Monday, July 28, 2025

T.209 - வக்கரை - இட்டமும் வினைகளும்

2018-04-06

T.209 - வக்கரை - இட்டமும் வினைகளும்

---------------------------------

(வண்ணவிருத்தம்;

தத்தன தனதன தத்தன தனதன

தத்தன தனதன .. தனதான)

(கைத்தல நிறைகனி - திருப்புகழ் - விநாயகர் துதி)


இட்டமும் வினைகளு(ம்) நித்தலும் இடர்தர

.. .. இத்தரை மிசைமிக .. அயராதே

.. இக்கன தமிழவை பொற்கழல் இணைதனில்

.. .. இட்டிடும் அறிவினை .. அருளாயே

நட்டம திடவொரு நற்சபை எனநரி

.. .. நச்சிய சுடலையை .. உடையானே

.. நற்றவ அரிவையர் இற்பலி கொளவுழல்

.. .. நக்கரை உருவின .. மணிமார்பா

கட்டிய சிலையென வெற்பது கொடுமிகு

.. .. கட்டரண் எரிபர .. பலதேவர்

.. கத்தலை திகழ்கடல் மத்திடு பொழுதெழு

.. .. கைப்புடை விடமுணும் .. அருளாளா

மட்டலர் குழலணி உத்தமி தனையிடம்

.. .. வைத்தொரு நதிசடை .. அணிவோனே

.. மட்புதை மரமவை கற்றிரள் உருவடை

.. .. வக்கரை தனிலுறை .. பெருமானே.


பதம் பிரித்து:

இட்டமும் வினைகளு(ம்) நித்தலும் இடர் தர

.. .. இத்-தரைமிசை மிக .. அயராதே,

.. இக்கு அன தமிழ்அவை பொற்கழல் இணைதனில்

.. .. இட்டிடும் அறிவினை .. அருளாயே;

நட்டமது இட ஒரு நற்சபை என நரி

.. .. நச்சிய சுடலையை .. உடையானே;

.. நற்றவ அரிவையர் இற்-பலி கொள உழல்

.. .. நக்கரை உருவின; .. மணி-மார்பா;

கட்டிய சிலை என வெற்பது கொடு மிகு

.. .. கட்டு-அரண் எரி பர; .. பல தேவர்

.. கத்து-அலை திகழ் கடல் மத்திடு பொழுது எழு

.. .. கைப்புடை விடம் உணும் .. அருளாளா;

மட்டு-அலர் குழல் அணி உத்தமிதனை இடம்

.. .. வைத்து, ஒரு நதி சடை .. அணிவோனே;

.. மட்புதை மரம்-அவை கற்றிரள் உரு-அடை

.. .. வக்கரைதனில் உறை .. பெருமானே.


* (ம்) - புணர்ச்சியில் மகர ஒற்றுக் கெடும் இடம்;

இட்டமும் வினைகளும் நித்தலும் இடர் தர, இத்-தரைமிசை மிக அயராதே - ஆசைகளும் வினைகளும் தினமும் துன்பத்தைத் தர, அதனால் இப்புவிமேல் மிகவும் வருத்தமுறும் நிலையை அடையாமல்; (இட்டம் - இஷ்டம் - விருப்பம்); (நித்தலும் - எந்நாளும்); (இடர் - துன்பம்);

இக்கு அன தமிழ்அவை பொற்கழல் இணைதனில் இட்டிடும் அறிவினை அருளாயே - கரும்பு போன்ற இனிய தமிழ்ப்பாமாலைகளை (= தேவாரம் திருவாசகம் முதலியவற்றை) உன் இரு-திருவடிகளில் சூட்டும் அறிவை எனக்குத் தந்து அருள்வாயாக; (இக்கு - இக்ஷு - கரும்பு);

நட்டம்அது இ ஒரு நற்சபை என, நரி நச்சிய சுடலையை உடையானே - நரிகள் விரும்பும் (= உலவும்) சுடுகாடே அரங்கம் என்று அங்குத் திருநடம் செய்பவனே; (நட்டம் - நடனம்; அது - பகுதிப்பொருள்விகுதி); (நச்சுதல் - விரும்புதல்); (சம்பந்தர் தேவாரம் - 3.19.1 - "நரிதிரி கானிடை நட்டம் ஆடுவர்");

நற்றவ அரிவையர் இற்பலி கொளழல் நக்கரை உருவி - நல்ல தவவடிவினனே; பெண்களின் வீடுகளில் பிச்சை ஏற்கத் திரியும் திகம்பரனே; (நற்றவ அரிவையர் - "நல்ல தவமுடைய பெண்கள்" - என்றும் பொருள்கொள்ளல் ஆம்); (இல்+பலி = இற்பலி = இல்லங்களில் பிச்சை); (நக்கரை உருவினன் - ஆடை அணியாதவன்; நக்கரை - நக்க அரை என்பதன் மரூஉ. நக்கம் - நக்நம் ஆடையின்மை; அரை - இடுப்பு); (சம்பந்தர் தேவாரம் - 3.76.1 - "மடவார் இற்பலி கொளப் புகுதும் எந்தை"); (அப்பர் தேவாரம் - 4.66.9 - "மாதரை மையல் செய்யும் நக்கரை உருவர்");

மணி-மார்பா - அழகிய பவளம் போன்ற மார்பை உடையவனே; (மணி - அழகு; பவளம்);

