைக் .. குமரன் குன்றச் சுந்தரனே.


பாதை அறியாப் புன்னெறியார் பகலில் விளக்கைப் பிடித்து உழல்வார் - செல்லத்தக்க மார்க்கத்தை அறியாத புன்னெறிகளில் ஒழுகுபவர்கள் பகலில் ஒரு விளக்கை ஏந்தித் திரிபவர்கள் போன்றவர்கள்; (புன்னெறி - பொய்ச்சமயங்கள்; தீநெறிகள்);

வாதை சேர்க்கும் அவர்-மொழியில் மயங்கேல் - துன்பத்தில் சேர்க்கும் அவர்களது பேச்சில் மயங்கவேண்டா; (வாதை - துன்பம்); (ஏல் - எதிர்மறை ஏவல்ஒருமை விகுதி);

திருவைந்தெழுத்து ஓதின் தீதை நீக்கித் திரு அருள்வான் - பஞ்சாக்ஷரம் (நமச்சிவாய மந்திரம்) ஓதினால் தீமையை நீக்கித் திருவை அருள்பவன்;

திங்கள் திகழும் செஞ்சடையான் - சிவந்த சடையில் சந்திரனைச் சூடியவன்;

கோதை பங்கன் - உமைபங்கன்; (கோதை - பெண்);

குரோம்பேட்டைக் குமரன் குன்றச் சுந்தரனே - குரோம்பேட்டையில் குமரன் குன்றத்தில் எழுந்தருளிய சுந்தரனான சிவபெருமான்;


11)

அரையா அருளென் றடிபோற்றி .. அமரர் இறைஞ்ச மேருவெனும்

வரையே வில்லா வளைவித்து .. வாயு மால்தீக் கணைகோத்து

விரவார் புரங்கள் மூன்றுமுடன் .. வெந்து பொடியாய் விழவெய்த

குரையார் கழலன் குரோம்பேட்டைக் .. குமரன் குன்றச் சுந்தரனே.


"அரையா அருள்" என்று அடிபோற்றி அமரர் இறைஞ்ச - "அரசனே அருளாய்" என்று திருவடியைத் தேவர்கள் வணங்க; (அரையன் - அரசன்);

மேரு எனும் வரையே வில்லா வளைவித்து, வாயு மால் தீக் கணை கோத்து - மேருமலையையே வில்லாக வளைத்து, அக்கினி திருமால் வாயு இம்மூவரையும் ஒரு கணையாகக் கோத்து; (வரை - மலை); (வளைவித்தல் - வளையச்செய்தல்); (சம்பந்தர் தேவாரம் - 2.23.2 - "மலையார் சிலையா வளைவித்தவனே");

விரவார் புரங்கள் மூன்றும் உடன் வெந்து பொடியாய் விழ எய்த - எதிர்த்த அசுரர்களது முப்புரங்களும் ஒருங்கே உடனே வெந்து சாம்பலாகி அழிய எய்த; (விரவார் - பகைவர்);

குரை ஆர் கழலன் - ஒலிக்கின்ற வீரக்கழல் அணிந்தவன்;

குரோம்பேட்டைக் குமரன் குன்றச் சுந்தரனே - குரோம்பேட்டையில் குமரன் குன்றத்தில் எழுந்தருளிய சுந்தரனான சிவபெருமான்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------

Tuesday, May 4, 2021

P.258 - ஒற்றியூர் - ஊர்வதற்கு வெள்விடை

2014-12-07

P.258 - ஒற்றியூர் - (திருவொற்றியூர்)

------------------

(எண்சீர்விருத்தம் - காய் காய் மா தேமா - அரையடி வாய்பாடு. திருத்தாண்டகம் ஒத்த அமைப்பு)

(அப்பர் தேவாரம் - 6.1.1 - அரியானை அந்தணர்தம்)


* முற்குறிப்பு: கார்த்திகைத் தீபத்திற்கு அடுத்த நாளான 2014-12-06 அன்று கவசம் இன்றிக் காட்சி கொடுக்கும் திருவொற்றியூர்ப் படம்பக்கநாதரைத் தரிசித்து மகிழ்ந்தேன்;