கட்டிய சிலைன வெற்புஅதுகொடு மிகு கட்டு-ரண் எரி பர - கட்டப்பட்ட வில்லாக ஏந்திய மேருமலையால் மிகுந்த காவலுடைய மூன்று கோட்டைகளை எரித்த பரனே; (சிலை - வில்); (கட்டு - காவல்); (சம்பந்தர் தேவாரம்- 3.18.7 - "எரிசரம் வரிசிலை வளைய ஏவிமுன் திரிபுரம் எரிசெய்த செல்வர்");

பல தேவர் கத்து-லை திகழ் கடல் மத்திடு பொழுது எழு கைப்பு-டை விடம் உணும் அருளாளா - வானோர் பலரும் கூடி ஒலிக்கின்ற அலை திகழும் பாற்கடலைக் கடைந்தபொழுது எழுந்த கசப்பு உடைய ஆலகாலத்தை உண்ட அருளாளனே; (மத்திடுதல் - கடைதல்); (கைப்பு - கசப்பு);

மட்டு-லர் குழல் அணி உத்தமிதனைடம் வைத்து, ரு நதி சடை அணிவோனே - வாசமலர்களைக் கூந்தலில் அணிந்த உத்தமியான உமையை இடப்பக்கம் ஒரு கூறாகக் கொண்டு, சடையில் கங்கையை அணிந்தவனே; (மட்டு - வாசனை); (அலர் - பூ);

மட்புதை மரம்அவை கல்திரள் உருடை வக்கரைதனில் உறை பெருமானே - மண்ணில் புதைந்த மரங்கள் கல்லின் திரண்ட வடிவத்தை அடைந்த திருவக்கரையில் உறைகின்ற பெருமானே;

(The National Fossil Wood Park, Tiruvakkarai contains petrified wood fossils). (மட்புதை - மண்+புதை - மண்ணில் புதைந்த); (கற்றிரள் - கல்+திரள் - கல்லினது திரள்);


வி. சுப்பிரமணியன்

----------- --------------


P.428 - வக்கரை (திருவக்கரை) - பொடியாடிய பெருமானருள்

2018-04-04

P.428 - வக்கரை (திருவக்கரை)

---------------------------------

(கலிவிருத்தம் - மாங்கனி மாங்கனி மாங்கனி மா - வாய்பாடு)

(சம்பந்தர் தேவாரம் - 1.10.1 - "உண்ணாமுலை உமையாளொடும்");

(சுந்தரர் தேவாரம் - 7.1.1 - "பித்தாபிறை சூடீ");


முற்குறிப்புகள் - * வடிவாம்பிகை - திருவக்கரையில் இறைவி திருநாமம்.

* (ம்) - புணர்ச்சியில் மகரஒற்றுக் கெடும் இடம்.


1)

பொடியாடிய பெருமானருள் புரியாயெனும் உம்பர்

மிடிநீங்கிட மதில்மூன்றெரி மேருச்சிலை யானை

வடிவாம்பிகை மணவாளனை மணிவக்கரை யானைக்

கடிமாமலர் தூவித்தொழக் கழலும்வினை தானே.


"பொடிடிய பெருமான்; ருள் புரியாய்" னும் உம்பர் மிடி நீங்கிட மதில்மூன்று எரி- மேருச்சிலையானை - "திருநீற்றைப் பூசிய பெருமானே! அருள்க" என்ற தேவர்களது துன்பம் தீர, முப்புரங்களை எரித்த மேருவில் ஏந்தியவனை; (பொடி - நீறு); (உம்பர் - தேவர்); (மிடி - துன்பம்); (சிலை - வில்);

வடிவாம்பிகை மணவாளனை - வடிவாம்பிகை என்ற திருநாமம் உடைய உமைக்குக் கணவனை;

மணி வக்கரையானை - அழகிய திருவக்கரையில் உறைபவனை; (மணி - அழகு); (அப்பர் தேவாரம் - 5.52.4 - "மைந்தர்போல் மணி நாகேச்சரவரே");

கடி-மாமலர் தூவித் தொழக் கழலும் வினைதானே - அழகிய வாசமலர்கள் தூவி வழிபட்டால் வினை நீங்கும்;


2)

படமாரர விளவெண்பிறை பயிலுஞ்சடை யானை

அடலேறமர் பெருமான்றனை அணிவக்கரை யானை

மடமானன வடிவாம்பிகை மணவாளனைக் கானில்

நடமாடியை நம்பித்தொழ நலியாவினை தானே.


படம் ஆர் அரவு இளவெண்பிறை பயிலும் சடையானை - படம் உடைய நாகமும் இள-வெண்-திங்களும் இருக்கும் சடையானை;

அடல்-ஏறு அமர் பெருமான்-தனை - வலிய எருதை வாகனமாக விரும்பிய பெருமானை; (அடல் - வலிமை); (அமர்தல் - விரும்புதல்);

அணி வக்கரையானை - அழகிய திருவக்கரையில் உறைபவனை; (அணி - அழகு);

மடமான் அன வடிவாம்பிகை மணவாளனைக் - இளமான் போன்ற வடிவாம்பிகை கணவனை; (அன - போன்ற);

கானில் நடமாடியை - சுடுகாட்டில் கூத்தாடுபவனை;

நம்பித் தொழ நலியா வினைதானே - விரும்பி வழிபட்டால் வினைகள் துன்புறுத்தமாட்டா; (நம்புதல் - விரும்புதல்; நம்பிக்கைவைத்தல்); (நலித்தல் - துன்புறுத்துதல்);


3)

அண்டாமணி கண்டாபுலி அதளாய்அரு நஞ்சை

உண்டாயெனும் மார்க்கண்டரின் உயிர்காத்தபி ரானை

வண்டார்குழல் வடிவாம்பிகை மணவாளனை மல்லார்

எண்டோளனைத் தொழுவார்தமை எய்தாவினை தானே.


"அண்டா மணிகண்டா புலி-அதளாய், - "அண்டனே, நீலகண்டனே, புலித்தோலனே";

அரு-நஞ்சை உண்டாய்" எனும் மார்க்கண்டரின் உயிர் காத்த பிரானை - "கொடிய நஞ்சை உண்டவனே" என்று போற்றிய மார்க்கண்டேயரது உயிரக் காத்த தலைவனை;

வண்டு ஆர் குழல் வடிவாம்பிகை மணவாளனை - வண்டுகள் பொருந்தி ஒலிக்கும் கூந்தலை உடைய வடிவாம்பிகை கணவனை; (ஆர்தல் - பொருந்துதல்; ஆர்த்தல் - ஒலித்தல்);

மல் ஆர் எண் தோளனைத் தொழுவார்தமை எய்தா வினைதானே - வலிமை மிக்க எட்டுப் புஜங்களை உடைய சிவபெருமானை வழிபடுபவர்களை வினைகள் அடையா; (மல் - வலிமை);


4)

பிணமாரிடு கானிற்பெரு நடமாடிடு பெற்றிக்

கணநாதனை மழுவாளனைக் கண்ணார்நுத லானை

மணமார்குழல் வடிவாம்பிகை மணவாளனைச் செந்தீ

வணவாகனை வாழ்த்தித்தொழ வல்லார்வினை விடுமே.


பிணம் ஆர் இடுகானில் பெருநடம் ஆடிடு பெற்றிக் கணநாதனை - பிணங்கள் நிறைந்த சுடுகாட்டில் திருநடம் செய்பவனைக், கணங்களுக்குத் தலைவனை; (பெற்றி - பெருமை; தன்மை);

மழுவாளனைக் - மழுவை ஏந்தியவனை;

கண் ஆர் நுதலானை - நெற்றிக்கண்ணனை;

மணம் ஆர் குழல் வடிவாம்பிகை மணவாளனைச் - வாசக்குழலியான வடிவாம்பிகை கணவனை;

செந்தீ-வண வாகனை வாழ்த்தித் தொழ வல்லார் வினை விடுமே - செந்தீப் போல் செம்மேனியனை வாழ்த்தி வழிபடுபவர்களது வினைகள் நீங்கும்; (தீவணவாகனை = 1. தீ வண்ண ஆகனை; 2. தீ வண்ண வாகனை); (ஆகன் - திருமேனியன்); (வாகன் - அழகுள்ளவன்); (ஆகம் - மேனி; மார்பு); (தொழவல்லார் வினை விடும் = 1. தொழுபவர்களது வினை நீங்கும்; 2. "தொழ வல் ஆர் வினை விடும்" - தொழுதால், வலிமை மிக்க வினைகள் நீங்கும்); (சம்பந்தர் தேவாரம் - 3.115.2 - "கோதில் நீறது பூசிடும் ஆகனே");


5)

முளைமாமதி புனையீசனை முனிவர்க்குயர் இன்பம்

விளைசேவடி கொடுகூற்றினை விழுமாறுதை தேவை

வளையாரிறை வடிவாம்பிகை மணவாளனை அலகில்

விளையாடியை வழிபட்டவர் வினையாயின விடுமே.


முளை-மா-மதி புனை ஈசனை - அழகிய பிறையை அணிந்த ஈசனை;

முனிவர்க்கு உயர் இன்பம் விளை சேவடிகொடு கூற்றினை விழுமாறு உதை தேவை - முனிவர்களுக்கு ( / மார்க்கண்டேயருக்குப்) பேரின்பம் தரும் சேவடியால் காலனை உதைத்த கடவுளை;

வளை ஆர் இறை வடிவாம்பிகை மணவாளனை - முன்கையில் வளையல் அணிந்த வடிவாம்பிகை கணவனை; (இறை - முன்கை);

அலகு இல் விளையாடியை வழிபட்டவர் வினை ஆயின விடுமே - எல்லையற்ற திருவிளையாடல் புரிபவனை வழிபடுபவர்களது வினைகள் நீங்கும்;


6)

வானோர்சொல வந்தம்பெறி மதியில்மதன் நீறு

தானாகிடப் பார்த்தான்றனைச் சடைமேற்பிறை யானை

மானேர்விழி வடிவாம்பிகை மணவாளனைக் கையில்

ஊனார்தலை ஒன்றேந்தியை ஓதக்கெடும் வினையே.