1)

ஊர்வதற்கு வெள்விடையொன் றுடையான் தன்னை,

.. உலகத்தை நோக்கிமிக விரைந்தி ழிந்த

நீர்வதியும் சடையானை, நெற்றி மீது

.. நேத்திரனை ஒருகையில் நெருப்பி னானைக்,

கூர்வதியும் மூவிலைவேல் ஏந்து கின்ற

.. கோமானைக், கோலமயில் போன்றி லங்கு

பார்வதியோர் பங்கினனை, ஒற்றி யூரில்

.. படம்பக்க நாதனைக்கண் டின்புற் றேனே.


ஊர்வதற்கு வெள்விடைன்றுடையான்-தன்னை - வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவனை;

உலகத்தை நோக்கி மிக விரைந்து இழிந்த நீர் வதியும் சடையானை - பூமியை நோக்கி வேகமாகப் பாய்ந்த கங்கை தங்கும் சடையானை; (வதிதல் - தங்குதல்);

நெற்றிமீது நேத்திரனை - நெற்றிக்கண்ணனை;

ஒரு கையில் நெருப்பினானைக் - கையில் நெருப்பை ஏந்தியவனை;

கூர் வதியும் மூவிலைவேல் ஏந்துகின்ற கோமானைக் - கூர்மை மிக்க திரிசூலத்தை ஏந்திய தலைவனை; (கூர் - கூர்மை);

கோலமயில் போன்று இலங்கு பார்வதி ஓர் பங்கினனை - அழகிய மயில் போன்ற உமையை ஒரு பங்கில் உடையவனை;

ஒற்றியூரில் படம்பக்கநாதனைக் கண்டு இன்புற்றேனே - திருவொற்றியூரில் உறைகின்ற படம்பக்கநாதனைத் தரிசித்து மகிழ்ந்தேன்; (* படம்பக்கநாதன் - திருவொற்றியூரில் இறைவன் திருநாமம்);


2)

தாய்வடிவும் தாங்குகின்ற கோனை, நெஞ்சில்

.. தாங்கியவர் வினைதீர்த்துத் தாங்கு வானைத்,

தேய்வடிவம் கண்டஞ்சித் திங்கள் போற்றச்

.. செஞ்சடைமேல் ஏற்றானை, விரும்பிப் பெற்ற

பேய்வடிவம் உடையவரை ஆலங் காட்டிற்

.. பெருநடனம் காணவருள் பெம்மான் தன்னைப்,

பாய்விடைமேல் வருவானை, ஒற்றி யூரில்

.. படம்பக்க நாதனைக்கண் டின்புற் றேனே.


தாய்வடிவும் தாங்குகின்ற கோனை - அம்மையப்பனை; (திருச்சிராப்பள்ளியில்) தாயுமானவனை;

நெஞ்சில் தாங்கியவர் வினை தீர்த்துத் தாங்குவானைத் - தன்னை நெஞ்சில் அன்போடு தரித்தவர்களது வினையைத் தீர்த்து அவர்களைக் காத்தருள்பவனை;

தேய்-வடிவம் கண்டு அஞ்சித் திங்கள் போற்றச் செஞ்சடைமேல் ஏற்றானை - தேய்ந்தழியும் வடிவத்தைக் கண்டு அஞ்சிய சந்திரன் திருவடியை வணங்கி வேண்டச், சிவந்த சடையில் திங்களை அணிந்து காத்தவனை;

விரும்பிப் பெற்ற பேய்வடிவம் உடையவரை ஆலங்காட்டில் பெருநடனம் காண அருள் பெம்மான்தன்னைப் - பேயுருவத்தை வரமாக விரும்பிப் பெற்ற காரைக்கால் அம்மையாருக்குத் திருவாலங்காட்டில் தன் திருக்கூத்தை காண அருள்செய்த பெருமானை;

பாய்விடைமேல் வருவானை - பாய்ந்து செல்லும் இடபத்தை வாகனமாக உடையவனை;