வானோர் சொல வந்து அம்பு எறி மதி இல் மதன் நீறுதான் ஆகிடப் பார்த்தான்தனைச் - தேவர்களது பேச்சைக் கேட்டு அதன்படி ஈசன்மேல் கணை எய்த அறிவற்ற மன்மதனைச் சாம்பல் ஆகுமாறு நெற்றிக்கண்ணால் நோக்கியவனை;

சடைமேல் பிறையானை - சந்திரமவுலியை; (* சந்திரமௌலீஸ்வரர் - இத்தலத்து இறைவன் திருநாமம்);

மான் ஏர் விழி வடிவாம்பிகை மணவாளனைக் - மான் போன்ற நோக்கு உடைய வடிவாம்பிகை கணவனை; (ஏர்தல் - ஒத்தல்);

கையில் ஊன் ஆர் தலை ஒன்று ஏந்தியை ஓதக் கெடும் வினையே - கையில் பிரமனது முடைநாறும் மண்டையோட்டை ஏந்தியவனைப் போற்றி வழிபட்டால் வினைகள் அழியும்;


7)

இன்பால்தயிர் நெய்யாடியை இளவெள்விடை யானைப்

பொன்போலொளிர் சடையான்தனைப் பொழில்வக்கரை யானை

வம்பார்குழல் வடிவாம்பிகை மணவாளனை நாளும்

நம்பாவென அன்பால்தொழ நலியாவினை தானே.


இன்-பால் தயிர் நெய் ஆடியை - இனிய பால், தயிர், நெய் இவற்றால் அபிஷேகம் செய்யப்பெறுபவனை;

இள-வெள்-விடையானைப் - இளைய வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவனை;

பொன் போல் ஒளிர் சடையான்தனைப் - பொன் போலத் திகழும் சடையை உடையவனை;

பொழில் வக்கரையானை - சோலை சூழ்ந்த திருவக்கரையில் உறைபவனை;

வம்பு ஆர் குழல் வடிவாம்பிகை மணவாளனை - வாசக்குழலியான வடிவாம்பிகை கணவனை; (வம்பு - வாசனை);

நாளும் நம்பா என அன்பால் தொழ நலியா வினைதானே - தினமும் பக்தியோடு, "நம்பனே" என்று அவன் திருநாமங்களைச் சொல்லி வழிபடுவாரை வினைகள் வருத்தமாட்டா; (நம்பன் - சிவன் திருநாமம் - விரும்பத் தக்கவன்);


8)

முன(ம்)மாமலை பேர்த்தானவன் முடிபத்திறக் கமலம்

அனதாள்விரல் இட்டான்றனை அணிவக்கரை யானை

வனமாமுலை வடிவாம்பிகை மணவாளனைப் போற்றித்

தின(ம்)மாமலர் இடுவார்தமைச் சேராவினை தானே.


முனம் மாமலை பேர்த்தான் அவன் முடி பத்து இறக் கமலம் அன தாள்விரல் இட்டான்தனை - முன்பு கயிலையைப் பெயர்த்த இராவணனது பத்துத்-தலைகளும் நசுங்கும்படி தாமரை போன்ற பாதத்தின் விரலை ஊன்றியவனை;

அணி வக்கரையானை - அழகிய திருவக்கரையில் உறைபவனை;

வன-மா-முலை வடிவாம்பிகை மணவாளனைப் போற்றித் - அழகிய பெரிய தனங்களை உடைய வடிவாம்பிகை கணவனைப் போற்றி; (வனம் - அழகு); (மா - அழகு; பெருமை);

தினம் மாமலர் இடுவார்தமைச் சேரா வினைதானே - தினமும் சிறந்த பூக்களை இட்டு வணங்கும் பக்தர்களை வினைகள் சேரமாட்டா;


9)

ஏரார்மலர் மேலானரி இவர்நேடியு(ம்) மேல்கீழ்

தேராவெரி ஆனான்றனைத் திருவக்கரை யானை

வாரார்முலை வடிவாம்பிகை மணவாளனைக் கண்ணில்

நீரார்தர நினைவார்வினை நில்லாதறும் உடனே.


ஏர் ஆர் மலர் மேலான் அரி இவர் நேடியும் மேல்கீழ் தேரா எரி ஆனான்தனைத் - அழகிய தாமரைமேல் உறையும் பிரமனும் திருமாலும் அடிமுடியைத் தேடியும் அறியாத சோதி ஆனவனை; (நேடுதல் - தேடுதல்); (தேர்தல் - அறிதல்);

திருவக்கரையானை - திருவக்கரையில் உறைபவனை;

வார் ஆர் முலை வடிவாம்பிகை மணவாளனைக் - முலைக்கச்சு அணிந்த வடிவாம்பிகை கணவனை;

கண்ணில் நீர் ஆர்தர நினைவார் வினை நில்லாது அறும் உடனே - கண்ணிர் மல்க நினைந்து வணங்குபவர்களது வினைகளெல்லாம் சீக்கிரம் அழியும்; (ஆர்தல் - நிறைதல்; தருதல் - ஒரு துணைவினை);


10)

நெஞ்சிற்கிறி மிக்கார்திரு நீற்றைப்புனைந் துய்யார்

வெஞ்சொற்களை விடுமின்பொழில் விரிவக்கரை யானை

வஞ்சிக்கொடி வடிவாம்பிகை மணவாளனைப் போற்றிச்

செஞ்சொற்றொடை இடுவார்தமைத் தீண்டாவினை தானே.