ஒற்றியூரில் படம்பக்கநாதனைக் கண்டு இன்புற்றேனே - திருவொற்றியூரில் உறைகின்ற படம்பக்கநாதனைத் தரிசித்து மகிழ்ந்தேன்;


3)

கத்து கடலிடையே மலையை நட்டுக்

.. கடைந்தபொழு தெழுந்தவிடம் கண்டு தேவர்

"அத்த அபயமருள்" என்றி றைஞ்ச

.. அவர்க்கிரங்கி அதனையுண்ட கண்டன் தன்னைக்,

கொத்து மலர்க்குழலி கூறா னானைக்,

.. கோதில்லா அமுதத்தைக், கும்பிட் டேத்திப்

பத்தர் குழாம்கெழுமும் ஒற்றி யூரில்

.. படம்பக்க நாதனைக்கண் டின்புற் றேனே.


கத்து-கடலிடையே மலையை நட்டுக் கடைந்தபொழுது எழுந்த விடம் கண்டு தேவர், "அத்த; அபயம் அருள்" என்று இறைஞ்ச, அவர்க்கு இரங்கி அதனைண்ட கண்டன்-தன்னைக் - ஒலிக்கும் கடலில் ஒரு மலையை மத்தாக ஊன்றிக் கடைந்த சமயத்தில் பொங்கிய ஆலகாலத்தைக் கண்டு தேவர்கள், "தந்தையே! அபயம் அருள்க" என்று வேண்ட, அவர்களுக்கு இரங்கி அந்த விஷத்தை உண்ட கண்டனை; (அத்தன் - தந்தை);

கொத்துமலர்க்-குழலி கூறு ஆனானைக் - மலர்க்கொத்துகளை அணிந்த உமையை ஒரு கூறாக உடையவனை;

கோது இல்லா அமுதத்தைக் - குற்றமற்ற அமுதம் போன்றவனை;

கும்பிட்டு ஏத்திப் பத்தர்குழாம் கெழுமும் ஒற்றியூரில் - வணங்கித் துதித்து அடியார்கூட்டம் நிறைகின்ற திருவொற்றியூரில்; (கெழுமுதல் - நிறைதல்);


4)

மழவிடையை ஊர்தியென மகிழும் கோனை,

.. வடிவுடைய மங்கையொரு பங்கி னானைத்,

தழலனைய மேனியனை, வானி ழிந்த

.. தண்ணதியைச் சடையிடையே தாங்கி னானை,

அழவினைகள் எத்தனையோ ஆற்றி னாரும்

.. அஞ்செழுத்தை ஓதியடி போற்று வாரேல்

பழவினைகள் தீர்ப்பவனை, ஒற்றி யூரில்

.. படம்பக்க நாதனைக்கண் டின்புற் றேனே.




மழவிடையை ஊர்தி என மகிழும் கோனை - இளைய இடபத்தை வாகனமாக மகிழ்ந்த தலைவனை; (மழ - இளைய);

வடிவுடைய மங்கை ஒரு பங்கினானைத் - அழகிய உமையை ஒரு பங்கில் உடையவனை; (* வடிவுடையமங்கை - திருவொற்றியூரில் அம்பிகை திருநாமம்);

தழல் அனைய மேனியனை - தீப் போலச் செம்மேனியனை;

வான் இழிந்த தண்-தியைச் சடையிடையே தாங்கினானை - வானிலிருந்து இறங்கிய குளிர்ந்த கங்கையைச் சடையில் தாங்கியவனை; (அப்பர் தேவாரம் - 6.90.6 - "வான் இழிந்த கங்கை சேடெறிந்த சடையானைத்");

அழ வினைகள் எத்தனையோ ஆற்றினாரும் அஞ்செழுத்தை ஓதி அடி போற்றுவாரேல், பழவினைகள் தீர்ப்பவனை - தம்மை வருத்தும்படி வினைப்பயன் தரும் பல பாவங்கள் செய்தவரும் திருவைந்தெழுத்தை ஓதித் திருவடியைப் போற்றினால் அவர்களது பழவினையைத் தீர்ப்பவனை;