நெஞ்சில் கிறி மிக்கார் திருநீற்றைப் புனைந்து உய்யார் - நெஞ்சில் வஞ்சம் மிகுந்தவர் திருநீற்றை அணிந்து உய்யமாட்டார்; (கிறி - பொய்);

வெஞ்சொற்களை விடுமின் - அத்தகையோர் சொல்லும் கொடிய சொற்களைப் பொருளாகக் கொள்ளாமல் நீங்குங்கள்; (மின் - முன்னிலை ஏவற்பன்மை விகுதி);

பொழில் விரி-வக்கரையானை - சோலை பரந்த திருவக்கரையில் உறைபவனை;

வஞ்சிக்கொடி வடிவாம்பிகை மணவாளனைப் போற்றிச் - வஞ்சிக்கொடி போன்ற வடிவாம்பிகை கணவனைப் போற்றி;

செஞ்சொல்-தொடை இடுவார்தமைத் தீண்டா வினைதானே - பாமாலைகள் பாடி வணங்குபவர்களை வினைகள் தீண்டமாட்டா;


11)

இலையார்நுனை சூலப்படை ஏந்தும்பெரு மானைச்

சிலையாவொரு வரையேந்தியைத் திருவக்கரை யானை

மலையான்மகள் வடிவாம்பிகை மணவாளனைக் கங்கை

அலையார்சடை உடையான்றனை அடைவார்வினை அறுமே.


இலை ஆர் நுனை சூலப்படை ஏந்தும் பெருமானைச் - மூன்று இலை போன்ற நுனிகளை உடைய சூலாயுதத்தை ஏந்திய பெருமானை;

சிலையா ஒரு வரை ஏந்தியைத் - வில்லாக ஒரு மலையை ஏந்தியவனை; (சிலை - வில்; சிலையா - சிலையாக); (வரை - மலை);

திருவக்கரையானை - திருவக்கரையில் உறைபவனை;

மலையான்-மகள் வடிவாம்பிகை மணவாளனைக் - மலைமகளான வடிவாம்பிகை கணவனை;

கங்கை அலை ஆர் சடை உடையான்தனை அடைவார் வினை அறுமே - கங்கையைச் சடையில் உடையவனைச் சரணடைந்த அடியவர்களது வினைகள் அழியும்;


வி. சுப்பிரமணியன்

----------- --------------


P.427 - வக்கரை (திருவக்கரை) - வந்தன நரைதிரை

2018-03-31

P.427 - வக்கரை (திருவக்கரை)

---------------------------------

(அறுசீர் விருத்தம் - "விளம் விளம் விளம் விளம் மா தேமா" - தானனா தானனா தானனா தானனா தான தானா)

(சம்பந்தர் தேவாரம் - 2.79.1 - "பவனமாய்ச் சோடையாய்")

(சம்பந்தர் தேவாரம் - 3.92.1 - "மருந்தவை மந்திர மறுமைநன் னெறியவை")

முற்குறிப்புகள் - * சந்திரமௌலீஸ்வரர் - இத்தலத்து இறைவன் திருநாமம்;

* (ம்) - புணர்ச்சியில் மகரஒற்றுக் கெடும் இடம்;


1)

வந்தன நரைதிரை வந்தன பிணிகளும் வலிமை குன்றிச்

சந்ததம் கவலையில் நொந்தனை; தீர்வழி சிந்தை செய்யாய்;

முந்தெயில் மூன்றெரி மூட்டிய மொய்ம்பனை மும்மு கத்து

மைந்தனை வக்கரைச் சந்திர மவுலியை வாழ்த்து நெஞ்சே.


வந்தன நரை திரை - மயிர் வெளுத்தலும் தோல் சுருங்குதலும் வந்தடைந்தன; (திரை - தோற்சுருக்கம்);

வந்தன பிணிகளும் - பல நோய்களும் வந்தடைந்தன;

வலிமை குன்றிச் சந்ததம் கவலையில் நொந்தனை - உடல்-வலிமை அழிந்து, நீ ஓயாமல் கவலையில் வாடுகின்றாய்;

தீர் வழி சிந்தை செய்யாய் - கவலை தீரும் வழியை எண்ணுவாயாக;

முந்து எயில் மூன்று எரி மூட்டிய மொய்ம்பனை - முன்பு முப்புரங்களை எரித்த வீரனை; (மொய்ம்பன் - வீரன்; மொய்ம்பு - வலிமை);

மும்முகத்து மைந்தனை - மூன்று முகங்கள் காட்டும் இளைஞனை; (* திருவக்கரையில் சிவலிங்கத்தில் மூன்று முகங்கள் காணலாம்);

வக்கரைச் சந்திரமவுலியை வாழ்த்து நெஞ்சே - திருவக்கரையில் உறைகின்ற "சந்திரமவுலி" என்ற திருநாமம் உடைய ஈசனை, நெஞ்சே, நீ வாழ்த்துவாயாக; (மவுலி - கிரீடம்; சடைமுடி);


2)

நண்புடை யார்பலர் நானிலம் விட்டனர் நம்பு லன்கள்

பண்புகள் குன்றியோர் பாடையே றாமுனம் பற்ற தாகும்

வெண்பொடிப் பூசியை விண்ணவர் நாதனை மேகம் ஆரும்

வண்பொழில் வக்கரைச் சந்திர மவுலியை வாழ்த்து நெஞ்சே.


நண்புடையார் பலர் நானிலம் விட்டனர் - நம்மேல் அன்பு உடையவர்கள் பலரும் (பெற்றோர், நண்பர்கள், சுற்றத்தார்) இவ்வுலகை நீங்கினார்கள்; (நண்பு - அன்பு; சினேகம்; உறவு); (நானிலம் - பூமி);

நம் புலன்கள் பண்புகள் குன்றி ஓர் பாடை ஏறாமுனம் - (முதுமை வந்தடைய) நம் புலன்களும் தன்மை குன்றி, (நமன் வரவால்) ஒரு பாடையின்மீது ஏறும் காலம் வந்தடைவதன் முன்பே;

பற்றது ஆகும் வெண்பொடிப் பூசியை - நம்மைக் காக்கும் துணையான திருநீற்றைப் பூசிய ஈசனை; (பற்று - பற்றுக்கோடு - ஆதாரம்; தஞ்சம்); (சம்பந்தர் தேவாரம் - 3.27.1 - "வெண்பொடிப் பூசியார்");

விண்ணவர்-நாதனை - தேவர்பெருமானை;

மேகம் ஆரும் வண்பொழில் வக்கரைச் சந்திரமவுலியை வாழ்த்து நெஞ்சே - மேகம் பொருந்துமாறு உயர்ந்த வளமிக்க சோலை சூழ்ந்த திருவக்கரையில் உறைகின்ற "சந்திரமவுலி" என்ற திருநாமம் உடைய ஈசனை, நெஞ்சே, நீ வாழ்த்துவாயாக;


3)

பார்மிசை வந்தபின் நாள்பல சென்றன பகட தேறிக்

கூர்மலி வேலொடு கூற்றடை யாமுனம் குஞ்சி மேலே

ஏர்மலி கொன்றையைச் சூடிய ஏந்தலை ஈடி லானை

வார்பொழில் வக்கரைச் சந்திர மவுலியை வாழ்த்து நெஞ்சே.


பார்மிசை வந்த பின் நாள் பல சென்றன - பூமியில் இப்பிறப்பை அடைந்த பிறகு பல ஆண்டுகள் சென்றுவிட்டன;

பகடுஅது ஏறிக் கூர் மலி வேலொடு கூற்று அடையாமுனம் - எருமைக்கடாவின்மேல் ஏறிக், கூர்மையான சூலத்தை ஏந்தியபடி காலன் நம்மை வந்து அடைவதன் முன்னமே; (பகடு - எருமைக்கடா; அது - பகுதிப்பொருள் விகுதி);

குஞ்சிமேலே ஏர் மலி கொன்றையைச் சூடிய ஏந்தலை - திருமுடிமேல் அழகிய கொன்றையைச் சூடிய தலைவனை; (குஞ்சி - தலை); (ஏர் - அழகு); (மலிதல் - மிகுதல்);

ஈடு இலானை - ஒப்பற்றவனை;

வார்-பொழில் வக்கரைச் சந்திரமவுலியை வாழ்த்து நெஞ்சே - நீண்ட சோலைகள் சோலை சூழ்ந்த திருவக்கரையில் உறைகின்ற "சந்திரமவுலி" என்ற திருநாமம் உடைய ஈசனை, நெஞ்சே, நீ வாழ்த்துவாயாக; (வார்தல் - நீள்தல்);


4)

குயிலன குஞ்சியும் கொக்கென ஆனது கூர்மை மிக்க

அயிலுடைத் தூதுவர் ஆவிகொல் லாமுனம் அண்டர் கோனை

மயிலன சாயலாள் மலைமகள் பங்கனை மழுவி னானை

வயலணி வக்கரைச் சந்திர மவுலியை வாழ்த்து நெஞ்சே.


குயில் அன குஞ்சியும் கொக்கு என ஆனது - குயில் போலக் கறுத்திருந்த தலைமயிரும் கொக்குப்போல் வெண்ணிறம் அடைந்தது; (அன - அன்ன - போல);

கூர்மை மிக்க அயிலுடைத் தூதுவர் ஆவி கொல்லா முனம் - கூரிய வேலினை ஏந்தும் எமதூதர்கள் வந்து உயிரைக் கொல்வதன் முன்பே;

அண்டர்-கோனை - தேவர்-தலைவனை;

மயில் அன சாயலாள் மலைமகள் பங்கனை - மயில் போன்ற சாயல் உடைய உமையை ஒரு பங்கில் உடையவனை;

மழுவினானை - மழுவை ஏந்தியவனை;

வயல் அணி வக்கரைச் சந்திரமவுலியை வாழ்த்து நெஞ்சே - வயல்கள் சூழ்ந்த திருவக்கரையில் உறைகின்ற "சந்திரமவுலி" என்ற திருநாமம் உடைய ஈசனை, நெஞ்சே, நீ வாழ்த்துவாயாக;


5)

உர(ம்)மலி தோள்களும் உறுதசை வற்றின உதற லோடு

சுர(ம்)மலி நோய்களும் உடலடை யாமுனம் துரிசி லானைச்

சிர(ம்)மலி மாலையைச் சென்னியிற் சூடிய தேவ தேவை

மர(ம்)மலி வக்கரைச் சந்திர மவுலியை வாழ்த்து நெஞ்சே.