ஒற்றியூரில் படம்பக்கநாதனைக் கண்டு இன்புற்றேனே - திருவொற்றியூரில் உறைகின்ற படம்பக்கநாதனைத் தரிசித்து மகிழ்ந்தேன்;


5)

அரவணியா மகிழ்வானை, அரையில் வேங்கை

.. அதளாடை உடையானை, அடலேற் றானைத்,

தரையிலொரு சக்கரத்தைத் தாளாற் கீறிச்

.. சலந்தரனைத் தடிந்தானைச், சலமேற் றானைக்,

கரவடையா மனத்தோடு கைகள் கூப்பிக்

.. கடிமலர்கள் பலதூவிக் கசிந்து பாடிப்

பரவியவர்க் கினியானை, ஒற்றி யூரில்

.. படம்பக்க நாதனைக்கண் டின்புற் றேனே.


அரவு அணியா மகிழ்வானை - பாம்பை ஆபரணமாக விரும்பியவனை; (அணியா - அணியாக);

அரையில் வேங்கை-அதள் ஆடை உடையானை - அரையில் புலித்தோலாடையைக் கட்டியவனை;

அடல்-ஏற்றானைத் - வலிய இடபத்தை வாகனமாக உடையவனை; (அடல் - வலிமை);

தரையில் ஒரு சக்கரத்தைத் தாளால் கீறிச் சலந்தரனைத் தடிந்தானைச் - தரைமேல் ஒரு சக்கரத்தைத் திருவடியால் வரைந்து அதுகொண்டு ஜலந்தராசுரனை வெட்டி அழித்தவனை; (தடிதல் - வெட்டுதல்; அழித்தல்);

சலம் ஏற்றானைக் - கங்கையைச் சடையில் ஏற்றவனை;

கரவு அடையா மனத்தோடு கைகள் கூப்பிக் கடிமலர்கள் பல தூவிக் கசிந்து பாடிப் பரவியவர்க்கு இனியானை - வஞ்சம் இல்லா மனத்தோடு கரங்குவித்து வாசமலர்கள் பல தூவி உள்ளம் கசிந்து பாடிப் போற்றும் பக்தர்களுக்கு இனியவனை; (கரவு - வஞ்சனை; பொய்); (கடி - வாசனை); (பரவுதல் - துதித்தல்);

ஒற்றியூரில் படம்பக்கநாதனைக் கண்டு இன்புற்றேனே - திருவொற்றியூரில் உறைகின்ற படம்பக்கநாதனைத் தரிசித்து மகிழ்ந்தேன்;


6)

தோலாடை தரித்தானைத், தூவெண் ணீறு

.. துதைந்திலங்கு மேனியனைச், சூலத் தானை,

மேலாடு வெண்மதியைச் சென்னி மீது

.. விளங்கவைத்த விகிர்தனை, மின்னல் போல

நூலாடு மார்பினனைத், திருநா மங்கள்

.. நூறுபத் துடையபெரு மானை, ஆவின்

பாலாடல் மகிழ்ந்தானை, ஒற்றி யூரில்

.. படம்பக்க நாதனைக்கண் டின்புற் றேனே.


தோலாடை தரித்தானைத் - தோலை ஆடையாகக் கட்டியவனை;

தூ-வெண்ணீறு துதைந்து இலங்கு மேனியனைச் - தூய வெண்மையான திருநீற்றைப் பூசியவனை;

சூலத்தானை - திரிசூலத்தை ஏந்தியவனை; (துதைதல் - மிகுதல்; படிதல்); (இலங்குதல் - விளங்குதல்);

மேல் ஆடு- வெண்மதியைச் சென்னிமீது விளங்கவைத்த விகிர்தனை - வானில் சஞ்சரிக்கும் வெண்திங்களைத் திருமுடிமேல் ஒளிவீசச்செய்த விகிர்தனை; (ஆடுதல் - சஞ்சரித்தல்); (விகிர்தன் - சிவன் திருநாமம் - மாறுபட்ட செயலினன்);

மின்னல் போல நூல் ஆடு- மார்பினனைத் - மின்னல் போலப் பூணூல் அசைகின்ற திருமார்பனை; (நூல் - பூணூல்);