உரம் மலி தோள்களும் உறு தசை வற்றின - வலிமை மிக்க புஜங்களும் தசைகள் வற்றின;

உதறலோடு சுரம் மலி நோய்களும் உடல் அடையா முனம் - நடுக்கத்தோடு கூடிய ஜுரம் மிக்க நோய்கள் உடலை அடைவதன் முன்னமே;

துரிசு இலானைச் - குற்றமற்றவனை;

சிரம் மலி மாலையைச் சென்னியிற் சூடிய தேவதேவை - மண்டையோடுகளால் ஆன மாலையைத் தலையில் அணியும் தேவதேவனை;

மரம் மலி வக்கரைச் சந்திரமவுலியை வாழ்த்து நெஞ்சே - மரங்கள் மிக்க (சோலை சூழ்ந்த) திருவக்கரையில் உறைகின்ற "சந்திரமவுலி" என்ற திருநாமம் உடைய ஈசனை, நெஞ்சே, நீ வாழ்த்துவாயாக;


6)

மளமளென் றோடின மண்மிசை நாள்பல வயதும் ஏறித்

தளர்வடை யாமுனம் தண்புனல் தாங்கிய சடையி னானை

இளவிடை ஏறியை இருள்திகழ் கண்டனை ஈறி லானை

வளவயல் வக்கரைச் சந்திர மவுலியை வாழ்த்து நெஞ்சே.


மளமளென்று ஓடின மண்மிசை நாள் பல - இம்மண்ணுலகில் பல நாள்கள் விரைந்து ஓடிவிட்டன;

வயதும் ஏறித் தளர்வு அடையா முனம் - வயதாகித் தளர்ச்சி அடைவதன் முன்னமே;

தண்-புனல் தாங்கிய சடையினானை - குளிர்ந்த கங்கையைச் சடையில் தரித்தவனை;

இளவிடை ஏறியை - இளமை திகழும் இடபத்தை வாகனமாக உடையவனை;

இருள் திகழ் கண்டனை - நீலகண்டனை;

ஈறு இலானை - அந்தம் இல்லாதவனை (= என்றும் உள்ளவனை); (ஈறு - அந்தம்);

வளவயல் வக்கரைச் சந்திரமவுலியை வாழ்த்து நெஞ்சே - வளம் மிக்க வயல்கள் சூழ்ந்த திருவக்கரையில் உறைகின்ற "சந்திரமவுலி" என்ற திருநாமம் உடைய ஈசனை, நெஞ்சே, நீ வாழ்த்துவாயாக;


7)

புன்புலாற் குடிலெரிப் புக்கழி யாமுனம் புற்ற ராவை

என்பினை ஆரமா ஏற்றருள் ஈசனை எம்பி ரானை

வன்புலித் தோலனை மாமலை வில்லியை மாசி லானை

மன்புகழ் வக்கரைச் சந்திர மவுலியை வாழ்த்து நெஞ்சே.


புன்-புலால் குடில் எரிப் புக்கு அழியா முனம் - மாமிசத்தால் ஆன அற்பமான குடிலான இந்த உடம்பு தீயில் புகுந்து அழிவதன் முன்னம்;

புற்றராவை என்பினை ஆரமா ஏற்றருள் ஈசனை - புற்றில் வாழும் இயல்பை உடைய பாம்பையும் எலும்பையும் மாலையாக அணியும் ஈசனை; (அரா - பாம்பு); (என்பு - எலும்பு); (ஆரமா - ஆரமாக; கடைக்குறை விகாரம்);

எம்பிரானை - எம் தலைவனை;

வன்-புலித் தோலனை - கொடிய புலியின் தோலை ஆடையாக அணிந்தவனை;

மா-மலை வில்லியை - மேருமலையை வில்லாக ஏந்தியவனை;

மாசு இலானை - தூயவனை;

மன் புகழ் வக்கரைச் சந்திரமவுலியை வாழ்த்து நெஞ்சே - நிலைபெற்ற புகழையுடைய திருவக்கரையில் உறைகின்ற "சந்திரமவுலி" என்ற திருநாமம் உடைய ஈசனை, நெஞ்சே, நீ வாழ்த்துவாயாக; (பெரியபுராணம் - இயற்பகை நாயனார் புராணம் - 12.3.36 - "மன்புகழ் இளைசை மாறன் வளத்தினை வழுத்தலுற்றேன்");


8)

திண்பொலி தேகமும் தேய்ந்துகோல் பற்றியே சென்றி டாமுன்

வெண்பொடிப் பூசியைத் தசமுகன் தனையடர் விரலி னானைக்

கண்பொலி நெற்றியாற் காமனை நீறெழக் காய்ந்த தேவை

மண்புகழ் வக்கரைச் சந்திர மவுலியை வாழ்த்து நெஞ்சே.


திண் பொலி தேகமும் தேய்ந்து கோல் பற்றியே சென்றிடாமுன் - வலிமை மிக்க இவ்வுடல் தேய்ந்து கைக்கோல் ஊன்றிச் செல்லும் காலம் வந்தடைவதன் முன்பே;

வெண்பொடிப் பூசியைத் - வெண்ணீற்றைப் பூசியவனை;

தசமுகன்தனை அடர் விரலினானைக் - இராவணனைத் திருப்பாத-விரலால் நசுக்கியவனை; (அடர்த்தல் - நசுக்குதல்);

கண் பொலி நெற்றியால் காமனை நீறு எழக் காய்ந்த தேவை - மன்மதனைச் சாம்பலாகும்படி நெற்றிக்கண்ணால் எரித்த தேவனை;

மண் புகழ் வக்கரைச் சந்திரமவுலியை வாழ்த்து நெஞ்சே - உலகு புகழும் திருவக்கரையில் உறைகின்ற "சந்திரமவுலி" என்ற திருநாமம் உடைய ஈசனை, நெஞ்சே, நீ வாழ்த்துவாயாக;


9)

திரமிலா வாழ்க்கையில் தினமிடர் உற்றனை சிந்தி நன்றே

பிரமனு(ம்) மாயனு(ம்) நேடிய சோதியைப் பெரிய மூன்று

புரமெரி செய்யவோர் பொன்மலைச் சிலைதரி பொற்பி னானை

வரமருள் வக்கரைச் சந்திர மவுலியை வாழ்த்து நெஞ்சே.