திருநாமங்கள் நூறுபத்துடைய பெருமானை - சஹஸ்ரநாமம் உடைய பெருமானை;

ஆவின் பால் ஆடல் மகிழ்ந்தானை - பசுப்பாலால் அபிஷேகம் விரும்பியவனை;

ஒற்றியூரில் படம்பக்கநாதனைக் கண்டு இன்புற்றேனே - திருவொற்றியூரில் உறைகின்ற படம்பக்கநாதனைத் தரிசித்து மகிழ்ந்தேன்;


7)

துற்றகடல் நஞ்சத்தைக் கண்டம் இட்ட

.. துணைவனையோர் துணையிலியைச், சுற்றி ஆர்த்த

புற்றரவக் கச்சினனைப், பொருப்பு வில்லிற்

.. புர(ம்)மூன்றை எரிகணையைப் பூட்டி னானை,

நெற்றியிலோர் கண்ணுடைய நிமலன் தன்னை,

.. நீரொடுபூக் கொண்டேத்து நேயர் தங்கள்

பற்றறுக்கும் பரம்பரனை, ஒற்றி யூரில்

.. படம்பக்க நாதனைக்கண் டின்புற் றேனே.


துற்ற கடல்-நஞ்சத்தைக் கண்டம் இட்ட துணைவனை - உண்ட ஆலகாலத்தைக் கண்டத்தில் வைத்த துணைவனை; (துறுதல் - உண்தல்);

ஓர் துணையிலியைச் - எவ்வொப்பும் இல்லாதவனை; (துணை - ஒப்பு);

சுற்றி ஆர்த்த புற்றரவக்-கச்சினனைப் - அரையைச் சுற்றி நாகத்தைக் கச்சாகக் கட்டியவனை; (ஆர்த்தல் - கட்டுதல்); (புற்றரவம் - புற்றில் வாழும் இயல்புடைய பாம்பு);

பொருப்பு-வில்லில் புரம் மூன்றை எரி-கணையைப் பூட்டினானை - மேருவில்லில் முப்புரங்களை எரிக்கும் அம்பைக் கோத்தவனை; (பொருப்பு - மலை);

நெற்றியில் ஓர் கண்ணுடைய நிமலன்-தன்னை - நெற்றிக்கண்ணுடைய பரிசுத்தனை;

நீரொடு பூக்கொண்டு ஏத்து நேயர்-தங்கள் பற்று அறுக்கும் பரம்பரனை - நீராலும் பூக்களாலும் வழிபாடு செய்யும் பக்தர்களது பந்தங்களை நீக்கும் மிகவும் மேலானவனை;

ஒற்றியூரில் படம்பக்கநாதனைக் கண்டு இன்புற்றேனே - திருவொற்றியூரில் உறைகின்ற படம்பக்கநாதனைத் தரிசித்து மகிழ்ந்தேன்;


8)

வலியேன் எனவெண்ணி மலையி டந்த

.. வாளரக்கன் அலறவிரல் ஊன்றி னானை,

ஒலியார் நதியுலவு சடையி னானை,

.. ஓதவிடம் உண்டவனை, உள்க சிந்து

கலிதீர் கதிர்மதியாய் என்றி றைஞ்சிக்

.. கைதொழுவார்க் கருந்துணையைக், கலனொன் றேந்திப்

பலிதேர்ந் துழல்வானை, ஒற்றி யூரில்

.. படம்பக்க நாதனைக்கண் டின்புற் றேனே.


வலியேன் என எண்ணி மலை இடந்த வாரக்கன் அலற விரல் ஊன்றினானை - "நான் பெருவலிமை உடையவன்" என்று எண்ணிக் கயிலைமலையைப் பெயர்த்த கொடிய அரக்கனான இராவணன் அலறும்படி விரலை ஊன்றி அவனை நசுக்கியவனை; (இடத்தல் - பெயர்த்தல்); (வாள் - கொடிய);

ஒலி ஆர் நதி உலவு சடையினானை - அலை ஒலிக்கின்ற கங்கை சஞ்சரிக்கும் சடையானை; (ஆர்தல் - நிறைதல்; பொருந்துதல்);