திரம் இலா வாழ்க்கையில் தினம் இடர் உற்றனை - நிலையற்ற இவ்வாழ்க்கையில் தினமும் துன்பங்களை அடைந்தாய்; (திரம் - ஸ்திரம்);

சிந்தி நன்றே - நன்கு எண்ணிப்பார்; நல்லதையே சிந்திப்பாயாக;

பிரமனும் மாயனும் நேடிய சோதியைப் - பிரமனும் திருமாலும் தேடிய தீப்பிழம்பை; (நேடுதல் - தேடுதல்);

பெரிய மூன்று புரம் எரிசெய்ய ஓர் பொன்மலைச் சிலை தரி பொற்பினானை - பெரிய முப்புரங்களை எரிக்க மேருமலையை வில்லாக ஏந்திய பெருமை உடையவனை; (சிலை - வில்); (பொற்பு - அழகு; தன்மை);

வரம் அருள் வக்கரைச் சந்திரமவுலியை வாழ்த்து நெஞ்சே - வரங்கள் அருள்பவனான திருவக்கரையில் உறைகின்ற "சந்திரமவுலி" என்ற திருநாமம் உடைய ஈசனை, நெஞ்சே, நீ வாழ்த்துவாயாக;


10)

நிலைப்பிலா உடலிது தீப்புகா முனம்நினை நீடு வாழ்வாய்

பலப்பல பொய்யுரை பதகருக் கருளிலாப் பரனை என்றும்

உலப்பிலா ஒருவனை உமையவள் பங்கனை உம்ப ரானை

மலர்ப்பொழில் வக்கரைச் சந்திர மவுலியை வாழ்த்து நெஞ்சே.


நிலைப்பு இலா உடல் இது தீப் புகா முனம் நினை நீடு வாழ்வாய் - நிலையற்ற இந்த உடல் நெருப்பில் புகுவதன் முன்பே நினைவாயாக; ஓங்கி வாழ்வாய்; (நிலைப்பு - ஸ்திரம்);

பலப்பல பொய் உரை பதகருக்கு அருள் இலாப் பரனை - பற்பல பொய்களைப் பேசும் கீழோருக்கு அருள் இல்லாத பரமனை; (பதகன் - பாவி; கீழோன்);

என்றும் உலப்பு இலா ஒருவனை - என்றும் இறத்தல் இல்லாத ஒப்பற்றவனை; (உலப்பு - அழிவு; சாவு);

உமையவள் பங்கனை - உமையொரு பாகனை;

உம்பரானை - வானவனை;

மலர்ப்பொழில் வக்கரைச் சந்திரமவுலியை வாழ்த்து நெஞ்சே - பூஞ்சோலை சூழ்ந்த திருவக்கரையில் உறைகின்ற "சந்திரமவுலி" என்ற திருநாமம் உடைய ஈசனை, நெஞ்சே, நீ வாழ்த்துவாயாக;


11)

அஞ்சிய வல்வினை ஆயின தீர்ந்துவான் அடைய வேண்டில்

செஞ்சுடர் வண்ணனைச் சேயிழை பங்கனைத் தேவர் உய்ய

நஞ்சினை உண்டிருள் கண்டனை நாணென நாகம் ஆர்த்த

மஞ்சனை வக்கரைச் சந்திர மவுலியை வாழ்த்து நெஞ்சே.


அஞ்சிய வல்வினை ஆயின தீர்ந்து வான் அடைய வேண்டில் - நாம் அஞ்சுகின்ற வலிய வினையெல்லாம் அழிந்து, நாம் சிவலோக வாழ்வு பெறவேண்டும் என்றால்;

செஞ்சுடர் வண்ணனைச் - செந்தீப் போன்ற செம்மேனியனை;

சேயிழை பங்கனைத் - உமைபங்கனை; (சேயிழை - பெண்);

தேவர் உய்ய நஞ்சினை உண்டு இருள் கண்டனை - தேவர்கள் வாழ்வதற்காகத் தான் விஷத்தை உண்டதனால் கண்டம் கறுத்தவனை;

நாண் என நாகம் ஆர்த்த மஞ்சனை - (வில்லில் / அரையில்) நாணாக நாகப்பாம்பைக் கட்டிய வீரனை; (மஞ்சன் - மைந்தன் - வீரன்);

வக்கரைச் சந்திரமவுலியை வாழ்த்து நெஞ்சே - திருவக்கரையில் உறைகின்ற "சந்திரமவுலி" என்ற திருநாமம் உடைய ஈசனை, நெஞ்சே, நீ வாழ்த்துவாயாக;


வி. சுப்பிரமணியன்

----------- --------------