ஓதவிடம் உண்டவனை - கடல்விஷத்தை (ஆலகாலத்தை) உண்டவனை; (ஓதம் - கடல்);

உள் கசிந்து, "கலி தீர் கதிர்மதியாய்" என்று இறைஞ்சிக் கைதொழுவார்க்கு அருந்-துணையைக் - மனம் உருகி, "எம் துன்பத்தைத் தீர்த்து அருள்க, ஒளியுடைய சந்திரனை அணிந்தவனே" என்று கைகூப்பி வணங்கும் அடியவர்களுக்கு அருளும் ஒப்பற்ற துணைவனை; (கலி - துன்பம்);

கலன் ஒன்று ஏந்திப் பலிதேர்ந்து உழல்வானை - கையில் ஓர் உண்கலன் (பிரமகபாலம்) ஏந்திப் பிச்சை ஏற்றுத் திரிபவனை; (பலி - பிச்சை);

ஒற்றியூரில் படம்பக்கநாதனைக் கண்டு இன்புற்றேனே - திருவொற்றியூரில் உறைகின்ற படம்பக்கநாதனைத் தரிசித்து மகிழ்ந்தேன்;


9)

பணிமீது துயில்மாலும் அயனும் அன்று

.. பன்றிபுள்ளாய்த் தேடியவோர் நெருப்பைக், காரார்

மணியாகக் கடல்நஞ்சைக் கண்டம் தன்னில்

.. வைத்தவனை, மூவிலைய சூலத் தானை,

அணியாக அரவங்கள் ஏறு கின்ற

.. ஆகமுடை அற்புதனை, ஆரா அன்பால்

பணிவார்கட் கணியானை, ஒற்றி யூரில்

.. படம்பக்க நாதனைக்கண் டின்புற் றேனே.


பணிமீது துயில்-மாலும் அயனும் அன்று பன்றி புள்ளாய்த் தேடிய ஓர் நெருப்பைக் - பாம்பின்மேல் துயிலும் திருமாலும் பிரமனும் முன்பு பன்றி அன்னம் என்ற வடிவங்களில் தேடிய ஒப்பற்ற சோதியை; (பணி - நாகப்பாம்பு);

கார் ஆர் மணியாகக் கடல்நஞ்சைக் கண்டம்-தன்னில் வைத்தவனை - கரிய மணியாக ஆலகாலத்தைக் கண்டத்தில் இட்டவனை;

மூவிலைய சூலத்தானை - மூன்று இலை போன்ற நுனிகளை உடைய சூலத்தை ஏந்தியவனை; (அப்பர் தேவரம் - 6.24.9 - "மூவிலைய சூலத்தான் காண்");

அணியாக அரவங்கள் ஏறுகின்ற ஆகமுடை அற்புதனை - ஆபரணமாகப் பாம்புகள் ஏறுகின்ற திருமேனியை உடைய அற்புதனை; (அணி - ஆபரணம்); (ஆகம் - மேனி);

ஆரா அன்பால் பணிவார்கட்கு அணியானை - பேரன்பால் வழிபடும் பக்தர்களுக்குப் பக்கத்தில் இருந்து அருள்பவனை; (அணி - சமீபத்தில்; அணியன் - நெருங்கினவன்);

ஒற்றியூரில் படம்பக்க நாதனைக் கண்டு இன்புற்றேனே - திருவொற்றியூரில் உறைகின்ற படம்பக்கநாதனைத் தரிசித்து மகிழ்ந்தேன்;


10)

பொன்னாரும் அடிபோற்றாப் புல்லர்க் கென்றும்

.. புரியாத தத்துவனைப், புனலை ஏற்ற

மின்னாரும் சடையானை, வெண்ணீற் றானை,

.. வேதியனை, வேழத்தின் உரிவை யானைத்,

தன்னாகம் தனில்நாரி தங்கப் பாதி

.. தந்தவனைத், தன்னேரில் தலைவன் தன்னைப்,

பன்னாகம் பூண்டானை, ஒற்றி யூரில்

.. படம்பக்க நாதனைக்கண் டின்புற் றேனே.


பொன் ஆரும் அடி போற்றாப் புல்லர்க்கு என்றும் புரியாத தத்துவனை - பொன்னடியை வழிபாடு செய்யாத கீழோர்களால் அறிய இயலாத மெய்ப்பொருளை; வழிபாடு செய்யாத கீழோர்க்கு அருள்புரியாத மெய்ப்பொருளை; (ஆர்தல் - ஒத்தல்);

புனலை ஏற்ற மின் ஆரும் சடையானை - ஒளி மிக்க சடையில் கங்கையை ஏற்றவனை; (மின் - ஒளி; மின்னல்); (ஆர்தல் - நிறைதல்; ஒத்தல்);

வெண்ணீற்றானை - வெண்மையான திருநீற்றைப் பூசியவனை;

வேதியனை - வேதம் ஓதியவனை; வேதங்களால் ஓதப்படுபவனை;

வேழத்தின் உரிவையானைத் - யானைத்தோலைப் போர்த்தவனை; (வேழம் - யானை); (உரிவை - தோல்);

தன் ஆகம்-தனில் நாரி தங்கப் பாதி தந்தவனைத் - உமைக்குத் தன் திருமேனியில் பாதியைத் தந்தவனை; (ஆகம் - மேனி); (நாரி - பெண்);

தன் நேர் இல் தலைவன்-தன்னை - தனக்கு ஓர் ஒப்பு இல்லாத தலைவனை; (நேர் - ஒப்பு);

பன்னாகம் பூண்டானை - பல பாம்புகளை அணிந்தவனை; (பன்னாகம் = பல்+நாகம்); (திருவாசகம் - திருப்பூவல்லி - 8.13.17 - “இலங்கணியாம் பன்னாகம் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ”);

ஒற்றியூரில் படம்பக்க நாதனைக் கண்டு இன்புற்றேனே - திருவொற்றியூரில் உறைகின்ற படம்பக்கநாதனைத் தரிசித்து மகிழ்ந்தேன்;


11)

கொலவடைந்த கூற்றுவனைக் கொன்று மாணி

.. குறைவின்றி வாழவருள் செய்த கோனை,

அலைமலிந்த ஆறுலவும் சடையி னானை,

.. அழியாத புகழானை, அளவில் லானைத்,

தலைமலிந்த மாலையினைத் தலைக்க ணிந்த

.. சங்கரனைத், தாள்பரவும் பத்தர்க் காகப்

பலவடிவும் ஏற்றானை, ஒற்றி யூரில்

.. படம்பக்க நாதனைக்கண் டின்புற் றேனே.


கொல அடைந்த கூற்றுவனைக் கொன்று மாணி குறைவின்றி வாழ அருள்செய்த கோனை - கொல்ல வந்தடைந்த காலனை அழித்து மார்க்கண்டேயர் சிரஞ்சீவியாக வாழ அருளிய தலைவனை; (கொல - கொல்ல; இடைக்குறை விகாரம்); (மாணி - மார்க்கண்டேயர்);

அலை மலிந்த ஆறு உலவும் சடையினானை - அலை மிக்க கங்கையைச் சடையில் அணிந்தவனை;

அழியாத புகழானை - நிலைத்த புகழ் உடையவனை;

அளவு இல்லானைத் - எல்லை இல்லாதவனை;

தலை மலிந்த மாலையினைத் தலைக்கு அணிந்த சங்கரனைத் - தலைக்குத் தலைமாலை அணிந்த சங்கரனை; (மலிதல் - மிகுதல்);

தாள் பரவும் பத்தர்க்காகப் பல வடிவும் ஏற்றானை - திருவடியைத் துதிக்கும் பக்தர்களுக்காகப் பல வடிவங்களை ஏற்று அருள்பவனை;

ஒற்றியூரில் படம்பக்க நாதனைக் கண்டு இன்புற்றேனே - திருவொற்றியூரில் உறைகின்ற படம்பக்கநாதனைத் தரிசித்து மகிழ்ந்தேன்;


வி. சுப்பிரமணியன்

------- ---------